உண்மைச் சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மைச் சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 14, 2009

ஒரு உண்மைச் சம்பவம்,ஆனால் எத்தனை திருப்பங்கள்

நண்பர் விஜய் ஷங்கரின் இடுகையில் நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தமிழில் தர முயன்றிருக்கிறேன்.
ஒரு திரைப் படத்தில் கூட இவ்வளவு சுவாரசியமான திருப்பங்கள் நிகழ நாம் பார்த்திருக்க முடியாது.
ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்போவோர் பார்க்க வேண்டிய சுட்டி:
http://www.vijayashankar.in/2009/06/interesting-story-from-ab-seniors-blog.html

இனித் தமிழில்:

1994 இல் அமெரிக்கக் குற்றவியல் துறையின் பிரசிடென்ட் ஆன டாக்டர்.டான் ஹார்பர் மில்ஸ் தனது வருடாந்திர விருந்தொன்றில், கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்திய இந்த உண்மைச் சம்பவத்தினைக் கூறுகிறார்.

எவ்வளவு சட்டச் சிக்கல்கள் நிறைந்த குழப்பமான மரணம் அது!

1994,மார்ச் மாதம் 23ம நாள்.
ரொனால்ட் ஓபஸ் என்பவன் தனது பத்தாவது மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான்.
வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட விரக்தியே தனது தற்கொலைக்குக் காரணம் என்று கடிதமும் எழுதி வைத்திருக்கிறான் ஓபஸ்.
ஆனால் அவனது உடலைப் பரிசோதித்த மருத்துவ நிபுணரோ, ஓபஸ் தலையில் குண்டடி பட்ட காயத்தினால்தான் இறந்திருக்கிறான் என்று கூறினார் .

ஓபஸ் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் போது,இடையில் இருக்கும் ஏதோ ஜன்னலில் இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள்தான் அவன் தலையில் வெடித்து அவன் இறந்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வருகிறது.

ஆனால்,ஓபஸ்,துப்பாகியால் சுட்டவன் இருவருக்குமே ஒரு விஷயம் தெரியாது.

கீழே எட்டாவது மாடியில், அங்கு வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளிகளின் பாதுகாப்பிற்காக வலை கட்டி வைத்து இருக்கிறார்கள் என்பதே அது.
அந்தக் கட்டிடத்தில் யாரும் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலையே செய்து கொள்ள முடியாது!

எனவே ஓபஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் அது சாத்தியப் பட்டிருக்க முடியாது. ஆதலால் அவனது சாவுக்குக் காரணம்,தலையில் அடிபட்டிருக்கும் குண்டடியே, இது யாரோ ஒருவனின் கொலை முயற்சியே என்று குற்றம் சாட்டுகிறார் குற்றவியல் துறை மருத்துவர்.

விசாரணையில் சுட்டவர் யாரென்று தெரிந்து விடுகிறது.

ஒரு வயதான கிழவர்!

தனது மனைவியுடன் வாய்ச் சண்டை முற்றிக் கிழவியைச் சுட்டு விடுவேன் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருக்கிறார் அவர்.கிழவி அதற்கும் அடங்காமல் பேசிய போது துப்பாக்கியின் விசையை ஆத்திரத்தில் அழுத்தி விட்டார் முதியவர்.
துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வந்த குண்டுகள்,கிழ்வியிடம் இருந்து குறி தப்பித் தற்கொலைக்காக் கீழே குதித்து விழுந்து கொண்டிருந்த ஓபசின் தலையைத் துளைத்து விட்டன!

ஒருவன்'ஏ 'வைக கொள்ளும் முயற்சியில் 'பி' சாவதற்குக் காரணமானாலும் அது 'பி'யைக் கொன்ற கொலைக் குற்றமே என்பதே சட்டம்.எனவே ஓபசைக் கொன்ற கொலைக் குற்றவாளியாகத்தான் கிழவர் கருதப் பட வேண்டும் என்று சட்ட ரீதியாகச் சொல்லப் பட்டது .
ஆனால் கிழவரின் வாதமோ வேறு.

வயதான தனது மனைவியை அடக்குவதற்குத், தான் அடிக்கடி துப்பாக்கியைக் காட்டிச் 'சுட்டு விடுவேன்' என்று மிரட்டுவது தனது வழக்கந்தான் என்றாலும் ஒருபோதும் துப்பாக்கியில் குண்டுகள் இருந்ததில்லை ,அது எப்போதும் காலித் துப்பாக்கியே என்று அவர் சாதித்தார்.
கிழவியும் அதனை உண்மைதான் என்று ஒப்புக் கொண்டாள்.
எனவே தனது மனைவியையே தான் கொல்லும் எண்ணத்தில் இல்லாத போது தான் எப்படி இன்னொருவர் சாவுக்குக் காரணமாக இருக்க முடியும் என்று கிழவர் வாதாடினார்.
துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தற்செயலாக நிரப்பப் பட்டிருக்கலாமே ஒழிய ஒருவரைக் கொல்லும் நோக்கத்தில் அல்ல,எனவே இது திட்டமிடப் பட்ட கொலை அல்ல,ஒரு விபத்தே என்று முதியவரும் ,அவரது மனைவியும் மன்றாடுகிறார்கள்.
இப்போது துப்பாக்கியில் குண்டுகளை யார் நிரப்பி இருப்பார்கள் என்று தீர விசாரிக்கையில் இன்னொரு சாட்சி வருகிறார்.
ஆறு வாரங்களுக்கு முன் அந்த முதிய தம்பதியரின் மகன், துப்பாக்கியில் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருந்ததைத் தான் நேரடியாகப் பார்த்ததாக அந்த சாட்சியம் சொல்லிற்று!
அவர்களது மகனுக்குக் கொடுத்து வந்த பண உதவியை நிறுத்தச் சொல்லி விட்டாள்,கிழவி.எப்போதும் தனது தாயைக் காலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் அப்பாவைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த மகன்,பணம் வர முட்டுக் கட்டையாக இருந்த அம்மாவைப் பழி வாங்க இதனைப் பயன் படுத்திக் கொண்டான்.
அப்பாவுக்குத் தெரியாமல் துப்பாக்கியில் தோட்டாக்களைப் போட்டு வைத்து விட்டான்!
எனவே ஓபசின் கொலை வழக்கில் வயதானவர்களின் மகனே கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

இப்போது வருவதுதான் எல்லாவற்றையும் விட மிகப் பெரிய திருப்பம். திருப்பங்களின் ராஜா!

அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!

ஆறு வாரங்கள் ஆகியும் தன் தாயைத் தான் திட்டமிட்டபடி கொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான் ஓபஸ்.
அப்பாவின் துப்பாக்கியில் அவன் நிரப்பிய தோட்டாக்களே அவன் உயிரைக் குடித்து விட்டன.
எனவே ஓபஸ் செய்து கொண்டது தற்கொலையே என்று சட்டம் தீர்ப்புச் சொல்லியது!