ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 04, 2009

ஸ்வாமி ஓம்கார் கேட்ட கேள்விகள்...

Swami omkar to me show details 09:37 (2 hours ago)
சாதாரண மனிதன் உடலுறவின் மூலமும், கலைஞன் கற்பனையின் மூலமும் தனது அளவற்ற சக்தியையும், எக்ஸ்டஸியையும் வெளிப்படுத்துகிறான்.-ஓஷோ
ஆன்மீகமுள்ள ஷண்முகப்ரியனுக்கு,

உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.அதை தொடர்ந்து உங்களிடம் சில கேள்விகள்.
1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?
2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?
3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?
4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?
5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?
பல கேள்விகள் இருந்தாலும் பொதுக்கேள்வியாக இவற்றை வைக்கிறேன்.
உங்கள் பதிலை வலைப்பதிவில் எதிர்பார்க்கிறேன்
அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்.

எனது சிந்தனைகளின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைத்த ஓஷோவின் மேற்கோளுடன் நீங்கள் உங்களது ரசனையைப் பகிர்ந்து கொள்ள வந்ததை எனது பேறாகக் கருதுகிறேன்,ஸ்வாமிஜி.

//உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.//

உங்களை ரசிகராகப் பெற்றதை விட இனி இந்தக் கதைக்கு வேறெந்தப் பெருமையும் கிடைத்து விட முடியாது.இந்தக் கதை புண்ணியம் செய்திருக்க வேண்டுஎன நினைக்கிறேன்,ஸ்வாமிஜி.

1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?

முப்பது வருடங்களுக்கும் முன்...// எனது 'ஆன்மீகத் தேடல்' பற்றி...

முப்பது வருடங்களுக்கும் முன்னால் கிட்டத் தட்ட என்னுடைய இருபதுகளில் 'குருமூர்த்தி' என்ற ஒரு நாவலை எழுதி உள்ளேன்.அதனுடைய கையெழுத்துப் பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.
நான் அணுகிய சில பதிப்பகங்கள் அப்போது அதனை வெளியிடத் தயங்கி மறுத்து விட்டனர்.
அதனைப் பதிப்பிற்கும் முயற்சியில் இன்னும் யாரென்று தெரியாத ஒரு சந்யாசி உட்பட ஒரு கூட்டத்தில் அதனைப் படித்து மட்டும் காண்பித்தேன்.அவர் மட்டும் வெகுவாக என்னைப் பாராட்டினார்.
மற்ற எல்லோரும் எனது சின்ன வயதைக் கண்டு அதிசயித்தார்கள் அன்றி அது அச்சுக்கே வரவில்லை.
'கடை விரித்தோம் கொள்வார் இல்லை, கட்டிக் கொண்டோம்' என்று உங்களவர்களில் ஒருவர் சொன்னதைப் போல நானும் அதற்குப் பின் எந்த சிரத்தையும் எடுக்காமல் விட்டு விட்டேன்.

அந்த சந்யாசியை மட்டும் சில வருடங்கள் கழித்து எனது கல்யாணக் கூட்டத்தில் பார்த்தேன்.அழைக்காமலேயே வந்திருந்தார்.அவரிடம் ஆசி வாங்கினேனானா என்பது கூட இப்போது ஞாபகம் இல்லை.
ஒரு சாதாரண மனிதனின் மனம் எப்படி அனைத்தும், களைந்து முக்தி அடைகிறது என்பதை உள்ளிருந்து பார்க்கும் கதைக் களம் அது.
அந்த நாவலுடன் ஒப்பிடும் போது இந்தக் கதை, எங்களது திரைப் படப் பாணியில் சொல்வதென்றால் 'கமர்ஷியல்'!
பார்ப்பவர்களைப்,படிப்பவர்களை ஒரு கணம் கூட நழுவ விடாமல்,இறுக்கிப் பிடித்துக் கொண்டே கொண்டே படைக்கும் பயம்.
ரசிகனது சிறிய கொட்டாவி கூட எங்களது வாழ்க்கையையே அலைக்கழிக்கும் ஒரு பெரும் புயல்.!
'அன் இன்டிரஸ்டிங் மீன்ஸ் டெட்' என்பதுதான் எங்கள் தாரக மந்திரம்.

திரையுலகத்தின் உள்ளே வந்து பார்க்கும் போது,மக்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறுகளை சதா தேடிக் கொண்டிருப்பதையே முழு நேர வாழ்க்கையாக வைத்திருப்பவர்களைப் பார்க்கலாம்.

