புதன், அக்டோபர் 28, 2009

காதல மலரும் கணங்கள் 8

அமிர்தவர்ஷினி
---------------------
8.
'கோதாவரி ஆத்தங்கரையில், சேலத்துக்குப் பக்கத்துலே இருக்கற ஊர்ப் பேரிலேயே தர்மபுரின்னு ஒரு புனித ஸ்தலம் இருக்கு.' என்று இரண்டு நாட்கள் கழித்துச் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷிணி.

கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.
'தர்மபுரியிலே கோதாவரி ஆத்தங்கரையில் இருக்கிற ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்.ஆயிரம் வருஷத்துக் கோவில்ன்னு சொல்றாங்க.அங்கே ஒரு ஐம்பது வயசிருக்கிற அம்மா, பத்து வயசிலே இருந்தே தங்கிட்டிருக்காங்க.பெரிசாக் குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு, எப்பவுமே மஞ்சப் புடவைதான் கட்டிட்டிருப்பாங்க.அவங்களைக் கோதாவரி அம்மான்னுதான் அந்த ஏரியாவிலே இருக்கிறவங்க எல்லாம் கூப்பிடறாங்க.ரொம்ப சக்தி வாய்ஞ்சவங்க.அவங்க கூட நான் ஒரு மூணு மாசம் தங்கியிருந்தேன்' என்றாள் அவள்.
என்னிடம் எதற்கு இதைச் சொல்கிறாள் என்பதைப் போல் நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அமிர்தவர்ஷிணி கோதாவரி அம்மாவின் மஞ்சள் புடவையை அதிகாலையில் இருந்து வெகுநேரம் துவைத்துக் கொண்டிருந்தாள்.
'அமிர்தவர்ஷிணி' என்றார்கள் கோதாவரி அம்மா அவளது அருகில் வந்து நின்று,அவளது பெயரை அம்மா எப்போதுமே முழுமையாகத்தான் கூப்பிடுவார்களாம்.
'இவவளவு நேரமாவா ஒரு புடவையைத் துவைச்சிட்டிருக்கே?' என்று கேட்டார்கள் அம்மா தெலுங்கில்.
'ஆமாம்மா! பாருங்க, உங்க புடவையிலே இருந்த எண்ணைக் கறை போயே போயிடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி,முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழிய.
பிரம்மாண்டமான அந்த நதியின் மறுபக்கத்தில், அதனுடைய குளுமையில் குளித்து விட்டு சூரியன் அப்போதுதான் உதித்துக் கொண்டிருக்கிறான்.

'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே?' என்றார்கள்,அம்மா.
அமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.
'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

கோதாவரி அம்மா அவ்வளவு சத்தம் போட்டுச் சிரித்ததை அதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
கண்ணில் நீர் வரச் சிரித்த அம்மா, அப்போது சொன்ன வார்த்தைகள்தான் இவை.
'உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்' என்ற அம்மா அவளது தலை மேல் கைவைத்து ஆசிர்வதித்துக் கண்களை மூடிய படியே சொன்னார்கள்.
'பெண்ணே,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும், இந்தக் கோதாவரி மாதிரியே.அந்தப் பாக்கியசாலிக்கும் சேர்த்து இந்த ஆசிர்வாதம்!' என்று சொல்லி விட்டு கோதாவரி அம்மா, நதியின் தண்ணீரைக் கைகளால் அள்ளி அவள் தலை மேல் தெளித்தார்கள்.
அமிர்தவர்ஷிணி இந்தச் சம்பவத்தைச் சொன்னதின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு திடீர்ன்னு ஒருநாள் டாக்டர்க சொல்றாங்க.இன்னொரு நாள் திடீர்ன்னு நீ வந்து, ஆஜ்மீர் பாபா,கோதாவரி அம்மா பேரை எல்லாம் சொல்லி நீ சாக மாட்டேன்னு சொல்றே.கெமோதெராபின்னு யாருக்குமே நடக்கக் கூடாத கொடுமையான சாபம் ஒரு நாள். அமிர்தவர்ஷிணின்னு யாருக்குமே கிடைக்க முடியாத வரம் இன்னொரு நாள்.யாரோ அவங்க கண்ணையும் கட்டிட்டு,என் கண்ணையும் கட்டிட்டு என் கூட ஃபுட்பால் விளையாடிட்டிருக்காங்க வர்ஷிணி.என்ன,காலே போனதுக்கப்புறம் நான் ஆடற ஃபுட்பால் மேட்ச்' என்றேன் சோர்வாக.

