வெள்ளி, பிப்ரவரி 19, 2010

குடில் -நாவல் அறிமுகம்

THE SHACK
---------------------
BY
Wm. PAUL YOUNG
----------------------------

’கடவுள்’ என்ற ‘கோட்பாட்’ டிடம் இன்றைய ,மனிதன் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் விடை தரும் முயற்சிதான் இந்த அற்புதமான புத்தகம்.
மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்த்திருக்கும் இந்தப் புத்தகம், புத்தக உலகில் ஒரு ‘அவதார்’
ஏன், கடவுள் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறார்?
பச்சிளம் குழந்தைகளைக் கூடக் குண்டு வீச்சுக்குப் பலி கொடுக்கும் இந்த அவலமான உலகில், ஆண்டவன் என்னதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்?
எந்தப் பாவமும் செய்தறியாத எனக்கு மட்டும் ஏன் இந்தத் தீராத நோய்?
அனுதினமும் கடவுளைத் தவறாமல் தொழுகின்ற எனக்கு மட்டும் ஏன் நியாயமான வேலை கிடைக்கவில்லை?
எனக்கு மட்டும் ஏன் இந்த அநியாய வறுமையைக் கொடுத்து வாட்டுகிறான் இறைவன்?
அயோக்கியர்கள்,கொடூரக் குற்றவாளிகள்,நயவஞ்சகர்கள்,ஏமாற்றுக்காரர்கள் எல்லாம் எதிலும் வென்றும்,சிரித்தும்,மகிழ்ந்து கொண்டிருக்கையில் வாழ்க்கையில் ஒரு தவறும் புரியாத நான் மட்டும் ஏன் வெற்றியின் காலடியைக் கூட இன்னும் பார்க்காமல் கதறிக் கொண்டிருக்கிறேன்?
உலகில் நடக்கின்ற அத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்குக் கடவுள் எதற்கு?
படைத்தவனிடம் அனைத்துப் பக்தர்களும்,வாழ்க்கையிடம் அனைத்து நாத்திகர்களும் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த ஓயாத கேள்விகளுக்கு,நேரடியாகக் கடவுளே வந்து பதில் சொன்னால் எப்படி இருக்கும்?
கிறித்துவ மதத்தின் கடவுள் வந்து புதிய விளக்கம் தந்தாலும்,மாற்று மதக்காரர்களின் மனதையும் ஊடுருவிச் செல்கிறது,இந்தப் புத்தகம்.
எந்தப் பெயரால் அழைத்தாலும், கடவுள் ஒருவர்தானே?
உண்மையை விட, நம்மை அதிகம் பாதிக்கும் கற்பனைப் படைப்பே இந்த நாவல்.

வீட்டிலேயே கணிணி மூலம்,தனது கம்பெனி வாடிக்கையாளர்களின் அழைப்புக்களுக்குப் பதில் சொல்லும் விற்பனைப் பிரிவில் மெகன்சி ஆலன் ஃபிலிப் வேலை பார்க்கிறான்.அவனுக்கு ஒரு அன்பு மனைவி.ஐந்து குழந்தைகள்.
ஞாயிறு தோறும் சர்ச்சுக்குச் செல்லும் உண்மையான கிறித்துவன் மேக்.,என்று அழைக்கப் படும் மெகன்சி.
ஒரு விடுமுறையில், குழந்தைகளுடன் மலைக் காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலத்திற்குச் செல்கிறான் மேக்.அங்கே அவனது கடைக் குட்டியான செல்லக் குழந்தை மிஸ்ஸி, கொடூரமான,ஒரு மன நோயாளியான கொலைகாரனால் கடத்தப் படுகிறாள்.
தவித்துத்,துவண்டு போகும் மேக்கும், எஃப்.பி.ஐ உட்பட அனைத்து உயர்மட்டப் போலீஸ் படையும்,நண்பர்களும் அந்த மலைக் காட்டையே சலிக்க,சலிக்கத் தேடிய போதும், ஆறு வயதே ஆன மிஸ்ஸி என்ற அந்தக் குழந்தை கிடைக்கவே இல்லை.
மனநிலை பாதிக்கப் பட்ட அந்தக் கொலைகாரன் இதுவரை, இதே போல சிறிய வயதுக் குழந்தைகள் நான்கு பேரைக் கடத்திக் கொண்டு போய்ச் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறான்.எந்தத் தடயமோ,குழந்தைகளின் உடல்களோ கிடைக்காத நிலையில், என்ன முயன்றும்,காவல் துறை அவனைப் பிடிக்கவே முடியவில்லை.
இந்த உண்மை மேக்குக்குத் தெரிய வரும் போது அந்த அன்புத் தகப்பன் தனது குழந்தை மிஸ்ஸியை நினைத்து,நினைத்துத் துடிதுடித்துப் போகிறான்.
கடைசியில் மலைக்காட்டுக்கு நடுவில் இருக்கும் ஒரு சிறிய மரக் குடிலில் மிஸ்ஸி அணிந்திருந்த சிவப்பு ஆடை மட்டும்,ரத்தக் கறைகளுடன் கிடைக்கிறது.குழந்தையின் உடல் கிடைப்பதே இல்லை.
குழந்தையின் உடல் கிடைக்காத நிலயில்,அவளைக் கொலைகாரன் கொன்றிக்கக் கூடும் என்ற அனுமானத்தோடு, காவல்துறை கையை விரித்துவிடுகிற்து.
காலிச் சவப் பெட்டியைக் குழந்தை மெகன்சியின் ஞாபகத்துடன் புதைக்க வேண்டிய கொடுமையான துயரம்,மெகன்சிக்கு.
அவனால் வாழ்க்கை முழுதும் இனி என்றுமே மறக்க முடியாத, அவனது குழந்தைக்குக் கொடுமையான துயரம் நிகழ்ந்த, அந்த சிதிலமடைந்த மரக் குடில்தான் 'THE SHACK' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது.
இந்த நிகழ்ச்சியை அவனும் அவனது மனைவியும் அவரகளது வாழ்வின் ‘மஹாத் துக்கம்’ என்றே எண்ணுகிறார்கள்.
நினைவை விட்டு அகலாத, இந்த ’மஹாத் துக்கம்’ நடந்து மூன்றரை வருடங்கள் கழித்துப், பனி பெய்ய்யும் ஒரு இரவில் மேக்கின் தபால பெட்டியில் ஒரு கடிதம் கிடக்கிறது.
’மெகன்ஸி,
உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.
உன்னை நான் நிறைய ‘மிஸ்’ பண்ணுகிறேன்.
நீ சந்திக்க நினைத்தால், வார இறுதியில் நான் மரக்குடிலில் இருப்பேன்.’
அப்பா’
மெகன்ஸி அந்தக் கடிதத்தைப் படித்ததும் திகைத்துப் போய் விடுகிறான்.
அவனது மனைவி எப்போதும் கடவுளை’அப்பா’ என்றே அழைப்பாள்!
அப்படியானால்,கடவுளிடமிருந்தா இந்தக் கடிதம் வந்திருக்கிறது?
அல்லது,யாராவது விஷமிகள் த்னது துக்கத்துடன் விளையாடுகிறார்களா?
எந்த மரக்குடிலை அவனால் ஒரு கணம் கூட மறக்க முடியாதோ,அங்கேயே அழைக்கிறானே ஒருவன், ஒருவேளை மனம் பிறழ்ந்த அந்தக் கொலைகாரனாய் இருக்குமோ?
அவனாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக நம்பிக் கொண்டு,கொலை வெறியோடு ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ‘THE SHACK' க்குச் செல்கிறான் மெகன்ஸி.

ஆனால் அங்கே அவன் சந்திப்பது, உண்மையிலேயே கடவுளைத்தான் !

பரம்ண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே (’அப்பா’ என்று பாந்தமாக அவனது மனைவி அழைப்பது இந்த ஆண்டவரைத்தான்) மரக்குடிலின் கதவைத் திறந்து,மெகன்ஸியை வரவேற்கிறார்.
ஆனால் பரம பிதா என்று சொல்லிக் கொண்டு நிற்பதோ,ஆப்ரிக்கக் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு பேரிளம் பெண்!
பரமண்டலத்திலிருக்கிறவர் வெள்ளைக் காரராகவோ,ஆணாகவோ தாடி நரைத்த முதியவராகவோகத்தான் இருப்பார் என்பது மனிதனின் கற்பனையே அன்றி, உண்மையில் அவர் நமது கோட்பாடுகளுக்கு அடங்காதவர் என்பதைக் காட்டவே பரம பிதா பெண்வடிவம் தாங்கி வந்து நிற்கிறார்.
கிறித்துவத்தின் முக்கிய மூன்று இறைத்தன்மைகளான பரமபிதா,ஏசுபிரான்,தூய ஆவி மூன்று பேரையும் ஒருவர் பின் ஒருவராக அந்த மரக்குடிலில் சந்திக்கிறான்,மெகன்ஸி.
அவர்கள் அவனது அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி அவனது ‘மஹாத் துக்கத்தைப்’ போக்கி,மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்த் திருப்பி அனுப்பும் போது, நாமும் நமது சந்தேகங்களின் எடை குறைந்து லேசாகிறோம் என்பதே இந்த நாவலின் வெற்றி.
படித்தே தீர வேண்டிய,படித்தவர்கள் பிறருக்குச் சொல்லியே ஆக வேண்டிய புத்தகம் ‘THE SHACK'
நவீன ஆன்மீக வேட்கை கொண்ட அன்பர்கள், அருந்தியே ஆக வேண்டிய குளிர் நீர்க் குவளை ‘THE SHACK'

