ஞாயிறு, மார்ச் 01, 2009

எங்கள் ஊரில் சாவு ஒரு பிரச்சினையே இல்லை.

1.
எங்கள் ஊரில் சாவு ஒரு பிரச்சினையே இல்லை.சாவை விட மாபெரும் பிரச்சினையே செத்தவர்களை அடக்கம் பண்ணுவதுதான்.ஏனெனில் எங்கள் ஊருக்கென்று தனிச் சுடு காடு இல்லை.
ஊரிலிருந்து பத்துக் கிலோ மீட்டர் தள்ளி,வெள்ளாங் கோவில் கிட்டே இருக்கிறது சுடுகாடு.வெயில் காலமானலும் சரி மழைக் காலமானாலும் சரி சடலத்தைப் பத்துக் கிலோ மீட்டர் எடுத்துச் சென்று அடக்கம் பண்ணுவதற்குள்,செத்தவர்களை விட உயிரோடு இருப்பவர்கள் செத்துச் சுண்ணாம்பாகி விடுகிறோம்.அதுவும் இளைஞர்கள் ஆன எங்கள்தலையில்தான் பிணம் சுமக்கும் வேலை சுமத்தப் படும்.
இடுகாட்டுக்குச் செல்லும் பத்துக் கிலோ மீட்டர் சாலையும் பாதி தூரம் ஒரே கல்லும் சரளையும் முள்ளும்தான்.மூன்று சாவுக்கொரு முறை நாங்கள் புதுச் செருப்பு வாங்கியே தீர வேண்டும்.ஊரில் யார் வீட்டில் சாவு என்றாலும் நாங்கள் அன்று தறிப் பட்டறை வேலைக்கும் போக முடியாது.
ஊரில் இருபதிலிருந்து இருபத்தைந்து வரை நாங்கள்மொத்தம் பத்துப் பதினைந்து பேர்தான் இருப்போம்.அதனால் சுடுகாட்டு முறை என்று வைத்துக் கொண்டாலும்,சமயங்களில் அடுத்தடுத்து நாங்கள் காதலிக்கும் பெண்களின் வீடுகளாகப் பார்த்து சாவு விழுந்து விடும்.அவர்கள்அழும் போது சம்பந்தப் பட்ட விடலைப் பையன்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
எங்கள் ஊரில் நிறையக் கல்யாணங்கள் ஊர்க் காரர்கள் செத்துப் போய்ச் சேர்ந்த சொர்க்கத்திலதான் நிச்சயிக்கப் படுகிறது.

அது மட்டுமல்ல,வெள்ளாங் கோவில் போகும் வரையில் வழி நெடுக ஏகப் பட்ட தடைகள்.இடைஞ்சல்கள்.தொந்திரவுகள்.சண்டை சச்சரவுகள்.பிணம் போகும் வழியில் வேறு ஏதாவது ஊரில் கல்யாணம் காட்சி என்றால்,மாப்பிள்ளை ஊர்வலம் முடியும் வரை நாங்கள் பிணத்தோடு காத்திருக்க வேண்டும்.வெளியே எங்கும் சாப்பிடவும் கூடாது.வெறும் டீயோடு சரி.கல்யாண ஊர்வலம் போகிறவர்கள் சும்மாவும் போக மாட்டார்கள்.கிண்டலடித்துக்கொண்டே போவார்கள்.
'ஏண்டா உங்க ஊர்லே யாரும் நல்லப் பொளைக்கவே மாட்டீங்களா?எப்போ எது ஒரு நல்ல காரியம் நடக்கும் போதும், குறுக்காலே ஒரு பொணத்தைத் தூக்கிட்டு வந்திடறீங்க?' என்பான் யாராவது ஒரு கல்யாண வீட்டுக்காரன் 'மப்'பில்.கல்யாண வீட்டுப் பெண்களும் அதைக் கேட்டு ஏதோ பெரிய காமெடி போலச் சிரிப்பார்கள் அப்போதுதான் எங்களுக்குப் பொத்துக் கொண்டு வரும்.