அவள் ஆதரவுடன் எனது கையைப் பற்றிக் கொண்டாள்.

'எதை நம்புறதுன்னே தெரியலே.எவ்வளவுதான் லைட் அடிச்சாலும் ரெண்டடிக்கு மேலே வெளிச்சம் தெரியாத நீளமான இருட்டுக் குகைக்குள்ளே நடந்துட்டிருக்கிற மாதிரி இருக்கு,எனக்கு.' என்றேன் நான்.
அவள் மெல்லச் சிரித்தாள்.
'ஏன் சிரிக்கிறே?'
'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'என்றாள் அவள்.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ சட்டென்று விழித்தாற்போலத் தெரிந்து மனமே லேசாகியது.அவளை இழுத்து எனது மார்போடு சாய்த்துக் கொண்டேன்.அவளது முகத்தை நிமிர்த்திச் சொன்னேன்.
'இப்போ இந்த ரெண்டடி வெளிச்சத்துலே நீ மாத்திரம்தான் தெரியறே,வர்ஷிணி' என்றேன் குரல் கனக்க.
எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.

'என்ன தைரியம் இருந்தா செத்துட்டிருக்கறவனை இப்படி லவ் பண்ணுவே?' என்றேன் அவளது முகத்தருகில்.
'நான் லவ் பண்றதே நீ சாகாமே இருக்குறுதுக்குத்தான்,முட்டாளே!' என்றாள் அவள் செல்லமாக.
அவளது உதடுகளில் முதன்முதலாக முத்தமிட்டேன்.
எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.
என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.
இதுவரை முத்தமிட்ட.இனிமேல் முத்தமிடப் போகும் கோடான கோடிக் கணக்கான முத்தங்களின் கடலில் எங்கள் முத்தமும் கலந்து, கரைந்தது.
மெல்ல விலகினோம்.
பிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.

அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அப்பா மதியம் வந்த போது அவரிடம் எங்களது காதலைச் சொன்னேன்.அவரிடம் நான் இதுவரை எதையுமே மறைத்ததில்லை.
சொன்ன போது எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் அப்பா.

'என்னப்பா சைலன்ட்டா இருக்கீங்க?உங்களுக்குப் பிடிக்கலியா?' என்று கேட்டேன் நான்.
அவர் என்னைக் கண்களின் ஈரத்தினூடே பார்த்தார்.

'வைட் செல் கௌன்ட் ஜாஸ்தி ஆயிட்டதினாலே அடுத்த வாரம் உனக்கு மறுபடியும் கெமோதெராபி ஆரம்பிக்கப் போறாராம் சீஃப் டாக்டர். கீழே என்னைப் பார்த்துட்டுச் சொன்னாரு.மே பி எ லிட்டில் பிட் ரிஸ்கியா இருக்கலாம்ன்னாருப்பா அவரு.'
மீண்டும் அதே இருட்டுக் குகை நீள ஆரம்பித்து விட்டது..

ஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.

அமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.

கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.

(தொடரும்)

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

காதல மலரும் கணங்கள் 7

அமிர்தவர்ஷினி
---------------------
7.
'இந்த அஞ்சு பேரு குடுத்த லவ் லெட்டர்ஸுக்கு என்ன பதில்ன்னு நீ சொல்லவே இல்லையே,வர்ஷிணி?' என்று அமிர்தவர்ஷிணியைக் கேட்டேன், எனது சுய இரக்கத்தின் அழுகையிலிருந்து மீண்டவுடன்.

'தேங்க்ஸுன்னு சொல்லி லெட்டர்ஸை எல்லாம் அவங்ககிட்டேயே திருப்பிக் குடுத்திடு,சரவணா' என்றாள் அவள் அமைதியாக.

