வியாழன், ஜனவரி 28, 2010

அடையாளம்.

ஐம்பத்து நாலு வயதில் அவளுக்கு ஹார்ட் அட்டேக்.
இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனைக் கட்டிலில் படுத்திருக்கும் போது,ஆண்டவனிடம் அவள் தனது நலம் கோரிப் பிரார்த்தனை செய்தாள்.
கடவுளும் அவள் முன் தோன்றி,அவளுக்கு இந்த வரத்தைத் தந்தார்.
'கவலைப் படாதே,பெண்ணே!இன்னும் உனக்கு, 43 வருடம்,8 மாதம்,15 நாட்கள் ஆயுளை நீட்டித்திருக்கிரேன்.நீ தைரியமாக இருக்கலாம்.'

அவளும் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மீதி வருடங்களை ,இளமையாகக் கழிக்க முடிவெடுத்துப் பரபரப்பாகச் செயல் பட்டாள்.
முகத் தோலின் சுருக்கங்களைப போக்கிக் கொண்டாள்.
பற்களை வரிசைப் படுத்தினாள்.
மார்பகங்களை நிமிர்த்திக் கொண்டாள்.
புதிய முடிகளைப் பதித்துக் கொண்டாள்.
இளமைப் பொலிவுடன் மருத்துவ மனையிலிருந்து, அவள் வெளியே வந்த போது,வேகமாக வந்த கார் ஒன்று அவள் மேல் மோதி, ஒரே கணத்தில் உயிரிழந்தாள்.
இறந்தவள் கோபமாகக் கடவுளின் முன்னே போய் நின்றாள்.
'நீ கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா,கடவுளே? ஏன் மோத வந்த காரின் முன்னிருந்து என்னை நீ காப்பாற்றவில்லை?' என்று கத்தினாள், அந்தப் பெண்.
கடவுள் அமைதியாகச் சொன்னார்.
'மன்னிக்கவும்,உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!'

வெள்ளி, ஜனவரி 22, 2010

இலக்கில்லாத பறவைகள் (தாகூர்)

