புதன், செப்டம்பர் 16, 2009

காதல் மலர்ந்த கணங்கள் (2)

அமிர்தவர்ஷிணி

2.
முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.
அப்பாவை நினைத்ததும் மேலே முருகன் கோவிலில் மணி அடித்தது.அப்பா மிக மென்மையான மனிதர்.சராசரி உயரம்.மானிறம். ஐம்பதை வயதை நெருங்கும் அவருக்கு இன்னும் தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லை என்பது ஆச்சர்யம்.அற நிலையத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

நாங்கள் இருவரும் தமிழ் நாடு முழுதும் கோவில் கோவிலாகவே வாழ்ந்திருக்கிறோம். அப்பா எந்தக் கோவிலுக்குப் பணியாற்றச் சென்றாலும் அந்தக் கோவில் தெய்வத்தின் தீவிர பக்தராகி விடுவார் சிவன்,விஷ்ணு,முருகன்,அம்மன் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துத் கடவுளர்களிடத்தும் பரிபூரண பக்தி பூண்டிருந்தவர் அப்பா.

எந்தக் கோவிலில் பணியாற்றுகிறாரோ அந்தக் கோவிலின் ஸ்தல புராணம் அவருக்குக் கரதலப் பாடமாகி விடும்.அந்தக் கோவில் தொடர்பான தமிழ், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் படித்து விடுவார்.எங்கள் வீட்டில் ஒரு பெரிய ஆன்மிக நூலகமே இருக்கிறது.கோவில் குருமார்கள், அர்ச்சகர்களுக்கே வழிகாட்டியாக இருக்கும் அப்பா துளிக் கூடக் கர்வமின்றி அவர்களிடமும் இதர கோவில் அடி நிலைப் பணியாளர்களிடமும் கனிவுடனும்,பரிவுடனும் நடந்து கொள்வதால் அப்பாவை வெறுத்துப் பேசியவர்களையோ,அல்லது அவரிடம் முகம் சுளித்தவர்களையோ கூட நான் இதுவரை பார்த்தது கிடையாது.தியானம்,யோகா,ஆழ்ந்த நூலறிவு இவற்றின் நிரந்தரப் பயிற்சியே அவரது மன முதிர்ச்சிக்குக் காரணம் என்று நினைத்துக் கொள்வேன்.அப்பாவுக்கு எப்போதுமே சைவ உணவுதான். அம்மா இறந்த பிறகு பாதி நாள் காவி வேட்டிதான்.அரைகுறைத் தாடிதான்.அவர் கிட்டத்தட்டத் துறவியாகவே வாழ்ந்தார் எனலாம்.

அவருக்கு இருந்த ஒரே உலகப் பற்று இப்போது நான்தான்.எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் துடித்து விடுவார் என்பதாலேயே எனது ரத்தவாந்தியால் என்னை விட அவரை நினைத்துத்தான் நான் அதிகம் கலங்கினேன்.எனக்கு சீரியசாக எதுவும் நடந்து விடக் கூடாது என்று மயிலம் முருகனை மனதார வேண்டிக் கொண்டேன்.
சென்னை வந்ததும் நேராக அப்பாவின் நெருங்கிய நண்பரான டாக்டர்.அன்பரசனிடம் சென்றோம்.எனது நண்பர்கள் என்னை விடப் பதறிப் போயிருந்தார்கள்.ரத்த வாந்தியைப் பற்றிச் சொன்னதும் என்னை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டார் .அன்பரசன்
'கவலைப் படாதே சரவணா..ஏதோ ஆகாத சாப்பாட்டைச் சாப்பிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடுவோம்.நான் குடுக்கற மாத்திரைகளைச் சாப்பிடு.யூ வில் பி ஆல்ரைட்,பை டொமாரோ ஈவினிங்'

அன்பரசனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும்தான் நாங்கள் பழைய உற்சாகத்திற்குத் திரும்பினோம்.

'தேங்க்ஸ்,அங்கிள்' என்றேன் நான்,மயிலம் முருகனுக்கும் சேர்த்து.
கிளினிக்கிலிருந்து வெளியே வரும் முன்னர் 'ஒரு முக்கியமான விஷயம்' என்றார் அன்பரசன்.
திரும்பி நின்றோம்.
'இதைப் பத்தி உங்கப்பன் சாமியார் கிட்டே மூச்சுக் கூட விட்டுடாதே.அப்புறம் ஒரே நாள்ளே அவன் நாலு கிலோ இளச்சுடுவான்! அவனைத் தேத்தறதுக்கு வேறே நான் தனியா ஒரு கோர்ஸ் டானிக் தரனும்!' என்றார் அவர்.
நாங்கள் சிரித்தோம்.

'வீக் என்ட்லே நாம எல்லோரும் ஒண்ணா என் வீட்டுலே பீர் சாப்பிடப் போறோம்.என் பொண்ணு தேன்மொழி பிரமாதமா ஃபிஷ் ஃப்ரை பண்ணுவா.ஓ.கே,பாய்ஸ்?' என்றார் அன்பரசன்.
வெட்கத்துடன் 'தேங்க்ஸ் அங்கிள்' என்றார்கள் எனது நண்பர்கள்.

வெளியே வந்ததுமே 'இனிமே எங்களுக்கும் இவர்தாண்டா ஃபேமிலி டாக்டர்!' என்றான் மணி.

'டாக்டரோட பொண்ணு தேன்மொழி எப்படிடா இருப்பா?' என்று ஆர்வமாகக் கேட்டான் தாமஸ்.
'செகன்ட் இயர் எம்.பி.பி.எஸ். பண்றா!' என்றேன் நான்.
'சரி விடறா மாப்பிள்ளே,நம்ம ரேஞ்ச்லேயே நாம ஃபிஷ் ஃபிரை சாப்பிடுவோம்!' என்றான் ஹசன்.