'ஆமாய்யா.நாங்க பெருமா நல்லூர்ச் சந்தையிலே இருந்து ரூபாய்க்கு மூணுன்னு பொணத்தை வாங்கிட்டு வர்ரோம்!' என்போம் நாங்கள்.
'எங்க ஊர்லே எல்லாம் நீயெல்லாம் உயிரோட இருக்கேன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்கய்யா.ஊருக்கும் ஒலகத்துக்கும் பாரமா இருக்கிற இதையெல்லாம் கொண்டு போய்ப் பொதைச்சுட்டு வந்து மறுகாரியம் பாருங்கடா, தம்பிகளான்னு சொல்லிடுவாங்க'

'டேய்' என்று சண்டை ஆரம்பித்து விடும்.கல்யாண வீடென்றால் பிரச்சினை சீக்கிரம் முடிந்து விடும்.ஆனால் வழியில் ஏதாவது கோவில் உற்சவம்,என்றால்,எங்கள் பிணம் தாண்ட விடிந்து விடும்.ஏனென்றால் தெய்வத்தோடு எங்களால் சண்டை போட முடியாதென,எல்லா மனிதர்களுக்கும் தெரியும்.

தெய்வங்களுக்கு மனிதர்களின் பிணங்கள் மட்டும் ஆகாதென்று யார்தான் வகுத்து வைத்தார்களோ,அவர்களுக்குச் சாவு உடனடியாக வர வேண்டும் என நாங்கள் எல்லோருமே வேண்டிக் கொள்வோம்.வழியில் இருக்கும் கோவில் பண்டிகைகளின் போது,நாங்கள் நெடு நேரம் பிணத்தோடு உட்கார்ந்திருக்க வேண்டும்.அப்போதுதான் கோவில்களில் நடக்கும்,கதை,நாடகம்,கூத்து,ஏதோ உபன்யாசம் என்று கூறுகிறார்களே அது,எல்லாமே யார் யாரோ பிரபலமான பெரிய மனிதர்கள் மூன்று,நான்கு மணி நேரம் திருப்பித் திருப்பிச் சொல்வதைக் கேட்க வேண்டியிருக்கும்.மரணத்தைப் பற்றிச் சுலபமாக அத்தனை நேரம் பேசி விட்டு அவர்கள் காரில்,சென்ற பின்,நாங்கள் பிணமாகக் கிடக்கும் அதே மரணத்தைத் தூக்கிக் கொண்டு பத்துக் கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

இந்தக் கொடுமையை நாங்கள் சீக்கிரமே முடித்து விட வேண்டுமென எண்ணியே நாங்கள் அரசாங்கத்தைப் பல வழிகளில் அணுகினோம்.தேர்தல் புறக்கணிப்பு, சாலை மறியல்,ரேஷன் கார்டுகளைக் கலெக்டரிடம் ஒப்படைத்தல் எனப் பல வழிகளில் போராடிய பின்னரே எங்கள்சுடுகாட்டுப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்தது மாதிரி தெரிந்தது.அரசுத் தரப்பில் ஹெல்த் ஆஃபிசரே, சுடுகாடு ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க முடியும் என்று கடைசி,கடைசியாக எங்களுக்குச் சொல்லப் பட்டது.
ஒரு குழந்தை புதிதாகப் பிறந்தால் என்ன கொண்டாட்டமோ, அதை விட மீறின மகிழ்ச்சியாக எங்களுக்கென்று ஒரு சுடுகாடு என்று கேள்விப் பட்ட போது கிராமமே அதனைக் கொண்டாடியது.
'மச்சான்,மாமா,பெரிசு, இனி நீ அக்கடான்னு மண்டையைப் போடலாம்பா' என்று வயதான கிழங்கட்டைகளெல்லாம் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல வரப் போகும் மரண நாளைக் கொண்டாடினார்கள்.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த புறம் போக்கு நிலத்தை,அரசாங்க ஜீப்பில் வந்து மக்கள் நல அலுவலர் (அந்தப் பதவியின் பேரெல்லாம், எங்களுக்குத் தெளிவாக விளங்கவில்லை) 'இதுதான் உங்கள் சுடு காடு ' எனக் கைகாட்டி விட்டுப் போனார்.