ஏன் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

'இந்த மாதிரிப் பொண்ணுக வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இதே பொண்ணுதான் வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இவங்க எல்லாம் முதல் ரகம்.அதனாலேதான் லெட்டர்களைத் திருப்பிக் குடுக்கச் சொல்றேன்'என்றாள் அவள்.

'அவங்களை முதல் ரகம்ன்னு எப்படிச் சொல்றே?'
'பத்துப் பதினைஞ்சு நாள்ளே நீயே தெரிஞ்சுக்குவே!' என்றாள் அவள்.

அவள் சொன்னதைப் போலவே ஐந்து பேரில் மூன்று பேர் பதினைந்தே நாட்களில் தங்கள் கல்யாணப் பத்திரிகைகளைக் கொண்டு வந்து என்னிடம் தந்தார்கள்!

'எப்படி அவங்களைப் பத்தி இவ்வளவு கரக்டாச் சொன்னே,வர்ஷிணி?' என்று அவளிடம் கேட்டேன் நான், அவளிடம் அவர்களுடைய கல்யாணப் பத்திரிகைகளைக் காட்டி.

'சில பேருக்குள்ளே கல்யாண ஆசையைத் தூண்டி விடறதோட என் வேலை முடிஞ்சுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்,சரவணா' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

ஒருநாள் அவள் என்னிடம் சொன்ன தகவல்,வாழ்க்கைப் பாடத்தை அவள் எவ்வளவு ஆழமாக,அத்துபடியாகக் கற்று வைத்திருந்தாள் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

'இப்போ எல்லாம் என்ன சாப்பிட்டாலும்,நான் முந்தி மாதிரி வாந்தி எடுக்கறதில்லே,வர்ஷிணி'என்றேன் அவளிடம் ஒரு நாள் மாலை.
அன்று அவள் மாங்காயையும்,கேரட்டையும் பச்சையாகத் துருவிப் போட்டு பச்சைப் பயறு சுண்டல் கொண்டு வந்திருந்தாள்.நல்ல பசிக்கே வரும் ருசியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் தட்டில், இன்னும் சுண்டலை வைத்த படியே அவள் சொன்னாள்.

'ஏப்ரல்லே,நான் மும்பையில் ஒரு வைர வியாபாரி வீட்டுலே அவருக்கு உதவியா இருந்தேன்,சரவணா. நேமிசந்த்ன்னு பேரு.பெரிய கோடீஸ்வரன்.அவருக்கு கல்லீரல்லே புற்று நோய். டாக்டர் நிகொலஸ்ன்னு ,கேன்சர் ட்ரீட்மென்ட்லே ரொம்ப ஃபேமஸான அமெரிக்கன் டாக்டர் ஒருத்தர், அவருதான் நேமிசந்த் அய்யாவுக்கு கன்சல்டன்ட்..மாசத்துக்கு ஒருநாள் நேமிசந்த் அய்யாவை அட்டண்ட் பண்ரதுக்காகவே வாஷிங்டன்லே இருந்து டாக்டர் நிகொலஸ் வருவாரு.அப்போ அந்த டாக்டர் சொன்னது இன்னும் எனக்கு நல்லா ஞாபகத்துலே இருக்கு.என்னாலே மறக்கவே முடியாது.

'என்ன சொன்னார் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு.அது நம்ம மேலே முழுக்கச் சாஞ்சு,நசுக்கிடாமே தாங்கிப் பிடிச்சுட்டிருக்கிறது நம்ம நம்பிக்கைகளும்,ஆசைகளும்தான்.தீராத வியாதின்னு தெரிஞ்சவுடனே நோயாளி முதல்லே இழக்கறது அவனுடைய நம்பிக்கையைத்தான்.நம்பிக்கை போனவுடனே ஆசைகளும் அத்துப் போயிடுது.நோயாளிக்கு முன்னாலே சாகறது அவனோட ஆசைகளும்,நம்பிக்கையுந்தான்.அதனாலே அதைச் சாக விடாமே பார்த்துகிட்டாலே எந்த நோய்கிட்டே இருந்தும் தப்பிச்சுக்கலாம்பாரு அந்த டாக்டர்.'

அவள் சொன்னதில் இருந்த உண்மையை எனக்குள்ளேயே உணர்ந்து பார்த்தேன்.சரி என்பதைப் போலத்தான் தோன்றியது.

