வியாழன், நவம்பர் 26, 2009

விடுமுறைக் கடிதம்...

வேலைப் பளுவின் காரணமாக சில நாட்களுக்குப் பதிவுலகம் வர முடியாமை குறித்து வருந்துகிறேன்..

மீண்டும் சந்திக்கும் வரை நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் ,வணக்கங்களும்...

சனி, நவம்பர் 21, 2009

ஒரே இரவில் இரண்டு முதல் இரவுகள்

நான் விஜயமங்கலம் சின்னசாமி. ஒரு இளம் திரைப்பட இயக்குனன். எனக்குத்தான் இந்த அனுபவம் நிகழ்ந்தது.

விஜயமங்கலம், ஈரோடு மாவட்டத்தில் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிற்றூர்.சாலை ஓரத்தில் எனது அப்பா நாச்சிமுத்து ஒரு டீக்கடை வைத்துள்ளார்.

எனது அம்மா வள்ளியம்மாள் சுட்ட மசால் வடையில் மயங்கிக்,கோவையிலிருந்து வடநாடு செல்லும் நிறைய லாரி டிரைவர்கள் குடும்பத்துக்காக வாங்கிச் செல்லும் வடைப் பொட்டணங்கள் நடு வழியில் கடக்கும் காவேரி ஆற்றுப் பாலங்களிலும்,கோதாவரி ஆற்றுப் பாலங்களிலுமே காலியாகி விடும் சிறப்பு எங்கள் கடைக்கு உண்டு.அம்மா சுடும் ஆம்லெட்டுக்களுக்காகவே கோழிகள் தனியாக முட்டையிடுகின்றனவா என்று கேட்காத டிரைவர்களே அந்த நெடுஞ்சாலையில் கிடையாது.

45 வயது வரை,அப்பா போட்ட டீயும், 40 வயது வரை அம்மா சுட்ட வடைகளும், ஆம்லெட்டுகளுமே என்னைச் சென்னை அண்ணா பலகலைக் கழகத்தில் கட்டிடக் கலைப் பொறியியல் படிப்பு வரைக்குமே இட்டுச் சென்றன.ஆனால் அவ்வளவு கஷ்டப் பட்டுப் படித்த படிப்பை இரண்டாவது ஆண்டிலேயே பாதியில் விட்டு,விட்டுப்,பிரபல திரைப்பட ஒளிப்பதிவு இயக்குனரான அசோக் மேத்தாவிடம் உதவியாளனாகச் சேர்ந்து விட்டேன்.

அடுப்பின் வழியே கொதிக்கும் பாலிலும்,எண்ணையிலும் அவர்கள் பார்த்துச் சுவைத்த வாழ்க்கையை,அசோக் மேத்தாவின் காமிராக்களின் வழியே குளிர்ந்த வைகறைகளிலும்,பனி மூட்டத்தில் வெட்கப் பட்டுச் சிரிக்கும் ரோஜாக்களிலும் நான் ருசித்த விந்தையை, நான் ரசித்த அளவுக்கு என்னைப் பெற்ற கிராமத்துப் பெற்றோர்கள் ரசித்தார்களா எனபது இது வரைக்கும் எனக்குத் தெரியாது.

'ஆனா,வள்ளி! நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?' என்பாராம் அப்பா, இரவு மூன்று மணிக்குக் கடையை மூடி விட்டு வந்த அசதியுடன்.

அம்மா, பெருந்துறை சந்தைக்குப் போய் விட்டு வந்த காய்கறி மூட்டை முடிச்சுக்களுக்கு நடுவில் அமர்ந்து சென்னையிலிருந்து எப்போதாவது ஊருக்கு வரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

பெற்றவர்கள் மகனை நேசிக்கும் அளவுக்கு,மகன்கள் பெற்றவர்களை நேசிக்கிறார்களா என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது அப்போதுதான்.

வடபழனியில் ஒரு மொட்டை மாடியில் இருந்தது எனது அறை.ஒரு சின்ன பத்தடிக்குப் பத்தடி அறை.நடுவில் காலி மொட்டை மாடித் தளம்.எதிரே தடுப்புச் சுவரருகே ஒரு குளியலறை.கழிப்பறை.

அறை ஜன்னல் கதவுகளைத் திறந்தால் மட்டும், வாழ்க்கையின் நம்பிக்கையே எதிரே,அருகிலேயே தெரிவதைப் போல வடபழனிக் கோபுரம்.வடபழனி ஆலய மணி ஓசை கூடக் கேட்குமளவுக்கு முருகன் எனது அறைக்கு அருள் புரிந்திருந்திருந்தார்.நான் வடபழனிக்குப் போவதே இல்லை.ஆனால் முருகன் மட்டும் எனது அருகிலேயே இருந்தார் எனபதை மட்டும் நான் அடிக்கடி படப்பிடிப்புக்குச் செல்லும் அதிகாலைகளில் உணர்வேன்.

எனது ஒளிப்பதிவு இயக்குநரிடம் பெரிய படங்கள் வேலை பார்க்கும் போது, அவை எல்லாம் எவ்வளவு அபத்தக் களஞ்சியங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன எனபதை, அவருடனேயே அவர் மது அருந்தும் தனிமைகளில் வாதிடுவேன்.அவர் சிரிப்பார்.

'சினிமாங்கறது வெறும் ஆர்ட் மாத்திரமில்லே.பெரிய பிசினஸும் கூட.சரஸ்வதியும்,லக்ஷ்மியும் நாட் ஆல்வேய்ஸ் குட் ஃப்ரண்ட்ஸ்!' என்பார் அசோக் மேத்தா.

'சினிமாவுலே மாத்திரமில்லே,வாழ்க்கையிலும் கூட இதுதான் உண்மை.சரஸ்வதிக்கும், லக்ஷ்மிக்கும் நடக்கற சண்டையிலே பெரும்பாலும் லக்ஷ்மிதான் ஜெயிப்பா.இல்லே சரஸ்வதி விட்டுக் குடுத்துடுவா!' என்பார் அசோக் மேத்தா.

