செவ்வாய், செப்டம்பர் 15, 2009

காதல மலர்ந்த கணங்கள்

ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறேன்,நான்.
ஒரு கலந்துரையாடல் தொடர்,ஒரு விளையாட்டுத் தொடர்,ஒரு வாழ்க்கைத் தொடர் இப்படி மூன்று தொடர்களை உருவாக்கி ஏற்கனவே பெரும் பரபரப்பையும்,புகழையும் பெற்றிருந்த நான், நான்காவதாக உருவாக்கிய 'காதல் மலர்ந்த கணங்கள்' என்ற உண்மைக் காதல் சம்பவங்களின் தொடர்தான் என்னைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நூற்றுக்கணக்கான உண்மைக் காதலர்களைப் பேட்டி கண்டு, வாழ்க்கையில் முதன் முதலாக அவர்கள் மனதில் காதல் மலர்ந்த கணங்களைத் தொடராக்கிப், பின்னர் உண்மைக் காதலர்களை நேயர்களுக்கு நேருக்கு நேர் அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி அது.

மக்கள் மனங்களைக்,குறிப்பாக இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட அந்த நிகழ்ச்சியில் பெரிதும் வரவேற்பினைப் பெற்ற ஐந்து தொடர்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி
---------------------

நெஞ்சே,அமைதியாக இரு.
பிரிகின்ற நேரம் இனிமையாக இருக்கட்டும்.
அது மரணமாக இருக்க வேண்டாம்,நிறைவாக இருக்கட்டும்.
காதல், நினைவுகளாகவும்,வலி, கீதங்களாகவும் உருகட்டும்.
வானம் முழுக்கப் பறந்தது, கூட்டில் வந்து சிறகுகள் மடங்குவதாக இருக்கட்டும்.
இரவுப் பூக்களைப் போல மென்மையாக, உனது விரல்கள் என்னைக் கடைசி முறையாகத் தொடட்டும்.
அழகிய முடிவே,ஒரு கணம் ஆடாமல் அசையாமல் நின்று உனது இறுதி வார்த்தைகளை மௌனமாகச் சொல்.
உன்னைப் பணிந்து வணங்குகிறேன்.
உனது வழியெல்லாம் ஒளிதுலங்க, நான் எனது விளக்கினை ஏந்தி வருகிறேன்...
-ரவீந்திரநாத் தாகூர்.

எனது பெயர் சரவணகுமார்.
23 வயது முடிந்து எனது 24 வயதை, இன்றுதான் அப்பா ஆசையுடன் வாங்கி வந்த பிறந்த நாள் கேக்கை வெட்டிக் கொண்டாடுகிறேன்.என் வீட்டில் சுற்றிலும் நண்பர்கள் பட்டாளம்.ஒரே ஆரவாரம்.அமர்க்களம்.முதல் வாய்க் கேக்கை நான் அப்பாவுக்கு ஊட்டிவிட மகிழ்ச்சியுடன் அவர் எனக்குக் கேக்கை ஊட்டி விட்டார்.கேக்கை விழுங்கியதும் சில நிமிடங்களிலேயே வாஷ் பேசினுக்கு ஓடிச் சென்று வாந்தி எடுத்தேன்.

வெண்பனி போல் நான் சாப்பிட்ட ஸ்ட்ராபெரி கேக், செர்ரிப் பழ நிறத்தில் ரத்தத்துடன் வெளியே வந்தது.அப்போது நான் அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வாழ்க்கையின் முதல் அறியாமையே நம் மரணத்தைப் பற்றித்தான் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

அலட்டிக் கொள்ளாமல் வாயைக் கழுவிக் கொண்டு,பாத்ரூமிலிருந்து வெளியே வந்து நண்பர்கள்,அப்பாவின் உற்சாகத்தில் கலந்து கொண்டேன்.ஒரு மணி நேரம் கழித்து நண்பர்கள் நாங்கள் ஐந்து பேரும் பைக்குகளில் பாண்டிச்சேரி செல்வதாகத் திட்டம் போட்டிருந்தோம்.என்னுடைய பிறந்த நாள் பரிசாக நான் நண்பர்களுக்குக் கொடுக்கும் ட்ரீட் இது. அப்பா ஹோட்டலில் வாங்கி வைத்திருந்த இனிப்பையும்,பொங்கலையும் ஒப்புக்குச் சாப்பிட்டு விட்டு நாங்கள் பாண்டிச்சேரிக்குப் பறந்தோம்.