போகும் முன்னால் ஒரு குண்டையும் தூக்கிப் போட்டு விட்டுப் போனார்.'நடந்து முடிஞ்ச தேர்தல் ரிசல்ட் தெரியறதுக்குள்ளே, நீங்க இந்த இடத்தை சுடுகாடுன்னு ஆக்கிரமிச்சுடணும்.இல்லாங் காட்டி புதுக் கட்சிக்காரனுவ வந்தா,இந்தப் பொறம்போக்கு நிலத்தை அவனுக கட்சிக் கட்டிடம் அது இதுன்னு வளச்சுப் போட்டுட்டு,ப்ளாட்டுப் போட்டு வித்துடலாம்னு பேசிட்டிருக்கானுவ,அதையும் உங்க கிட்டே சொல்லிப்புட்டேன்.' என்று அந்த அரசு அலுவலர் கிசுகிசுத்ததும் நாங்கள் ஆடிப் போய் விட்டோம்.

இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகப் போகின்றன.அதற்குள்நாங்கள் எப்படி...புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது அதுவும் சுடு காடென்று?அதற்கும் அந்த நல்ல மனம் கொண்ட ஆஃபிசரே வழி சொன்னார்.
'இன்னும் ஒரு வாரம் இருக்குள்ளே..அதுக்குள்ளே இங்கே ஒரு உங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க யாராச்சும் இறந்தா,அவஙக பொணத்தை இங்கே பொதைச்சிடுங்க! அரசாங்கத்துனாலே ஒதுக்கப் பட்ட இடத்துலே ஒரு தடவை பொணத்தைப் பொதைச்சுட்டோம்னா,அதுக்கப்புறம் எந்தக் கொம்பனாலேயும் அந்த இடத்தை வேறொரு காரியத்துக்குக் கேக்க முடியாது.அது பரம்பரைக்கும் சுடு காடுதான்!இதுதான் சட்டம். இந்தாங்க புடிங்க சர்டிஃபிகேட்டை!' என்று ஒரு மக்கிப் பேப்பரைக் கொடுத்து விட்டு அவர் ஜீப்பில் பறந்து விட்டார்.
இப்போது எங்கள் கிராமத்துக்குத் தேவை ஒரு வாரத்துக்குள் ஒரு சாவு!.ஒரு பிணம்.!!
2.

இளம் வட்டங்களாகிய நாங்கள் அதற்குப் பிறகு எங்கள் ஊரில் அலைந்ததைப் போலப் பிணந்திண்ணிக் கழுகுகள் கூட மனிதப் பிணத்துக்காக அலைந்திருக்க முடியாது.
முதலில் எங்களுக்கு இந்த விஷயத்தில் உதவப் போகும், 'ஆண்டவன் எப்போ என்னைக் கொண்டு போகப் போறானோ?' என்று தினமும் பத்துத் தடவையாவது பார்க்கிறவர்கள் அனைவரிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் கிழங், கட்டைகள் பட்டியலைப் போட்டோம்.

ஆஸ்த்மாவில் விடிய,விடிய இருமிக் கொண்டு மூச்சே அடைத்தாற் போல இருமிக் கொண்டிருக்கும் எண்பது வயதுப் பெரிசான கலியமூர்த்தி தாத்தா,முதுகெலும்பு தேய்ந்து போன வட்டி கந்தசாமி,வண்டிக்கார ஆறுமுகம்,எழுபத்தேழு வயசான நாகரத்ன அம்மாள்,பம்ப்செட் ராமசாமி,வாதம் செல்லமாள்,அப்பத்தா,அப்பிச்சி, இப்படி பதினாறு, பதினேழு டிக்கெட்டுக்கள் மேலுலகச் சுற்றுலாவுக்காகக் காத்திருந்தார்கள்.அவர்களை எல்லாம் ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வந்தோம்.