ஒருநாள் நான் பாண்டி பஜாரில் செருப்பு வாங்க அலைந்து கொண்டிருந்த போது, அசோக் மேத்தாவிடமிருந்து ஃபோன் வந்தது.உடனே வீட்டுக்கு வரும் படி அழைத்தார்.

நான் பஸ் பிடித்து அவரது அண்ணா நகர் வீட்டுக்குப் போனபோதுதான் அவர் எனக்கு டாக்டர் நிர்மல் குமாரை அறிமுகப் படுத்தினார்.டாக்டர்,அமெரிக்காவில் நியூஜெர்சியில், மிகப் பெரிய கண் மருத்துவராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுகிறார் என்பதெல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரிந்தது.அசோக் மேத்தாவின் ஒளிப்பதிவுக் கலைக்கு அந்தக் கண் மருத்துவர் ஒரு தீவிர ரசிகர்.அசோக் மேத்தாவின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்திருக்கிறார்,டாக்டர் நிர்மல் குமார்.

'டாக்டர் நிர்மல்,எனக்கு லென்ஸும்,லைட்டிங்கும்தான் தெரியும்.ஆனாக் கதை தெரிஞ்சவன் இந்தப் பொடியன்தான்.இவனை டைரக்டராப் போட்டுப் படம் பண்ணுங்க,நான் காமிராப் பண்றேன்!'என்றார் ஐம்பது வயதான எனது குருநாதர்.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன்.

நிர்மல் குமார் என்னைச் சந்தேகத்துடனேயே பார்த்தார்.
'உம் பேரு?'
'சின்னசாமி!' என்றேன்.

நிர்மல்குமார் அசோக் மேத்தாவை ஒருமுறை பார்த்து விட்டுப் பிறகு என்னிடம் கேட்டார்.
'நீ படம் டைரக்ட் பண்ணுவியா?'

அவர்கள் இருவரையும் ஒரு கணம் பார்த்தேன்.

வடபழனி ஆண்டவனின் கோபுரத்தை மட்டும் நினைத்துக் கொண்டு 'பண்ணுவேன்,சார்!'என்றேன்.

நான் வேலை பார்த்த பெரிய படங்களின் மேல் இருந்த கோபத்தில்தான்,எனக்கு அந்தத் துணிச்சலே வந்ததென்று இப்போது நினைக்கிறேன்.

'கதை வெச்சிருக்கியா?' என்றார் நிர்மல் குமார்.

'இருக்கு சார்!' என்றேன்,கதை என்னவென்று தெரியாமலேயே.

'இப்பவே சொல்ல முடியுமா?'

ஒரு நிமிடமே அமைதி.

'பாத்ரூம் போயிட்டு வந்து சொல்லட்டுமா,சார்?' என்றேன்.

'ஓ,ஷ்யூர்!' என்றார் நிர்மல்குமார் மெல்லிய புன்னகையுடன்.
அசோக் மேத்தா மட்டும் என்னையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாத்ரூமில் சிறுநீர் கழிக்கும் போது, என் மனமே காலியாக இருந்தது.

வாஷ் பேசினில் முகம் கழுவும் போது மட்டும், அம்மா சொன்ன அப்பாவின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலித்தன.

'நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?'

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வந்து அவர்களிடம் எனது கதையைச் சொன்னேன்.

அடுத்த மாதம், அந்தக் கதையின் ஷூட்டிங்குக்குத்தான் நான் நியூயார்க் போகிறேன்!

(படப் பிடிப்புத் தொடரும்)

புதன், நவம்பர் 04, 2009

ஸ்வாமி ஓம்கார் கேட்ட கேள்விகள்...

Swami omkar to me show details 09:37 (2 hours ago)
சாதாரண மனிதன் உடலுறவின் மூலமும், கலைஞன் கற்பனையின் மூலமும் தனது அளவற்ற சக்தியையும், எக்ஸ்டஸியையும் வெளிப்படுத்துகிறான்.-ஓஷோ
ஆன்மீகமுள்ள ஷண்முகப்ரியனுக்கு,

உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.அதை தொடர்ந்து உங்களிடம் சில கேள்விகள்.
1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?
2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?
3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?
4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?
5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?
பல கேள்விகள் இருந்தாலும் பொதுக்கேள்வியாக இவற்றை வைக்கிறேன்.
உங்கள் பதிலை வலைப்பதிவில் எதிர்பார்க்கிறேன்
அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்.

எனது சிந்தனைகளின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைத்த ஓஷோவின் மேற்கோளுடன் நீங்கள் உங்களது ரசனையைப் பகிர்ந்து கொள்ள வந்ததை எனது பேறாகக் கருதுகிறேன்,ஸ்வாமிஜி.

//உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.//

உங்களை ரசிகராகப் பெற்றதை விட இனி இந்தக் கதைக்கு வேறெந்தப் பெருமையும் கிடைத்து விட முடியாது.இந்தக் கதை புண்ணியம் செய்திருக்க வேண்டுஎன நினைக்கிறேன்,ஸ்வாமிஜி.

1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?

முப்பது வருடங்களுக்கும் முன்...// எனது 'ஆன்மீகத் தேடல்' பற்றி...

முப்பது வருடங்களுக்கும் முன்னால் கிட்டத் தட்ட என்னுடைய இருபதுகளில் 'குருமூர்த்தி' என்ற ஒரு நாவலை எழுதி உள்ளேன்.அதனுடைய கையெழுத்துப் பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.
நான் அணுகிய சில பதிப்பகங்கள் அப்போது அதனை வெளியிடத் தயங்கி மறுத்து விட்டனர்.
அதனைப் பதிப்பிற்கும் முயற்சியில் இன்னும் யாரென்று தெரியாத ஒரு சந்யாசி உட்பட ஒரு கூட்டத்தில் அதனைப் படித்து மட்டும் காண்பித்தேன்.அவர் மட்டும் வெகுவாக என்னைப் பாராட்டினார்.
மற்ற எல்லோரும் எனது சின்ன வயதைக் கண்டு அதிசயித்தார்கள் அன்றி அது அச்சுக்கே வரவில்லை.
'கடை விரித்தோம் கொள்வார் இல்லை, கட்டிக் கொண்டோம்' என்று உங்களவர்களில் ஒருவர் சொன்னதைப் போல நானும் அதற்குப் பின் எந்த சிரத்தையும் எடுக்காமல் விட்டு விட்டேன்.