எனது அம்மா நான் மூன்று வயதாக இருக்கும் போதே அப்பாவுடன் கோவிலுக்குச் சென்ற போது பைக் விபத்தில் இறந்து விட்டாள்.இன்றும் அந்தி நேரத் தனிமைகளில் அப்பா கண்களை மூடிக் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பது அம்மாவின் ஞாபகத்திலதான் என்று எனக்குத் தெரியும்.நான் அப்படியே அம்மாவின் ரோஜா நிறத்தில் அவளது கலர் செராக்ஸ் ஆக இருப்பதினால் அப்பாவுக்கு என் மேல் அதீத அன்பு.

அவருக்கு, அம்மாவின் நினைவுச் சின்னமே நான்தான்.

பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு 'வர்ரேன்பா' என்று அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.'ஜாக்கிரதை,சரவணா' என்று அவர் சொன்ன போது அவரது கண்களில் ஈரம் தெரிந்தது.அம்மாவைப் பைக் விபத்தில் இழந்தபின் அவர் பைக்கைத் தொடுவதே இல்லை.

ஐந்து பைக்குகள்.இளமைக்குப் பெட்ரோலும் ஊற்றிப் பற்ற வைத்து விட்டால் எப்படி இருக்கும்?
100க்குக் குறையாமல் எங்கள் பைக்குகள் விரைந்தன.போகும் வழியில் மூன்று பஸ்கள்,நான்கு லாரிகள்,ஒரு கார் இவற்றுக்கு எங்கள் உடல்களைத் தாரை வார்த்திருப்போம்.மயிரிழையில் மரணங்களைத் தவிர்த்து விட்ட சிரிப்புடன் 'ஹோய்' என்று கத்திக் கொண்டே பறந்தோம்.

மணக்குளம் விநாயகர் கோவிலில் கிண்டல்கள் நிறைந்த பிரார்த்தனைகளுடன் எங்கள் பாண்டிச்சேரி உல்லாசம் தொடங்கியது.பீரும்,பெட்ரோலும் கரை புரளக் கடற்கரை,ஆரோவில் என்றெல்லாம் சுற்றி அலைந்தோம்.அம்மாவின் சந்நிதியில் ஒரு காலை நேரத்தில் மலர்களை வைக்கும் போது மட்டும் சற்றே அமைதியுடன் இருந்தோம்.அப்பாவின் மகிழ்ச்சிக்காக மனப் பூர்வமாக வேண்டிக் கொண்டேன்.

அன்று மாலை பாண்டிச்சேரிக் கடற்கரையில் இரண்டே நாளில் இரண்டாம் முறையாக வாந்தி எடுத்தேன்.

பீர் நுரையுடன் ரத்தமும் வந்த போது நண்பர்கள் பதறிப் போனார்கள்.அப்போதே மருத்துவ மனைக்குப் போகலாம் என்றவர்களை நான்தான் இது ஒரு சின்ன விஷயம் என்று அடக்கி விட்டேன்.அந்த நேரம் பார்த்து வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களைக் கடந்து போனாள்.17,18வயதுதானிருக்கும்,அவளுக்கு.சடாரென நெஞ்சில் அறைவதைப் போல அப்படி ஒரு அழகு, அவளுக்கு.
அவளையே என்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த என்னை நண்பர்கள்தான் இந்த பூமிக்கு மீண்டும் அழைத்து வந்தார்கள்.
'டேய்,சரவணா,என்னாச்சுடா உனக்கு?'என்றான் ஹசன்.
'தொட்டாக் கரைஞ்சுடுவா போலே இருக்கேடா!' என்றேன் மெய்மறந்து.இல்லை,பார்த்தாலே கரைந்து விடுவாளோ என்று பின்னால் திருத்தத் தோன்றியது.

ஹோட்டல் அறையில் அன்று இரவு முதன் முறையாக நண்பர்கள் அனைவரும் விஸ்கி சாப்பிட்டோம். அந்த ஹோட்டலில் டாப்லெஸ் நடனம் வேறு இருந்தது.இரண்டு பெக்குகளுக்குப் பிறகு அங்கே சென்றோம்.

