செவ்வாய், ஏப்ரல் 28, 2009

பறக்கத் தொடங்கிய பட்டாம்பூச்சி!

இந்தக் கூட்டுப் புழுவினைப் பட்டாம்பூச்சியாக்கிப் பறக்க விட்ட ஆ.ஞானசேகரனுக்கு எனது முதல் நன்றி.

நானும் மூன்று பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும் என்று வேறு ஒரு விளையாட்டு!

தேர்தல் என்றாலே அலர்ஜி ஆக நினைக்கும் இந்தச் சூழ்நிலையில் நான் நடத்தும் ஒரு குட்டித் தேர்தல்!

எனது பதிவு நண்பர்கள் பெரும்பாலோர் ஏற்கனவே பட்டாம் பூச்சிகளாகிப் பறந்து முடித்து மலர்களில் செட்டில் ஆகி விட்ட படியால் எனக்கு மிகவும் குறுகிய வட்டமே கிடைத்திருக்கிறது.

அதிசயமாகச் சில பேரே மிஞ்சிக் கிடைத்திருக்கிறார்கள்.

அதில் எனது பதிவுலக முதல் நண்பர் "உண்மைத் தமிழன் " என்ற சரவணன் அவர்களைப் பட்டாம்பூச்சியாக்கிப் பறக்க விடுகிறேன்.

பருந்து போல வானளாவிப் பறக்கும் அவரைப் பட்டாம்பூச்சியாக்கி மலர்கள் நடுவில் பறக்க விடுவதில் பயம்தான். இனி எத்தனை மலர்கள் அவரது விமர்சனத்துக்கு ஆளாகிக் கசங்குமோ தெரியவில்லை.

அடுத்து நான் தேர்ந்தெடுப்பது திரு.கார்த்திகேயன் அவர்களை.(geethappriyan.blogspot.com) துபாய் நாட்டில் கணினி வரைவாளராகப் பணி புரியும் கார்த்திகேயன் சமூகப் பொறுப்போடு எழுதுபவர்.அவரது 'ஏழாம் உலகம்' புத்தகவிமர்சனத்தின் நடையைக் கண்டு நான் மிரண்டு போனேன்.
அந்த இளம் படைப்பாளி மேலும் மேலும் வளர எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

அடுத்து எனது இனிய நண்பர் "குடுகுடுப்பையார்" .இவரது சரளமான நகைச்சுவையும், யதார்த்தமான எழுத்தும் எனது மனம் கவர்ந்த படைப்புக்கள்.

மூன்று நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

1.இந்த பட்டாம்பூச்சியின் நிரலியை உங்கள் பக்கத்தில் ஒட்டி விடவும்.
2.உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்.
3.மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களுக்கு இந்த பட்டாம்பூச்சியை கொடுத்து அவர்களின் இணைப்பையும் உங்கள் தளத்தில் கொடுக்க வேண்டும்.
4.நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்.


இன்னும் என்னைத் தொடர்ந்து ரசிக்கும் இனிய நண்பர்கள்
குப்பைத்தொட்டி"
CableSankar
hi....
Vijay's space of thoughts
அக்கரைச்சீமை (HE IS IN INTERVEL.SO I DID NOT WANT TO DISTURB HIM)
அது ஒரு கனாக் காலம்
அறிவே தெய்வம்
இத‌ய‌ப்பூக்க‌ள்
உரத்த சிந்தனை
என் கனவில் தென்பட்டது
ஒண்ணுமில்லை.....ச்சும்மா
கணேஷின் பக்கங்கள்!
கிரி Blog
கிஷோர்
சும்மா
சொல்வதெல்லாம் உண்மை
ஜோதிடம் பற்றிய திரட்டு
நீரோடை
பட்டிக்காட்டான்..
பார்வையில்
பிச்சைப்பாத்திரம்
லோயர் கருத்துகள்

வடிகால்
வண்ணத்துபூச்சியார்

வானவில் எண்ணங்கள்
வினோத்கெளதம்

இவர்களையும் பட்டாம் பூச்சிகள் ஆக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.ஆனால் அவர்களை எல்லாம் கலந்தாலோசிக்க அவர்களுக்கும் ,எனக்கும் நேரமில்லை.
அப்புறம் , தோட்டத்தில் மலர்களை விடப் பட்டாம் பூச்சிகள் அதிகமாகி விடுமோ என்ற பயம்!

இங்கே விடுபட்ட முக்கியமான இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
ஹாலிவுட் பாலா. அமரபாரதிசார்.
முதலாமவர் அருமையான திரைப் படவிமர்சனக் கலை வல்லுநர்.நிறையத் திரைப் படங்களை விட இவர் அதற்கு எழுதும் விமர்சனங்கள் ஆழமாகவும் அழ்காகவும்,இருக்கும். இவர் சற்றே சொந்த 'பிசி' யில் இருக்கிறார். விரைவில் பதிவுலகுக்கு வரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

அமரபாரதி சார் ,தான் எழுதா விட்டாலும் மற்றவர்களை எழுதும் படி ஊக்குவிப்பதில் வல்லவர்.தேர்ந்த தெளிந்த, ரசனையாளர்.
இவரே படைப்பாளியாகவும் வேண்டுமென்பது எனது அவா.

பதிவுலக மலர்களுக்கு மத்தியில் இந்தப் பட்டாம் பூச்சிகள் பறக்கட்டும்.
நன்றி.



திங்கள், ஏப்ரல் 27, 2009

கன்னிகா (ஆறாம் பாகம்)

7.

'ஓ மேன்மையாகப் பிறந்தவரே! நீங்கள் உண்மையின் பாதையைத் தேடும் நேரம் வந்து விட்டது. உங்கள் மூச்சு நிற்கப் போகிறது.
உங்கள் குரு உங்களை அந்தத் தூய ஒளியின் முன் நேருக்கு நேர் நிறுத்தி இருக்கிறார்.

எங்கே எல்லாப் பொருட்களும் வெற்றிடம் போல,மேகங்கள் அற்ற வானம் போலத் தோன்றுகிறதோ,எங்கே மையமோ சுற்றளவோ இல்லாத வெற்றிடம் போல மூடப்படாத,களங்கமற்ற அறிவு தோன்றுகிறதோ அந்த பார்டோ நிலையில் இருந்து தூய ஒளியை அதனுடைய உண்மை நிலையில் உணரப் போகிறீர்கள்.

இந்தக் கணத்தில் உங்களை நீங்களே அறிகிறீர்கள்.'

திபெத்தின் 'இறந்தவர்களின் புத்தகம்' நூலிலிருந்து.

7.
பாபா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையம்.
இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த திவ்யா அதனை வட்ட வடிவமாக உருவாக்கி இருந்தாள்.
முழுநிலவின் குளிர்ந்த நீலம் பூத்த வெண்மையும், மதலை இளஞ் சிவப்பும் (பேபி பிங்க்) முதன்மை நிறங்களாகக்,கட்டிடம் காலை நேரத்து மேகத்தால் செய்தது போல மெத்தென்று இருந்தது.

'ஏன் வட்ட வடிவத்தைத் தேர்வு செய்தாய்,திவ்யா?' என்றேன் நான்.

'குறைந்த சுற்றளவில் நிறையப் பரப்பளவு வட்டத்துக்குத்தான் உண்டு.அதனால்தான் இயற்கை தனது படைப்பில் பெரும்பாலும் வட்டங்களையும்,அதனுடைய மூன்றாவது பரிமாணம் என்றால் கோளங்களையும் படைத்திருக்கிறது.நானும் இயற்கையைப் பின் தொடர்ந்திருக்கிறேன்'' என்றாள் அவள் ஒரு ஆர்கிடெக்டாக.

'கட்டிடத்தின் நிறங்களாக வெண்மையையும்,இளஞ்சிவப்பையும் தேர்ந்தெடுக்கக் காரணம்?'

'வெண்மை, தூய்மை. ஆதிமூலமான சிவம். இளஞ்சிவப்பு, வைகறைச் சூரியனைப் போல சக்தியின் துவக்கம்.' என்றாள் திவ்யா.

கட்டிடத்தின் முகப்பில் இரண்டு பெரிய வெண்பளிங்கு யானைகள் நின்றிருந்தன.
ஆறு ஏழு அடி உயரத்தில் உண்மையான யானையின் அளவுகளையே ஒத்து இருந்தன அந்தப் பளிங்கு யானைச் சிற்பங்கள்.
யானையின் தந்தங்கள்,தும்பிக்கை,நெற்றியின் செதுக்கல்களில் எல்லாவற்றிலும் சிற்பி தன் உயிரையே நிரப்பி இருந்தார்.

'பிரமாதம்.பிரமாதம். ' என்றேன் நானே அந்த வெள்ளை யானைகளின் கம்பீரத்திலும் அழகிலும் என்னை மறந்து.
'இந்த யானைகளுக்கும் ஏதாவது உள்அர்த்தம் உண்டா?'
'நிச்சயமாக' என்றாள் திவ்யா சிரித்தபடியே.
'என்ன?' என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.

'யானை ஆற்றலுக்கும் அமைதிக்கும் குறியீடு.அதனுடைய பேராற்றல் அதற்கு அமைதியைத் தந்ததா,அல்லது அதனுடைய அமைதி அதற்குப் பேராற்றலைத் தந்ததா என்பது இயற்கையின் மாயை.அதனால்தான் கிழக்கத்திய சமயங்களில் எல்லாம் யானைக்குத் தனி முக்கியத்துவம் உண்டு.' என்றாள் திவ்யா.

'சரி,இங்கு அவற்றை நீ நிறுவியதற்குக் காரணம்?'

'இனி எந்தச் சிகிச்சையும் பலனளிக்க முடியாது என்று தெரிந்த புற்று நோயாளிகள் தான் இங்கே வருகிறார்கள்.வாழ்க்கையின் இந்த இறுதிக் கட்டத்தில் இருக்கும் அவர்களுக்குத் தேவை மரணத்தைச் சந்திக்கும் பேராற்றலும், அதனால் வரும் பேரமைதியும்தான். நிறைய நோயாளிகள் இங்கே வந்து இந்த யானைகளைத் தடவிக் கொண்டு நீண்ட நேரம் மௌனமாக நின்றிருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.' என்றாள் திவ்யா அந்த யானைகளைத் தானும் நெகிழ்ச்சியுடன் தடவியபடி.

சில நிமிடங்கள் மவுனத்திற்குப் பிறகு 'சரி,உள்ளே போவோம்' என்று என்னை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அவள்.

வரவேற்பு ஹால்.அதே நீலம் பாரித்த வெண்மை.அதே பேபி பிங்க் ஜன்னல்களும் நிலைப் படிகளும்.வரவேற்பாளராக இருந்த அழகிய இளம் பெண் திவ்யாவைப் பார்த்தவுடனேயே முகம் மலர ஓடி வந்தாள்.

'ஹாய் திவ்யா.' அவள் உற்சாகத்துடன் திவ்யாவை ஆரத் தழுவிக் கொண்டாள்.

இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்.அதைப் பார்த்த திவ்யா என்னை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'மஹதி,இது அரவிந்தன்.என்னுடைய ஃப்ரன்ட்' என்றாள் திவ்யா.
''இவள் மஹதி.' என்றாள் என்னிடம்.
மஹதி எனது கைகளைக் குலுக்கினாள்.

அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்.

'அழகான பெயர்' என்றேன் நான் இயல்பான புன்னகையுடன்.
'அழகான பெண்ணும் கூட என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாயா இல்லையா?' என்றாள் திவ்யா சிரித்தபடி. மஹதியும் சிரித்தாள்.
‘ஆமாம் என்றால் நீ கோபித்துக் கொள்வாயா மாட்டாயா?’ என்றேன் நானும் சிரித்தபடியே.
இருவரும் சிரிக்க,திவ்யா மட்டும் என்னை முதுகில் செல்லமாக அடித்தாள்.அதற்குள் மஹதியின் மேஜையின் மேல் இருந்த தொலைபேசி அடிக்க 'சரி உங்கள் இருவரையும் அப்புறம் சந்திக்கிறேன்'என்று தனது மேஜைக்கு ஓடினாள் மஹதி.