'இதை நீ குழந்தைககிட்டே இருந்துதான் கத்துக்க முடியும்பாரு அந்த டாக்டர்,சரவணா.குழந்தைகளைப் பாரு.எல்லாத்தையும் நம்பும்.எல்லாத்துக்கும் ஆசைப் படும்.அதனாலே அதுகளுக்கு வர்ர வியாதிகள் கிட்டே இருந்து அதனாலே சீக்கிரம் மீண்டுட முடியுது.நோயிலேயே பெரிய நோய், இதிலிருந்து மீள முடியுமாங்கிற சந்தேகந்தான்!'என்றாள் அவள்.

'புரியுது' என்றேன்.
அவள் எனக்கு முதல் நாள் தலைமாட்டில் வைத்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியின் சூட்சுமம் புரிந்தது.சரிந்து போயிருந்த எனது நம்பிக்கையை, முதலில் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற அவளது முயற்சியே அது.

கால கட்டத்துக்கும்,சமூகச் சூழலுக்கும் தகுந்த மாதிரி, நம்பிக்கை விதைகளை மனிதர்களுக்கு மத்தியில் தூவி வரும் ஞானிகளின் உளவியல் தந்திரமும் புரிந்தது.

'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்' என்று இன்னொரு நாள் அமிர்தவர்ஷிணி சொல்லி இருக்கிறாள்.

' நான் பார்க்கிற பத்தாவது கேன்ஸர் பேஷண்ட்,சரவணா நீ. உன்னை மாதிரியே நம்பிக்கை வளர,வளர அவங்க தேறிட்டே வந்ததை நான் என் கண் கூடப் பார்த்திருக்கேன்'

'நீ எனக்குத் துணையா வந்ததுக்கு அந்தக் கடவுளுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும்'என்றேன் நான்.

'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'என்றாள் அவள் புன்னகையுடன்.

மாத விலக்கான மூன்று நாட்களுக்கு அமிர்தவர்ஷிணி என்னைப் பார்க்க வரவில்லை.அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும்,வண்ணப் படமாகத் தெரிந்து கொண்டிருந்த உலகம், திடீரெனக் கறுப்பு வெள்ளைப் படம் போலத் தெரிந்தது எனக்கு.
ஒரு பெண்,ஒரு ஆணின் மனதுக்குள் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடியும் என்பதை எனக்குள்ளேயே நான் பார்த்த போது,நானே எனக்குப் பேரதிசயமானேன்.
கோளாறான புரஜக்டரைப் போல மனம் அவளது பிம்பங்களையே திருப்பித், திருப்பிச் சலிக்காமல் போட்டுக் கொண்டிருந்தது.
புன்னகையாலேயே செய்ததைப் போன்ற அவளது உதடுகள்,நாம் கண்களை மூடினாலும் நம் மூடிய கண்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருக்கும் அவளது விழிகள்,கிடைக்காதா என்ற ஏக்கத்தையும்,கிடைத்தால் என்ன செய்வதென்று தெரியாத பரவசத்தையும் ஒருசேர வழங்கும் அவளது அழகிய உடல்...

மூன்று நாட்கள் கழிவதற்கு மூன்று ஜென்மங்களாக, நான்காம் நாள் மாலை அமிர்தவர்ஷிணி வந்தாள்.கறுப்பு ஜீன்ஸ்,மேலே வெள்ளை டி.ஷர்ட்.கழுத்தில் ஏதோ ரூபி மணிமாலை.
உலர்ந்த கருங் கூந்தலை அவள் தளர்வாக விட்டிருந்தது, நமது மனதை இறுக்கி முறுக்கவே என்று தோன்றியது.

'எப்படி இருக்கே சரவணா?' என்றாள் அவள்,புன்னகையுடன்.

முள் ஏறிய காலைக் கல்லில் தேய்த்தாற் போல ஒரு இதமான வலிதான் காதல் என்றால், அது பெருமழையாய் என்னுள் கொட்டிக் கொண்டிருந்தது.

எனது கனத்த மௌனமே எனக்காக அவளுடன் பேசியது.