நாங்கள் அனைவருமே பெண்மார்புகளுக்குப் புதிது.

முதன் முறையாக ஆடைகள் அற்ற வெற்று மார்புகளைப் பார்க்கப் போகிறோம் என்ற பரவசத்தில், விஸ்கி கொத்திய விஷம் இன்னும் பரபரவென்று உடம்புக்குள் மேலே மேலே ஏறிக் கொண்டிருந்தது..அரைகுறை உடைகளுடன் அந்தப் பெண் ஆட,ஆட மனதுக்குள் இருந்த பூதங்களுக்கு யாரோ தீ வைத்து விட்டார்கள்.உடம்பு ராட்சசத் தனமாக வளர்ந்து கொண்டே போவதைப் போல உணர்ந்தோம்.

நடனமாடிய அந்த இளம் பெண் கடைசி மேல் துணியை அவிழ்த்து எறிந்ததுமே எங்கள் எல்லோருக்குமே அடிவயிற்றில் விர்ரென்று ஒரு சக்கரம் படுவேகமாகச் சுற்ற ஆரம்பித்தது. கல்லூரியில் என்றோ யோகா வகுப்பில் உடம்பில் பல இடங்களில் சக்கரங்கள் சுழலும் என்று சொன்னது உண்மைதான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு தீ உடம்பு முழுதும் பரவிய தணலில் காய்ச்சல் வந்தவர்களைப் போல ஆனோம்.

பெண்ணுடலில்,அங்கங்களின் ராணி என்று மார்புகளையே சொல்லலாம் என்று தோன்றியது.

அந்தப் பெண்ணின் மேலுடம்பைத் தாண்டி அவள் முகத்தைப் பார்க்கவே எங்களுக்குப் பல நிமிடங்கள் ஆகின.ஆடிக் கொண்டிருந்த அவளது வேர்த்து வழிந்த முகம் சாலையோரத்தில் விற்கும் பிளாஸ்டிக் பூவைப் போல அழகாகவே இருந்தது.அதில் ஏனோ தானோ என்ற ஒரு நிரந்தரப் புன்னகை.

அறைக்குத் திரும்பியவுடன் ஆளாளுக்கு மீண்டும் விஸ்கியை ஊற்றிக் கொண்டதும்தான் செலவழிந்த உணர்ச்சிகள் மீண்டும் உயிர் பெற்றன.
'பெண் அங்கங்களின் ராணி'யை முதன் முதலாகப் பார்த்த அனுபவத்தை ஆளாளுக்கு ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்று நான் தொடங்கியதும் நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக ஆரம்பித்தனர்.

'வயர்லெஸ்.ஆனா இன்னும் ஷாக் அடிச்சுகிட்டே இருக்கு!' என்றான் ஹசன்.
'ஒரு பொண்ணு மூலமா உலகத்துப் பொண்ணுகளை எல்லாம் பார்த்துட்டேன்!'என்றான் மணி.
'அவ இப்படியே ரோட்டுலே நடந்து போனா பாண்டிச்சேரியிலே பார்களே தேவை இல்லே!எல்லாத்தையும் இழுத்து மூடிடலாம்!'என்றான் ஃபிலிப் தாமஸ்.
'தொட்டுப் பார்க்காமே என்னாலே எதையும் முழுசாச் சொல்ல முடியாது!'என்றான் ராகவன்.
எல்லாரும் கடைசியாக என்னைப் பார்த்தார்கள்.
'ஆம்பளைப் பையன்னா என்ன அர்த்தம்ன்னு ஒரு பொண்ணுதாண்டா சொல்லித் தர முடியும்!'என்றேன் நான்.

நான்காம் நாள் காலை எல்லோரும் மயிலம் முருகன் கோவில் வழியாகச் சென்னை திரும்பினோம்.
என்னால் கோவில் படிக்கட்டுக்கள் ஏற முடியவில்லை.திடீரென மூச்சுத் திணறியது.ஹசனும்,தாமஸும் என்னுடன் இருந்து கொள்ள மணியும்,ராகவனும் மட்டும் கோவிலுக்குச் சென்றார்கள்.
முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.