'என்ன தாத்தா, என்ன பாட்டி எப்படி இருக்கீங்க,சும்மா பார்த்துட்டுப் போலாம்ன்னுதான் வந்தோம்!' என்று நாங்கள் அசடு வழிய எங்கள்திடீர் 'விசிட்'டுக்கான காரணத்தைச் சொன்ன போது, அதுகள் எல்லாமே புரிந்து கொண்டன.எழுபது,எண்பது வருஷங்களாக எமனுக்கே டிமிக்கி கொடுத்துக் கொண்டு வாழும் அதுகளுக்கு எங்கள் உள்எண்ணம் புரியாதா என்ன?
'ஏண்டா உங்க கரிசனத்தைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?வயசுப் புள்ளைகளை உட்டுட்டு எங்களைப் பார்க்க வருவீங்களாடா,திடீர்ன்னு?எப்படா மண்டையைப் போடுவோம்,கொண்டு போய்ப் பொதைச்சுட்டு சுடுகாட்டை அமுக்கிடலாம்ன்னுதானே பார்க்க வந்திருக்கீங்க! போங்க,போங்க நாங்க பார்க்காத சாவா?சங்குச் சத்தம் என்ன நீங்க கேக்கற சினிமாப் பாட்டா நினைச்சப்ப எல்லாம் கேக்கறதுக்கு?ஆண்டவன் எப்பக் கூப்பிடறார்ன்னு யாருக்குத் தெரியும்? அப்ப வாங்க போங்கடா!' என்று கோபமும் சிரிப்புமாக எங்களைப் பெரிசுகள் அனுப்பி விட்டன.

இரண்டு நாட்கள் ஓடி விட்டன.எங்களுக்குப் பதற்றம் கூடிக் கொண்டே போனது.மூன்றம் நாள் கதிரேசன் ஓடி வந்தான்,சாவடிக்கு.'டேய் அப்பத்தா வீட்டுக்குக் கம்பௌண்டர் பெரியப்பா வந்திருக்காரு.'
கம்பௌண்டர் பெரியப்பா பக்கத்து ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.எங்கள் கிராமத்தின் அங்கீகரிக்கப் பட்ட ஒரே மருத்துவர் அவர்தான்.சீரியஸ் என்றால் அவரைத்தான் எல்லார் வீட்டிலும் கூப்பிடுவார்கள்.அப்பத்தா வீட்டில் கூப்பிட்டிருக்கிறார்கள் என்றால்,ஆத்தா நிலைமை மோசமாய் இருந்திருக்க வேண்டும்.எல்லோரும் அப்பத்தா வீட்டுக்கு ஓடினோம்.ஊர்க் காரர்கள் நிறையப் பேர் அப்பத்தா வீட்டு வேப்ப மரத்தடியில் கூடியிருந்தார்கள்.கதையின் முடிவு தெரிந்த பின்னும் இழுத்துக் கொண்டு கிடக்கும் சினிமாப் படத்தின் கிளைமேக்ஸைப் பார்ப்பதைப் போல எல்லோர் முகத்திலும் ஒரு அசுவராஸ்யம்.
'ஆத்தாவுக்கு என்னடா வயசிருக்கும்?' என்று கேட்டான் காளி.
நான் ஆத்தா வீட்டு வேப்ப மரத்தைப் பார்த்தேன் ஒருநாள் அப்பத்தா என்னிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
'வெங்கடேசு,நான் பெரிய மனுஷியாகி உக்கார்ந்தபோ இந்த வேப்ப மரம் என் இடுப்பொசரக் கன்னா இருந்துச்சுன்னாப் பார்த்துக்குவேன்! அப்படீன்னா, இப்ப என்னோட வயசு என்னவா இருக்கும்? கணக்குப் போட்டுச் சொல்லேன்!'
நான் நிமிர்ந்து அந்தப் பெரிய வேப்ப மரத்தைப் பார்த்தேன்.

ஒரு கல்யாணக் கூட்டத்துக்கே தாராளாமாகப் பந்தி பறிமாறும் அளவுக்கு அது பிரம்மாண்டமான மரம்!