பெண்களின் மார்புகள்,ஆண்களின் உக்கிரம்,இசை,நகைச் சுவை,கண்ணீர்,கவிதை, உணர்ச்சிப் பெருக்குகள்,கடவுள்கள்,மதம்,மொழி,மஹான்கள்,கொடுங்கோலர்கள்,கற்பு,விபச்சாரம் அனைத்தையுமே,அனைவரையுமே திரை அரங்குகளில் விற்கப் படும் டிக்கெட்டுக்களின் எண்ணிக்கை வழியாக மட்டும் பார்க்கப் பட வேண்டிய கட்டாயக் கலை இது.
அதனால் ஆன்மீகம் 'இன்டெரஸ்டிங்' என்ற ஒரே காரணத்தால் மட்டுமே என்னைக் கவர்கிறது.ஆங்கில நாவல்களைப் போல,விஞ்ஞானத்தைப் போல..சோதிடத்தைப் போல..
படைப்புக்கான 'பொடன்ஷியல்' உள்ளது அனைத்துமே எனக்கு ஆன்மீகம்தான்.
அதனால் ஆன்மீகத் தேடல் என்று இதனக் கூற முடியாது.

2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?//

இல்லை,ஸ்வாமிஜி.எல்லாக் கதைகளையும் போல இதையும் ஒரு வழக்கம் போலக் கதையாக எண்ணித்தான் எழுதினேன்.
ஒரே ஒரு வித்தியாசம்.
இது விற்பனைக்கல்ல என்ற தைரியம்.
அதனால் வரிக்கு வரி எந்த முன்திட்டமிடலும் இல்லாமல் சித்தம் போன போக்கில் எழுதிய கதை.
ஆஜ்மிர் என்று ஊர் தானாக வந்து விழுந்த பின்னர்தான் இணையத்தில் சென்று அந்த ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்னர் வந்ததுதான் அங்கே இருக்கும் தர்க்காவும்,ஆஜ்மீர் பாபாவும்.
பின்னாளில் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு வீரன் ஒரு கட்டத்தில் தனது உயிருக்காக எப்படியெல்லாம் போராடினான் என்ற மையக் கருதான் இந்தக் கதையாக வளர்ந்தது.
ஒரு வீர்யமுள்ள கதைக் கரு தன்னைத் தானே கதையாக வளர்த்துப் பெருகிக் கொள்ளும் என்பது நான் அனுபவத்தில் கண்ட ஒன்று.

3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?

முதலிலேயே சொன்னதைப் போல் இது விற்பனைக்காக எழுதிய கதை அல்ல.அந்தக் கதைகளை நான் பதிவுகளில் எழுதுவதில்லை!

சங்கத்தில் பதிவு பண்ணியது இதில் வரும் குணச் சித்திரங்களைக் களவு போகாமல் காக்க.

இந்தக் கதை திரைப்படமாக வேண்டுமானால் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை எழுதப் படவேண்டும்.
பட்ஜெட் பெரிதானால் பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோவை முதலில் நீங்கள் உள்ளே இழுத்து வரவேண்டும். அதற்கு ஏற்ற முறையில் கதை திருத்தப் படவேண்டும்.
படத்தைப் பெரிதாக விற்பதற்கு இப்போது கதாநாயகிகள் பயன்படுவதில்லை.அதனால் நாயகிகளை மட்டும் நம்பிப் படம் எடுப்பதானால் பட்ஜெட்டைச் சுருக்க வேண்டும்.அதுதான் பாதுகாப்பு. அந்தச் சுருங்கிய பட்ஜெட்டுக்குக் கதை இடம் கொடுக்காதெனில் கதையைத்தான் கைகழுவி விடவேண்டும்.
'அருந்ததி' போன்ற நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பெரும் வெற்றிப் படங்கள் உருவானதுக்குக் காரணம், முழுக்க முழுக்க அந்த இயக்குநர்,தயாரிப்பாளரின் முழுமையான,துணிச்சல்.நம்பிக்கை.வெறி.அளவற்ற ஈடுபாடு.
அந்த மாதிரி நிகழ்வுகள் விதிகள் அல்ல.விதி மீறல்கள்.
தயரிப்பாளர்களே விரும்பினாலும்,பெரும் பணத்தை ,வெறும் கதையை மட்டும் நம்பி முதலீடு செய்வது எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
புதிய முகங்கள்.சின்ன பட்ஜெட்.வித்தியாசமான கதை.இதுதான் இன்றைய ஃபார்முலா.
இது திரைப் படத்துக்குப் பின்னாலிருந்து யோசிப்பது.
முன்னால் கொட்டகைகளில் அமரும் ஆடியன்ஸுக்கு படம் நன்றாக இருந்தால் போதும்.பாகுபடின்றி ஓட்டிக் காண்பித்து விடுவார்கள்! தயாரிப்பாளரின் பணத்துக்குத்தான் எல்லைகள் உண்டு.மக்களின் ரசனைக்கு எல்லைகளே இல்லை!