சனி, பிப்ரவரி 06, 2010

பவுலோ கோலோவின் 'பிரிடா' (நாவல் அறிமுகம்)

உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் கோடிக் கணக்காக விற்றிருக்கும், பௌலோ கோலோவின் புத்தகங்கள்-
மொட்டை மாடியில் அமர்ந்து,முழு நிலவின் அர்த்தமின்மையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு,
மூன்றாவது பெக்குக்கும்,நாலாவது சிகரெட்டுக்கும் ,மத்தியில் திடீரென ஒரு வெறுமையை உணர்பவர்களுக்கு,
முப்பத்து நான்கு வயதில், பின்னிரவின் போர்வைக்குள், ஆண்மையின் தனிமையை மென்று கொண்டிருப்பவர்களுக்கு,
அந்தி ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நின்று, பெண்ணுடலின் சாபத்தில் நலிந்து கொண்டிருக்கும் பேரிளம் பெண்களுக்கு,
70 வயதில் கோவில் முடை நாற்றத்தில் கடவுளைக் காணவில்லை என்று கண்டுபிடித்து அலுப்புற்றிருபவர்களுக்கு,
சாம்பிராணிப் புகை நடுவே,கிழக்கத்திய த்த்துவங்களைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேற்கத்திய ஞானம் என்ன என்று எட்டிப் பார்க்க விரும்புவர்களுக்கு,
மட்டும்.

'பௌலோ கோலோ’ என்னுடைய மிகவும் ஆதர்சமான எழுத்தாளர்களில் ஒருவர்.
போர்த்துகீசியர்.
அவருடைய எழுத்துக்களின் மாயம், என்னை மிகவும் ஆட்டுவித்து உள்புகும்.
மிகவும் எளிய வார்த்தைகளினால் உங்கள் ரத்தத்தின் ரசாயன்ங்களை மாற்ற வல்லவர்.
இப்போது நான் படித்து முடித்த ‘ப்ரிடா’ என்ற அவரது நாவலைப் பற்றி, இந்தப் பகிர்வு...

‘பத்து வெள்ளிக் காசுகள் வைத்திருந்த வீட்டு வேலைக்காரி, ஒரு காசைத் தொலைத்து விடுகிறாள்.பின்னர் நாள் பூராவும்,வீடு பெருக்கும் போது,துணிகள் துவைக்கும் போது,பாத்திரம் பண்டங்கள் தேய்க்கும் போதெல்லாம் அந்தக் காசையே தேடி அலைகிறாள்.மாலையில் அந்தக் காசைக் கண்டெடுத்தவுடன் அக்கம் பக்கத்தார்,நண்பர்கள்,உற்றார், உறவினர்கள் அனைவரிடமும் அந்த ஒற்றைக் காசைப் பற்றியே பெருமை அடித்துக் கொள்கிறாள்,கையிலேயே இருந்த ஒன்பது காசுகளை மறந்து விட்டு....’
-பைபிள் கதை. ல்யூக் 15.8-9