நண்பர்களிடம் அப்பத்தா சொன்ன இந்தக் கணக்கைச் சொல்லி ஆத்தாவின் வயது என்னவாக இருக்கும் என்று கண்டு பிடிக்கச் சொன்னேன்.
அவர்களும் வேப்ப மரத்தைப் பார்த்தார்கள்.
'என்ன,ஆத்தா ஏசுநாதரை விட ரெண்டு வயசு மூத்ததாக இருக்கும்னு நினைக்கிறேன்!' என்று அப்புக் குண்டன் அமைதியாகச் சொன்ன போது எங்களுக்குச் சிரிப்புத் தாங்க வில்லை.வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த போது பெரியவர்கள் முறைத்தார்கள்.
கம்பவுண்டர் பெரியப்பா வெளியே வந்த போது எங்கள் கூட்டமே தேர்தல் முடிவைக் கேட்கும் ஆர்வத்துடன் அவரையே பார்த்தோம்.
'நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருக்கு.கை,காலு எல்லாம் வீங்கிடுச்சு.சாயந்திரம் வரைக்கும் தாங்கினாலே பெரிசு 'என்று அவர் அப்பத்தாவின் சாவை உறுதி படுத்திச் சொன்னதும் எங்களுக்கெல்லாம் தலைச்சன் குழந்தை ஆண் குழந்தை என்று அவர் சொன்னதைப் போல சந்தோஷம் தாங்க வில்லை.உடனே எல்லோரும் ஊர்க் கிணற்றடிக்கு ஓடினோம்.
3.
எங்கள் ஊர்க் கிண்ற்றடிதான் எங்களுக்கு ஆற்றங்கரை.கடற்கரை எல்லாமே.
இளவட்டங்களான ஆண்களும்,பெண்களும் சந்தித்துக் கொள்ள ஊர்ப் பெரிசுகளெல்லாமே அரசல் புரசலாகத் தெரிந்தே அனுமதித்திருக்கும் ஒரு 'குடி'இல்லாத 'பப்' அது.

காலை நேரத்தில் வீட்டில் இருக்கும் சம்சாரிப் பெண்களுக்கு நிறைய வேலைகள் இருக்குமாதலால் தங்கள் வீட்டில் இருக்கும் வயதுப் பெண்களை துணிமணிகள் துவைப்பதற்கும்,பாத்திர பண்டங்கள் கழுவுவதற்கும் அனுப்பி வைப்பார்கள்.அவர்களுக்குத் தண்ணீர் சேந்தித் தரும் பொறுப்பு எங்களுடையது.எல்லாப் பெரிசுகளும் இந்த இனிமையான வயதைக் கடந்து வந்திருப்பதனால் பஞ்சும்,நெருப்புமான நாங்கள் ஊர்க் கிண்ற்றின் ஈரத்தில் பாதுகாப்பாக நனைவதற்குக் கண்டும் காணாமல் ஆதரவு தந்தார்கள்.
அங்கே ஏற்கனவேஅம்பிகா,கமலா,ராணி,வைதேகி,மேகலா,கண்ணம்மா,சுந்தரி,ராசக்கா,தமிழரசி,மலர் எல்லோருமே வந்திருந்தார்கள்.எல்லோருக்குமே வயது பதினாறிலிருந்து பத்தொன்பதுக்குள்தான் இருக்கும் யாரும் இன்னும் இருபதைத் தொடவில்லை என்று ஊறுதியாகச் சொல்ல முடியும்.
'எப்படி இருக்கு அப்பத்தாவுக்கு?'என்று என்னிடம் கேட்டாள் அம்பிகா.
கிணற்றுமேட்டில் இருக்கும் நாலைந்து உருளைகளில் ஒன்றில் கயிற்றை மாட்டிக் கிண்ற்றுக்குள் பக்கெட்டை விட்டவன் 'சாயந்திரம் வரைக்கும் தாங்கரதே பெரிசு' என்றேன்.