அந்த சந்யாசியை மட்டும் சில வருடங்கள் கழித்து எனது கல்யாணக் கூட்டத்தில் பார்த்தேன்.அழைக்காமலேயே வந்திருந்தார்.அவரிடம் ஆசி வாங்கினேனானா என்பது கூட இப்போது ஞாபகம் இல்லை.
ஒரு சாதாரண மனிதனின் மனம் எப்படி அனைத்தும், களைந்து முக்தி அடைகிறது என்பதை உள்ளிருந்து பார்க்கும் கதைக் களம் அது.
அந்த நாவலுடன் ஒப்பிடும் போது இந்தக் கதை, எங்களது திரைப் படப் பாணியில் சொல்வதென்றால் 'கமர்ஷியல்'!
பார்ப்பவர்களைப்,படிப்பவர்களை ஒரு கணம் கூட நழுவ விடாமல்,இறுக்கிப் பிடித்துக் கொண்டே கொண்டே படைக்கும் பயம்.
ரசிகனது சிறிய கொட்டாவி கூட எங்களது வாழ்க்கையையே அலைக்கழிக்கும் ஒரு பெரும் புயல்.!
'அன் இன்டிரஸ்டிங் மீன்ஸ் டெட்' என்பதுதான் எங்கள் தாரக மந்திரம்.

திரையுலகத்தின் உள்ளே வந்து பார்க்கும் போது,மக்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறுகளை சதா தேடிக் கொண்டிருப்பதையே முழு நேர வாழ்க்கையாக வைத்திருப்பவர்களைப் பார்க்கலாம்.

பெண்களின் மார்புகள்,ஆண்களின் உக்கிரம்,இசை,நகைச் சுவை,கண்ணீர்,கவிதை, உணர்ச்சிப் பெருக்குகள்,கடவுள்கள்,மதம்,மொழி,மஹான்கள்,கொடுங்கோலர்கள்,கற்பு,விபச்சாரம் அனைத்தையுமே,அனைவரையுமே திரை அரங்குகளில் விற்கப் படும் டிக்கெட்டுக்களின் எண்ணிக்கை வழியாக மட்டும் பார்க்கப் பட வேண்டிய கட்டாயக் கலை இது.
அதனால் ஆன்மீகம் 'இன்டெரஸ்டிங்' என்ற ஒரே காரணத்தால் மட்டுமே என்னைக் கவர்கிறது.ஆங்கில நாவல்களைப் போல,விஞ்ஞானத்தைப் போல..சோதிடத்தைப் போல..
படைப்புக்கான 'பொடன்ஷியல்' உள்ளது அனைத்துமே எனக்கு ஆன்மீகம்தான்.
அதனால் ஆன்மீகத் தேடல் என்று இதனக் கூற முடியாது.

2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?//

இல்லை,ஸ்வாமிஜி.எல்லாக் கதைகளையும் போல இதையும் ஒரு வழக்கம் போலக் கதையாக எண்ணித்தான் எழுதினேன்.
ஒரே ஒரு வித்தியாசம்.
இது விற்பனைக்கல்ல என்ற தைரியம்.
அதனால் வரிக்கு வரி எந்த முன்திட்டமிடலும் இல்லாமல் சித்தம் போன போக்கில் எழுதிய கதை.
ஆஜ்மிர் என்று ஊர் தானாக வந்து விழுந்த பின்னர்தான் இணையத்தில் சென்று அந்த ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்னர் வந்ததுதான் அங்கே இருக்கும் தர்க்காவும்,ஆஜ்மீர் பாபாவும்.
பின்னாளில் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு வீரன் ஒரு கட்டத்தில் தனது உயிருக்காக எப்படியெல்லாம் போராடினான் என்ற மையக் கருதான் இந்தக் கதையாக வளர்ந்தது.
ஒரு வீர்யமுள்ள கதைக் கரு தன்னைத் தானே கதையாக வளர்த்துப் பெருகிக் கொள்ளும் என்பது நான் அனுபவத்தில் கண்ட ஒன்று.

3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?

முதலிலேயே சொன்னதைப் போல் இது விற்பனைக்காக எழுதிய கதை அல்ல.அந்தக் கதைகளை நான் பதிவுகளில் எழுதுவதில்லை!

சங்கத்தில் பதிவு பண்ணியது இதில் வரும் குணச் சித்திரங்களைக் களவு போகாமல் காக்க.