(தொடரும்)

21 கருத்துகள்:

  1. அடுத்த பாகத்திற்கு ஆவலோடு வெயிட்டிங் சார்.

    பதிலளிநீக்கு
  2. சார் ரொம்ப நல்லா வந்து இருக்கு ஒரு மெல்லிய சோகத்தோடு..அடுத்த பதிவு விரைவில் எதிர்ப்பார்கிறேன்.
    (கன்னிகா என்ன ஆனால்..!!)

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஆரம்பம் சார்! இதே... தீமில், பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியிருக்கார். படிச்சிருக்கீங்களா? அடுத்த பகுதிகளுக்கு வெய்ட்டிங்!!

    பதிலளிநீக்கு
  4. \\நினைத்துக் கொண்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு தீ உடம்பு முழுதும் பரவிய தணலில் காய்ச்சல் வந்தவர்களைப் போல ஆனோம்.

    பெண்ணுடலில்,அங்கங்களின் ராணி என்று மார்புகளையே சொல்லலாம் என்று தோன்றியது.

    'ஆம்பளைப் பையன்னா என்ன அர்த்தம்ன்னு ஒரு பொண்ணுதாண்டா சொல்லித் தர முடியும்!\\

    கலைத்துறையின் வெற்றியின் ரகசியம், வார்த்தைகளில் கொண்டு வரமுடியாததை, வார்த்தைகளில் கொண்டு வருவது.,
    இது தங்களிடம் இயல்பாக வருகிறது.,

    வாழ்த்துக்கள் அன்புச்சகோதரரே :))

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா!!
    அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்....

    பதிலளிநீக்கு
  6. பாண்டி டாப்லெஸ் வர்ணனைகள் அருமை.. அதைவிட அவர்கள் விவரித்த விதம் சூப்பர்.. முன்னமே ஒரு தொடர் ஆரம்பித்தீர்களே அது என்ன ஆயிற்று சார்..?

    பதிலளிநீக்கு
  7. அய்யா,
    காதல மலர்ந்த கணங்கள்,பெயரை படித்ததுமே கொண்டாட்டமாயிருந்தது.
    நல்ல ஃபார்மில் புகுந்து புறப்பட்டிருக்கிறீர்கள்.
    வார்த்தை ஜால்ங்கள் அருமை.
    "
    பெண்ணுடலில்,அங்கங்களின் ராணி என்று மார்புகளையே சொல்லலாம் என்று தோன்றியது."


    இந்த வரி அனைவரையும் கலக்கி இருக்கும்.

    'ஆம்பளைப் பையன்னா என்ன அர்த்தம்ன்னு ஒரு பொண்ணுதாண்டா சொல்லித் தர முடியும்!'என்றேன் நான்.
    நிஜம் தான்..
    அதுக்காகத்தானே அய்யா இத்தனை ஆர்ப்பாட்டமும்

    நாங்கள் பேச்சிலர் காலத்தில் பாண்டி மார்ஸ் ஒட்டல் சென்று தங்கி பார்த்த நோஸ்டால்ஜியாக்கள் நினைவுக்கு வந்தது.

    அருமையாய் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  8. Sorry.... forgot to mention the title:


    Inithu.. Inithu... Kaadhal Inithu!!!!!

    பதிலளிநீக்கு
  9. மாஸ் ஓட்டலுக்கு மாஸா போய் இருக்காங்க போல் ( என்ன கார்த்திக் ) ...

    உங்க டிரேட் மார்க் வர்ணனைகள் .. கதை சூப்பர்

    பதிலளிநீக்கு
  10. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். ரத்தம் வாந்தின்னு வேற பயமுறுத்தீட்டீங்க

    பதிலளிநீக்கு
  11. கதை இயல்பா நகருது.. நல்லா சொல்லியிருக்கீங்க சார்..

    பதிலளிநீக்கு
  12. ஆகா! அசத்தல் தொடர் ஆரம்பம்.
    //
    'ஆம்பளைப் பையன்னா என்ன அர்த்தம்ன்னு ஒரு பொண்ணுதாண்டா சொல்லித் தர முடியும்!
    //
    இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  13. //முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.//

    நல்லாயிருக்கு அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கும் வேகம் இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  14. சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு