கண் இமைத்துக் கொண்டிருந்தால்,மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அதனால்தான் ஒன்றில் மனம் லயித்துப் போய் நின்று விட்டால் அதனைக் கண் கொட்டாமல் பார்க்கிறோம் என்று ஓஷோ ஓரிடத்தில் சொன்னது நேற்று அருந்ததி படம் பார்க்கும்போது நடந்தது.
டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் இருட்டில், உக்கிரமான ஒரு ரோல்லர் கோஸ்டரில் உட்கார வைத்து ,ஒரு அமானுஷ்ய உலகத்துக்குக் கூட்டிச் சென்று விட்டுப் படம் முடிந்தவுடன்தான் இறக்கி விடுகிறார்கள்.
தொழில் நுட்பத்தின் சாத்தியங்களும்,திரைக்கதையின் சாமர்த்தியங்களும் கைகோர்த்துக் கொண்டால்,நச்சரிக்கும் உங்கள்பகுத்தறிவுக் கேள்விகளை எல்லாம், அவை எழ,எழவே அடித்து நொறுக்கி விட்டு அழும் குழந்தையை மிரட்டி வாய் மேல் கை பொத்தி அறை மூலையில் உட்கார வைப்பதைப் போல் மக்களை உட்கார வைக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.
நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,அதனை மேலும் தீவிரமாக்கும் உடுக்கை,டிரம்ஸ்களின் டி..டி.எஸ். உறுமல்கள்,அதீதமான சம்பவங்களால் கட்டவிழ்ந்த குழந்தைத் தனத்தின் விளையாட்டு உற்சாகம் இப்படி ஒரு டிஸ்னிலேண்ட் சுற்றுலாவைப் போல் பயணிக்கிறது படம்.
யாரந்தக் கேமராமேன் செந்திகுமார்?தரதரவென்று நம்மை இழுத்துக் கொண்டு போய் அவரது கேமரா வியூஃபைண்டரில் நம் கண்களைப் பதியச் செய்து விடுகிறார் அவர்.அதற்குப் பிறகு நம் கண் லென்ஸ்களின் செயல் இழந்து அவரது காமிரா லென்ஸ்களின் வழியாகத்தான் அவர் காட்டும் உலகத்தை நம்மால் பார்க்க முடிகிறது.கண்களே மாறிக்,காட்சிகளும் மாறும் போது நம் கருத்துக்களுக்கு அங்கே என்ன வேலை?
நடிகர்களும் இதற்கேற்ப மனித மீறல்களின் முக பாவங்களை செவ்வனே வழங்கி இருக்கிறார்கள்.
தர்க்கஅறிவைத் துப்புரவாகத் துடைத்தபடியே ஓடும் இந்தத் தொழில் நுட்ப அட்டகாசங்களால்,நாம் பேய்களையும்,பிரேதங்களையும்,பிசாசுகளையும் ஏதோ தினமும் நாம் சந்திக்கும் தபால் காரர்களையும்,குரியர்களையும்,கான்ஸ்டபிள்களையும் பார்ப்பதைப் போல் சர்வ சாதரணமாய்ப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம்.ரத்தத்தைப் பார்ப்பது,பாக்கெட் பாலைப் பார்ப்பதைப் போல் ஆகி விடுகிறது.திரைப்படம், எவ்வளவு பெரிய உளவியல் மாற்றங்களுக்கான் சாத்தியம் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.
அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எல்லாம் மென்று தின்று ஜீரணித்து விட்டு,விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் தெலுங்குவுட் மாயாஜாலம்.
ஒரு இரண்டு மணி நேரப் புது ஜென்மம் எடுக்க விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய படம்.
திரைப்பட விமர்சனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்பட விமர்சனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், மார்ச் 23, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