நண்பர்களைப் பிரிந்து வீட்டுக்கு நான் வந்த போது மாலை மணி மூன்றாகி விட்டது.நன்றாகத் தூங்கி எழுந்து ஒரு குளிர்ந்த நீர்க் குளியல் போட்டதுமே பழைய சுறுசுறுப்பு வந்து விட்டது.அப்பாவைப் பார்க்க அவர் வேலை பார்க்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குப் போனேன்.
நான் சென்ற போது பெருமாளுக்கு அந்திக் காலப் பூஜை நடந்து கொண்டிருந்தது.அர்ச்சகர் ஸ்வாமிக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார்.மஞ்சள் விளக்குகளின் ஒளியில் பெருமாள் மின்னும் தங்க வைர,நகைகளின் செல்வங்களுக்குப் பின்னால் அவற்றைப் பற்றிய எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சாந்தமாக நின்று கொண்டிருந்தார்.அப்பா முன்னால் நின்று கண்களை மூடி அதே அமைதியுடன் பெருமாளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பாவின் அந்த அமைதி குலையக் கூடாது என்று நானும் பெருமாளை வேண்டிக் கொண்டேன்.
'சார்,பிள்ளையாண்டான் வந்திருக்கார் பாருங்கோ' என்று அர்ச்சகர் சொன்னதும்தான் கண்கள் திறந்து என்னைப் பார்த்தார் அப்பா.அதே பாசமான பார்வை.
'எப்போப்பா வந்தே?'
'சாயந்திரம் மூணு மணி ஆயிடுச்சுப்பா' என்றேன் நான்.
ஆண்டவனை வழிபட்டு முடிந்ததும் நாங்கள் இருவரும் எப்போதும் கோவிலில் உட்காரும் கல்பெஞ்சில் அமர்ந்தோம்.
அந்திக் கருக்கலில் கோபுரம் மனித நம்பிக்கையைப் போலவே பிரம்மாண்டமாக நின்றது.ஆலய மணியின் ஓசை எப்போதையும் விட இன்றைக்கு எனக்கு ஆறுதலாக இருந்தது.
இந்தப் பின்னணியில் அப்பாவுடன் ஒன்றும் பேசாமல் உடகார்ந்திருந்தாலே உள்ளெல்லாம் குளிர்ந்து அமைதியாக இருக்கும்.பலநாள் இந்த ஆழ்ந்த சுகத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.
கோபுரத்தையே பார்த்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்த எங்களது அமைதியை 'ஸ்வாமி' என்ற குரல் கலைத்தது.
திரும்பிப் பார்த்தோம்.
மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி கையில் ஒரு வெண்கலப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
'உங்க ரெண்டு பேரோட ஐக்கியத்தைக் கலைச்சுட்டேன்னு நினைக்கிறேன்' என்றார் சேஷாத்திரி.
'அதெல்லாம் ஒண்ணுமில்லே சொல்லுங்க,சேஷாத்திரி' என்றார் அப்பா.
'இந்த நைவேத்தியப் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்களேன்' என்று வெண்கலப் பாத்திரத்தையும் இரண்டு பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் நீட்டினார்,சேஷாத்திரி.
நானும்,அப்பாவும் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டோம்.
நெய்யும்,பருப்பும்,வெல்லமும், முந்திரியும் இதற்கு மேல் இவ்வளவு அழகாக இணைய முடியாது.அத்தனை மணமான,சுவையான சர்க்கரைப் பொங்கலை நான் அதுவரை சாப்பிட்டதே இல்லை.
'உங்களோட கைமணத்துக்குச் சொல்லவா வேணும் சேஷாத்திரி.பெருமாளே உங்களோட பொங்கலைப் படைக்கலேன்னா சோகமாயிடுவார்.எப்படி சரவணா இருக்கு?'என்றார் என்னைப் பார்த்து.
'சிம்ப்ளி சூபர்ப்' என்றேன் நான்
உண்மையில் ருசித்து,ரசித்து,நான் சொன்ன வார்த்தைகளில் எல்லாம் சர்க்கரைப் பொங்கலின் நெய் மணம் வீசியது.
'உங்க வாயாலே இந்த ஆசிர்வாதம் வாங்குனது நான் இல்லே.இதைச் சமைச்சவாதான்.அமிர்தவர்ஷிணி,இங்கே வா,குழந்தே' என்று கோவில் தூணுக்குப் பின்னால் மறைந்தும் மறையாமல் நின்றிருந்த யாரோ ஒரு பெண்ணை அவர் அழைக்க அவள் வெளிப்பட்டாள்.

அந்திக் கருக்கலில், ஆலய மணியின் ஓயாத ஓசைகளுக்கு மத்தியில், பின்னணியில் நின்ற அந்த பிரம்மாண்டமன கோபுரமே பெருமையுடன் அறிமுகப் படுத்திய ஒரு வெள்ளை மின்னல் போல் தூணுக்குப் பின்னாலிருந்து வெளிப் பட்டாள் அவள்.
கரும் பச்சைப் பாவாடை தாவணியில் மெல்லென நடந்து வந்தது அந்த சுகம்.
'எங்களுக்குத் தெரிஞ்சவா பொண்ணு. பேரு அமிர்தவர்ஷிணி.பெரியவாளைச் சேவிச்சுக்க,குழந்தே' என்றார் சேஷாத்திரி.
அவளிடமிருந்து ஒரு மயக்கும் பச்சைக் கற்பூர வாசனை வீசியது.