'பரவாயில்லே ஊருக்கு ஒரு நல்லது பண்ணிட்டுச் சாகணுங்கறதுக்காகத்தான் அப்பத்தா இத்தனை நாள் உயிரோட இருந்துச்சு போலிருக்கு 'என்றாள் கமலா ஆதங்கமாக.
'ம் இனி இவனுகளுக்கு ஜாலிதான்.பத்துக் கிலோ மீட்டர் பொணம் தூக்கற வேலை இல்லே'என்று சொல்லிக் கண்ணடித்தாள் மேகலா.
'ஆமா,இவனுக உருப்படியாச் செஞ்ச ஒரே நல்ல காரியம் அதுதான்.அதுவும் இல்லேன்னு ஆயிடுச்சா இப்போ!' என்று கிண்டல் செய்தாள் கண்ணம்மா.
'ஏய் யாரை பார்த்து வேறே நல்ல காரியம் பண்ணலேன்னு சொல்றே?சொல்றா,வெங்கடேசு,இந்த மூணு நாளா ராவெல்லாம் தூக்கம் முளிச்சு,இவளுகளுக்காக நாம என்ன பண்ணுனோங்கறதை!'
ஊர்ப் பொங்கல் விழாவிலிருந்து மற்ற எல்லாக் கோவில், கல்யாணம்,சடங்கு நிகழ்ச்சிகளின் போதெல்லாம் நான்தான் ஒரே வர்ணனையாளன்,அறிவிப்பாளன் எல்லாமே. தொண்டையச் செருமிக் கொண்டவன் 'இதனால் நம் கிராமத்தின் இளம் தேவதைகளான உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது என்னவென்றால், மாபெரும் நகரங்களில் மட்டுமே நடக்கும் அழகிப் போட்டி என்னும் அற்புதமான போட்டியை நமது ஊரிலும் நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம்.' என்றேன்.
பெண்கள் எல்லோரும் திகைத்துப் போனார்கள்.
'அழகிப் போட்டி நடத்துனீங்களா? எப்படி? யாரை வெச்சு?' என்று வியப்பின் உச்சிக்கே போய்க் கேட்டாள் ராசக்கா.
'ஏன்? உங்களை எல்லாம் வெச்சுத்தான்!'என்றேன் நான்.
'எங்களை வெச்சா?'அதிர்ந்தாள் அம்பிகா.
'ஏன், உங்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமே இல்லையா?இப்படி அதிர்ரீங்க!' என்றான் கணேசு.எல்லோரும் அவனை முறைத்தார்கள்.
'நீ சொல்லுடா வெங்கடேசு என்ன கூத்துப் பண்ணி வெச்சிருக்கீங்க?' என்று சீரியஸாகக் கேட்டாள் அம்பிகா.
'ஒண்ணுமில்லே அம்பிகா.நாங்க ரெண்டு பிரிவாப் பிரிஞ்சுட்டோம். உங்களை முன்னாலே இருந்து பார்க்கற மாதிரி மாரியம்மன் கோவில் தூணிலிருந்து மறைஞ்சு நின்னுகிட்டுக்,கிணத்தடிக்கு நீஙக காலையிலே வர்ரப்போப் பாதிப் பேரு பார்ப்போம் மீதிப் பேரு தேர் முட்டிகிட்டே மறைஞ்சுகிட்டு,உங்களைப் பின்னாடி இருந்து பார்ப்போம்.பார்த்திட்டிருக்கும் போதே மார்க் போட்டுடுவோம்.இதே மாதிரி நீங்க குளிச்சு முடிச்சுட்டுப் போகும் போதும் .பார்த்தோம் .ஒருநாள் மாதிரி ஒருநாள் இருக்காதில்லையா? அதுதான் மூணு நாளா இந்தக் கணக்கை எடுத்திருக்கோம் அவனவன் தனித் தனியா மார்க்குப் போட்டு எங்கிட்டே கொடுத்துட்டான்.எல்லா மார்க்கையும் ராத்திரி முளுக்க உக்காந்து கூட்டிப் பார்த்துட்டு இப்ப அழகிப் போட்டி ரிசல்ட்டோட வந்திருக்கோம்.!'