இந்தக் கதை திரைப்படமாக வேண்டுமானால் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை எழுதப் படவேண்டும்.
பட்ஜெட் பெரிதானால் பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோவை முதலில் நீங்கள் உள்ளே இழுத்து வரவேண்டும். அதற்கு ஏற்ற முறையில் கதை திருத்தப் படவேண்டும்.
படத்தைப் பெரிதாக விற்பதற்கு இப்போது கதாநாயகிகள் பயன்படுவதில்லை.அதனால் நாயகிகளை மட்டும் நம்பிப் படம் எடுப்பதானால் பட்ஜெட்டைச் சுருக்க வேண்டும்.அதுதான் பாதுகாப்பு. அந்தச் சுருங்கிய பட்ஜெட்டுக்குக் கதை இடம் கொடுக்காதெனில் கதையைத்தான் கைகழுவி விடவேண்டும்.
'அருந்ததி' போன்ற நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பெரும் வெற்றிப் படங்கள் உருவானதுக்குக் காரணம், முழுக்க முழுக்க அந்த இயக்குநர்,தயாரிப்பாளரின் முழுமையான,துணிச்சல்.நம்பிக்கை.வெறி.அளவற்ற ஈடுபாடு.
அந்த மாதிரி நிகழ்வுகள் விதிகள் அல்ல.விதி மீறல்கள்.
தயரிப்பாளர்களே விரும்பினாலும்,பெரும் பணத்தை ,வெறும் கதையை மட்டும் நம்பி முதலீடு செய்வது எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
புதிய முகங்கள்.சின்ன பட்ஜெட்.வித்தியாசமான கதை.இதுதான் இன்றைய ஃபார்முலா.
இது திரைப் படத்துக்குப் பின்னாலிருந்து யோசிப்பது.
முன்னால் கொட்டகைகளில் அமரும் ஆடியன்ஸுக்கு படம் நன்றாக இருந்தால் போதும்.பாகுபடின்றி ஓட்டிக் காண்பித்து விடுவார்கள்! தயாரிப்பாளரின் பணத்துக்குத்தான் எல்லைகள் உண்டு.மக்களின் ரசனைக்கு எல்லைகளே இல்லை!

4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?

நான் ஒரு ஆணாக இருப்பதுதான் ஸ்வாமிஜி!

5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?//

கன்னிகா நீள்தொடராக உருவாக ஆரம்பித்து விட்டது.பதிவுலகின் அவசர ரசனைக்கு அது ஒவ்வாதது என்றதனால்தான் அதனைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டேன்.

//சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ....//

நான் முதன் முதலில்'உறவாடும் நெஞ்சம்' என்ற படத்துக்குக் கதை-வசனம் எழுதிய போது எனக்கு வயது 20.!

37 வருடங்கள் நான் உண்டு,உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் திரைப் படக் கலையின் பாதிப்பு இல்லாமல் நான் எப்படி ஸ்வாமிஜி எழுத முடியும்?

விஷுவல்களும்,உண்ர்ச்சிகளும் இல்லாத ஒவ்வொரு ஃப்ரேமும் வீண் என்பது நான் கற்று வந்த கலை.
எப்போதுமே ஒன்றினுடைய இறுதிப் பகுதி விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.
இறுதிகளுக்கே உரிய இயல்பு அது.
அதுவும் திரைத் துறையில்,படத்தின் உச்ச கட்டம்தான் நமக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கும் கடைசி நெருக்கம்.
அங்கே அவர்களது கவனத்தைத் தவற விட்டு விட்டால் மீண்டும் அவர்களைப் பிடிக்கவே முடியாது.
காதலியின் ரயில் போன பிறகு, ஓடிவரும் காதலனைப் போல ஆகி விடுவோம்.

விறு விறுப்பு இல்லையென்றால் கிளைமேக்ஸைத்தான் மாற்ற வேண்டுமே தவிர,விறுவிறுப்பை அல்ல!

இன்னொன்று.பதிவுலக நண்பர்கள் நிறையப் பேர் 'சினிமாத் தனம்' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மந்தமான நமது இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் தப்பிக்கவே நமக்குச் சினிமாவின் போலி விறுவிறுப்பு தேவைப் படுகிறது.
அந்தத் தேவை சிலருக்கு சீக்கிரமே பூர்த்தியாகி விடுகிறது.பல பேருக்கு அது பூர்த்தி ஆவதே இல்லை.
விறுவிறுப்புப் போதும் என்று ஆனவர்கள் நமது இயல்பு வாழ்க்கையின் மந்தத்துடன், படக் கதையின் ஊட்டப் பட்ட விறு விறுப்பை,வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லும் வார்த்தையே இந்த 'சினிமாத்தனம்.'

இந்த 'சினிமாத்தனம்தான்' சரியான மாயை.
இந்த உணர்வு மக்களுக்கு எங்கே தோன்றும் என்று யாராலும்,எந்த நியூட்டன்,ஐன்ஸ்டீன் விதியாலும் தீர்மானிக்க முடியாதது.
படங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது இந்த நூலிழையைப் பற்றிய கணிப்புத்தான்.
ஒரே காட்சியில் காதல் வருவதை ஒரு படத்தில் ஒத்துக் கொள்வார்கள்.அடுத்த படத்தில் காறித் துப்புவார்கள்.
சண்டைக்காட்சியை ஒரு படத்தில் சூப்பர் என்பார்கள்.
அடுத்த படத்திலேயே கிண்டலடிப்பார்கள்.

சினிமாத் தனம் என்று அவ்வப்போது ரசிகர்கள் சொல்வது, கல்யாண மாப்பிள்ளை, காசி யாத்திரை போவது மாதிரி!
அதை உண்மையான சந்யாசம் என்று எடுத்துக் கொண்டால் கல்யாணமே நடக்காது!
என்ன,இங்கே எப்போது ரசிகர் காசி யாத்திரை போவார்,திரும்பத் தாலி கட்ட வருவார் என்று யாருக்குமே தெரியாது!இந்த விந்தையை அறியத்தான் நிறைய சினிமாக் காரர்கள் ஜோதிடத்தை நாடுகிறார்கள்.

//அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்//

என்னுடைய முதல் படமான 'ஒருவர் வாழும் ஆலயம்' தவிர நான் எனது முழு நிறைவுடன் ஒரு படத்தை இன்னும் எழுதவோ,இயக்கவோ இல்லை.உங்கள் அன்பும் ஆசியும் அதற்கு என்னை வழி நடத்திச் சென்றால் நான் நிறைவடைவேன்.

சரணங்கள்,ஸ்வாமிஜி.