தற்காலப் படைப்புக்களில் சலிப்புக் காணும் போதெல்லாம், நான் அடைக்கலம் புகும் தாகூரின் 'STRAY BIRDS' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்..
*****************************
எல்லையற்ற வார்த்தைகள், காதலனிடம் தங்கள் முகமூடிகளைக் கழற்றி வைக்க
அவை ஒரே ஒரு சிறிய பாடலாக, நித்தியத்தின் முத்தமாகச் சுருங்கி விட்டது...
*************************************
பிரம்மாண்டமான பாலைவனம் ஒரு சிறிய பசும் புல்லின் காதலுக்காகத் தகித்துக் கொண்டிருக்க,
புல்லோ சிரித்தபடி தலையசைத்து விட்டுப் பறந்து விட்டது....
*****************************************
சூரியனைத் தவற விட்டதுக்குக்காக நீ கண்ணீர் சிந்தும் போதெல்லாம்,
நட்சத்திரங்களையும் தவற விடுகிறாய்...
****************************************
ஓ , கடலே, உனது மொழிதான் என்ன?
நித்தியமான கேள்விகள்.
ஓ,வானமே, உனது பதிலின் மொழி என்ன?
நித்தியமான மௌனம்.
****************************************
நீ பார்ப்பது உன்னை அல்ல, உனது நிழலைத்தான்.
*****************************************
' ஆடிக் கொண்டிருக்கும் இலைகளான நாங்கள் எங்கள் சலசலப்பின் மூலம் புயலுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..
ஆனால் மௌனமாகவே இருக்கிறாயே, நீ யார்?'
'நானா? ஒரு சாதாரணமான பூ.'
*******************************************
ஓய்வு உழைப்புக்குச் சொந்தமானது, கண்ணுக்கு இமைகளைப் போல...
*****************************************
ஓ,அழகே, அன்பில் உன்னைப் பார், கண்ணாடியின் புகழ்ச்சியில் உன்னைப் பார்க்காதே..
*******************************************
அவனது காலை நேரங்கள் ,இறைவனுக்கே புதிய அதிசயங்கள்...
***************************************
காய்ந்து போன ஆற்றுப் படுகை, தனது இறந்த காலத்துக்காக நன்றிகளைக் காண்பதில்லை...
*****************************************
உனக்குப் பசி இல்லாததற்காக, உணவைக் குறை சொல்லாதே...
*******************************************
நீரில் இருக்கும் மீன் மௌனமாக இருக்கிறது.
தரையில் இருக்கும் விலங்கு சத்தம் போடுகிறது.
வானில் பறக்கும் பறவை பாட்டுப் பாடுகிறது.
ஆனால் மனிதனுக்குள் கடலின் மௌனமும்,பூமியின் இரைச்சலும்,காற்றின் பாட்டும் இருக்கின்றன....
*********************************
உனது விக்கிரகம் புழுதியில் உடைந்து கிடப்பது ,
கடவுளின் புழுதி, உனது விக்கிரகத்தை விட மேலானது என்பதை நிரூபிக்கத்தான்....
********************************
கடல் பறவைகளும், கடல் அலைகளும் நெருங்கி வந்து சந்திப்பதைப் போல நாம் சந்திக்கிறோம்.
பறவைகள் பறந்தபின்,அலைகளும் திரும்பிச் செலவதைப் போல நாம் பிரிகிறோம்..
*******************************
வாழக்கை நமக்குக் கொடுக்கப் படுகிறது.
அதனைக் கொடுப்பதின் மூலம் ,நாம் அதனைச் சம்பாதிக்கிறோம்...
**********************************
சிட்டுக் குருவி, மயிலின் தோகையின் பாரத்திற்காக வருத்தப் படுகிறது...
**********************************
குறைபாடுகள் தன்னை நேசிப்பதற்காகத்தான், முழுமை தன்னை அப்படி அலங்கரித்துக் கொள்கிறது...
********************************
இளம் மொட்டு விரிந்தவுடன் ' உலகே, மறைந்து விடாதே' என்று கதறுகிறது....
********************************
இறைவன் பெரிய சாம்ராஜ்யங்களிடம் சலிப்படைகிறான், சிறிய பூக்களிடம் அல்ல...
***********************************
மரம் வெட்டுபவனின் கோடரி, அவன் வெட்டப் போகும் மரத்திடம் தனக்குக் கைப்பிடி வேண்டுமென இறைஞ்சியது..
மரமும் கொடுத்தது...
**********************************
ஒவ்வொரு குழந்தையும், கடவுள் இன்னும் மனிதன் மேல் நம்பிக்கை இழக்கவில்லை என்ற செய்தியோடு பிறக்கிறது...
*******************************
புல்,தனது கூட்டத்தைப் பூமியில் தேடுகிறது.
மரம், தனது தனிமையை வானத்தில் தேடுகிறது ....
*****************************
கண்ணுக்குத் தெரியாத இருள் என்ற ஜோதியின், பொறிகல்தான் நட்சத்திரங்களா?
*******************************
நல்லது செய்ய நினைப்பவன், கதவைத் தட்டுகிறான்.
அன்பு செய்ய நினைப்பவனுக்குக், கதவு திறந்தே கிடக்கிறது...
*************************
சாவில் அனைத்தும் ஒன்றாகிறது.
வாழ்வில் ஒன்று அனைத்துமாகிறது.
கடவுளின் சாவில்,மதங்கள் ஒன்றாகின்றன...
***************************
'கனியே, நீ இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்?'
'நான் உன் இதயத்தில்தான் ஒளிந்திருக்கிறேன், பூவே!'
********************************
வெளிச்சத்தில் தெரியாமல்,இருளில் மட்டும் தட்டுப் படும் ஒன்றுக்கான ஏக்கம் இது....
***********************************
'தாமரை இலையின் அடியில் இருக்கும் பெரிய பனித் துளி நீ, நான் அதன் மேல் இருக்கும் சிறிய துளி' என்றது பனித் துளி குளத்தைப் பார்த்து...
******************************
மறைந்து கொண்டிருக்கும் பகல் பொழுதிடம் இரவு கிசுகிசுத்தது,
'நான்தான் மரணம்.உனது தாய். காலையில் உன்னைப் புதிதாகப் பெற்றெடுக்க வந்திருக்கிறேன்'....
******************************
சூரியனிடம் இரவு கூறியது..
'நீ உனது காதல் கடிதங்களை, நிலவின் மூலம் அனுப்பினாய்..நான் எனது பதிலைக், கண்ணீர்த் துளிகலாகப் புல் நுனிகளின் மேல் விட்டுச் செல்கிறேன்...
************************
இதழ்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் ,பூக்களின் அழகினைச் சேகரிக்க முடியாது...
****************************
சிலந்திவலை பனித்துளிகளைப் பிடிக்கிறேன் என்று நடித்துக் கொண்டு ,பூச்சிகளைப் பிடிக்கிறது...
*****************************
'நீங்கள் ஒரு நாள் அழிந்து விடுவீர்கள் என்று படித்தவர்கள் சொல்கிறார்கள்' என்று மின்மினிப் பூச்சிகள் நட்சத்திரங்களைப் பார்த்துக் கூறின.
நட்சத்திரங்கள் பதிலேதும் சொல்லவில்லை...
**********************************
சிறிய விஷயங்களை என்னை நேசிப்பவர்களுக்காக விட்டுச் செல்கிறேன்.
பெரிய விஷயங்களை எல்லோருக்காகவும் விட்டுச் செல்கிறேன்....
*************************************
'நான் எனது பனித் துளிகளை இழந்து விட்டேன் 'என்று ,நட்சத்திரங்களையே இழந்து விட்ட காலை வானத்திடம் சொல்லி அழுதது,பூ.
***********************************
புகழ், என்னை அவமானப் படுத்துகிறது. ஏனெனில் அது ரகசியமாக நான் பிச்சை எடுத்தது....
**********************************
இரவின் இருள்,வைகறையின் பொன்னை எல்லாம் சுமந்திருக்கும் ஒரு பை.
***********************************
நிலவு,தனது ஒளியை ஆகாயம் முழுக்கப் பரப்புகிறது.ஆனால் தனது கறைகளை மட்டும் தன்னிடமே வைத்துக் கொள்கிறது...
************************
பிறப்பைப் போல, இறப்பும் வாழ்க்கைக்குச் சொந்தமானதுதான்.நடப்பது எனபது காலை மேலே தூக்குவதில் மட்டுமல்ல,மீண்டும் கீழே வைப்பதிலும் அடங்கி இருக்கிறது...
**************************
உங்கள் அன்பின் மேல், நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் கடைசி வார்த்தைகளாக இவை இருக்கட்டும்...
________________