நாங்கள் இருவரும் மருத்துவ மனைக்குள் செல்லும் பெரிய தேக்கு மரக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போனோம்.
கதவுகள் எங்கள் பின்னால் தானாக மூடிக் கொண்டன.

உள்ளே நான் கண்ட கட்டிடத்தின் தோற்றம் உண்மையில் என்னைப் பிரம்மிக்க வைத்தது.

மாபெரும் வட்ட வடிவமான தளத்தின் நடுவில் ஒரு பெரிய தாமரைக் குளம்!

ஸ்படிகம் போன்ற நீரில் வெள்ளையும், சிவப்புமாய்த் தாமரைகள் பூத்து நிறைந்திருந்திருந்தன.சுற்றிலும் பேபி பிங்க் பளிங்குப் படிக்கற்கள் குளத்துக்குள் இறங்கின.தளத்தின் மேல் கூரை கெட்டிக் கண்ணடியால் வேயப்பட்டிருந்ததால், சூரிய வெளிச்சம் இயற்கையாக உள்ளே வழியும் படியான கட்டிடம்.

'ஓம் ஷாந்தி ஓம் 'என்று மந்திரமும் ஃப்யூஷன் இசையுமாக அந்தச் சூழ்நிலையே அமைதியும்,குளுமையுமாக மென்மையாகப் பூரித்திருந்தது.
இந்த மனதுக்கு இதமான சூழ்நிலயே எந்தப் பிணியையும் ஆற்றி விடும் என்று தோன்றியது.

குளத்தைச் சுற்றிலும் பெரிய காரிடார்கள் வட்டமாக ஓடின.கண்ணாடித் திரைகளால் காரிடார்கள் அடைக்கப் பட்டிருந்ததால்,அங்கே இருந்த எந்த அறைகளுக்குள்ளும் குளத்தில் இருந்து வரும் பூச்சி புழுக்கள் அணுகா வண்ணம் மருத்துவ மனையின் தூய்மை பேணப் பட்டிருந்தது.

'150 அடி உயரம்.மூன்று தளங்கள்.'என்றாள் திவ்யா,புன்னகையுடன்.
'இந்த மருத்துவ மனை யாருக்குச் சொந்தமானது திவ்யா?' என்று கேட்டேன் வியப்பின் உச்சியில் நின்று.

'இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கின்ற ஆறு பெரிய பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து கட்டி இருக்கிறார்கள்.ஏழைகளுக்கு இலவச மருத்துவம்.மற்றவர்களுக்கு வருமானத்துக்குத் தகுந்த கட்டணம் வாங்குகிறார்கள்.இங்கே வேலை பார்க்கும் டாக்டர்கள், மற்ற ஊழியர்கள் யாரும் ஊதியம் வாங்கிக் கொள்ளாமல் சேவையாக இதனைச் செய்கிறார்கள்.மஹதி கூட பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகப் பணி புரிகிறாள்.அவ்வப்போது லீவ் போட்டு விட்டு வந்து இங்கே பணி புரிகிறாள்.' என்றவள்,சற்றே கழித்து
'இது பணம் இருக்கிறவர்கள் எப்போதாவது எழுதும் கவிதை!'என்று சொல்லிச் சிரித்தாள் .

'நமது அரசர்கள் கோவில்கள் கட்டியதைப் போல!' என்றேன் நான்.
பிறகு நாங்கள் இருவரும் மருத்துவ மனையின் தலைமை மருத்துவரான டாக்டர் அப்துல் ரூமியைப் பார்க்கப் போனோம்.

விசாலமான அவரது அறையின் முன்பகுதியில் வரவேற்பாளராக இருந்த இளம்பெண் திவ்யாவைப் பார்த்ததும் மனம் குளிரச் சிரித்தாள்.
'ஹாய் திவ்யா'
'ஹல்லோ,ஜெனிஃபர்' என்றால் திவ்யா அவளது கைகளைக் குலுக்கிய படியே.
'ரூமி ஃப்ரீயா ஜெனிஃபர்?' என்று திவ்யா கேட்டதும் 'அதிர்ஷ்டவசமாக இன்னும் அரை மணி நேரம் ரூமி ஃப்ரீ' என்றாள் ஜெனிஃபர்.அவள் ஆங்கில நடிகை ப்ரிட்டனி மர்ஃபி போல இருந்தாள்.நிறம் மட்டும் தான் நமது இந்திய வெள்ளை.

அந்த மருத்துவ மனையில் மேற்கத்திய நிறுவனங்களில் புழங்குவதைப் போல பதவிகளைக் குறிப்பிட்டுப் பேசாமல் எல்லோரும் பெயர்களைச் சொல்லியே பழகுவார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

இன்டர்காமில் அனுமதி பெற்றபின் ஜெனிஃபர் டாக்டரின் அறைக்குள் எங்களை அனுப்பினாள்.
டாக்டர் அப்துல் ரூமி உற்சாகமாகத் திவ்யாவை வரவேற்றார்.என்னை அறிமுகப் படுத்தியதும் 'ஹல்லோ அரவிந்த்' என்று கூறி அழுத்தமாகக் கைகளை பற்றிக் குலுக்கினார்.அவருக்கு 50 வயது இருக்கும்.பார்ப்பதற்குப் பாடகர் ஜேசுதாஸைப் போல இருந்தார்.உ.பி.க்காரர் என்று பின்னர் திவ்யா சொன்னாள்.

இருவரும் அவர்களுக்குத் தெரிந்த பல நோயாளிகளைப் பற்றிப் பேசினார்கள்.இறுதிக் கட்டப் புற்று நோயாளிகள் ஆதலால் அவர்களில் பெரும்பாலோர் காலமாகி இருந்தார்கள்.

'இப்படித் தினமும் மரணத்தைப் பார்க்கிறீர்களே,அது உங்கள் மனதைப் பாதிக்கவில்லையா?' என்று ரூமியிடம் கேட்டேன் நான்.

'நிச்சயமாக அரவிந்த்.மரணம் என்னை,இன்னும் வாழ்க்கையை ஆழமாக நேசிக்க வைத்திருக்கிறது' என்றார் டாக்டர் சற்றும் யோசிக்காமல்.

'சிறுகுழந்தைகள் உடையாமல் பார்த்துக் கொண்டு விளையாடும் சோப்புக் குமிழியைப் போல வாழ்க்கையை நான் பார்க்கிறேன்.இது நிலையானதில்லை என்று உறுதியாகத் தெரிந்த பின்னரே எனது மனைவியை நான் எப்பொழுதையும் விட இப்போது அதிகம் நேசிக்கிறேன்.இங்கிருந்து வீட்டுக்குப் போன பின்னர் எனது குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது தெரியுமா?நான் சாப்பிடும் சப்பாத்திகள்தான் உலகத்திலேயே இனிமையான உணவு என்று உண்ணும் போதெல்லாம் மனதார உணர்கிறேன்.எல்லாவற்றையும் விட இப்போதுதான் இதய பூர்வமாக ஐந்து வேளையும் தொழுகிறேன்' என்றார் ரூமி சிரித்தபடியே.

பிறகு என்னையே ஆழமாகப் பார்த்தபடியே,ஆனால் அவரது பார்வை என் மேல் மையம் கொள்ளவில்லை, இதைச் சொன்னார்..
'மரணம் என்ற கோப்பையில் இருந்துதான் நாம் வாழ்க்கையின் இனிய திராட்சை ரசத்தையே பருகிக் கொண்டிருக்கிறோம்,அரவிந்த்' என்றார் ரூமி.

'அருமையாகச் சொன்னீர்கள் டாக்டர்' என்றாள் திவ்யா உண்மையில் ரசித்து.
'பார்த்தாயா,வெறும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டிருந்தவனை மரணம் கவிதை எழுத வைத்து விட்டது'என்று சிரித்தார் ரூமி.
'இதைக் கேட்கும் போது எனக்கும் சாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது டாக்டர்!' என்றேன் நான். டாக்டரும் திவ்யாவும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

'ஆனால் புற்று நோய் மட்டும் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்.அப்புறம் திவ்யா உன்னை என்னிடம் அழைத்து வந்து விடுவாள்.'என்று ரூமி மேலும் சிரித்தார்.

'பயத்தை மட்டும் அகற்றி விட்டால்,மரணம்தான் வாழ்க்கையின் உச்ச கட்ட இன்பமாக இருக்க முடியும் அரவிந்த்' என்றார் ரூமி.
அப்போது இன்டர்காம் அவரை அழைக்கக்,கேட்டு விட்டு 'வரச் சொல்' என்றார் சுருக்கமாக.நாங்கள் எழ முற்பட, வேண்டாம் என்று சைகையாலேயே எங்களை அமரச் செய்தார் அவர்.
உள்ளே வந்த பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கும்.ஏதோ வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்.இந்தியில் பேசினாள்.ஏற்கனவே நன்கு அழுது விட்டு வந்திருப்பாள் போலிருக்கிறது.கண்கள் சிவந்து வீங்கி இருந்தன.அவளது கணவன் தான் நோயாளி.ரத்தப் புற்று நோய்.இப்போதெல்லாம் அவளது கணவன் அவளிடம் பேசவே மாட்டேன் என்கிறானாம்.அது பரவாயில்லை,எதைச் சாப்பிடக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான் என்பதே அவளது முதன்மையான புகார்.

டாக்டர் ரூமி அவள் சொன்னதையெல்லாம் பரிவுடன் கேட்டார்.பிறகு சொன்னார்.

'கல்பனா,நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.உங்கள் கணவருக்கு நீங்கள் இப்போது செய்யும் பெரிய உதவி அவரைக் கூடுமான வரை தனிமையில் விடுவதுதான்.அதுதான் அவருக்கு அமைதி அளிக்கிறது என்றால் தயவு செய்து அந்த அமைதியை அவருக்குத் தாருங்கள்.இந்த மாதிரி சமயங்களில் உண்பதே நோயாளிகளுக்குப் பிடிக்காது.பசியே எடுக்காது.நீங்கள் அதற்காக மனது வேதனைப் படாதீர்கள்.அவரது உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நாங்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளிலேயே கிடைக்கும்.நீங்கள் முதலில் அமைதியாக இருந்து உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்குத்தான் இப்போது அபரிமிதமான சக்தி தேவை. மற்றதற்கு நாங்கள் இருக்கிறோம்,கவலைப் படாதீர்கள்.' என்று ஆறுதல் கூறி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் ரூமி.

பிறகு எங்களிடம் பேசினார்.

'வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், பெரும்பாலான மனிதர்கள் தனிமையையே விரும்புகிறார்கள். மரணத்தை அவர்கள் தங்களுடைய மிகவும் அந்தரங்கமான விஷயமாகவே நினைக்கிறார்கள்.தங்கள் அனுபவத்தை அவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இல்லை என்பதே நான் கண்ட உண்மை.'

'அது எதனால் டாக்டர்?' என்று கேட்டேன் நான்.

'தங்கள் கவனம் முழுதும் சாவின் மேலேயே மையம் கொண்டிருக்கும் தருணம் அது. அதை யார் மூலமும் சிதறடிக்க விரும்புவதில்லை நோயாளிகள்.'என்றார் ரூமி.

'உங்களுக்கு மரணத்துக்குப் பிறகு மனிதர்கள் என்ன ஆகிறார்கள் என்பதில் ஏதாவது கருத்துக்கள் உண்டா?'என்று கேட்டேன்.
சிரித்தார் டாக்டர் ரூமி.

'இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எங்களிடம் ஒருவர் வந்திருக்கிறார்.அவரிடம் கேளுங்கள். இதற்கெல்லாம் அவர்தான் நன்கு விளக்கம் அளிப்பார்.'என்றவர் திவ்யாவைப் பார்த்து 'லாமா பத்ம சூர்யாவைத்தான் சொன்னேன்' என்றார்.

பத்ம சூர்யா என்றதும் திவ்யா நாற்காலியிருந்து துள்ளியே குதித்து விட்டாள்.