சூனியக்காரி என்று அழைக்கப் படும் ‘விட்ச்’ ஆக விரும்புகிறாள் ப்ரிடா என்ற இளம் பெண்.
மேகஸ் என்ற ஆசிரியரிடமும், விக்கா என்ற ஆசிரியையிடமும் ’மேஜிக்’ என்று கோலோ கூறும் அந்த மாயக் கலையை அவள் கற்றுத் தேர்வதுதான் நாவலின் அடித்தளம்.
அயர்லாந்துக் காட்டினிலும்,அதனை ஒட்டிய சிற்றூரிலும் கதை நடக்கிறது.
தனது மாணவியாகச் சேர்த்துக் கொண்ட முதல் நாளிலேயே,அடர்ந்த காட்டின் நடுவே, காரிருளில் ப்ரிடாவைத் தன்னந்தனியாக விட்டுச் சென்று விடுகிறார் மேகஸ்.
காட்டின் பேய்த்தனிமையில்,காரிருளின் அடர்த்தியில் ப்ரிடா நடுங்கி வெலவெலத்துப் போய் விடுகிறாள்.
இரவு முழுதும் எண்ணங்களின்,கற்பனைகளின் பீதியில் அல்லாடுகிறாள் ப்ரிடா.மனதின் அச்சங்களுக்கு வடிகாலாக, அவள் சிறு வயதில் இருந்து கற்ற மந்திரங்களும், கடவுள் நம்பிக்கைகளும், உற்றார், உறவினர், நண்பர்களின் நினைவுகளுமாகப் பொழுதைப் பயத்தின் சித்திரவதைகளிலேயே கழிக்கிறாள்,அவள்.
ஒரு கட்டத்தில் காலை வரப் போகும் கதிரொளியின் நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்க, மனம் ஓய்ந்து நிம்மதியாக உறங்கி விடுகிறாள்,ப்ரிடா.
மேகஸ் அவளுக்கு நட்த்திய ‘மேஜிக்’ என்ற மாயக் கலையின் முதல் பாடம் இதுவே!
‘இருள் சூழ்ந்த இரவே நான் கற்றுக் கொண்ட முதல் பாடம்.கடவுளைத் தேடும் பாதையே காரிருளில்தான்.நம்பிக்கையும்,விசுவாசமும் கூட ஒரு இருள் சூழ்ந்த இரவுதான்.இது விந்தையே அல்ல.ஏனெனில் ஒவ்வொரு ,பகலும் உண்மையில் இருள் சூழ்ந்த இரவே.அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமல்தான், நாம் முன்னே போய்க் கொண்டிருக்கிறோம்.காரணம்,நாம் வைத்திருக்கும் நம்பிக்கை.கொண்டிருக்கும் விசுவாசம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமுமே நமது நம்பிக்கை, ஆற்றும் செயலே.’
இருள் சூழ்ந்த இரவை முதல் பாடமாக்க் கற்பிக்கும் இந்தப் பாதையின் பெயர் ’சூரியப் பாதை’ என்கிறார் மேகஸ்!
அடுத்து விக்கா என்ற சூனியக் காரியிடம் ப்ரிடா கற்றுக் கொள்வது ‘சந்திரப் பாதை’
************************
ஒரு புத்தக்க் கடைக்காரர்தான் ப்ரிடாவுக்கு, விக்காவின் முகவரியைத் தருகிறார்.
‘இந்த மாயக் கலை என்றால் என்ன,சொல்?’ என்று கேட்கிறார் அந்தப் புத்தக்க் கடைக்காரர்.
‘நாம் பார்க்கும் உலகத்தையும், நாம் பார்க்காத உலகத்தையும் இணைக்கின்ற பாலமே இந்த ”மேஜிக்” ’ என்கிறாள் ப்ரிடா..
*************************
மறுபிறப்பைப் பற்றிக் கூறும் விக்கா,அதனைச் சந்தேகத்துடன் கேட்கும் ப்ரிடாவுக்குச் சொல்லும் செய்தி இது...
‘பிறந்தவர்களே மீண்டும்,மீண்டும் பிறக்கிறார்கள் என்ற மறுபிறப்புக் கோட்பாட்டில் உனக்கு ஐயம் வருவது நியாயமே.ஆதியில் பூமியில்,கொஞ்சம் மனிதர்களே இருந்தார்கள்.மீண்டும்,மீண்டும் அவர்களே பிறந்தால் பூமியில் எப்படி இத்தனை ஜனத்தொகை பெருகியது என்று நீ கேட்பாய்.பதில் மிகவும் எளிது.சில பிறவிகளில் நாம் இரண்டாகப் பிரிந்து பிறக்கிறோம்,செல்களைப் போல,செடிகளைப் போல,நட்சத்திரங்களைப் போல,ஸ்படிகங்களைப் போல...
ஒரு ஆத்மாவே இரண்டாகப்,பின்னர் நான்காகப்,பின்னர் பதினாறாகப் பிரிந்து சில தலை முறைகளிலேயே பெரும் பகுதி பூமியை, ஒரு ஒற்றை ஆத்மா நிறைத்து விடுகிறது....
இப்படிப் பிரிந்து கொண்டே போவதால் எண்ணிக்கையில் அதிகமாதலைப் போல, ஆற்றலில் வீரியம் குறைந்து கொண்டே போகிறோம்.அதைச் சரிக்கட்டவே பிரிந்த ஆத்மாவின் பகுதிகள் ஒன்றை ஒன்று அடையாளம் கண்டு கொண்டு இணைகின்றன.இதனையே ரசவாதிகள் அன்பு என்று சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல,ஆத்மா இரண்டாகப் பிரியும் போது, அது ஆணாகவும்,பெண்ணாகவுமே பிரிகிறது..இதைத்தான் பைபிளில் ஆதாமிலிருந்து ஏவாள் பிரிந்த கதையாக்ச் சொல்லப் படுகிறது.
பிரிந்து போன நமது ஆத்மாவின் பகுதிகளையே, நமது உயிர்க் கூட்டாளிகளாக நாம் பிறவிதோறும் அடையாளம் கண்டு கொள்கிறோம்..
ஒரு வித்த்தில் இந்த முழுப் பூமியின் மனிதர்கள் அனைவருக்கும் நாம் ஒவ்வொருவருமே பொறுப்பாகிறோம்.நம்மிலிருந்து பிரிந்து போன நமது உயிர்க் கூட்டாளிகள் எங்கே இருக்கிறார்கள் என்பதே நமக்குத் தெரியாது.அவர்கள் எங்கோ மகிழ்ச்சியுடன் இருந்தால் நமக்குள்ளும் அந்த இனம் புரியாத மகிழ்ச்சி பொங்குகிறது..அவர்கள் எங்கோ வேதனைப் பட்டால் நமக்குள்ளும் இந்த இனம் புரியாத வேதனை பெருக்கெடுக்கும்..
உனது பிறவியின் நோக்கமே,உனது உயிர்க் கூட்டாளியை நீ தேடிக் கண்டு பிடித்து இணைவதுதான்...’