சர்க்கரைப் பொங்கலை அவளைச் சமைக்கச் சொல்லி, ஸ்வாமிக்கு நைவேத்தியமாகப் படைப்பதை விட அவளையே சர்க்கரைப் பொங்கலாக ஸ்வாமிக்கு நைவேத்தியமாகப் படைத்திருக்கலாம் என்று தோன்றியது.
அவள் அப்பாவை நமஸ்கரித்தாள்.கூப்பிய அவளது கைவிரல்களின் அழகுக்கு நான் இன்னும் உவமையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னை வெறுமனே மரியாதையான புன்னகையுடன் பார்த்தாள்.

அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.

பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!
(தொடரும்)

(பின்குறிப்பு: இந்தக் கதையின் முதல் பாகம் கணிணித் திரையில் தோன்றிய சில மணி நேரங்களிலேயே ரசித்தும்,பின்னூட்டமிட்டும்,வாக்களித்தும் வாழ்த்தி ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் ஒட்டுமொத்தமான மகிழ்ச்சியைனையும்,நன்றியினையும் இங்கேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று மாலையே எனது கதை விவாதத்திற்காக ஹைதராபாத் செல்ல வேண்டி இருப்பதால் சென்னை திரும்பியவுடன் தனித் தனியே நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.)

செவ்வாய், செப்டம்பர் 15, 2009

காதல மலர்ந்த கணங்கள்

ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறேன்,நான்.
ஒரு கலந்துரையாடல் தொடர்,ஒரு விளையாட்டுத் தொடர்,ஒரு வாழ்க்கைத் தொடர் இப்படி மூன்று தொடர்களை உருவாக்கி ஏற்கனவே பெரும் பரபரப்பையும்,புகழையும் பெற்றிருந்த நான், நான்காவதாக உருவாக்கிய 'காதல் மலர்ந்த கணங்கள்' என்ற உண்மைக் காதல் சம்பவங்களின் தொடர்தான் என்னைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நூற்றுக்கணக்கான உண்மைக் காதலர்களைப் பேட்டி கண்டு, வாழ்க்கையில் முதன் முதலாக அவர்கள் மனதில் காதல் மலர்ந்த கணங்களைத் தொடராக்கிப், பின்னர் உண்மைக் காதலர்களை நேயர்களுக்கு நேருக்கு நேர் அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி அது.

மக்கள் மனங்களைக்,குறிப்பாக இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட அந்த நிகழ்ச்சியில் பெரிதும் வரவேற்பினைப் பெற்ற ஐந்து தொடர்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி
---------------------

நெஞ்சே,அமைதியாக இரு.
பிரிகின்ற நேரம் இனிமையாக இருக்கட்டும்.
அது மரணமாக இருக்க வேண்டாம்,நிறைவாக இருக்கட்டும்.
காதல், நினைவுகளாகவும்,வலி, கீதங்களாகவும் உருகட்டும்.
வானம் முழுக்கப் பறந்தது, கூட்டில் வந்து சிறகுகள் மடங்குவதாக இருக்கட்டும்.
இரவுப் பூக்களைப் போல மென்மையாக, உனது விரல்கள் என்னைக் கடைசி முறையாகத் தொடட்டும்.
அழகிய முடிவே,ஒரு கணம் ஆடாமல் அசையாமல் நின்று உனது இறுதி வார்த்தைகளை மௌனமாகச் சொல்.
உன்னைப் பணிந்து வணங்குகிறேன்.
உனது வழியெல்லாம் ஒளிதுலங்க, நான் எனது விளக்கினை ஏந்தி வருகிறேன்...
-ரவீந்திரநாத் தாகூர்.

எனது பெயர் சரவணகுமார்.
23 வயது முடிந்து எனது 24 வயதை, இன்றுதான் அப்பா ஆசையுடன் வாங்கி வந்த பிறந்த நாள் கேக்கை வெட்டிக் கொண்டாடுகிறேன்.என் வீட்டில் சுற்றிலும் நண்பர்கள் பட்டாளம்.ஒரே ஆரவாரம்.அமர்க்களம்.முதல் வாய்க் கேக்கை நான் அப்பாவுக்கு ஊட்டிவிட மகிழ்ச்சியுடன் அவர் எனக்குக் கேக்கை ஊட்டி விட்டார்.கேக்கை விழுங்கியதும் சில நிமிடங்களிலேயே வாஷ் பேசினுக்கு ஓடிச் சென்று வாந்தி எடுத்தேன்.

வெண்பனி போல் நான் சாப்பிட்ட ஸ்ட்ராபெரி கேக், செர்ரிப் பழ நிறத்தில் ரத்தத்துடன் வெளியே வந்தது.அப்போது நான் அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வாழ்க்கையின் முதல் அறியாமையே நம் மரணத்தைப் பற்றித்தான் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

அலட்டிக் கொள்ளாமல் வாயைக் கழுவிக் கொண்டு,பாத்ரூமிலிருந்து வெளியே வந்து நண்பர்கள்,அப்பாவின் உற்சாகத்தில் கலந்து கொண்டேன்.ஒரு மணி நேரம் கழித்து நண்பர்கள் நாங்கள் ஐந்து பேரும் பைக்குகளில் பாண்டிச்சேரி செல்வதாகத் திட்டம் போட்டிருந்தோம்.என்னுடைய பிறந்த நாள் பரிசாக நான் நண்பர்களுக்குக் கொடுக்கும் ட்ரீட் இது. அப்பா ஹோட்டலில் வாங்கி வைத்திருந்த இனிப்பையும்,பொங்கலையும் ஒப்புக்குச் சாப்பிட்டு விட்டு நாங்கள் பாண்டிச்சேரிக்குப் பறந்தோம்.