'லாமாஜி வந்திருக்கிறாரா டாக்டர்?' என்றாள் திவ்யா.
'அவர் வந்து பத்து நாட்கள் ஆகின்றன திவ்யா' என்ரார் ரூமி.
அடுத்த அழைப்பு இன்டர்காமில் சிவப்பு அழைப்பாக இருக்க,'மன்னிக்கவும்.ஒரு எமர்ஜென்சி' என்று ரூமி எழுந்து கொண்டார்.
டாக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு நாங்கள் வெளியே வந்தோம்.
'இவ்வளவு உணர்ச்சி வசப் படுகிறாயே,யார் அந்த பத்ம சூர்யா?' என்று கேட்டேன் திவ்யாவிடம்.

'அவர் ஒரு திபெத்தியன் லாமா."இறந்தவர்களின் புத்தகம்" பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா அரவிந்த்?' என்று கேட்டாள் திவ்யா.

'நிறைய. இறக்கப் போகும் மனிதர்களுக்கு மரணத்துப் பிறகு வழிகாட்டும் பழைய நூல் எட்டாம் நூற்றாண்டிலோ என்னவோ பத்ம சம்பவா என்ற மாபெரும் ஞானி எழுதியதாகச் சொல்வார்கள்' என்றேன்.

'சரியாகச் சொன்னாய் அரவிந்த்.அந்தப் புத்தகத்தில் சொல்லப் படும் விஷயங்களில் பத்ம சூர்யா மாபெரும் அறிஞர்.மிக மிக அற்புதமான மனிதர்.அவரைப் பார்த்துப் பேசினால் அதை நீயே சொல்வாய்.' என்றவள் என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றாள்.பேசிய படியே நடந்தோம்.
திபெத்தைச் சேர்ந்த லாமா இந்த மருத்துவமனைக்கு எதற்கு வருகிறார் என்று கேட்டதற்கு அவள் பதிலளித்தாள்.

'இந்த மருத்துவமனை எல்லா மதங்களின் சங்கமம்,மரணத்தைப் போலவே! சாகும் மனிதர்களுக்கு எந்த வழியில் அமைதி கிடைத்தாலும் சாதி,மத பேதமின்றி இங்கே அனுமதிப்பர்கள்.லாமாஜி அப்படி வந்தவர்தான் இங்கே.அவருடைய வழிகாட்டலில் அமைதியோடு இறந்தவர்கள் இங்கே ஏராளம்.அதனால் அவருக்கு இங்கே தனி மரியாதை. அவருக்கென்று ஒரு தனி அறையையே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.' என்றவள் லாமாவின் அறைக்கு முன்னால் நின்றாள்.

கதவைத் தட்டிப் பார்த்தோம்.பதில் இல்லை.கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றோம்.

அறை எளிமையாக ஆனால் படு தூய்மையாக இருந்தது.சுவர் ஓரமாகக் கிழக்குப் பார்த்தாற் போல் ஒரு தேக்கு மர மேஜை. அதன் மேல் ஒரு சிறிய பளிங்குப் புத்தர் சிலை.சிலைக்குப் பின்புறத்தில் பத்ம சம்பவாவின் செதுக்கு ஓவியம்.ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் அன்றலர்ந்த வெள்ளைத் தாமரை மலர் ஒன்று நீரில் மிதந்து கொண்டிருந்தது.ஒரு நெய் விளக்கில் தீபம்,சிற்பம் போல் ஆடாமல்,அசையாமல் எரிந்து கொண்டிருந்தது.

ஏதோ திபெத்திய ஊதுவத்தி போலிருக்கிறது,ஒரு அழகிய மர ஸ்டேண்டில் புகைந்து கொண்டிருந்தது.அதன் நறுமணத்தைப் போல நான் இதுவரை எங்கும் முகர்ந்ததில்லை.
சடாரென உங்களைப் பூமியில் இருந்து வானவெளியில் தூக்கி எறிந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வாசனை.

'அவர் அறையைப் பூட்டாமலே சென்றிருக்கிறாரே,திவ்யா?' என்று கேட்டேன் நான்.
'லாமாஜி எங்கே இருந்தாலும் எப்போதும் தனது அறையைப் பூட்டுவதில்லை!' என்றாள் திவ்யா.
'ஏன்?' கேட்டேன் வியந்து.
'அவர் இறந்த பிறகு என்ன பார்ப்போமோ,அதைத்தான் நாம் இப்போது இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பார் லாமாஜி' என்றாள் திவ்யா அமைதியாக.

யாருமற்ற அந்த அறையின் அர்த்தம் எனக்குச் சுளீரெனப் புரிந்தது.

வெளியே 'ஓம் சாந்தி ஓம்' என்று சிதார்களின் பின்ணணியில் மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது.
(மந்திரம் இன்னும் ஒலிக்கும்)

வியாழன், ஏப்ரல் 23, 2009

உடல்,உள்ளம்,உலகம்

உலகம்
---------
எந்த ஒரு விஷயத்தையும் பற்றி ஒரு முடிவு எடுப்பதற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் வேண்டும்.
ஒன்று,அந்த விஷயத்தைப் பற்றிய போதுமான விபரங்கள்.
இரண்டு அந்த விபரங்களைத் தொகுத்து அலசி ஆராயும் தெளிவான சிந்தனையும் அணுகுமுறையும்.இதற்குப் பிறகுதான் நீங்கள் எல்லா முடிவுகளையுமே எடுக்கிறீர்கள் என்றால் கீழே காணும் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்று பதிவின் இறுதியில் இருக்கும் உண்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.(இந்த சஸ்பென்ஸுக்காகத்தான் உலகத்தை முன்னால் நிறுத்தி இருக்கிறேன்.!)

முதல் கேள்வி
------------------
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள்.
அவளுக்கு ஏற்கனவே எட்டுக் குழந்தைகள்.அதில் மூன்றுக்குக் காது கேட்காது.இரண்டு பிறவிக் குருடு.ஒன்றுக்கு மனவளர்ச்சி கிடையாது.எல்லவற்றுக்கும் மேலே அந்தக் கர்ப்பிணிக்கு முற்றிய பால்வினை நோயான சிஃபில்லிஸ் இருக்கிறது.
இப்போது அந்தப் பெண் கருச் சிதைவு செய்யலாம் என்றால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா, மாட்டீர்களா?

இரண்டாவது கேள்வி.
---------------------------
நாட்டின் தலைவரையே தேர்ந்தெடுக்கும் முக்கியமான தேர்தல் நேரம்.
அதில் உங்கள் ஒரு ஓட்டுத்தான் யார் தலவர் என்று தேர்தலில் தீர்மானிக்கும் ஓட்டாக இருக்கிறது.இந்த மூன்று வேட்பாளர்களில் நீங்கள் யருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?

முதல் வேட்பாளர்.
---------------------
ஊழல் பேர்வழிகளான பல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.ஜோசியர்களுடன் ஆலோசனை நடத்தியே எதையும் தீர்மானிப்பார்.இரண்டு வைப்பாட்டிகள் வைத்திருக்கிறார். செயின் ஸ்மோக்கர்.ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பெக்குகள் குடிப்பார்.
இரண்டாம் வேட்பாளர்
----------------------------
இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப் பட்டவர்.தினமும் மதியம் வரை தூங்குவார்.கல்லூரி வாழ்க்கையில் கஞ்சா அடித்தவர்.இப்போது தினமும் ஒரு குவாட்டர் விஸ்கி சாப்பிடுபவர்.

மூன்றாம் வேட்பாளர்.
-------------------------
ராணுவத்தில் பணி புரிந்து இரண்டு முறை வீரப் பதக்கங்களை வாங்கியவர்.சுத்தமான சைவம்.புகைப் பழக்கம் கிடையாது.எப்போதாவது பீர் மட்டும் அருந்துவார்.மனைவியை ஒரு தடவை கூட ஏமாற்றியது கிடையாது.
இந்த மூவரில் உங்கள் ஓட்டு யாருக்கு?
இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் முடிவுகளை எடுத்து விட்டு பதிவின் இறுதிக்கு வாருங்கள்,நண்பரே.

உடல்
-------
உடம்பு பெருத்து,எடை கூடி இருப்பது இன்றைய பெரும்பாலான நண்பர்களின் பிரச்சினை.பல நோய்களுக்கு அதுவே மூல காரணம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகிறது.
உடலின் எடை குறைய, ஊளைச் சதை குறைய பலவிதப் உணவுப் பழக்கங்கள் சொல்லப் படுகின்றன.
அதில் '100% புரோட்டின் டயட்' என்பது அறிவியல் சார்ந்த மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகிறது.
கொழுப்புச் சத்தை அறவே நீக்க வேண்டும் என்பது எந்த டயட்டாக இருந்தாலும் பொதுவான நிபந்தனை.
அதனால் எந்த வடிவத்திலும் எண்ணைக்கு அனுமதி இல்லை.
அதனுடன்,கார்போ ஹைட்ரேட்டுகளைக் குறைத்துப் புரோட்டின்களை நூறு சதவீதம் சாப்பிட்டால் உடம்பு மளமளவென்று குறையும்,ஆரோக்கியமும் கூடும் என்பது நவீனக் கண்டுபிடிப்பு.
அரிசி,கோதுமை போன்ற தானிய வகைகளில் எல்லாம் கார்போஹைட்ரேட்டுகளே அதிகம் இருப்பதால் அவற்றை அறவே தவிர்த்து விடவேண்டும்.எனவே பிஸ்கட்,ரொட்டி,சப்பாத்தி,சாதம் இவை அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை.
அதற்குப் பதிலாக புரோட்டின்கள் நிறைந்த பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
முக்கியமாகப் பச்சைப் பயறு.
அதனை அரைத்துத் தோசையாக,அவித்துச் சுண்டலாக, எந்த வடிவத்திலாவது சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இரண்டு மணி நேரம் பச்சைப் பயறை ஊற வைத்துப் பிறகு இஞ்சி,பச்சை மிளகாயுடன் அரைத்துத் தோசை வார்த்தால் ஆம்லெட்டைப் போல அவ்வளவு சுவையாக இருக்கிறது.
கொண்டைக் கடலை,கொள்ளுப் பருப்பு.ஓட்ஸ்,கடலைப் பருப்பு இப்படி எந்தப் பருப்பாக இருந்தாலும் அது ஓ.கே.
எண்ணை அறவே கிடையாது.
பச்சைக் காய்கறிகள்,அவித்த காய்கள் எல்லையில்லாமல்.
வாழைப் பழங்கள் தவிர ஆப்பிள்,திராட்சை என்ற எந்தப் பழமும் ஓ.கே.
புலால் உண்ணும் நண்பர்கள் கோழியும்,மீனும் தாராளமாக உண்ணலாம்,பொரிக்காமல்,வறுக்காமல்.எண்ணை சேர்க்காமல் எப்படி வேண்டுமானாலும்.
காலையில் வெறும் வயிற்றில் அரை அல்லது முக்கால் லிட்டர் தண்ணீர்.அதற்குப் பிறகு அரை மணி நேரம் எதுவும் அருந்தக்கூடாதுடீ காலை, மாலை இரண்டு வேளை ஓ.கே.
கண்டிப்பாக ஒரு மணி நேரம் வேக நடை.வெறும் வயிற்றில் நடப்பதே கலோரிகளைச் சீக்கிரம் எரிக்கிறது என்கிறார்கள்.
கார்போ ஹைட்ரேட்டுகளே சதையின் பெருக்கத்துக்குக் காரணம் என்பதாலும் புரோட்டின்கள் தசை நார்களையே வளர்க்கின்றன என்பதாலும் இந்த '100%புரோட்டின் டயட்' மிக விரைவான பலன்களைத் தருகிறது என்கிறார்கள் வெற்றி கண்ட எனது நண்பர்கள்.
நான் இதனை அனுசரித்து மூன்று வாரங்கள் ஆகின்றன.
மிக,மிக நலமாக உணர்கிறேன்.