பிரம்மித்துப் போனார்கள் அந்தக் கிராமத்து தேவதைகள்.
'என்ன ஒரு திமிரு பார்த்தியாடி இவனுகளுக்கு?' என்றாள் சுந்தரி.
'எல்லாம் நாம குடுக்கிற இடம்!'என்றாள் மலர்.
'இப்போ ரிசல்ட்டைத் தெரிஞ்சுக்கப் போறீங்களா,இல்லியா?' என்றேன் நான். எனக்குத் தெரியும்.எந்தப் பெண்ணுமே தன் அழகைப் பற்றி ஒரு ஆண் என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ளாமல் தூங்கவே மாட்டாள் என்று.'
கர்மம், கர்மம்!'என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் அவர்கள் சிரிப்பும்,வெட்கமும்,பூரிப்புமாய்.
'சரி,சரி சொல்லித் தொலைங்கடா!'என்றாள் வைதேகி.நான் ரிசல்ட் பேப்பரைக் கையில் எடுத்ததும்,என் முகத்தையே ஆவலுடன் பார்த்தார்கள் தேவதைகள்.
'எங்கள் கனவுகளில் அன்றாடம் வந்து எங்கள் தூக்கத்தின் பெரும் பகுதியைக் கெடுக்கும் கனவுலகக் கன்னிகளே! இந்தத் தீர்ப்புக்களைநாங்கள் எழுதுவதற்குள் நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே,அதனை வார்த்தைகளால் சொல்லி மாளாது. சரி இந்த மாபெரும் அழகிப் போட்டியில் மூன்றாவது இடதைப் பிடித்த தாமிர மயில்...'
சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை அவர்களுக்கு.'சீக்கிரம் சொல்லித் தொலையேண்டா,வெங்கடேசு!' என்று கத்தியே விட்டாள் தமிழரசி.
'மூன்றாவது இடத்தைப் பிடித்த தாமிர மயில் --ராணி!' என்று நான் அறிவித்ததும் பயல்களின் விசில் கரவொளிகளுக்கு மத்தியில் அந்தப் பெண்கள் வெட்கத்தில் சிரித்தது, மழைத் துளிகளுக்கு மத்தியில் ஏழெட்டு வான வில்கள் ஒரே நேரத்தில் உதயமானதைப் போலிருந்தது.
'ஏண்டா, இதை முதல்லேயே சொல்லித் தொலைச்சிருந்தா நாங்க கொஞ்சம் தலையவாவது வாரிட்டுப் பவுடர் கிவுடராவது அடிச்சுட்டு வந்திருப்போம்லே 'என்று சிணுங்கினார்கள் சில பேர்.
'அதுதான் கிராமத்தானுக மூளைங்கறது ! படிச்ச பட்டணத்துக் காரனுக நடத்துற மாதிரி இல்லாமே, பொண்ணுகளை எந்த எச்சரிக்கையும் பண்ணாமே அவங்களைப் பார்க்கணும்.அப்போத்தான் அவங்களோட ஒரிஜினல் அழகு தெரியும்.முதல்லேயே அவங்களை உஷார்ப் படுத்திட்டா, அவங்களோட மேக்கப்பும்,சொல்லிக் குடுத்த பயிற்சியுந்தான் தெரியும்.'
'பரவாயில்லே.நம்ம ஆளுகளும் அப்பபோ விவரமாத்தான் பேசறானுகடி!' என்று பாராட்டினாள் அம்பிகா.
'சரி,அடுத்தது யாருன்னு சொல்லு.'
'இரண்டாம் இடத்தைப் பிடித்த வெள்ளி மயில்--ராசக்கா!'
மீண்டும் கரவொலிகள்.விசில்கள்.சில பெரிசுகள் கிணற்றடியைக் கடந்த போது,நடப்பது என்ன என்று தெரியாமல் ஏதோ விடலைகள் சிரித்து அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கின்றன என நினைத்துத் தங்கள் இளமையின் ஞாபகத்தில் உள்ளேயே சிரித்துக் கொண்டு போனார்கள்.