எனது அம்மா நான் மூன்று வயதாக இருக்கும் போதே அப்பாவுடன் கோவிலுக்குச் சென்ற போது பைக் விபத்தில் இறந்து விட்டாள்.இன்றும் அந்தி நேரத் தனிமைகளில் அப்பா கண்களை மூடிக் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பது அம்மாவின் ஞாபகத்திலதான் என்று எனக்குத் தெரியும்.நான் அப்படியே அம்மாவின் ரோஜா நிறத்தில் அவளது கலர் செராக்ஸ் ஆக இருப்பதினால் அப்பாவுக்கு என் மேல் அதீத அன்பு.

அவருக்கு, அம்மாவின் நினைவுச் சின்னமே நான்தான்.

பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு 'வர்ரேன்பா' என்று அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.'ஜாக்கிரதை,சரவணா' என்று அவர் சொன்ன போது அவரது கண்களில் ஈரம் தெரிந்தது.அம்மாவைப் பைக் விபத்தில் இழந்தபின் அவர் பைக்கைத் தொடுவதே இல்லை.

ஐந்து பைக்குகள்.இளமைக்குப் பெட்ரோலும் ஊற்றிப் பற்ற வைத்து விட்டால் எப்படி இருக்கும்?
100க்குக் குறையாமல் எங்கள் பைக்குகள் விரைந்தன.போகும் வழியில் மூன்று பஸ்கள்,நான்கு லாரிகள்,ஒரு கார் இவற்றுக்கு எங்கள் உடல்களைத் தாரை வார்த்திருப்போம்.மயிரிழையில் மரணங்களைத் தவிர்த்து விட்ட சிரிப்புடன் 'ஹோய்' என்று கத்திக் கொண்டே பறந்தோம்.

மணக்குளம் விநாயகர் கோவிலில் கிண்டல்கள் நிறைந்த பிரார்த்தனைகளுடன் எங்கள் பாண்டிச்சேரி உல்லாசம் தொடங்கியது.பீரும்,பெட்ரோலும் கரை புரளக் கடற்கரை,ஆரோவில் என்றெல்லாம் சுற்றி அலைந்தோம்.அம்மாவின் சந்நிதியில் ஒரு காலை நேரத்தில் மலர்களை வைக்கும் போது மட்டும் சற்றே அமைதியுடன் இருந்தோம்.அப்பாவின் மகிழ்ச்சிக்காக மனப் பூர்வமாக வேண்டிக் கொண்டேன்.

அன்று மாலை பாண்டிச்சேரிக் கடற்கரையில் இரண்டே நாளில் இரண்டாம் முறையாக வாந்தி எடுத்தேன்.

பீர் நுரையுடன் ரத்தமும் வந்த போது நண்பர்கள் பதறிப் போனார்கள்.அப்போதே மருத்துவ மனைக்குப் போகலாம் என்றவர்களை நான்தான் இது ஒரு சின்ன விஷயம் என்று அடக்கி விட்டேன்.அந்த நேரம் பார்த்து வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களைக் கடந்து போனாள்.17,18வயதுதானிருக்கும்,அவளுக்கு.சடாரென நெஞ்சில் அறைவதைப் போல அப்படி ஒரு அழகு, அவளுக்கு.
அவளையே என்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த என்னை நண்பர்கள்தான் இந்த பூமிக்கு மீண்டும் அழைத்து வந்தார்கள்.
'டேய்,சரவணா,என்னாச்சுடா உனக்கு?'என்றான் ஹசன்.
'தொட்டாக் கரைஞ்சுடுவா போலே இருக்கேடா!' என்றேன் மெய்மறந்து.இல்லை,பார்த்தாலே கரைந்து விடுவாளோ என்று பின்னால் திருத்தத் தோன்றியது.

ஹோட்டல் அறையில் அன்று இரவு முதன் முறையாக நண்பர்கள் அனைவரும் விஸ்கி சாப்பிட்டோம். அந்த ஹோட்டலில் டாப்லெஸ் நடனம் வேறு இருந்தது.இரண்டு பெக்குகளுக்குப் பிறகு அங்கே சென்றோம்.

நாங்கள் அனைவருமே பெண்மார்புகளுக்குப் புதிது.

முதன் முறையாக ஆடைகள் அற்ற வெற்று மார்புகளைப் பார்க்கப் போகிறோம் என்ற பரவசத்தில், விஸ்கி கொத்திய விஷம் இன்னும் பரபரவென்று உடம்புக்குள் மேலே மேலே ஏறிக் கொண்டிருந்தது..அரைகுறை உடைகளுடன் அந்தப் பெண் ஆட,ஆட மனதுக்குள் இருந்த பூதங்களுக்கு யாரோ தீ வைத்து விட்டார்கள்.உடம்பு ராட்சசத் தனமாக வளர்ந்து கொண்டே போவதைப் போல உணர்ந்தோம்.

நடனமாடிய அந்த இளம் பெண் கடைசி மேல் துணியை அவிழ்த்து எறிந்ததுமே எங்கள் எல்லோருக்குமே அடிவயிற்றில் விர்ரென்று ஒரு சக்கரம் படுவேகமாகச் சுற்ற ஆரம்பித்தது. கல்லூரியில் என்றோ யோகா வகுப்பில் உடம்பில் பல இடங்களில் சக்கரங்கள் சுழலும் என்று சொன்னது உண்மைதான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு தீ உடம்பு முழுதும் பரவிய தணலில் காய்ச்சல் வந்தவர்களைப் போல ஆனோம்.

பெண்ணுடலில்,அங்கங்களின் ராணி என்று மார்புகளையே சொல்லலாம் என்று தோன்றியது.

அந்தப் பெண்ணின் மேலுடம்பைத் தாண்டி அவள் முகத்தைப் பார்க்கவே எங்களுக்குப் பல நிமிடங்கள் ஆகின.ஆடிக் கொண்டிருந்த அவளது வேர்த்து வழிந்த முகம் சாலையோரத்தில் விற்கும் பிளாஸ்டிக் பூவைப் போல அழகாகவே இருந்தது.அதில் ஏனோ தானோ என்ற ஒரு நிரந்தரப் புன்னகை.

அறைக்குத் திரும்பியவுடன் ஆளாளுக்கு மீண்டும் விஸ்கியை ஊற்றிக் கொண்டதும்தான் செலவழிந்த உணர்ச்சிகள் மீண்டும் உயிர் பெற்றன.
'பெண் அங்கங்களின் ராணி'யை முதன் முதலாகப் பார்த்த அனுபவத்தை ஆளாளுக்கு ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்று நான் தொடங்கியதும் நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக ஆரம்பித்தனர்.

'வயர்லெஸ்.ஆனா இன்னும் ஷாக் அடிச்சுகிட்டே இருக்கு!' என்றான் ஹசன்.
'ஒரு பொண்ணு மூலமா உலகத்துப் பொண்ணுகளை எல்லாம் பார்த்துட்டேன்!'என்றான் மணி.
'அவ இப்படியே ரோட்டுலே நடந்து போனா பாண்டிச்சேரியிலே பார்களே தேவை இல்லே!எல்லாத்தையும் இழுத்து மூடிடலாம்!'என்றான் ஃபிலிப் தாமஸ்.
'தொட்டுப் பார்க்காமே என்னாலே எதையும் முழுசாச் சொல்ல முடியாது!'என்றான் ராகவன்.
எல்லாரும் கடைசியாக என்னைப் பார்த்தார்கள்.
'ஆம்பளைப் பையன்னா என்ன அர்த்தம்ன்னு ஒரு பொண்ணுதாண்டா சொல்லித் தர முடியும்!'என்றேன் நான்.

நான்காம் நாள் காலை எல்லோரும் மயிலம் முருகன் கோவில் வழியாகச் சென்னை திரும்பினோம்.
என்னால் கோவில் படிக்கட்டுக்கள் ஏற முடியவில்லை.திடீரென மூச்சுத் திணறியது.ஹசனும்,தாமஸும் என்னுடன் இருந்து கொள்ள மணியும்,ராகவனும் மட்டும் கோவிலுக்குச் சென்றார்கள்.
முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.

(தொடரும்)

வியாழன், செப்டம்பர் 03, 2009

யூ.ஜி.உடன் ஒரு உரையாடல்

(யூ.ஜி.யுடன் கே.சந்திரசேகர் நடத்திய ஒரு உரையாடல்.ஒலிப்பதிவு நாடாவிலிருந்து மொழிபெயர்த்துத் தொகுத்தவர் ஜே.எஸ்.ஆர்.எல்.நாராயணமூர்த்தி.)
யூ.ஜி.என்னும் ஆன்மீகத் தீவிரவாதியின் இந்த சிந்தனைகளின் குண்டு வீச்சில்,உங்கள் மனதின் பல ட்வின் டவர்கள் தகர்ந்து பொல பொலவென உதிரும் என நம்புகிறேன்.
****************************
எண்ணங்கள்தான் பிரச்சினையா?
'என்னால் செய்ய முடியவில்லையே' என்று நீங்கள் எண்ணுவதிலிருந்துதான் துயரமே தொடங்குகிறது.
பிரச்சினை, துயரம் அல்ல.துயரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுதான் பிரச்சினையே.
'நினைப்பதை நிறுத்துங்கள்' என்று உங்களிடம் நான் சொல்லவில்லை.ஏன் என்றால் நினைப்பது நின்றால் நீங்களே இல்லை.
எண்ணங்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை.ஒன்றுமே இல்லை.எண்ணங்கள் அற்ற போது, அங்கே இருப்பதை வெளிப்பட விடுங்கள்.அதனைத் தனியே விட்டு விட்டால் அது தானே செயல் படத் தொடங்கும்.
நினைப்பின் மூலம்தான் உங்கள் துயரங்களை நிலைத்திருக்கச் செய்கிறீர்கள்.
உங்களிடம் தவறே இல்லை,ஒன்றைத் தவிர.
துணிச்சல் இல்லை.
எண்ணங்களுக்கும் அப்பால் இருப்பதை ஒத்துக் கொள்வதே துணிச்சல்.
அது ஒன்றே உண்மையான புத்திசாலித்தனம்.
'நான் யாரோ, அதைத் தவிர வேறு யாராகவும் இருக்க மாட்டேன்'
இதுதான் துணிச்சல்.திடம்.ஏற்கனவே உங்களிடம் உள்ளதுதான் அது.புதிதாக அடைய வேண்டிய அவசியம் இல்லாதது.

எண்ணங்களின் இயக்கம்தான் நீங்கள்.

எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
உதாரணமாக,எனக்கு நண்பர்கள் இல்லையென்று சொன்னால் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.எனக்கு எதிரிகள் இல்லையென்றால் ஒவ்வொருவரும் எனக்கு நண்பர் என்றும் அர்த்தமல்ல.அப்புறம்,நண்பர்களோ எதிரிகளோ இல்லாத ஒரு நிலையை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?
நீங்கள் ஒரு பெண்டுலத்தைப் போல இந்த முனைக்கும்,அந்த முனைக்கும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள்.இதைத்தான் எண்ணங்களின் இயக்கம் என்று சொல்கிறேன்.
அந்த நிலை எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கிறது.எதிரிடைகளே இல்லாத அந்த ஒரு நிலையை உங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல்.

நீங்கள் நீங்களாகவே இருக்கும் ஆசையை, அடித்து,உருக்குலைக்காமல் நீங்கள் விட்டதே இல்லை.அதுதான் உங்கள் வாழ்க்கையே.
எவ்வளவுக்கெவ்வளவு அந்த ஆசையை உருக்குலைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் துயருறுகிறீர்கள்.
எல்லாக் கஷ்டங்களுமே நீங்கள் நீங்களாக இருக்க விரும்பாமல் இன்னொன்றாக இருக்க விரும்புவதினால்தான்.
நீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல் உங்களுக்கு இல்லை.அதாவது உலகத்தில் நீங்கள் மட்டும் ஒரு தனி ஆள்.உங்களை விட்டால் இரண்டாமவர் இல்லை என்ற துணிவு.

அழகு.

எது அழகு?எங்கே இருக்கிறது அழகு?பார்க்கும் பொருளிலா,இல்லை உங்கள் கண்ணிலா?அழகைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான் நீங்கள் பார்க்கும் பொருளின் மேல் சுமத்துகிறீர்கள்.
அங்கே ஒரு அழகான மாலைக் கதிரவனின் மறையும் காட்சி தென்படுகிறது.அது அழகாக இருக்கிறது என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொண்டால் கூட அதனை நீங்கள் உண்மையில் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
அழகு பொருளில் இல்லை.பார்க்கும் உங்கள் கண்களிலும் இல்லை.முற்றிலுமாய் நீங்களே அங்கே இல்லாத போதுதான் அது இருக்கிறது.
என்றால், அழகு என்பது என்ன?உண்மையில் யாருக்கும் தெரியாது.
அழகை அனுபவித்து அதைச் சொல்வதற்கு உள்ளே யாருமே இல்லாத போது, உங்களது முழு இருப்பையும் ஒன்று நிரப்புகிறதே அதனை வேண்டுமானால் அழகு என்று சொல்லலாம்.
அனுபவிக்கும் ஒரு அமைப்பின் மூலம் எப்பொழுது அழகினை சிறைப் பிடிக்கிறீர்களோ அப்போதே அது தொலைந்து போகிறது.

உங்களுடைய வாழ்க்கைத் தத்துவம் என்ன?

ஒன்றுமே இல்லை என்பதுதான்.
வாழ்வதற்கு ஒரு தத்துவம் தேவையா என்ன?
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இருக்கிறதா?
எனில்,நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றுதான் பொருள்.ஏனென்றால்,உள்ளே செத்துப் போன மனிதர்கள்தான் இந்தக் கேள்விகளைக் கேட்பதில் ஆர்வமாய் இருப்பார்கள்.உயிர்ப்புடன் இருப்பவர்கள் அல்ல.

வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும்,எங்களைப் போல செத்துப் போனவர்களுக்கும் என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்?

கேள்வி என்ற ஒன்றே இறப்பிலிருந்துதான் வரும்,உயிர்ப்புடன் இருப்பவர்களிடம் இருந்தல்ல.

ஞானி அல்லது யோகி,அல்லது ஜீவன்முக்தன் என்கிறார்களே அவர்களுடைய அடையாளங்கள் என்ன?

தெரிந்து கொள்ள வேண்டுமென நானே விரும்புகிறேன்!
ஒரு ஜீவன் முகதன் உங்கள் எதிரிலேயே அமர்ந்திருந்தால் கூட அவனை உங்களுக்குத் தெரியாது.அவனை அடையாளம் கண்டு கொள்ள எந்த வழியுமே கிடையாது.
யோகிகளைப் பற்றி உங்களுக்கென்று சில வரையறைகள்,நடை,உடை,பாவனைகள் பற்றிய தீர்மானங்கள் இருக்கின்றன.அவற்றின் கட்டங்களுக்குள் அவர் அடைபட்டால் அவரை ஜீவன் முக்தன் என்று அழைப்பீர்கள்.
உண்மையிலேயே அப்படி ஒருவன் இருப்பானேயாகில் தான் கடவுள் நிலை அடைந்தவன் என்றோ ஜீவன் முகதன் என்றோ அவனுக்கே தெரியாது.
அதனால் நான் ஒரு ஜீவன் முக்தன் என்று யார் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறானோ அவன் ஒரு மிகப் பெரிய போலியாகவோ அல்லது சாமர்த்தியசாலியாகவோ தான் இருப்பான்.

மதம்,ஆன்மீகம் பற்றி..

நான் சொல்லுவது எதற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.எந்த ஆன்மீக உட்கருத்தும் இல்லை.தூய,எளிமையான புற,உடலியல் மாற்றங்களையே நான் விவரிக்கிறேன்.

எனது உரையாடலின் நோக்கம்...

மனித எண்ணங்களின் வழியே எதனையும் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்து உங்களை மீட்க வேண்டும் என்பதுதான்..

மனதைப் பற்றி

மனதைப் பற்றிய அறிவும் மனம்தான்.இந்த அறிவிலிருந்து விடுபடும் போது அங்கு மனமும் இல்லை.

ஆசைகள் அனைத்தும் எண்ணங்களே..

ஆசைப் படுதல் அனைத்தும் எண்ணமே.'என்னை நான் புரிந்து கொள்ள வேண்டும்,இந்த மன ஓட்டத்திலிருந்து விடுபெற வேண்டும்' என்று நினைப்பதெல்லாம் எண்ணங்களே.உலகத்தில் சாதாரணமாக இயங்குவதற்கு மட்டுமே எண்ணங்கள் பயன்படுமே அன்றி வேறெதற்கும் அவை உதவா.

அன்பு,காதல்...

நேசம்,காதல் எல்லாமே உங்கள் எண்ணம்தான்.
'நான் எனது மனைவியைக் காதலிக்கிறேன்,எனது வீட்டை நேசிக்கிறேன்,எனது பேன்க் பேலன்ஸை விரும்புகிறேன் 'இவை அனைத்துமே உங்கள் எண்ண ஓட்டம்தான்.அதனாலேயே அவை அழிக்கும் தன்மையே உடையது என்று கூறுகிறேன்.
உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அன்பு வயப்பட்டிருக்கும் போது அங்கே எந்த எண்ணமும் இருக்காது.அதனால் அதற்கு எந்த உறவும் இருக்காது.
நீங்கள் அன்பு என்று சொல்வது ஒரு அதிர்வை. பிரதிபலன் கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே உணர்ச்சியின்மையாகவோ,அக்கறையின்மையாகவோ,வெறுப்பாகவோ மாறிவிடும்.

கேள்விகள்

கேள்வி கேட்பது புத்திக் கூர்மையின் அடையாளமல்ல.கேள்விகள் அற்று இருப்பதே புத்திக்கூர்மை.
(உரையாடல் தொடரும்)

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

இரண்டு கதாநாயகர்கள் (உண்மைச் சம்பவம்)

மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரஸ்யமான உண்மைக் கதை....
பல வருடங்களுக்கு முன்...
சிகாகோ மாநகரத்தின் நிழல் உலக தாதா ஆல் கெபோன்.
கள்ளச் சாராயம்,விபசாரம்,கொலைகள் போன்ற குற்றங்களின் சாம்ராஜ்யத்திற்குப் பல வருடங்களுக்கு அவன்தான் சக்ரவர்த்தியாக விளங்கினான்.
சட்டத்தின் பிடியிலிருந்து அத்தனை வருடங்களும் அவனைக் காப்பாற்றியது ஈசி எடி (EASY EDDIE) என்ற ஒரு வழக்கறிஞர்தான்.
சிறைக் கம்பிகளை எண்ணும் வாழ்க்கை தனக்கு வராமல் தடுத்த காரணத்திற்காக, எண்ண முடியாத அளவுக்கு ஈசி எடிக்குப் பணம் காசுகளை அள்ளி வழங்கினான்,ஆல்.
சிகாகோவிலேயே ஒரு மைதானம் அளவுக்கு ஈசி எடியின் எஸ்டேட் பங்களா இருந்தது.அது மட்டுமல்ல, அன்றைய சிகாகோவின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்தவர் அந்த வழக்கறிஞர்.
ஆல் மற்றவர்களுக்கு இழைக்கும் எவ்வளவு கொடூரமான குற்றங்களைக் கண்டும் சற்றும் மனம் பதறாத எடி,ஒரே விஷயத்தில் மட்டும் பதறிப் போவார்.

அது அவரது ஒரே மகனைப் பற்றித்தான்.
அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவ்வளவுதான்.உயிரே போய் விடும் அந்த வழக்கறிஞருக்கு. அவனுக்கு உயர்ந்த படிப்பறிவை அளித்தார்.அவன் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் தனது ஒரே செல்ல மகனுக்கு அவரால் கொடுக்க முடியாத ஒரே பொருள், தனது தந்தையின் பெயரைச் சொன்னால் அவனுக்குக் கிடைக்கும் மதிப்பையும்,மரியாதையையும்தான்.

ஒரு சமூகக் குற்றவாளிக்கு மனமறிந்து உடந்தையாக இருக்கும் தனது இழிவான அவப்பெயர், மகனது தூய வாழ்வைக் கறைப் படுத்தி விடக் கூடாது என்று எடி நினைத்தார்.அதற்கு ஒரே வழி, இதுநாள் வரை ஆலின் குற்றங்களை மூடி மறைத்த தவறுகளுக்குப் பரிகாரமாக அவற்றைப் பகிரங்கமாகக் காவல் துறையிடம் ஒப்புக் கொண்டு அரசுத் தரப்பு சாட்சியாகி விட வேண்டியதுதான்
என்று அவர் கருதினார்
ஆலும் அவனது மாஃபியாக் கும்பலும் தனது வாக்கு மூலத்தினால் சிறைக்குச் சென்றால்,இது வரையில் அவர் சம்பாதித்த அவரது அவப் பெயர் நீங்கி விடும்.ஆனால் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை என்னவென்று அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.

அவரது உயிர்.

ஆனால் உயிருக்குயிரான மகனுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கத் தயரானார்,எடி.

மகனுக்குச் சொத்துக்களை சம்பாதித்து விட்டுச் செல்வதை விட அவனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதில் அந்தத் தந்தை உறுதியாக இருந்தார். (நமது அரசியல்வாதிகளுக்கும்,ஊழல் பேர்வழிகளுக்கும் அவர் ஒரு கெட்ட உதாரணம்!)

காவல் துறையிடம் சரணடைந்து, ஆல் கெபொனின் நிழலுலகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டினார் அந்தத் தந்தை.

ஒரே வருடத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் தள்ளி இருந்த சிகாகோ தெரு ஒன்றில் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
அவர் இறந்த பின்னர் அவரது பாக்கெட்டிலிருந்து காவல் துறை கண்டெடுத்த பொருள்கள் இவைதான்.
ஒரு ஜெபமாலை,ஒரு சிலுவை,அவரது மதத்தின் புனித டாலர்,அன்றைய வார இதழில் வந்த ஒரு கவிதையின் கிழிந்த பக்கம்.
2.

இரண்டாம் உலகப் போர் உண்மைக் கதாநாயகர்களைப் படைத்துக் கொண்டிருந்த நேரம்.
இந்தச் சம்பவமும் அப்படிப் பட்ட ஒரு போர் வீரனைப் பற்றிய கதைதான்.
அந்த இளைஞன் லெஃடினட் கமாண்டர் பட்ச் ஓ' ஹேர்.
தெற்கு பசிபிக் கடலில் நங்கூரமிட்டு நின்றிருந்த லெக்சிங்டன் என்ற அந்த விமானம் தாங்கிக் கப்பலில் போர் விமானியாகப் பணி புரிந்தான் அந்த இளைஞன்.

ஒரு நாள் போர்ப் பயிற்சிக்காக ஓ'ஹேரின் விமானப் படை வானில் பறந்தது.
.நடுவானில் சற்றுத் தொலைவு போனதும்தான் ஓ'ஹேரின் விமானத்தில் எரிபொருள் அளவு காட்டும் கருவி பழுதடைந்த நிலையில் ,சரியாக வேலை செய்யாத காரணத்தினால், விமானத்தில் போதுமான பெட்ரோல் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.
அவனை மட்டும் திரும்பிச் செல்லும்படி படைத் தலைவரிடமிருந்து இருந்து உத்தரவு வர, வேறு வழியின்றி அவன் கப்பலுக்குத்திரும்ப வேண்டியதானது.

திரும்பி கொண்டிருக்கும் வழியில் அவன் கண்ட காட்சி அவனது ரத்தத்தையே உறைய வைத்தது.
ஜப்பானிய எதிரி விமானங்களின் பெரிய அணி வகுப்பொன்று ஓ'ஹேரின் பயிற்சி விமானங்களைத் தாக்கி அழிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தன.
பயிற்சிக்காகப் பறந்து கொண்டிருக்கும் தனது படைப் பிரிவைச் சேர்ந்த விமானங்களோ,அல்லது விமானிகளோ, எதிர்பாராத இந்த ஜப்பானியத் தாக்குதலை எதிர் கொள்ளும் நிலையில் இல்லை என்பது ஓ'ஹேருக்கு உறுதியாகத் தெரியும்.
தனது நண்பர்களுக்கோ, அல்லது தொலைவில் நின்று கொண்டிருக்கும் தனது யுத்தக் கப்பலுக்கோ எச்சரிக்கைத் தகவல் தர முடியாத சூழ்நிலை.

விரைவாக முடிவெடுத்தான் அந்த இளைஞன்.
தனது விமானத்தைத் துணிச்சலுடன் ஜப்பானிய விமானங்களின் அணிவகுப்பினுள் ஓட்டினான். விமானத்தில் பொருத்தியிருந்த 50 காலிபர் துப்பாக்கிகளால் அதிக பட்சம் ஜப்பானிய விமானங்களை சுட்டுத் தள்ளியபடிய பறந்த இந்த ஒற்றை விமானியின் தற்கொலைத் தாக்குதலை எதிர் பார்க்காத எதிரி விமானப் படையின் அணிவகுப்புக் குலைந்து போனது.
நிறைய ஜப்பனிய விமானங்கள் தீப்பிடித்து எரியலாயின.
அவர்கள் தப்பித்து வேறு திசையில் சென்று விட்டனர்.
ஓ'ஹேரின் விமானப் படையும்,விமானிகளும் உயிரையும் பணயம் வைத்து அவன் ஆற்றிய துணிகரச் செயலால் காப்பாற்றப் பட்டனர்.பின்னர் போர்க் கப்பலுக்குத் திரும்பிய ஓ'ஹேரின் விமானத்தில் பொருத்தியிருந்த காமிராவின் மூலம் பதிவு செய்யப் பட்டிருந்த படச் சுருள் திரையிடப் பட்டுப் பார்க்கப் பட்டது.

அவன் ஒற்றையாக ஐந்து ஜப்பானியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருந்தான்.!
இது நடந்தது பிப்ரவரி மாதம் 20ம் நாள்,1942.
அமெரிக்கக் கடற்படையின் முதல் காங்கிரஸ் விருதினை வழங்கி அவனது வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டிக் கௌரவித்தது அரசாங்கம்.

அடுத்த வருடமே போரில் ஒரு விமானத் தாக்குதலில் உயிரிழந்தான் பட்ச் ஓ'ஹேர்.
நாட்டுக்காக அந்த இளைஞன் உயிர் நீத்த போது அவனது வயது 29.
ஆனால் அவன் பிறந்து,வளர்ந்த நகரம் அந்த மாவீரனின் நினைவை மறக்கத் தயாராக இல்லை.
சிகாகோ நகரின் ஓ'ஹேர் பன்னாட்டு விமான நிலையம் அவனது பெயரை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கதாநாயகர்களையும் முடிச்சுப் போட்ட விதத்தில்தான் வாழ்க்கையின் திரைக் கதை நம்மைக் கட்டிப் போடுகிறது.

நாட்டுக்காகத் தனது உயிரையும் ஈந்த பட்ச் ஓ'ஹேர்தான், ஒரு மாபெரும் மாஃபியாக் கும்பலைப் பல வருடங்களாகச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்த ஈசி எடியின் ஒரே செல்ல மகன்!