உள்ளம்
---------

டெஸ்மான்ட் மாரிஸ் என்ற விலங்கியலாளர் 1967ல் 'நிர்வாண மனிதக் குரங்கு'என்ற ஒரு புத்தகம் எழுதினார்.
நமக்கும்,விலங்குகளுக்கும் குறிப்பாகக் குரங்குகளுக்கும் இடையில், நடத்தைகளில் இருக்கும் ஒற்றுமை வியக்கத் தக்க அளவில் இன்னும் மாறவே இல்லை என்று அவர் அதில் ஆராய்ந்து கூறி இருந்தார்.அதன் ஸ்வாரஸ்யம் எனக்கு இன்றளவும் குறையவில்லை. அவர் சொன்னதில் இருந்து.:

குரங்குகள் இன்றும் ஒன்றின் தலையில் ஒன்று பேன் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணலாம்.அந்த ஆதிப் பழக்கத்தையே நாம் இன்றும் சலூனுக்குப் போய் முடிவெட்டிக் கொள்ளும் பழக்கமாக வைத்திருக்கிறோம்.!
தலையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுக் கண்கள் மூடி அதனை அனுபவிக்கும் சுகத்தை இன்றும் பழனியில் குரங்குகளிடம் காணலாம்!
நம் தலை முடியை இன்னொருவர் கோதுவது நமக்குச் சுகம் தரும் ஒரு இதமான செயல்.அதுவும் இந்த ஆதி சுகமே.இன ஒற்றுமையை வளர்க்கக் குரங்குகள் கண்டு பிடித்த உடல் ரீதியான ஸ்பரிசங்கள் இன்றும் நமக்குத் தேவைப் படுகின்றது.

உண்னும் உணவு சற்றே இளஞ் சூடாக இருப்பதைப் பெரும் பாலோர் விரும்புகிறோம்.மாமிச பட்சிணிகளாக இருந்த போது நாம் வேட்டையாடிக் கொன்ற மிருகங்களை அதன் ரத்தச் சூட்டோடு சாப்பிட்ட ஞாபகமே அது என்கிறார் டெஸ்மான்ட் மாரிஸ்!
சமைத்தால்தான் ஜீரணமாகும் என்பதால் மட்டுமல்ல, சமைக்கத் தேவையில்லாத உணவுமே சூடாக இருப்பதை விரும்புவதற்கு சுடச் சுட ரத்தம் நுகர்ந்த அந்தப் பழைய அனுபவமே காரணமாம்.

இன்னும் அறிவு வளர்ச்சி வராத இரண்டு வயது,மூன்று வயதுக் குழந்தைகளிடம் மிருகங்களின் படங்களைக் காட்டினால் அவை பெரும் பாலும் விரும்புவது குரங்குகளின் படங்களையே!பிறகு யானை,சிங்கம் போன்ற நிமிர்ந்து நிற்கும் மிருகங்களை.
அதிகம் அருவருப்பும் அச்சமும் கொள்வது பாம்பு முதலான ஊர்வன இன மிருகங்களை.குரங்குகளுக்கும் பாம்பைக் கண்டால் அறவே பிடிக்காதுநாம் ஊர்வனவாக இருந்து வந்த பழங் காலத்தை மறக்க விரும்புகிறோம்.புதிய பணக்காரர்களுக்குத் தங்கள் பழைய நண்பர்களைப் பார்க்கப் பிடிக்கததைப் போல!

நான்கு கால்களால் அலைந்து திரிந்ததிலிருந்து இரண்டு கால் பிராணிகளாக மாறி நிமிர்ந்து நின்ற போது நமது முன்னங் கால்களே கைகளாக உருமாறின.
மனித நாகரிகம் உழைக்கக் கற்றுக் கொண்டதே இந்தக் கால கட்டங்களில் இருந்துதான் என்று கம்யூனிஸத் தத்துவத்தின் தூணான எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார்.
இப்போதுதான் குரங்குகளின் மிகப் பெரிய பிரச்சினை தொடங்கியது.
அவற்றின் பாலின்பம்!
இதுவரை பின்புறமாக இருந்தே புணர்ச்சியை அனுபவித்த ஆண் குரங்குகள் முதன் முறையாகப் பெண்களை முன்புறமாகப் பார்க்க வேண்டிய கட்டாயம்!

ஆண் குரங்குகளுக்காகப் பரிதாபப் பட்டு இயற்கை பெண் குரங்குகளின் கவர்ச்சிகரமான பின்புறங்களை எல்லாம் முன்புறத்துக்குக் கொண்டு வந்தது.
அப்படி வந்ததுதான் பெண்களின் மார்பகங்கள்!
மார்பகங்கள் பெண் குரங்குகளின் பின்புற வடிவங்களின் பாவனையே.(இமிடேஷன்)என்கிறார் மாரிஸ்.
இது போலப் பெண்களின் முன்புறத்தை கவர்ச்சிகரமாக்க இயற்கை செய்த நுட்பமான வேலைகளை இன்னும் எந்த 'ப்ளேபாய்' போன்ற பத்திரிகைகளுமே செய்யவில்லை.
அதை நீங்களே படித்து இன்புறுங்கள் நண்பர்களே.
டெஸ்மான்ட் மாரிஸ் இது போலவே 'மனித மிருகக் காட்சிச் சாலை' என்ற புத்தகமும் நமது நகர வாழ்க்கையைப் பற்றி எழுதி இருக்கிறார்.

உலகம்
---------
என்ன நண்பர்களே! முதலில் கேட்ட கேள்விகளுக்கு சிந்தித்து முடிவுகளை எடுத்து விட்டீர்களா?
இதோ உண்மைகள்.முதலில் இரண்டாவது கேள்விக்குப் பதில்கள்.
முதல் வேட்பாளர்: அமெரிக்க ஜனாதிபதி ஃப்ரேங்க்ளின் ரூஸ்வெல்ட்.
இரண்டாம் வேட்பாளர்: இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்மூன்றாம் வேட்பாளர்: ஜெர்மன் அதிபர் அடால்ஃப் ஹிட்லர்.

உங்கள் முடிவு உண்மைகளுடன் ஒத்து வந்ததா?

இரண்டாம் கேள்விக்குப் பதில்.அந்தக் கர்ப்பிணிப் பெண் கருச் சிதைவு செய்திருந்தால் உலகத்தின் மிகப் பெரிய இசை மேதையான பீதோவன் பிறந்தே இருந்திருக்க மாட்டார்!
நீங்கள் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தால் உங்கள் சிந்தனை வக்கிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
தவறாகப் பதில் அளித்திருந்தால் உங்கள் சிந்தனைகளோடு உண்மையான உலகம் ஒத்து வரவில்லை என்று அர்த்தம்.
எவ்வளவு பெரிய முரண்பாடு இல்லையா இதைப் போல-
'சூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!' -நிசார்கதத்தா மகராஜ்.

திங்கள், ஏப்ரல் 20, 2009

உடல்,உள்ளம்,உலகம்


உடல்
--------
எனக்கு மிகவும் இதமான ஒரு சென் மாஸ்டர் திச் நாட் ஹன். இவர் வியட்நாம் நாட்டில் பிறந்த ஒரு புத்த ஞானி.இப்போது பிரான்ஸில் ப்ளம் வில்லேஜ் என்ற இடத்தில் தங்கி உள்ளார் .அவரது புத்தகங்கள் அனைத்துமே எளிமையாகவும், ஆழமாகவும், சுவையாகவும் இருக்கும். புத்த மதத் தியான முறைகளைப் பற்றி நிறைய எழுதி உள்ளார்.

அவரது பழைய நூல் ஒன்றை இப்போது புதிதாகப் பதிப்பித்துள்ளார்கள்.
(வருடத்தின் எண்களை அடிக்கத் தெரியவில்லை) பத்து வருடங்களுக்கு முன் வட அமெரிககாவில் வெர்மான்ட் நகரில் அவர் நடத்திய 'குறும் ஓய்வு'என்ற இருபத்தொரு நாள் தியான வகுப்புக்களின் உள்ளடக்கமே இந்த நூல்.

அதில் மனம் நிறைந்த மூச்சு,மனம் நிறைந்த நடை, மனம் நிறைந்த உண்ணல் என்று பல விதமான தியான முறைகளைப் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார் அந்த சென் மாஸ்டர்.

மனம் நிறைந்த உண்ணல் பற்றி அவர் சொல்வது:


உதாரணத்துக்கு ஒரு ஆரஞ்சுப் பழத்தை எப்படி மனம் நிறைய உண்ணுவது என்று பார்ப்போம்.ஆரஞ்சுப் பழத்தை முதலில் கையில் ஏந்திக் கொண்டு அதை அரை செகண்ட் பாருங்கள் .
மனம் நிறைந்த மூச்சை உள்ளே இழுத்து ,வெளியே விட்டபடியே அதை நீங்கள் பார்த்தால்தான் ஆரஞ்சுப் பழம் ஒரு நிதர்சனமான உண்மையாகிறது.
நீங்கள் முழுமையாக இல்லாவிட்டால் பழமும் அங்கே இருப்பதில்லை.
ஆரஞ்சுப் பழத்தை உண்பவர்களில் பல பேர் உண்மையில் அதை உண்ணுவதில்லை.அவர்கள் தங்கள் கவலைகளையே உண்கிறார்கள்.தங்கள் பயத்தை உண்கிறார்கள்.கோபத்தை உண்ணுகிறார்கள். இறந்த காலத்தையும் ,எதிர்காலத்தையுமே உண்கிறார்கள்.
மனமும், உடம்பும் ஒருங்கிசையும் நிகழ்காலத்தில் அவர்கள் இருப்பதிலை.

நீங்கள் இங்கே இருந்தால் வாழ்க்கையும் இங்கே இருக்கும்.

நீங்கள் உண்ணும் ஆரஞ்சுப் பழம் வாழ்க்கையின் தூதுவன்.அதை நீங்கள் கவனமாகப் பார்க்கும் போதுதான் அது தனக்குள் வைத்திருக்கும் அதிசயத்தை அறிவீர்கள்.

மரத்தில் ஒரு பூவாகப் பூத்துக்,கதிரவனின் ஒளியையும் ,மழைத் துளிகளையும் உள்வாங்கி ஒரு பச்சை காயாகத் திரண்டு, உள்ளிருக்கும் அமிலத்தையெல்லாம் இனிப்பாக மாற்றி மஞ்சளாகிப் பின் ,உங்கள் கையில் இருக்கும் ஆரஞ்சுப் பழமாக இப்போது நீங்கள் உண்ணக் காத்திருக்கிறது.

அந்த ஆரஞ்சு மரம் தனது அற்புதப் படைப்பை வார்த்தெடுக்க எவ்வளவு காலம் பொறுமையாகத் தவம் பண்ணியிருக்கிறது.அதை ஒரே ஒரு செகண்ட் நினைத்துப் பாருங்கள்.

இப்படி இந்த ஆரஞ்சு பழத்தின் அருமையை ஒரு கணம் உணர்ந்தபடியே அதன் இனிய நறுமணத்தை முகர்ந்து,ஆரஞ்சுச்சுளையை மென்று சாப்பிடும் போது உங்கள் நாக்கில் உருகும் சாறின் சுவையை ரசிப்பதுதான் உண்மையில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடும் முறையாகும்.

ஒவ்வொரு உணவையும் இப்படி உண்பதே 'மனம் நிறைந்து உண்ணும் தியானம்' ஆகும்.
அனைத்து நோய்களில் இருந்தும் உங்களை நீங்களே குணப் படுத்திக் கொள்ள வாழ்க்கை உங்களுக்கு அளித்திருக்கும் கொடை இது.
ஓம் அவலோகிச்வராய நமஹ.

உள்ளம் .
------------

ஓஷோவிடம் ஒரு கேள்வி: அன்பு (காதல்) என்றால் என்ன?

ஓஷோ
-----------

அன்பு வரிசைப் படும் ஒன்று.அதற்குப் பல படிகள் உண்டு.கீழ்ப் படியில் ஆரம்பித்து மேல்படி வரைக்கும் செல்லச், செல்ல அதனுடைய தன்மைகள் மாறிக் கொண்டே போகும். நாம் காட்டும் அன்புக்கும்,புத்தரும்,ஏசுவும் இன்ன பிற ஞானிகள் காட்டிய அன்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.மனதின் கீழ்ப் படியில் நின்றிருப்பவர் அன்பு என்று நினைத்திருப்பதற்கும் ,மேல் படியில் நிற்பவர் நினைத்திருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

கீழ்ப் படியில் இருப்பவர்களின் அன்பு கிட்டத் தட்ட ஒரு அதிகார அரசியலைப் போன்றது.பவர்-பாலிடிக்ஸ் !அடுத்தவரை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அன்பு.
எப்போது இன்னொருவரை ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் அது அரசியல்தான்.கணவன்-மனைவி,காதலன்-காதலி,பாய்-பிரண்ட்கேர்ள்-பிரண்ட், என்ற பெயரில் லட்சக் கணக்கான பேர் அன்பு என்றும் காதல் என்றும் சொல்லிக் கொள்வதெல்லாம் இந்தப் பவர்-பாலிடிக்சைத்தான்!