வெள்ளி, ஜனவரி 01, 2010

அதே பழைய புத்தாண்டு

மீண்டும் அதே ஜனவரி 1.
மீண்டும் அதே வாழ்த்துகள்.

சூரியன் உதிக்காமலேயே ஒரு தினத்தை மாற்றும் அதே, ஏதோ ஒரு மேற்கத்திய கணக்குக்கு உலகமே நடத்தும் ஆர்ப்பாட்டம்.

மனங்கள் மாறாமல், காலண்டர்கள் மற்றும் மாறும் செயற்கைக் கொண்டாட்டம்.

இந்த நாளில் நம்மூர்க் கோவில்களில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கத்திக் கொண்டு திமுதிமுவென்று வரும் பக்த கோடிகளின் செயல் புரியாமல் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும் நமது ஆதிசிவனும்,மஹாவிஷ்ணுவும்,பராசக்தியும்.
ஏன்,ஏசுபிரானுக்கும்,நபிகள் நாயகத்துக்கும் கூடப் புரியாத நாள் இது என்று நினைக்கிறேன்.

இரவுகளைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்தே நிறைய நோய்களும்,நிறையக் குற்றங்களும் உருவாகின்றன.காதலர்களும்,கள்வர்களும்,காவல் கார்ர்களும்,யோகிகளும் விழித்திருக்க வேண்டிய இரவில், எல்லோரும் விழித்திருக்கும் வேடிக்கையான சடங்கு.

வைகறைப் புத்துணர்வுடன் துவங்க வேண்டிய நாளை, நடு நிசியில் துவங்கும் இந்தக் குழப்பமான உடலியல் அநியாயம் எப்போதிருந்து,யாரால் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.
பறவைகளும்,விலங்குகளும்,பிறந்த குழந்தைகளும் வீலென்று அலறிக் கொண்டு எழ, நமது புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் வெடிச் சத்தங்கள் முழங்குகின்றன்.

எல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஒரு செயற்கை உற்சாகம்,நமது இயந்திர வாழ்க்கைக்குத் தேவைப் படுகிறது.

பழகிப் போன சலிப்பிலிருந்து,அனுபவித்துக் கொண்டிருக்கும் அலுப்பிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை.

’அதே’ என்ற சொல்லைச் சிறிது நேரம் தள்ளி வைத்து விட்டு ‘இதோ’ என்ற சொல்லை இடம் பெற வைக்கும் உத்தி.

மலர்களுக்குப் பதிலாக பலூன்களும்,இரவின் அமைதிக்குப் பதிலாகக் கூச்சலும்,வெடிகளின் இரைச்சலும்,கனவுகளுக்குப் பதிலாகப் போக்குவரத்து நெரிசல்களும்,அமைதிக்குப் பதிலாக பரபரப்பும் இந்த விழாக கால சாபங்கள்.

மறு நாளே இந்த செயற்கைப் பண்டிகைகளின் அயர்ச்சியைக் கொண்டாடியவர்களின் அனைவரது முகங்களிலும்,கண்களிலும் பார்க்கலாம்.

மதுக்கடைகளைத் திறக்கும் முன்பே, மனிதர்களைப் போதைக்குத் தயாராக்கும் நாட்களே இந்த திரு விழாக்கள்.

எவ்வளவு அபத்தங்களாக இருந்தாலும், இந்த சமூகவியல் கட்டாயங்கள் தரும் சிறிது நேர மகிழ்ச்சிக்காக,அற்ப உளவியல் மாயைக்காக இவற்றை மன்னித்து விடுவோம்.

’கீதாஞ்சலி’யிலிருந்து ஒரு தாகூரின் கவிதை.

‘தாய், வலது மார்பிலிருந்து தனது பாலருந்தும் குழந்தையை எடுத்தவுடன் அழுது கதறும் குழந்தை,மறுகணமே அவளது இடது மார்பில் தனது ஆறுதலை அடைந்து விடுகிறது.’

வாழ்க்கைத் தாயின் வலது மார்பில் பாலருந்தும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றவர்களுக்கு இந்தக் கணமே, அவளது இடது மார்பு கிடைக்க எனது பிரார்த்தனைகள்.