திங்கள், நவம்பர் 02, 2009

காதல மலரும் கணங்கள் 9

அமிர்தவர்ஷினி
---------------------
9.
அப்பாவிடம் எங்கள் காதலைச் சொன்ன அடுத்த நாள் அமிர்தவர்ஷினி என்னைப் பார்க்க வரவில்லை.ஃபோனிலும் கிடைக்கவில்லை.ஏதாவது அவளுக்கே உடம்புக்குச் சரி இல்லையா?
மதியம் அப்பா சாப்பாடு கொண்டு வந்த கொடுத்த போது, அது ஹோட்டல் சாப்பாடாக இருந்தது,எனக்கு இன்னும் ஐயத்தைக் கிளப்பியது.அப்பாவுக்கே அன்று இரவு ஃபோன் செய்து கேட்டேன்.சேஷாத்திரி அங்கிளுக்கு உடம்புக்குச் சரி இல்லை என்று அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறாள் என்று அப்பா சொன்ன போதுதான் நான் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.ஆனால் அன்று மாலையே சேஷாத்திரி அங்கிள் எதேச்சையாக என்னைப் பார்க்க வந்திருந்தார்.அவரே அமிர்தவர்ஷினியைத் தேடி வந்திருந்தார்.இதைக் கேட்ட பிறகுதான் நான் பதறிப் போனேன்.
அப்பா என்னிடம் எதையோ மறைக்கிறார் என்று புரிந்தது.
அடுத்த நாள் மதியம் அப்பா எனக்குச் சாப்பாடு எடுத்து வந்த போதுதான் உண்மை புரிந்தது.

'அமிர்தவர்ஷினி எங்கேப்பா?' என்றேன் எடுத்த எடுப்பில்.
அப்பா என்னை ஒரு முறை ஆழமாகப் பார்த்தார்.
'இனி அவ இங்கே வர மாட்டாப்பா'
'ஏன்?'
'அவளை நான் வேறே ஊருக்கு அனுப்பிட்டேன்.' என்றார் அப்பா.
நான் ஒரு கணம் திகைத்துப் போய் விட்டேன்.
'ஏம்பா?'
'சாகப் போற என்னோட மகனுக்காக வாழப் போற அந்தப் பொண்ணோட வாழ்க்கையைப் பலி குடுக்க நான் தயாரா இல்லே!' என்றார் அப்பா அமைதியாக.

'அப்பா' என்று கத்தியே விட்டேன் நான்.
'நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிராக் காதலிக்கிறோம்ப்பா'
'ரெண்டுலே ஒரு உயிருக்குக் கேரண்டி இல்லையேப்பா!' என்றார் அவர், முற்றிய துயரத்தில் மட்டும் வரும் அமைதியுடன்.
'அமிர்தவர்ஷினியே இதுக்கு ஒத்திருக்க மாட்டாளேப்பா?'
'நானே ஒத்துக்காத விஷயத்தை அவ எப்படிப்பா ஒத்துக்குவா? அவ பெரியவங்களை மதிக்கிற பொண்ணு!' என்றார் அவர்.

'சரி.அவளை எங்கே அனுப்பப் போறீங்க? அவகிட்டே நான் பேசிக்கிறேன்.'
'நீ பேசக் கூடாதுங்கறதுக்காகத்தானே, உன்னை இனிப் பார்க்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு அவளை நம்ம வீட்டுலே இருந்தே அனுப்பிச்சுட்டேன் '

நான் அவரை வெறுமையின் ஆழத்துடன் ஒரு கணம் பார்த்தேன்.

'இதுவரைக்கும் என்னோட அப்பா ஒரு புழு,பூச்சிக்குக் கூட துரோகம் பண்ணியிருக்க மாட்டார்ன்னு என்னோட ஃப்ரண்ட்ஸ்கிட்டே எல்லாம் அடிக்கடி உங்களைப் பத்திப் பெருமை அடிச்சுட்டிருப்பேன்.இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு உங்க சொந்த மகனையே கொன்னுட்டீங்களேப்பா!' என்றேன் நான் கண்களில் ஈரம் வற்றிப் போய்..

சற்று நேரம் தலை குனிந்து நின்றிருந்த அப்பா, மெல்லத் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

முழுக்க வடிந்திருந்தார் அவர்..
'உங்க அம்மாவை இழந்து முப்பது வயசுலே நான் பட்ட கஷ்டத்தைப், பதினெட்டு வயசுலிருந்தே அந்தப் பொண்ணு அனுபவிக்கறதை என்னாலே பார்க்க முடியாதுப்பா! காதலோட வலி, என்னன்னு உன்னை மாதிரி சின்னப் பசங்க மட்டுமில்லே..,என்னை மாதிரி வயசானவங்களும் புரிஞ்சுக்குவாங்கன்னு ஏனோ உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது!' என்றார் அப்பா,குரல் உடைய .

தளர்ந்திருந்திருந்த அவரை நான் அணைத்துக் கொண்டேன்.

'என்னை மன்னிச்சுடு,சரவணா' என்று அப்போதுதான் அவர் கதறினார்.

'நான் உங்களைப் புரிஞ்சுக்காமே பேசினப்போ அழாமே,இப்போ முழுக்கப் புரிஞ்சுகிட்டதுக்கப்புறம் ஏம்பா அழறீங்க?' என்று அவரை இன்னும் ஆறுதலாக அணைத்துக் கொண்டேன்.
அவர் கொண்டு வந்திருந்த மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தேன்.அவர் அரைகுறை நிம்மதியுடன் என்னிடம் விடை பெற்றுப் போனார்.
பிறகு சற்று நேரம் அமிர்தவர்ஷிணி என்னிடம் கொடுத்திருந்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

அவளை இனிமேல் பார்க்க முடியாது என்பதை நினைத்தாலே ஆக்சிஜன் இல்லாத காற்றை சுவாசிப்பதைப் போல, நெஞ்சை அடைத்து மூச்சுத் திணறியது.

கையில் இருந்த அந்த வேத நூலின் கையெழுத்துப் பிரதியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

'எப்படி இத்தனை நூற்றாண்டுகளாக,,இத்தனை கோடி மனிதர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் ஒரு தெய்வீகம் என்னை மாத்திரம் கைவிடும் என்று ஒரு வெறி,திடீரென எனக்குள் கிளம்பியது.