ஆதிக்கம் செலுத்துவதும்,அதில் ஆனந்தமடைவதும்.

இதனால்தான் பல பேர் நாய்,பூனை கார்,வீடு என்று மனிதர்கள் அல்லாதவற்றை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பில்லாத ஜீவன்கள்,பொருட்கள்!அதனால் அவற்றை நேசிப்பது சுலபம்.

மேல் படிக்குச் செல்லச் செல்ல அன்பின் இயல்பே மாறுகிறது.அதனுடைய சிகரத்தில் நிற்பவர்கள் தாங்கள் அன்பாகவே மாறி விடுகிறார்கள்,மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காத அன்பு.
அவர்கள் அன்பு செலுத்துவது தங்கள் மகிழ்ச்சியை அனைவருக்கும் தருவதற்காக ,அங்கே எந்தப் பேரமும் இல்லை.

அது ஒரு விதமான உயர்ந்த நிலை.அவர்கள் குறிப்பிட்ட ஒரு நபர் மீது அன்பு செலுத்துவதில்லை.அவர்களது அன்பில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.எவரையுமே நிராகரிக்காத அன்பு.

மீதி அன்பென்று சொல்லப் படுவதெல்லாம் தியானத்தினால் மட்டும் குணப் படத்தக் கூடிய ஒரு வித மன நோய்.

மீனாட்சியும்,காமாட்சியும் காபி சாப்பிட்ட படியே தங்கள் கணவர்கள் தங்கள் மீது காட்டும்அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மீனாட்சி: நீ உன்னோட கணவர் உன்னை நேசிக்கிறார் என்று எப்படிச் சொல்கிறாய்?
காமாட்சி: அவர்தான் தினமும் வீடு கூட்டிப் பெருக்குகிறார்.
மீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல.வெறும் வீட்டுப் பராமரிப்பு !
காமா : நான் எப்போது செலவுக்குப் பணம் கேட்டாலும் தருகிறாரே.
மீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல.தாராளம்!
காமா : மற்ற பெண்களை அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே .
மீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல. பார்வைக் கோளாறு!
காமா : அவர்தான் என் துணிமணிகளைக் கூடத்துவைத்துப் போடுகிறார்.
மீனா : அதற்குப் பேர் அன்பு இல்லை.உடற்பயிற்சி !
காமா : நான் வாய் நிறையப் பூண்டு சாப்பிட்டுவிட்டு, உடம்பு முழுதும் நாற்றமடிக்கும் ஒரு மூலிகை எண்ணையை அப்பிக் கொண்டு குளிக்கப் போவதற்கு முன்னால் என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறாரே.
மீனா : ஆ! இப்போது சொன்னாயே,இதுதான் அன்பு.ஒத்துக் கொள்கிறேன்.!!

உலகம்

------------


இது நான் எப்போதோ கேள்விப் பட்டது.

தமிழ் நாட்டில் முதன் முறையாக ஓமந்தூர் ராமசாமிக்கு முதலமைச்சர் பதவி தரப் படும் சூழ்நிலை வந்தபோது அவர் நேராக ரமண மகரிஷியிடம் சென்றாராம்.
ஓமந்தூரார் மகரிஷியின் அடியவராம்.

'சாமி,என்னை முதல் மந்திரியாக ஆகச் சொல்கிறார்கள் .என்ன செய்யட்டும்?'

மகரிஷி அவரை ஆழ்ந்து ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாராம்.

'எது வரைக்கும் உனக்கு அந்தப் பதவி மேல் ஆசை வரவில்லையோ, அது வரைக்கும் தாராளமாக மந்திரியாக இரு.எப்போது உனக்கு அந்தப் பதவியின் மீது ஆசை வருகிறதோ ,அப்போது அந்தப் பதவியை விட்டு விலகி வந்து விடு!'

***********

திங்கள், ஏப்ரல் 13, 2009

புத்தாண்டு வாழ்த்துகளும்,சில கேள்விகளும்

நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நமது பெரும்பாலான இந்துப் பண்டிகைகள் அனைத்தும் வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை பூமியில் கொண்டாடும் நாட்களாகவே இருக்கின்றன. சூரியனும், சந்திரனும் நமது அனைத்துத் திருநாட்களிலும் பங்கு வகிக்கின்றன. அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலவின் அத்தனை வளர்ச்சிகளையும் நாம் ஏதாவது ஒரு வகையில் ஆராதிக்கிறோம்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, நாகபஞ்ச்சமி, சஷ்டி, கோகுலாஷ்டமி, ராமநவமி, விஜயதசமி, வைகுண்ட ஏகாதசி, பிரதோஷம் இப்படி எல்லாமே நிலவோடு தொடர்புடையவை. இன்னும் நட்சத்திரங்களோடு தொடர்புடைய திருநாட்கள் ஏராளம். வானத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மனதில் எதற்குக் கொண்டாட்டம்?

வானத்தையும் மனதையும் இணைப்பதற்குத்தான் இத்தனை திருநாட்களா? எனில், அப்படி இணைத்தலுக்கான உளவியல் காரணங்கள் என்ன?

இதோ, இப்போது சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதைப் புத்தாண்டு எனச் சொல்கிறோம்.

சூரியன் பயணிக்கும் ஒரு நீள்வட்டத்தில் இன்றைய புள்ளியை மட்டும் ஏன் தொடக்கமாக நினைக்க வேண்டும்?

ரகசியம் என்று சொல்லப் பட்ட போதே அது யாருக்கோ ஏற்கனவே தெரிந்து, நாமும் கண்டறியத் தக்கது என்பதைச் சொலவதுதான் என்பார் ஊஸ்பென்ஸ்கி.

உங்களில் யாருக்காவது இந்த ரகசியம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே.

வியாழன், ஏப்ரல் 09, 2009

கன்னிகா (ஐந்தாம் பாகம் )

6.
பத்து நிமிட இடைவேளைக்குப் பிறகு வகுளாபரணன் வர,நீதிமன்றம் கூடியது.அரவிந்தனின் வாக்குமூலத்தை இப்போது ஒரு புதிய உத்வேகத்துடன் படிக்கத் தொடங்கினான்,மதிவாணன்.முன்பு அவன் உணர்ச்சி வசப்பட்டு அழுத இடத்திலிருந்தே ஆரம்பித்தான்.
''எப்படி இவ்வளவு அழகாகாப் பேசுகிறாய் அரவிந்த்?' என்றாள் திவ்யா சிரித்து.
மீண்டும் பழைய நிலைக்கு வந்து சிரித்தேன்.

'வெரி சிம்பிள்,திவ்யா.உன்னை மாதிரி அழகான பெண்கள் அருகில் இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அருள் வந்து விடும்.அப்புறம் உலகத்துக் கவிஞர்கள் எல்லோரும் எனக்குள் வந்து எனக்குப் பதிலாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.கம்பனில் இருந்து தொடங்கித் தாகூர்,பாரதி,வாலி,வைரமுத்து என்று லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும் ..அவ்வளவு ஏன், ஆறு மாதத்துக்கு முன்னால் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட்ட மதிவாணன்--என்ற இளங்கவிஞன் கூடத் தனது அற்புத வரிகளால் எனக்காக உன்னிடம் பேசுவான்.' என்றேன் நான்.

திவ்யா மௌனமாக என்னையே பார்த்தாள்.

இரவில் ஹோட்டல் தோட்டத்தில் எங்கோ பூத்த நைட்குயின் பூக்களின் வாசமும், தூரத்தில் அப்போதுதான் கேட்க ஆரம்பித்த என்யாவின் 'நட்சத்திரங்களால் வானத்தைப் பெயிண்ட் பண்ணு' என்ற அழகிய பாட்டும்,எதிரில் சத்தமில்லாமல் பொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிங்க் நீரூற்றைப் போன்ற திவ்யாவின் அழகும்,பேச்சினை அறவே ரத்து செய்திருந்தன.

இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மௌனம் ஒரு இடையறாத பாஷை என்று ரமண மகரிஷி இதைத்தான் சொன்னாரோ?
'சாப்பிடப் போகலாமா ?' என்றாள் திவ்யா,அநேகமாக இந்த மௌனத்தின் கனம் தாங்காமல்.
'சாப்பாடு என்ற சொல்லே கேவலமாக இருக்கிற நிமிடங்கள் இது ' என்றேன் நான்.உண்மையில் உணர்ந்து.
அவள் சிரித்தாள், ரசித்து
பிறகு அவள் நடக்க ஆரம்பிக்க,நானும் அவளுடன் நடந்தேன்.

'நான் சாப்பிட என்று சொன்னது உனது வழக்கமான பீரை!' என்றாள் திவ்யா சிரித்தபடி.
'இன்று எனக்கு அது தேவைப் படவில்லை.' என்றேன் நான்.
'நான் இன்று மாலை வேளையில் உன்னைச் சந்திக்க வந்ததே அதற்காகத்தான்.உண்மையில் நான் இன்று முழுக்க எனது அறையில்தான் இருந்தேன் ' என்றாள் திவ்யா.

சட்டென நான் அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

'ஏன் பெரும்பாலான பெண்களுக்கு ஆண்கள் குடிப்பது பிடிக்க மாட்டேன் என்கிறது?' என்று எனது பலநாட்களுக்கான அடிப்படைக் கேள்வியைக் கேட்டேன்.
இந்த முறை அவள் என்னை ஆழமாகப் பார்த்தாள்.

'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' என்றாள் திவ்யா.
'பெண்களைப் பற்றிச் சரியாகச் சொன்னாய்.ஆனால் மதுவைப் பற்றி சொன்னது தப்பு' என்றேன் நான்.
'எப்படி?' என்று கேட்டாள் அவள்.
'மதுவைக் கண்டு பிடித்தது குடிகாரர்கள் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?'என்றேன் நான்.
அப்போதுதான் அவள் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
'பிறகு?. என்றாள்.

'வலி நிவாரணிகளைக் கண்டு பிடித்தவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கண்டு பிடிக்க வில்லை.அது முடியவும் முடியாது. வலியிலிருந்து விலகி நின்று பார்த்தால்தான் வலியைக் குணப் படுத்தும் வழி தெரியும்.இது போல மன நிவாரணியான மதுவைக் கண்டு பிடித்தவர்களும் மனதிலிருந்து விலகி நின்று பார்த்த ரிஷிகளே.வேதங்களில் மிகப் பரவலாகச் சொல்லப் படும் சோமபானத்தைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா?' என்றேன் நான்.

'இது முழுக்க முழுக்க நான் கேள்விப் படாத கோணம்.சரி மதுவைப் பற்றி மேலும் சொல் அரவிந்த் ' என்றாள் திவ்யா சிரத்தையுடன்.
'அது பெரிய விவாதமாகப் போய் விடும். சுருக்கமாகச் சொன்னால்,மது அருந்துவது என்பது மனதிற்குள்ளே மேலும் விழுவதற்கல்ல,மனதிலிருந்து வெளியேறுவதற்கே. தப்பாக உபயோகித்தால், தாய்ப் பாலும் விஷமே' என்றேன் நான்.
அவள் முகம் மாறியது.
'பரவாயில்லை திவ்யா, ஒரே மனநிலையைத் தியானம் என்றும் சொல்லாம்,தியானத்தையே தூக்கம் என்றும் சொல்லலாம்,தூக்கத்தையே போதை என்றும் சொல்லலாம்,போதையை மயக்கம் என்றும் சொல்லலாம்.இது நுகர்வோர் சந்தைதானே!' என்றேன் நான் சீரியஸாக.

'சாரி அரவிந்த்! கோபமா?' என்றாள் திவ்யா,சற்று நேரம் கழித்து.
நான் சிரித்தேன்.
'பார்த்தாயா?குடிக்காமல் இருக்கும் போதே குடிகாரர்களுக்கே கற்பிக்கப் படும் கோபத்தை என் மேலும் சுமத்தி விட்டாய்!' என்றேன் நான்.

இருவருமே சிரித்தபடியே ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைந்தோம்.அன்று நானும் அவளைப் போலவே வெறும் பச்சைக் காய்கறிகளையே சாப்பிட்டேன்.அவளது அறை வரைக்கும் சென்று அவளை வழி அனுப்பிவிட்டு வந்த போதும் தனது அறைக்குள் என்னை அழைக்கவில்லை திவ்யா.
வந்து எனது அறைக் கட்டிலில் விழுந்த போதுதான் காதலின் வேதனையை உணர்ந்தேன்.எனது உடம்புக்குள் இருக்கும் அனைத்தையும் துப்புரவாக அகற்றி விட்டு திவ்யாவின் நினைவுகளை மட்டும் யாரோ உள்ளே நிரப்பி இருந்தார்கள்.
காதல் என்பது 90% வலி. பிறகு அந்த வலி தரும் சுகம் மீதி 10% என்று கணக்குப் போட்டது மனம்.

அடுத்த நாளில் இருந்து இருவரும் பெங்களூரை அப்படிச் சுற்றினோம்.

விதான் சௌதாவின் வனப்பு,லால்பாக்,கப்பன்பாக்கின் குளுமை,எம்.ஜி.ரோட்டின் நுகர்வோர் கவர்ச்சி,பிரிகேட் ரோட்டில் இருந்த சிற்றுண்டிச் சாலைகளின் பலதரப் பட்ட சுவை.மஹாராஜாவின் கோடை அரண்மனையின் கம்பீரம்.

'500 வருடங்களுக்கு முன்னே இந்தப் பெங்களூருவை நிர்மாணித்த கெம்ப கௌடா ஒரு மிகப் பெரிய தீர்க்க தரிசியாக இருந்திருக்க வேண்டும் திவ்யா.'

'எப்படிச் சொல்கிறாய் அரவிந்த்?'
'நாம் இரண்டு பேரும் இங்கே வரப் போகிறோம் என்று அப்போதே அவருக்குத் தெரிந்திருக்கிறது.நாம் வருவோம் என்பதற்காக எவ்வளவு அழகாக இந்தக் கார்டன் சிட்டியை உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் பார்த்தாயா !' என்றேன் நான்.
அவள் எனது இடுப்பைச் செல்லமாகத் தட்டி விட்டுச் சிரித்தாள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டமாகப் போயிற்று.

ஒருநாள் மாலை எனது அறைக்கு வந்த திவ்யா 'இன்று நாம் எங்கும் வெளியே செல்லப் போவதில்லை ' என்றாள்.
'ஏன்?'
'எனது ஐ.டி.ரிடர்னை சமர்ப்பிக்க வேண்டும்' என்றாள் அவள்.
'அது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன ?'
'உலகத்திலேயே போரடிக்கும் வேலை இந்தக் கவர்ன்மெண்ட் ஃபார்ம்ளைப் பூர்த்தி செய்வதுதான்' என்றாள் திவ்யா எனது படுக்கையில் அமர்ந்தபடியே.
'எனக்காக ஒரு உதவி செய்வாயா,அரவிந்த்?'
'சொல்'
'எனது ஐ.டி.பேப்பர்களை நீ ஃபில் அப் செய்து தருகிறாயா?' என்று கேட்டாள் அவள்.
'நிச்சயமாக திவ்யா' என்றவன் அவளது ஃபைலை வாங்கிப் பார்த்தேன்.
பிறகு பொறுமையாக அந்த விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்த போதுதான் அவளது ஆறு இலக்க வருமானம் எனக்குப் புரிந்தது.தனது வருமான வரிக் கணக்குகளை ஏன் என்னிடம் காட்டினாள் என்ற காரணமும் எனக்குப் புரிந்தது.

அவள் எனது படுக்கையில் கண்களை மூடி ஏதோ யோசனையில் படுத்திருந்தாள். மெல்ல அவளது அருகில் சென்று நின்றேன்.

'திவ்யா'
கண் திறந்து பார்த்தாள்.
'உண்மையைச் சொல்,உனது வருமானத்தைப் பற்றிய முழுவிபரங்களையும் எதற்கு என்னிடம் பகிர்ந்து கொண்டாய்? எனது வருமானம் என்ன என்பதை நானும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?' என்றேன் நான் சீரியஸாக.
அவள் சிரித்தாள்.
'கண்டு பிடித்துவிட்டாயா?'
'உன்னை விட நான் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் குறைவாக வருமான வரி கட்டுகிறேன்!' என்றேன் நான்.
'சோ,உனது ஆண்டு வருமானம் இதுதானே' என்று நானே அசந்து போகுமளவுக்குத் துல்லியமாக எனது வருவாயைக் கணக்கிட்டுச் சொன்னாள் திவ்யா.
நான் வியந்து போய் அவளைப் பார்த்தேன்.
'நாங்கள் சிந்திகள்,பணத்தை வழிபடுபவர்கள்.ஏன் என்றால் அது ஒன்றுதான் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் வைத்திருக்கும் ஒரே ஆயுதம்.' என்றாள்,திவ்யா சிரத்தையுடன்.
'நீ போய் உன் வேலயைப் பார். நான் இப்போது வந்து விடுகிறேன்' என்று சொல்லி விட்டு வெளியே போனாள் திவ்யா.
அவள் மீண்டும் வருவதற்குள் நான் அவளது படிவங்களை நிறைவு செய்திருந்தேன்.ஃபைலை அவளிடம் திருப்பிக் கொடுத்தபோது நான் கேட்டேன்.
'என் வருமானம் குறைவென்றதால் நாம் பழகுவதில் ஒன்றும் தடை இல்லையே திவ்யா?'என்று அவளை உண்மையான ஆதங்கத்துடன் கேட்டேன்.
அவள் என்னை மெல்லிய புன்முறுவலுடன் பார்த்தாள்.
'இல்லை என்று சொல்லி விட்டாள் எனது அம்மா!'என்றாள் அவள்.

'அம்மாவிடம் ஃபோன் பேசி விட்டுத்தான் வருகிறேன்.'

'அம்மாவிடமா?' என்றேன் வியந்து.

'ஆம். என் அம்மாவிடம் நான் எதையுமே மறைப்பதில்லை.,நாம் இருவரும் பழகுவது உட்பட.
நான் அவளையே கவலையுடன் பார்த்தேன்.
'கவலைப் படாதே.உன் வருமானத்துக்கு ஓ.கே சொல்லி விட்டாள்.!' என்றாள் அவள்.
ஒருகணம் யோசித்து விட்டுக் கேட்டேன்.
'எனது வருமானம் குறைவென்று உன் தாயார்,ஒருவேளை நாம் பழக வேண்டாம் என்று சொல்லி இருந்தால்?'
'உனது வருமானத்தைப் பெருக்கும் வழி எனக்குத் தெரியும்! ஏனென்றால் நீ படுபுத்திசாலி!' என்றாள் திவ்யா தீர்க்கமாக.
அடுத்தநாள் சாப்பிடும் போது நான் அவளைக் கேட்டேன்.

'நீ டிசைன் செய்த கட்டிடங்களிலேயே உனக்கு மிகவும் பிடித்த கட்டிடம் எது திவ்யா?'
அவள் என்னை ஒருகணம் மௌனமாகப் பார்த்து விட்டுச் சொன்னள்.'அந்த பில்டிங் பெங்களூரில்தான் இருக்கிறது, அரவிந்த்.நாளை உன்னை நான் அங்கு கூட்டிச் செல்கிறேன்'
அடுத்த நாள் மாலையே நாங்கள் அங்கு சென்றோம்.
நகரத்தை விட்டு வெகு தூரம் தள்ளி வந்தபின் பிரதான சாலையிலிருந்து இடது புறம் திரும்பச் சொன்னாள் அவள்.சிறிய தார் ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றதும் அந்தக் கட்டிடம் வந்தது.அதன் பெயரைப் பார்த்ததும் நான் திகைத்துப் போனேன்.
'பாபா புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையம்' என்று ஆங்கிலத்தில் பித்தளை எழுத்துக்கள் மின்னின.
'கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டா?'
'ஆம். வாழும் நாட்களே குறைவாக இருக்கிறவர்களுக்குத்தானே,வாழ்க்கையின் முழு அழகுகளையும் நாம் வழங்க வேண்டும்! நான் டிசைன் செய்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த கட்டிடம் இதுதான்' என்ற திவ்யா 'நீ பார்த்து விட்டுச் சொல்' என்றாள்.
அந்தக் கட்டிடம் அவளைப் போலவே அமைதியாக என்னைப் பார்த்திருந்தது.
(வாழ்க்கை தொடர்கிறது)

புதன், ஏப்ரல் 08, 2009

உலுக்கும் இலங்கை

நண்பர் கார்த்திகேயனின் ஒரு இடுகையைக் காலையில் பார்த்துக் குமுறி விட்டேன்.
அந்தக் காட்சிகளைக் கண்ட பின் ,மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு வாழும் தகுதியே நமக்கு இல்லை என்று தோன்றுகிறது .
இந்தக் கொடுமைகளைத் தடுக்கும் அதிகாரம் உண்மையிலேயே யாருக்குமே இல்லையா ?
எல்லா உலக அமைப்புகளும் வீணா ?
அனைத்து அரசாங்கங்களும் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் போடுவதற்கு மட்டும்தானா?
ஹிட்லர் மட்டும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பானா?அவனை அழித்தவர்கள் பிறக்க மாட்டார்களா?
இந்தப் பதிவைத் தயவு செய்து பாருங்கள்.
geethappriyan.blogspot.com/
நாம் அழுகைகளையும் ,குமுறல்களையுமாவது பகிர்ந்து கொள்வோம் .

சனி, ஏப்ரல் 04, 2009

பேய் ஹோ! (இரண்டாம் பாகம்)

2.

வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து வந்து பாத்திரங்கள் தேய்க்க ஆரம்பித்துவிடும் பாப்பம்மா அன்று காலை ஒன்பது,ஒன்பதரை ஆகியும் தனது குடிசையிலிருந்து வரவில்லை. நானும்,அம்மாவும், தங்கைகளும் இன்னும் இரவு நடந்து முடிந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
'ஏம்மா தியாகராஜா தாத்தா ரொம்ப நல்லவருன்னு அடிக்கடி சொல்லுவியே அவரு ஏம்மா பேயா வந்து நம்ம பாப்புவைப் புடிச்சிருக்காரு?' என்று கேட்டாள் என் சின்னத் தங்கை அருள்மொழி.
'தியாகு சித்தப்பா ரொம்ப நல்லவருதாம்மா.ஊருக்குப் பல நல்ல காரியம் பண்ணுவருதான். ஆனா அவரு ஊரையே வெறுத்துப் போய்க் கோபத்துலீல்லே தற்கொலை பண்ணியிருக்காரு.இந்த மாதிரிக் கோபத்துலே செத்தவங்க ஆவி அடங்காதாம்.தன்னோட கோபத்தை எப்படியாவது தீர்த்துக்கறதுக்காக அலையுமாம்.எங்க சாமியாடி அப்பத்தா சொல்லும்.'

அப்போது பின்னாடி தடதடவெனக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க நாங்கள் நால்வரும் திடுக்கிட்டோம்.
'பாப்புதான்!'என்றாள் மூத்த தங்கை பூங்கொடி.
'அப்பாவைக் கூப்பிடலாமா?'என்றேன் நான்.
'மனிவண்ணா,கதவைத் தொற கண்ணு'
வழக்கமான பாப்பம்மாவின் குரல்.என்னைத்தான் கூப்பிடுகிறது பாப்பு. நான்தான் எப்பவும் பாப்புவின் செல்லம்.ஒருவேளை நான் அப்பாவின் சாயலில் இருப்பதனால் இருக்கலாம்.

பகல்தானே என்ற தைரியத்தில் நானே போய்ப் புழக்கடைக் கதவைத் திறக்கப்- பாப்பு.

நன்கு குளித்து முடித்துத் தலையெல்லாம் ஒழுங்காகச் சீவிப் பளிச்சென்று வந்திருந்தது பாப்பு.என்னைப் பார்த்ததும் புன்னகை தவழ 'குட் மானிங் கண்னு!' என்றது.அது.யாரோ பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தை, பாப்பு அதனுடன் விளையாடும் போது அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் போலிருக்கிறது.அதிலிருந்து இந்த இரண்டு மாதமாக காலை,மாலை,ராத்திரி என்று நேரம் காலம் கிடையாது.முதன் முதலாக அன்றைக்கு அது யாரைப் பார்த்தாலும் அவர்களுக்குக் 'குட்மானிங்' சொல்லி விட்டுத்தான் மறுவேளை.துரத்தித் துரத்திப் போய்க் 'குட்மானிங்' சொல்லி விட்டு வருகிறது பாப்பு.

எங்கள் எல்லோருக்கும் 'குட்மானிங்' சொல்லிவிட்டு வழக்கம் போலப் பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்து விட்டது.இரவு நடந்தது எதுவுமே அதற்கு ஞாபகமில்லை என்று நினைத்தோம் நாங்கள்.
அப்பா குளித்து முடித்து வெளியே செல்ல வெள்ளை வேட்டி சட்டையுடன் வந்தவர் பாப்புவைப் பார்த்ததும் 'என்னாயிற்று?'என்று அம்மாவிடம் ஜாடையிலேயே கேட்டார்.'ஒன்றும் ஆகவில்லை' என்று அம்மாவும் ஜாடையிலேயே உதட்டைப் பிதுக்கினாள்.எதற்கோ திரும்பிய பாப்பு அப்பாவைப் பார்த்துவிட 'என் குட்மானிங்கை வாங்கிக்கச் சொல்லு சிவா!' என்று அம்மாவிடம் அனத்த ஆரம்பித்து விட்டது பாப்பு.அப்பாவுக்கு மட்டும் நேரடியான 'குட்மானிங் 'கிடையாது.அம்மாவின் மூலந்தான்.

'பாப்பு உங்களுக்குக் 'குட்மானிங்' சொல்றாளாம்.வாங்கிக்கச் சொல்றா!' என்றாள் அம்மா.
'ம்ம்' என்றார் அப்பா.
அவர் சாப்பிட்டு விட்டு 'சரி நான் வெளியே போயிட்டு வர்ரேன்' என்று கிளம்பும் போதுதான் பாப்புவின் ஆளுமை மீண்டும் மாறியது.

'டேய்,திருவாசகம்'
இரவு கேட்ட அதே தடித்த குரலில் பேச ஆரம்பித்தது பாப்பு.

நேராக அவரிடம் சென்று எதிரில் ஒரு அதிகாரியைப் போல நிமிர்ந்து நின்றது அது.
'நீ பாட்டுக்கு வெளியே போயிட்டா?எனக்காக யாரு தேர்தல் வேட்பு மனு தாக்கல் பண்ண என் கூட வருவா?' என்று கேட்டது பாப்பு.
அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
'பாப்பம்மா! நீ எல்லாம் எலக்ஷன்லே நின்னு எப்படி...?'
அமைதியாகவே பேசிய அப்பாவை இடைமறித்துக் கத்தினார் தியாகாராஜ சித்தப்பா பாப்பம்மாவின் குரலில்.
'இல்லே.நான் பாப்பம்மா இல்லே. நான் வேறே.அந்த அயோக்கியப் பய பரமசிவத்தோட பய இளவரசனையும் நிக்கற மத்த அயோக்கிய ராஸ்கல்களையும் நான் ஜெயிக்கவே விட மாட்டேண்டா.அது மாத்திரமில்லே.இந்த ஊரு ஜனங்களுக்காக நான் எவ்வளவு நல்லது பண்ணியிருப்பேன்.அதை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு எனக்கெதிரா ஓட்டுப் போட்டு, டெபாசிட் போய்ப் பைத்தியம் புடிச்சு நான் சாகற அளவுக்குப் பண்ணுனானுகளே இந்த ஊர்க்காரனுக,இந்த ஊருக்கு ஒரு பைத்தியத்தை எம்.எல்.ஏ ஆக்காமே விடமாட்டேண்டா!' என்று கத்தியது பாப்பு.

அப்போதுதான் தியாகராஜ சித்தப்பாவினுடைய ஆவியின் சபதம் எங்கள் எல்லோருக்கும் புரிந்தது.

ஆவியாக இருந்தாலும் அவர் பாப்புவின் மூலம் தனது சபதத்தை எப்படி நிறைவேற்ற முடியும்,அதுவும் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கு பெறும் தேர்தல் போன்ற பொதுக் காரியத்தில்?

அதனுடைய தேர்தல் பணியை இப்படி ஆரம்பித்தது பாப்பு.
'எடுறா வண்டியை' என்று பாப்பு அப்பாவைத் திடீரென மிரட்டியதுதான் தாமதம் ,வாசலில் நின்று கொண்டு இருந்த அப்பாவின் ஸ்கூட்டர் தானாக 'உர்'ரென்று ஸ்டார்ட் ஆகியது.

'வா தாலுக்கா ஆபிஸுக்குப் போலாம் !' என்று அப்பாவைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள் பாப்பு.
'ஏறுடா வண்டியிலே' என்றதும் அப்பா ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொள்ள ஜங்கென்று ஏறி உட்கார்ந்து கொண்டது பாப்பு.

ஹி..ஹி என்று எங்களைப் பார்த்துச் சிரித்தபடியே 'டாட்டா,டாட்டா' என்று பாப்பு கத்திக் கொண்டு போகும் போது பாப்பு பழையபடி ஆகி இருந்தது.

அப்பாவின் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து கொண்டு 'அடியே கொல்லுதே அலகோ அல்லுதே' என்று பாப்பு சத்தம் போட்டுக் கொண்டு பாடிச் சென்றதைப் பார்த்து ஊரே அசந்து போய் நின்றது.

அதைவிடத் தேர்தல் வேட்பு மனுவைப் பாப்பு தாக்கல் செய்தது எனக் கேட்ட போது ஊரில் ஆண்,பெண் உட்பட எல்லோரும் 'என்ன!என்ன!' என்று கேட்டு மயங்கி விழாத குறைதான்.

பழைய எம்.எல்.ஏ பரமசிவமும்,மற்ற வேட்பாளர்கள் எல்லோரும் முதலில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரி சிரியென்று சிரித்தார்கள்.
'என்னடா ஆச்சு?திருவாசகத்துக்கும் பைத்தியம் புடிச்சிருச்சா?' என்று அப்பாவைக் கேலியும் கிண்டலும் பண்ணாத ஆட்களே கிடையாது. அதற்குப் பிறகு பல நாட்கள் அப்பா வெளியே தலைகாட்ட முடியவில்லை.

மற்ற வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் அனல் பறக்க நடந்த போது பாப்பு ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுடன் எட்டாங்கரம் விளையாடிக் கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டுக்கு வீடு வந்து வாக்கு சேகரித்த போது, பாப்பு பலூன் கந்தசாமியிடம் ஓசியில் ஒரு பலூன் கிடைத்த குஷியில் மற்ற குழந்தைகளுடன் சிரித்தபடியே அதனைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தது.

மற்றவர்கள் இரவெல்லாம் கண் விழித்துத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தபோது,இது வழக்கம் போலத் தனியாகப் பாடிக் கொண்டிருந்தது.

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே இருந்தது.

அன்று பரமசிவம் தனது மகன் இளவரசனுக்குக் கட்சி ஆதரவாளர்களின் மிகப் பெரிய ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார். இரு கரங்களையும் கைகூப்பியபடியே இளவரசன் ஊர்வலத்தின் நடுவே ஒரு இயந்திரன் போல உணர்ச்சியற்ற நிரந்திரப் புன்னகையுடன் ஊரின் முக்கியமான வீதிகளின் வழியே வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது காலை மணி பதினொன்று இருக்கும்.ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் ஒன்றாம் வகுப்பு ஏ,பி,சி மூன்று செக்ஷன்களையும் சுகுணா டீச்சர் ஒன்றாக உட்கார வைத்து ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.150 குழந்தைகளும் ஏ ஃபார் ஏப்பிள்,பி ஃபார் பிஸ்கட்,சி ஃபார் சாக்லேட் என்று கத்திப் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது..

பி ஃபார் பியூபில் என்று சுகுணா டீச்சர் சொல்லக்,குழந்தைகள் எல்லோரும் திடீரென ஒருமித்த குரலில்'பி ஃபார் பாப்பம்மா' என்றார்கள்.
டீச்சர் சற்று நேரம் ஒன்றும் புரியாமல் நின்றவர்,மீண்டும் பி ஃபார் பியூபில் என்று அழுத்தமாகக் கூற இந்த முறையும் குழந்தைகள்'பி ஃபார் பாப்பம்மா'என்றார்கள்!

'டேய் பசங்களா உங்களுக்கெல்லாம் என்னடா ஆச்சு?'என்று டீச்சர் கேட்கக் கேட்கவே 'வோட் ஃபார் பாப்பம்மா' என்றன குழந்தைகள்!

சுகுணா டீச்சருக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் நிற்க நிற்கவே அந்த ஐந்தாறு வயதுக் குழந்தைகள் 'பி ஃபார் பாப்பம்மா ,வோட் ஃபார் பாப்பம்மா ' என்று உரக்கக் கத்தியபடியே வெளியே ஓடி விட்டனர்.

ஆசிரியர்கள் என்ன தடுத்தும் நடக்கவில்லை.

திமிறிக் கொண்டு வெளியே ஓடி விட்டனர் குழந்தைகள்.

150 குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டத்தையும் ஓட்டத்தையும் தடுக்க முடியாமல் திணறி விட்டார்கள் ஆசிரியர்கள்.ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் வரிசையாக ஊர்வலம் வந்ததைப் பார்த்ததும் அதே பாப்பம்மா கோஷங்களுடன் மற்ற வகுப்புக் குழந்தைகளும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள பள்ளியிலிருந்து பாப்பம்மாவின் முதல் தேர்தல் ஊர்வலம் ஊருக்குள் வீதிகளில் செல்ல ஆரம்பித்தது.

கடைத் தெருவில் பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த பாப்பு குழந்தைகளின் ஊர்வலத்தை முதலில் வியப்புடன் பார்த்தவள் பிறகு அவளும் 'வோட் ஃபார் பாப்பம்மா' என்று கத்தியபடியே ஓடி வந்து ஊர்வலத்தின் முன்வரிசையில் கலந்து கொண்டாள்.

ஏதோ பாப்புவே திட்டம் போட்டு ஏற்பாடு செய்த ஊர்வலம் போல அது ஊருக்குள் பரபரப்பாக சென்றது.

ஈரானின் பிரபல இயக்குநர் மஜித் மஜ்டி,சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை விளம்பரப்படுத்துவதற்கு அந்த அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எடுத்த அழகான ஆவணப் படத்தில் வருவதைப் போல, ஊரையே அதிசயிக்க வைத்தது இந்தக் குழந்தைகளின் திடீர் ஊர்வலம்.

ஆவேசமாய்க் கத்தியபடியே ஊர்வலமாய் வரும் தங்கள், தங்கள் குழந்தைகளைக் கண்ட ஆண்களும்,பெண்களும் திகைத்துப் போய்ப் பார்த்திருக்க, இந்தக் குழந்தைகள் ஊர்வலம் இப்போது ஊரின் பெரும் புள்ளியான பரமசிவத்தின் மகன் இளவரசனின் தேர்தல் ஊர்வலத்தை நேருக்கு நேர் சந்தித்தது.

இளவரசனே இதை எதிர்பார்க்கவில்லை.அவன் முகத்தில் மட்டுமல்ல ,அவனுடைய ஆதரவாளர்கள் முகத்திலும் ஈயாடவில்லை.

இளவரசனின் ஊர்வலத்தில் தங்களுடைய அப்பா,அம்மா,உறவினர்களைப் பார்த்ததும் கோஷங்களை மாற்றினாள் பாப்பு, தனது தடித்த தியாகராஜா சித்தப்பாவின் குரலில்.!

'அப்பா,வோட் ஃபார் பாப்பம்மா !'

'அம்மா,வோட் ஃபார் பாப்பம்மா !

'மாமா,வோட் ஃபார் பாப்பம்மா !

குழந்தைகளும் அவரவர் அப்பா,அம்மா மாமாக்களைப் பார்த்து அப்படியே கத்தினர்.