பல நிமிடங்கள் இந்த உலகத்தைப் பற்றிப் பேசி விட்டு, மெல்ல எங்கள் உலகத்துக்குப் போனோம்.

அப்போதுதான் நேற்று இரவு அவள் கண்ட கனவை எனக்குச் சொன்னாள் அவள்.

அவளுடைய தாய்,தந்தையைப் பறிகொடுத்த அதே ரிஷிகேஷ் கங்கையின் படித்துறையில் நானும் அவளும் நீராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அடிவானம் வரை யாருமற்றுக், கங்கை மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் பூமியில் நானும் அவளும் மட்டுமே.
வெறுமனே ஒரு வெள்ளைக் காட்டன் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்த அவளது புடவை சற்றே விலகி,அவளது மேனியின் வெண்மையைப் பறை சாற்ற, எனது கவனம் மாறியதைக் கண்ட அவள், கங்கையின் பனி நீரை என் மேல் விளையாட்டாக எறிய,வழுக்கி விழுந்தவன் போல ஏமாற்ற நினைத்தவன் உண்மையில் வழுக்கி விழுந்து கங்கையின் பிரவாகத்தில் கலந்து விட்டேன். அவள் தாய் தந்தையை அடித்துக் கொண்டு போன கங்கை என்னையும் அடித்துக் கொண்டு போவதைப் பார்த்த அமிர்தவர்ஷிணி பதறிப் போனாள்.

'சரவணா' என்று கத்திக் கொண்டு அவளும் நீரில் பாய்ந்து விட்டாள்.சில நிமிடங்களில் எனது பாதங்களைப் பற்றியவள் வெறியுடன் நீந்தி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள இருவரையுமே கங்கை அடித்துக் கொண்டு போனது.

சற்றுக் கழித்து அவள் மட்டுமே கண் விழித்துப் பார்க்க, கங்கைக் கரையின் ஒரு பச்சைப் புல்தரையில் அவள் மட்டுமே தனியாக ஒதுங்கிக் கிடக்க, என்னைத் தனது உயிரையே தேடுவதைப் போல அவள் தேடுகிறாள். பத்தடி தொலைவில் நான் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து எழுந்து ஓடி வருகிறாள்.என் மேல் அமர்ந்து எனது நெஞ்சைக் குத்துகிறாள்.சில நொடிகளில் அவளது தீவிர முயற்சியினால் நான் குடித்த கங்கை நீரெல்லாம் மூக்கு,வாய் வழியே வெளியேற நான் மெல்லக் கண் விழித்து என் மேல் அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன்.

எனக்கு உயிர் வந்ததைப் பார்த்ததும்தான் அவளுக்கு உயிரே வருகிறது.

மெல்ல எனது பார்வை அவளது கழுத்துக்குக் கீழே சென்றதும்தான், கங்கை அவளது மேலாடை முழுதையுமே கலைத்து அவளைத், துணிகளற்ற வெற்று மார்புகளுடனே என் மேல் அமர வைத்திருக்கிறது என்பதை உணர்கிறாள்,அமிர்தவர்ஷிணி.

இதற்கு மேல் மலரவே மாட்டேன் என்று வரம் வாங்கிக் கொண்டு வந்த தாமரை மொட்டுக்களைப் போன்ற அவளது இளம் மார்புகள், கங்கை நீர் சொட்டச் சொட்ட எனது உயிருக்கு உற்சாகமூட்டிக் கொண்டு நின்றன.

எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதை விடப்,பார்க்கப் படாமலிருக்கும் போது அதிகம் வாதித்தன அந்தப் பெண் மார்புகள்.

கனவைச் சொல்லி விட்டுத் தலைகுனிந்து அமர்ந்திருந்த அமிர்தவர்ஷிணியை எனது குரல்தான் நிமிர்த்தியது.

'வர்ஷிணி'

அவள் சிரமப் பட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

'நான் ஒண்ணு சொன்னா நம்புவியா?' '?'

'நேத்து ராத்திரி எனக்கும் இதே கனவு வந்துச்சு!'

நான் இதைச் சொல்லி முடித்ததும்தான் தாமதம், அழுதபடியே ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்,அமிர்தவர்ஷிணி.

(தொடரும்)