தர்க்கம் அனைத்தும் உடைய,அந்தக் கையெழுத்துப் பிரதியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன்.

ஒரே,ஒருநாள் இடைவெளியில் என்னையும்,அமிர்தவர்ஷிணியையும் பிரிக்க முடியுமென்றால்,அது ரயில்களால்தான் முடியும் என்று ஏனோ தோன்றியது.

சென்ட்ரலை நோக்கி ஓடினேன்.என்னிடம் பணம் எதுவும் இல்லையாதலால் வேறு வாகனங்களின் உதவி ஏதுமின்றி ஓடினேன்.மூச்சு வாங்கியது.ஆனால் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அமிர்தவர்ஷிணியைத் திரும்ப எனக்கு மீட்டுத் தரும் என்ற நம்பிக்கையுடன் ஓடினேன்.
ஓடியே சென்ட்ரலை அடைய ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆனது.
சென்ட்ரல் ஸ்டேஷனை நெருங்கிய போது என்னால் கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலைமை.
அமிர்தவர்ஷிணியை முதன் முதலாக நான் பார்த்த அதே அந்தி வேளை. மயங்கிய நிலையில் அடைந்த என்னை அதே பிங்க் சூரியன்,பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சென்ட்ரல் ஸ்டேஷனின் வழக்கமான கூட்டத்தில் என்னுடைய அமிர்தவர்ஷிணி எங்கே?
எந்த ரயிலில் அமர்ந்து என்னிடம் இருந்து ஒரேயடியாகப் பிரியப் போகிறாள்?
அல்லது அவளது ரயில் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டதா?
முதலில், ரயில் நிலையம்தான் நான் அவளைத் தேடி அடைய வேண்டிய உண்மையான இலக்கா?
ஏதோ ஒரு நம்பிக்கையில்,பரபரப்பான கூட்டத்துக்கு மத்தியில், அரைகுறை மயக்கத்துடன் அவளது பெயரைச் சார்ட் லிஸ்ட்டில் தேட ஆரம்பித்தேன்.
மொய்த்துக் கிடந்த அந்த இருபத்தாறு ஆங்கில எழுத்துக்களுக்குள்,எனது தலையெழுத்து மறைந்து கிடக்க,அவளது பெயரை அந்தத் தள்ளு முள்ளலில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அது மட்டுமல்ல,வலுவான அந்தக் கூட்டம் என்னைப் பிதுக்கி வெளியே தள்ளி விட, நான் கிட்டத்தட்ட அந்த இடத்திலிருந்தே வெளியே வந்து விழுந்தேன்.
மூச்சு வாங்கித், தலை சுற்றியது.
அப்போது கசங்கிய உடைகளுடன் வெளியே வந்த ஒருவன் 'டேய், நீ பார்த்த பேரு,நம்ம அம்சவேணி இல்லேடா, யாரோ அமிர்தவர்ஷிணியாம்!' என்றான் தனது நண்பனிடம்.
மயங்கி விழும் சூழ்நிலயில் இருந்த என்னை,அந்த ஒற்றைப் பெயர் மீண்டும் உயிர்ப்பித்தது.
அந்த இளைஞனிடம் தட்டுத் தடுமாறிப் போய் 'சார் எந்த ட்ரெயின்லே,அமிர்தவர்ஷிணி பேரைப் பார்த்தீங்க?' என்றேன் மூச்சு வாங்க. எனது முற்றிலும் இயலாத நிலைமையை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு அவன் 'க்ரேண்ட் ட்ரன்க்' என்றான்.
ஓடினேன்.
பிளாட்ஃபார்ம் கண்டு பிடித்து, நான் ஓடிய போது ரயிலின் கடைசிப் பெட்டி மறைந்து கொண்டிருந்தது.
'அமிர்தவர்ஷிணி' என்று கத்தியபடி, ஓடிய ரயிலுக்குப் பின்னால் ஓடினேன்.

ஸ்டேஷனைத் தாண்டிய பின்னர் வரும் ரயில் பாதையின் ஓரத்துக் கருங்கற்கள் எனது பாதங்களைக் குத்திக் கிழித்தன.
ரத்தம் வந்த எனது பாதங்கள் என்னைக் கடைசியாகத் தடை செய்யப் பார்த்தன.ஆனால் நான் எப்படி ரத்தம் வழிய,அத்தனை வலிகளையும் தாண்டி ஓடினேன் என்று இதுவரைக்கும் எனக்குத் தெரியாது.
அவள் எங்கே நடுவழியில், எந்த ஊரில் இறங்கினாலும், அப்பாவிடம் அவள் அளித்திருந்த சத்தியம் அவளை, என்னை இனிமேல் சந்திக்க விடாது என்ற அச்சம்தான் என்னைத் துரத்தியது.
ஆனால் ஏற்கனவே தளர்ந்து,விழுந்திருந்த எனது உடம்பால் இப்போது வேகம் எடுத்து விட்ட ரயிலின் ஓட்டத்தைப் பிடிக்க முடியவில்லை.

'அமிர்தவர்ஷிணீ ' என்று கடைசியாக எனது சக்தி முழுவதையும் திரட்டிக் கத்தினேன்.
எனது உயிரின் கதறல் கேட்டதோ என்னவோ,ரயில் மெதுவாக நின்றது.
ஏதோ சிக்னல் கிடைக்கவில்லை போலிருந்தது. தூரத்தில் எரிந்த சிகப்பு விளக்கு, எனது கண்ணுக்குப் பச்சை விளக்காகத் தெரிந்தது.
தள்ளாடித் தள்ளாடி ஓடினேன்.

'அமிர்தவர்ஷிணீ !'