4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?

நான் ஒரு ஆணாக இருப்பதுதான் ஸ்வாமிஜி!

5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?//

கன்னிகா நீள்தொடராக உருவாக ஆரம்பித்து விட்டது.பதிவுலகின் அவசர ரசனைக்கு அது ஒவ்வாதது என்றதனால்தான் அதனைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டேன்.

//சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ....//

நான் முதன் முதலில்'உறவாடும் நெஞ்சம்' என்ற படத்துக்குக் கதை-வசனம் எழுதிய போது எனக்கு வயது 20.!

37 வருடங்கள் நான் உண்டு,உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் திரைப் படக் கலையின் பாதிப்பு இல்லாமல் நான் எப்படி ஸ்வாமிஜி எழுத முடியும்?

விஷுவல்களும்,உண்ர்ச்சிகளும் இல்லாத ஒவ்வொரு ஃப்ரேமும் வீண் என்பது நான் கற்று வந்த கலை.
எப்போதுமே ஒன்றினுடைய இறுதிப் பகுதி விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.
இறுதிகளுக்கே உரிய இயல்பு அது.
அதுவும் திரைத் துறையில்,படத்தின் உச்ச கட்டம்தான் நமக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கும் கடைசி நெருக்கம்.
அங்கே அவர்களது கவனத்தைத் தவற விட்டு விட்டால் மீண்டும் அவர்களைப் பிடிக்கவே முடியாது.
காதலியின் ரயில் போன பிறகு, ஓடிவரும் காதலனைப் போல ஆகி விடுவோம்.

விறு விறுப்பு இல்லையென்றால் கிளைமேக்ஸைத்தான் மாற்ற வேண்டுமே தவிர,விறுவிறுப்பை அல்ல!

இன்னொன்று.பதிவுலக நண்பர்கள் நிறையப் பேர் 'சினிமாத் தனம்' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மந்தமான நமது இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் தப்பிக்கவே நமக்குச் சினிமாவின் போலி விறுவிறுப்பு தேவைப் படுகிறது.
அந்தத் தேவை சிலருக்கு சீக்கிரமே பூர்த்தியாகி விடுகிறது.பல பேருக்கு அது பூர்த்தி ஆவதே இல்லை.
விறுவிறுப்புப் போதும் என்று ஆனவர்கள் நமது இயல்பு வாழ்க்கையின் மந்தத்துடன், படக் கதையின் ஊட்டப் பட்ட விறு விறுப்பை,வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லும் வார்த்தையே இந்த 'சினிமாத்தனம்.'

இந்த 'சினிமாத்தனம்தான்' சரியான மாயை.
இந்த உணர்வு மக்களுக்கு எங்கே தோன்றும் என்று யாராலும்,எந்த நியூட்டன்,ஐன்ஸ்டீன் விதியாலும் தீர்மானிக்க முடியாதது.
படங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது இந்த நூலிழையைப் பற்றிய கணிப்புத்தான்.
ஒரே காட்சியில் காதல் வருவதை ஒரு படத்தில் ஒத்துக் கொள்வார்கள்.அடுத்த படத்தில் காறித் துப்புவார்கள்.
சண்டைக்காட்சியை ஒரு படத்தில் சூப்பர் என்பார்கள்.
அடுத்த படத்திலேயே கிண்டலடிப்பார்கள்.

சினிமாத் தனம் என்று அவ்வப்போது ரசிகர்கள் சொல்வது, கல்யாண மாப்பிள்ளை, காசி யாத்திரை போவது மாதிரி!
அதை உண்மையான சந்யாசம் என்று எடுத்துக் கொண்டால் கல்யாணமே நடக்காது!
என்ன,இங்கே எப்போது ரசிகர் காசி யாத்திரை போவார்,திரும்பத் தாலி கட்ட வருவார் என்று யாருக்குமே தெரியாது!இந்த விந்தையை அறியத்தான் நிறைய சினிமாக் காரர்கள் ஜோதிடத்தை நாடுகிறார்கள்.

//அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்//

என்னுடைய முதல் படமான 'ஒருவர் வாழும் ஆலயம்' தவிர நான் எனது முழு நிறைவுடன் ஒரு படத்தை இன்னும் எழுதவோ,இயக்கவோ இல்லை.உங்கள் அன்பும் ஆசியும் அதற்கு என்னை வழி நடத்திச் சென்றால் நான் நிறைவடைவேன்.

சரணங்கள்,ஸ்வாமிஜி.