கடைசியாக பாப்பு போட்ட கோஷத்தைக் கேட்டு இளவரசனின் ஆதரவாளர்களே சிரித்தார்கள்.

'இளவரச மாமா,வோட் ஃபார் பாப்பம்மா !'

என்று குழந்தைகள் கத்தியதும் சிரித்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து முறைத்தான் அவன்.

'என்னடா மயிரு உங்களுக்குச் சிரிப்பு வேண்டியிருக்கு.அடிச்சு விரட்டுங்கடா இந்தச் சனியனுகளை!' என்று அவன் ஆத்திரமாய்க் கத்தியதும் தங்கள் குழந்தைகளையே அவன் திட்டியதை அவனது ஆதரவாளர்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை,முக்கியமாகப் பெண்களால்.

'எங்க குழந்தைகளை நீங்க எப்படித் திட்டலாம்?' என்று நிறையப் பேர் அவனிடம் சண்டைக்குப் போய் விட்டனர்.பிரச்சினை பெரிதாகக் கண்டு பயந்து விட்டான் இளவரசன்,

'சரி அதுகளை எப்படியாவது கலஞ்சு போகச் சொல்லுங்கய்யா' என்று தனது நெருக்கமான நண்பர்களிடம் அவன் கேட்டுக் கொண்டான்.
5000 பேருக்கு ஆளாளுக்கு 500 என்று கொடுத்துக் கூட்டி வந்த ஊர்வலமே வீணாகி விடுமோ என்ற கவலை அவனுக்கு.
ஆனால் அப்பா,அம்மா,அண்ணன் என்று யார் போய் மிரட்டியும் கெஞ்சியும் குழந்தைகள் நகர மாட்டோம் என்று அடம் பிடித்து நின்றார்கள்.
கோஷங்களை மேலும் மேலும் சத்தமாகப் போட ஆரம்பித்துவிட்டார்கள் குழந்தைகள். பணம் கொடுத்துக் கூட்டி வந்த இளவரசனின் ஆட்கள் அமைதியாக இருக்கக், குழந்தைகள் சத்தம்தான் பெரியதாக இருந்தது.
ஊரே சிரித்தபடியே இதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது. அப்பாவுக்கு நிலைமையைச் சொல்லி ஃபோன் போட்டு ஆலோசனை கேட்டான் இளவரசன்.
'நெகடிவ் கேம்பேன் ரொம்ப டேஞ்சர்டா.நீ ஊர்வலத்தைக் கலைச்சுட்டு வந்துடு!'என்று அப்பா சொல்லி விட்டார்.
இளவர்சனின் ஊர்வலம் கலைந்து போகத் தொடங்கியதும் ஓவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்குழந்தைகள்.
'வெற்றிச் செல்வி பாப்பம்மா வாழ்க!' என்று கத்தியது பாப்பு. குழந்தைகளும் அதனை எதிரொலிக்க ஊர்க்காரர்களே தங்களை அறியாமால் கைதட்டினார்கள்.

அது மட்டுமல்ல, அன்று இரவு எல்லோருடைய வீட்டு வானொலி, தொலைக்காட்சியில் எந்த சேன்னலைத் திருப்பினாலும் இந்தப் பாட்டே ஒலிபரப்பானது.

'ஒரு பொண்ணு ஒண்ணுதான் பார்த்தேன் ..மில்லி மீட்டர் சிரிப்புத்தான் கேட்டேன்.

'.பாப்பு..பாப்பு..'

ஊரில் பாப்புவைத் தவிர வேரெந்தப் பேருமே அன்று அடிபடவில்லை.!

இரவு பரமசிவம் அப்பாவுக்குப் ஃபோன் செய்தார்.

'என்னப்பா திருவாசகம்,பரமசிவத்துக்கு எதிராவே உன் திருவாசகத்தைப் பாடறியா?' என்று அவர் கோபமாகக் கேட்டதிற்கு அப்பா பதிலொன்றும் சொல்ல முடியாமல் ஃபோனைக் கட் செய்து விட்டார்.
அடுத்த நாள் தேர் முட்டி அருகே ஊரின் சந்தை கூடியிருந்தது.

திடீரென 'டேய் மக்கா!'என்று பாப்புவின் உரத்த குரல் எங்கிருந்தோ கேட்க, மக்கள் திடுக்கிட்டு எல்லோரும் குரல் வந்த திசையில் பார்க்கத், தேரின் மேல் உச்சியில் நின்று கொண்டிருந்தது பாப்பு.

'இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்கடா! எனக்கு மாத்திரம் நீங்க ஓட்டுப் போடலே, இந்தத் தொகுதியிலே ஒரு பயலும் எந்த ஒரு தப்புத் தண்டாவும் பண்ண முடியாது..பார்த்துக்குங்க.அதை இன்னியிலே இருந்தே
நான் காட்டப் போறேன்.அதனாலே மருவாதையா எனக்கேதான் ஓட்டுப் போடணும்!' என்று சொல்லி விட்டுப் பாப்பு மளமளவென்று இறங்கி எங்கோ ஓடி விட்டது.

அந்த மிரட்டல் பலிக்க ஆரம்பித்த போதுதான் ஊரே அரண்டு போனது.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனின் சட்டைப் பாக்கட்டில் வழக்கம் போலப் பணம் திருடக் கையை விட்ட பொன்னம்மாவைக் கருந்தேள் ஒன்று சட்டைப் பாக்கெட்டில் இருந்து கடிக்கத்,துடித்து விட்டாள் அவள்.

கரும்புக் காட்டுக்குள் சென்ற கள்ளக் காதலர்களை எல்லாம் பாம்புகள் துரத்தின.

நியாய விலைக் கடையில் எடையை ஏமாற்றி அரிசியை அளந்து போட்டவுடனேயே ரேஷன் கடை சிங்காரத்தின் வலது கை விளங்கவில்லை.

லஞ்சம் வாங்கிய எல்லா அரசு ஊழியர்களும் லஞ்சப் பணத்தைப் பீரோவில் பூட்டி வைத்து விட்டு அடுத்த நாள் திறந்து பார்த்தால் பணமெல்லாம் மறைந்து போயிருந்தது.

மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடப் போன எல்லோருக்கும்,அம்மனைத் தவிர வேறு எந்த நினைப்பு வந்தாலும் பிடரியில் சொடேரென அடி விழுந்தது.யாராருக்கு எத்தனை தடவை வேறு நினைப்பு வந்தாலும் அத்தனை பேருக்கும் அத்தனை தடவையும் சொடேர்,சொடேர்.
பூசாரி அங்கமுத்துவுக்குத்தான் நிறைய அடி.கழுத்துக்குக் காலர் போடவேண்டுமென்று டாக்டர் சொல்லி விட்டார்.

பழைய எம்.எல்.ஏ பரமசிவத்துக்குத் 'தேர்தல்'என்ற வார்த்தையைச் சொன்னாலே வாய் இழுத்துக் கொண்டது.

அவரது மகன் இளவரசனுக்கு 'ஓட்டு' என்று நினைத்தாலே ஜன்னி வந்தது.

மருமகள்கள் மாமியாரை கொடுமைப் படுத்தும் போதெல்லாம் வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவைகள் கருகின.

அப்பாவி மருமகள்களை மாமியார்கள் கொடுமைப் படுத்தும் போதெல்லாம் உடம்பெல்லாம் கொப்புளித்தது.

மதுபானக் கடைகளின் பார்களில் லிட்டர்,லிட்டராகக் குடித்தாலும் யாருக்கும் 'கிக்'கே ஏறவில்லை.எல்லாச் சரக்கிலும் திடீர்,திடீரென கெரஸின் வாசமும் மூத்திர வாசமும் அடித்தன.

ஓட்டுக்குப் பணம் கொடுக்கச் சென்றவர்களின் வாகனங்களின் பெட்ரோல் டேங்குகள் வெடித்தன.

எல்லாவற்றையும் விட ஊர்மக்கள் அதிகம் அவதிப் பட்டது, யார் பொய் சொன்னாலும் உடனே வாந்தி பேதி வந்து படுத்த படுக்கையானதில்தான்..

இதனால் எல்லாம் பாதிக்கப் படாதவர்கள் ஊரில் இருந்த குழந்தைகளும்,எண்ணிக்கையில் மிகக் குறைவான நல்லவர்களுந்தான்.

இதையும் தாண்டிப் பரமசிவம் வெளி ஊரிலிருந்து அடியாட்களைத் தருவித்துப் பாப்பம்மவைத் தீர்த்துக் கட்டிவிட ஏவி விட்டார்.

பாப்பு அப்போது ஊர் மைதானத்தில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தது.டாடா சுமோவில் வீச்சரிவாள்களோடு வந்திறங்கிய அடியாட்கள் பாப்புவை நெருங்கியவுடன் அது அவர்களைப் பார்த்து ஒரே சிரிப்புத்தான் சிரித்தது.

வீச்சரிவாள்களை வீசிய நிலைகளிலேயே அவர்கள் அப்படியே சிலைகள் பொல உறைந்து போய்,சென்னைக்கடற்கரையில் இருக்கும் உழைப்பாளைர் சிலையைப் போல நின்றுவிட்டார்கள்.
பாப்பு சிரித்தபடியே ஓடிவிட்டது.

அடியாட்களை அப்புறப் படுத்த யாருமே முன்வராததால் அவர்கள் ரொம்ப நாளைக்கு எங்கள் ஊரின் மைதானத்தில் பக்கத்தில் டாடா சுமோவுடன் அப்படியே நின்று கொண்டு இருந்தார்கள்!

தேர்தல் நாளுக்கு முதல் நாள் ராத்திரி எட்டு மணி செய்திகளின் போது எல்லோருடைய வீட்டுத் தொலைக் காட்சிகளிலும் பாப்பு .தோன்றியது.

'வழக்கம் போல அக்கிரமங்களும் அநியாயங்களும் பண்ணனும்னு ஆசைப் பட்டீங்கன்னா எனக்கு ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைங்க.அப்படி இல்லே, நல்லவங்களாவே வாழனும்ன்னு நினைச்சீங்கன்னா மத்த யாருக்கு வேணும்ன்னாலும் ஓட்டுப் போட்டுக்குங்க 'என்று சொல்லி விட்டுப் பாப்பு மறைந்து போனது.

தேர்தல் முடிவு வெளியான போது பாப்பு மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற,எதிர்த்து நின்ற மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாஸிட் இழந்தனர்!

அன்று அதிகாலை நான்கு மணிக்கு யாரோ எங்கள் வீட்டுப் பின்புறக் கதவைத் தட்ட, அப்பா, நாங்கள் எல்லோரும் போய்க் கதவைத் திறக்கப் பாப்பு அமைதியாக நின்று கொண்டிருந்தது.

குளித்து முடித்து விபூதி மட்டும் இட்டிருந்தது பாப்பு. அதனுடைய கையில் ஒரு துணிப் பை.

'நான் கிளம்பறேன் மாமா' என்றது என் அப்பாவிடமே நேரடியாக.

'எங்கே பாப்பம்மா?' என்றார் அப்பா வியந்து.

'ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஆனதுக்கப்புறம் அந்தத் தொகுதியிலேயே இருக்கலாமா மாமா.! அதுதான் ஒரு அஞ்சு வருசத்துக்கு இந்த ஊர்ப் பக்கமே தலையைக் காட்டக் கூடாதுன்னு வேறே ஊருக்குப் போறேன்.!' என்றது பாப்பு.

'உனக்கு எந்த ஊருலே, யாரைத் தெரியும் பாப்பு?' என்று அம்மா உண்மையாகவே அக்கறையுடன் கேட்டாள்.

' ஜனங்க எல்லா ஊர்லேயும் ஒரே மாதிரித்தான் இருப்பாங்க சிவா.
எல்லா ஊரும் ஒரே ஊருதான் எனக்கு. நான் வர்ரேன்!'என்று சொல்லி விட்டு விறுவிறுவென நடந்து விடியல் இருட்டில் போயே போய் விட்டது பாப்பு.

இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தோட்டத்துக் குடிசை இரவில் அமைதியாக இருந்தது.

பாப்பு இப்போது எங்கே பாடிக் கொண்டிருக்கிறதோ?

**********