யாரும் பெட்டிக்குள்ளிருந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

சிக்னல் கிடைத்து மீண்டும் ரயில் கிளம்பியது.இனிப் பார்க்க முடியாது என்று எனது கண்கள் சொருகி விட்டன.
தடதடவென்று ஓடத் தொடங்கிய ரயில் பெட்டியிலிருந்து, கடைசியாக அமிர்தவர்ஷிணியின் முகம் எட்டிப் பார்த்தது!
அவள் முகத்தை அவ்வளவு அழகாக நான் என்றுமே பார்த்ததில்லை.
அவளது பெயரைக் கூப்பிடக் கூட முடியாமல், அவளைப் பார்த்து வெறுமனே கையசைத்து விட்டு விழுந்து விட்டேன்.
'சரவணா!' என்று அவள் கத்திய சப்தம் ஓடிய ரயில் சப்ததையும் தாண்டிக் கேட்டது.

அவள் ஓடும் ரயிலில் இருந்து எட்டிக் குதித்து ஓடி வந்தது இப்போது எனக்கு மங்கலாகத் தெரிந்தது.
ஓடி வந்தவள் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

இருவரும் அழுது,கதறியபடியே அரவணைத்துக் கொண்டோம்.

தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள் என்பதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள் அதனை இன்னும் அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்.
உலகத்துப் பெண்கள் எல்லோரும் காதல் வயப் பட்டார்கள்.ஆண்கள் அனைவரும் பெண்களை ஆராதிக்கத் தொடங்கினார்கள்.
உலகம் முழுவதும் இருந்த பியானோக்களும்,வயலின்களும் எனக்குப் பிடித்த 'லவ் ஈஸ் ப்ளூ'வை வாசித்த இசை எனக்குள் கேட்டது.
தாமரைகளும்,மல்லிகைகளும்,ரோஜாக்களும் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடின.
எங்களது இரண்டு பக்கங்களும் ஓடிய ரயில்களில் இருந்த ஜனங்கள் சிரித்தபடியே பல மொழிகளில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டே போனார்கள்.
**********************************

'காதல் மலரும் கணங்கள்' என்ற இந்த உண்மைக் காதல் கதை எனது தயாரிப்பில் தொலைக் காட்சியில் வெளியான போதுதான், அதனுடைய டி.ஆர்.பி ரேட் வானைத் தொட்டது.
அமிர்தவர்ஷிணியும்,சரவணனும் இணைந்த காட்சி முடிந்தவுடன் நிகழ்ச்சித் தயாரிப்பாளனான நான் தொலைக் காட்சியில் வந்தேன்.

மக்கள் தொடர்ந்து அளித்து வந்த ஆதரவுக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவித்த பின்னர்,உண்மைக் காதலர்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் பரபரப்பான கட்டத்துக்கு வந்தேன்.

'ரசிகப் பெருமக்களே! இத்தனை நாட்கள் நீங்கள் பார்த்து,ரசித்துருகிய இந்த உண்மைக் காதல் கதை, உண்மையில் நடந்த வருடம் 1983!' என்றேன்.

பார்த்த மக்கள் அனைவரும் 'ஆ'வென்று கத்தியே விட்டார்கள்.

நான் புன்னகையுடன் அவர்களிடம் சொன்னேன்.

'இந்தக் காதல் கதையில் நீங்கள் இதுவரை பார்த்தது,உண்மைக் கதாபாத்திரங்களாக நடித்தவர்களைத்தான். ஆறே மாதத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் சொன்ன அந்த உண்மைச் சரவணன் 26 வருடங்கள் கழித்தும், இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அந்த உண்மைச் சரவண குமாரை நீங்கள் பார்க்கும் முன் ஒரு சின்ன கமர்ஷியல் ப்ரேக்' என்றேன்.

நேரில், இதனைச் சொல்லிக் காக்க வைத்திருந்தால், பார்த்த மக்கள் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள். எங்கள் தொலக்காட்சி வரலாற்றிலேயே அதிக பட்ச வருமானம் ஈட்டிக் கொடுத்த விளம்பர நிமிடங்கள் அவை.

மீண்டும் நான் தோன்றி,'இதோ உங்கள் முன்னர், அந்தப் புற்று நோயாளி சரவண குமார் வருகிறார்!' என்றேன்.

நாடு முழுதும் ,மொழியாக்கம் செய்யப் பட்டு அனைத்துப் புற்று நோய் மருத்துவ மனைகளிலும் இந்தத் தொடர் அன்று ஒளிபரப்பப் பட்டது. அனைத்து நோயாளிகளும்,அவர்களது குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்த நிகழ்ச்சி அது.

சரவண குமார் வந்தார்.

ராணுவ உடையில் அவர் கம்பீரமாக வந்த போது, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவரும் முதலில் திகைத்துப் போய்ப் பின்னர்,எழுந்து நின்று ஒரு சேரக் கைதட்டினார்கள்.

ஐம்பது வயதிருக்கும் உண்மைச் சரவணனின் காலைத் தொட்டுச், சரவணனாக நடித்த இளம் வயது நடிகர் கும்பிட்டார்.நடித்தவரை விட உண்மைச் சரவணன்,அழகோ அழகு.

'வெல்டன்' என்று நடித்தவரைப் பாராட்டினார் அந்த ராணுவ அதிகாரி!
சரவணனிடம் மைக்கைக் கொடுத்து விட்டு, நான் ஒதுங்கிக் கொண்டேன்.

'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு டாக்டர்க சொன்னாங்க.ஆனா நூத்துக் கணக்கான மனுஷங்களோடே உயிரைக் காப்பாத்த வேண்டியவன், நீயே உயிரை விட்டா எப்படிடான்னு, என்னை இன்னும் காப்பாத்திட்டிருக்கறது, என்னோட கதையிலே வந்த,அந்த ஆஜ்மீர் பாபாதான்!' என்றார் சரவண குமார் மேலே பார்த்துக், கையெடுத்துக் கும்பிட்டுக் கண்கலங்கியபடியே.

பார்த்த மக்கள் கண்களில் தங்களை அறியாமலேயே கண்ணீர் பெருகியது.