*************************
தொலைபேசிகளைப் பற்றி விக்கா கூறுவது...
‘தொலைபேசி கண்டுபிடிக்கப் பட்ட, போன நூற்றாண்டு வரை, பார்த்தலும்,பேசுதலும் ஒன்றாக இணைக்கப் பட்ட புலன்களே.
ஆனால்,தொலைபேசியில் பேசும்போது, நேரில் பார்க்காத ஒருவரிடம் நாம் முதன்முதலாகப் பேசுகிறோம்.பார்த்தலும்,பேசுதலும் பிரிக்கப் படுகின்றன.மனித மூளையில் இது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா?பார்ப்பதில் இருந்து, பார்க்கப் படாத ஒன்றுக்கு நேரிடையாகத் தொடர்பு கொள்ளும் விழிப்புணர்வு, நமக்கு இப்போது அதிகமாகி இருக்கிற்து.’

*****************************

நாம் அணியும் ஆடைகளைப் பற்றி விக்கா கூறுவது..
‘நாம் உடுத்தும் உடைகள் முக்கியமானவை.ஏனெனில் அவை உணர்ச்சிகளைப் பொருட்களாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.நாம் பார்க்கும் உலகத்தையும்,பார்க்காத உலகத்தையும் இணைக்கும் பாலங்களில், ஆடையும் ஒன்று...’
*********************************
‘சந்திரப் பாதையில்’ மிகவும் தேர்ந்த ஐரிஷ் கவிஞர் W.B.YEATS. மகாகவி.தாகூரை மேற்கத்திய உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்..
அவரது கவிதை வரிகள்...

‘உனது காலடியில் எனது கன்வுகளை விரித்திருக்கிறேன்..
நடக்கும் போது மிருதுவாக நட..
நீ நடப்பது எனது கனவுகளின் மேல்....’

****************************

நாவல் முழுதும் இது போல நிறையப் புதிய,புதிய வாழ்க்கைச் செய்திகள்,உணர்வுகள்,பார்வைகள்,கோணங்கள்..
நண்பர்களுக்கு, நான் பரிந்துரைப்பது பௌலோ கோலோவின் ALCHEMIST' என்ற அற்புதமான சிறிய நாவலை....
நாம் எல்லோரும் பௌலோவின் உயிர்க் கூட்டாளிகளாகத் தொடர்வோமாக....