'இன்னும் புரியற மாதிரி சொல்றேன்.கொஞ்ச நாள் முந்தி பாகிஸ்தான் தீவிரவாதிக மும்பைத் தாஜ் ஹோட்டலைத் தாக்கினப்போ,பல நூறு அப்பாவி மக்களோடே உயிரைக் காப்பாத்த வந்த நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸோட வீரத்தை நீங்க நேரடியாத் தொலைக்காட்சியிலே பார்த்திருப்பீங்க.
அந்தக் கமாண்டோப் படையிலே ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கின மேஜர் நான்!' என்றார் சரவண குமார்.

'சார்' என்றான் என்னுடன் இந்த நேரடி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கெட்டிங் மேனேஜர் கௌதம்.
'என்ன கௌதம்?' என்றேன் நான்.

'இந்த சீரியல் இது மாதிரி எத்தனை கிளைமேக்ஸை வேணும்ன்னாலும் தாங்கும் சார்!' என்றான் அவன் உண்மையில் பரவசத்துடன்.

'இப்போ நீங்க எல்லாரும் ஆவலோடே எதிர்பார்த்திட்டிருக்கிற என்னோட அமிர்தவர்ஷிணியை பார்க்கப் போறீங்க!'' என்றார் சரவணன்.

'சார்!' என்றான் கௌதம், இன்னும் உற்சாகமாக.

'இப்போ மாத்திரம் ஒரு பத்தே நிமிஷம் கமர்ஷியல் ப்ரேக் விட்டீங்கன்னா,இன்னொரு பத்து லட்ச ரூபாயை அள்ளிடலாம் சார்!'

'பணம்,காசு முக்கியமில்லேன்னு தெரியற நேரம் லைஃப்லே எப்பவாச்சும் ஒரு வாட்டித்தான் வரும்,கௌதம்.அதை மிஸ் பண்ணா மறுபடியும் அந்த நிமிஷம் வரவே வராது!' என்றேன் நான்.

அமிர்தவர்ஷிணி வந்தாள்.இப்போது அவளுக்கு 44,45 வயதிருக்கும்.

ஆனால் ஸ்படிகத்துக்கு வயதேது?

'எனது உயிர் மனைவி!' என்று ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டார்,சரவணன்.

அமிர்தவர்ஷிணியிடம் மைக்கை நீட்டினேன்.

'தொலைக்காட்சியில் உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்தப்போ உங்களுக்கு என்ன தோணுச்சு மேடம் ?' என்று கேட்டேன்.

'என்னை விட என் கேரக்டர்லே நடிச்ச பொண்ணு நல்லா டிரஸ் பண்ணியிருந்துச்சு!' என்றாள் அவள், தனது கணவனைப் பார்த்துச் சிரித்தபடியே.

'சாகக் கிடந்த பல பேரு உயிரை, சின்ன வயசுலே இருந்தே உங்களோட அன்பும்,நம்பிக்கையும் காப்பாத்தியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம்.அதுக்கப்புறம் நீங்க அந்தப் பணியைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்ரீங்களா மேடம்?'

'நான் மட்டுமில்லே. ராணுவத்துலே பணி புரியற என்னோடே கணவர்,அம்னஸ்டி இன்டர்னேஷனல்ங்கிற மனித உரிமைக் கழகத்துலே வேலை பார்க்கிற என்னோட மூத்த மகன் அரவிந்த் குமார்,அமெரிக்காவுலே கேன்சர் ட்ரீட்மெண்ட்டுக்காக மேல் படிப்புப் படிச்சிட்டிருக்கிற என்னோட ரெண்டாவது மகன் சஞ்சய் குமார் நாங்க நாலு பேருமே ஒரு மனித உயிர் எவ்வளவு புனிதமானது,அதைக் காப்பாத்தறது அதை விட எவ்வளவு புனிதமானதுன்னு புரிஞ்சுட்டு எங்க வாழ்க்கையைவே அதற்காகவே அர்ப்பணம் பண்ணிட்டு இருக்கோம்' என்றார் அந்த அம்மையார்.

'பார்த்துட்டிருக்கிற உங்க ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?'

அமிர்தவர்ஷிணி தொலைக்காட்சி ரசிகர்களைப் பார்த்துச் சொன்னார்.

'சாவு நம்ம கையிலே இல்லே.ஆனா சாகாமே இருக்கறது நம்ம கையிலதான் இருக்கும்பாரு பாபா!'

'காதல் மலரும் கணங்களின்' அடுத்த உண்மைக் கதையை மீண்டும் உங்களுக்குப் படைக்கும் வரை நன்றி.வணக்கம்.' என்று கூறி விடை பெற்றேன் நான்.

இனி ரோலிங் டைட்டில்கள்..

துறவு வாழ்க்கைக்கு, நாம் கற்பித்திருக்கும் இலக்கணங்களை உடைத்து விட்டு, இதனை எழுதும் போது வாழ்த்திப் பாராட்டி அருள்புரிந்த ஸ்வாமி ஓம்கார் அவர்களது ஆத்ம ரசனையின் பாத கமலங்களுக்கு இந்தக் காதல் கதையைச் சமர்ப்பிக்கிறேன்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது பாராட்டி,ஊக்குவித்து,உற்சாகமளித்த அனைத்துப் பதிவுலகப் பெருமக்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
எழுதத் தொடங்கியதுதான் நான்.தொடர்ந்து எழுதி முடித்தது உங்கள் அனைவரின் ரசனையே.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு பெறும் இக்கதையினை ஆசிரியனின் அனுமதியின்றி எந்த வடிவத்திலும் எடுத்தாள அனுமதி இல்லை என்பது இங்கே அறிவிக்கப் படுகிறது.

இனி அடுத்து வரும் 'காதல் மலரும் கணங்களை' எழுதும் படி நமது பதிவுலகின் இளம் பதிவர்களைக் கேட்டுக் கொண்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.
காதல் தேவதை உங்கள் எல்லோருக்கும் அருள்புரிவாளாகுக..
ஓம் ஸ்ரீ சாய்ராம்.