'பின்னாடி இருந்து பார்த்த பசங்கதான், ராசக்காவுக்கு மார்க்கை அள்ளி வழங்கி இருக்காங்கன்னு அழகிப் போட்டி நிர்வாகம் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறது!' என்று நான் அறிவித்ததும் 'ச்சீய்' என்று என் முகத்தில் தண்ணீரை அடித்துக் கலாட்டாப் பண்ணினாள் அவள்.
'அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் முதல் இடமான தங்க மயில் பரிசு--அம்பிகா!' என்று நான் கத்தியதும் அம்பிகா முகம் சிவந்து நாணியதிற்கு இணையான அழகை இந்த உலகம் பூராவும் நீங்கள் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது.
எனக்கே நெஞ்சில் கும்மென்றது.பிறகுதான் எனக்கே தெரிந்தது,அது கதிரேசன் விட்ட குத்தென்று.
'ஏண்டா,உன் ஆளுதான் ஃபர்ஸ்ட்டுன்னு ,ரிசல்ட்டை மாத்திப் படிக்கிறீயாடா?' என்று அவன் கத்தியதும்தான் எனது பித்தலாட்டம் சபைக்கு அம்பலமானது. அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை.
'உன் ஆளுன்னு' என்று அவன் அம்பிகாவைச் சொன்னதும் அவள் அதைப் பரவசத்துடன் ஏற்றுக் கொண்டு என்னைப் பார்த்தை விட எனக்கு வேறென்ன பரிசு இருக்க முடியும்?
அந்தக் கிராமத்துக் கிணற்றடியில் நான் வாங்கிய ஆஸ்கார் விருது அது.!அதற்குப் பிறகு அவன் பேப்பரை வாங்கி 'முதல் பரிசு வாங்கிய தங்க மயில் வேறு யாருமல்ல-' என்று அவன் முடிவை அறிவிக்கும் முன் 'டேய் அங்கே பாருங்கடா!' என்று அதிர்ச்சியின் உச்சக் கட்டத்தில் கத்தினான் வேலு.எல்லோரும் பதறிப் போய்த் திரும்பிப் பார்த்தால்-அப்பத்தா!
சாயந்திரம் வரைக்குமே தாங்காது என்று கெடு வைத்திருந்த அப்பத்தா ஒரு மோளி துணியுடன் வேகுவேகு என்று கிணற்றடியை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தது.
'அப்பத்தா' என்றோம் எல்லோருமே அதிர்ச்சியுடன்.
'பேராண்டிகளா, உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும்.ஒரு நாலு பக்கெட் தண்ணி சேந்திக் கொடுங்கடா.அஞ்சு நாளுப் புடவைகளைத் துவைக்கனும்'என்றாள் அப்பத்தா.
'உங்களுக்கு உடம்பு முடியலேன்னு ..கம்பவுண்டர் பெரியப்பா..'அது எங்களை முடிக்க விடவில்லை.
'அந்தக் கட்டிதின்னிக்கு என் உடம்பைப் பத்தி என்ன தெரியும்.நானும் எங்க வீட்டு வேப்ப மரமும் ஒண்ணு..அது என்னிக்குச் சாயுதோ அன்னிகுத்தான் இந்தக் கட்டையும் சாகும்!' என்றாள் அப்பத்தா உறுதியாக.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
'அப்ப அந்த வேப்ப மரத்தை வெட்டிச் சாய்ச்சுடலாண்டா!' என்றான் அப்புக் குண்டன் வழக்கம் போல அமைதியாக.பெண்களுட்பட எல்லோருமே சிரித்தார்கள்.
'என்ன தமாஸ் பண்றான் பேராண்டி?'என்று அப்பத்தா கேட்டாள்.'இது தமாஸ் இல்ல்லே பாட்டி.ரொம்ப சீரியசான மேட்டர்!'.என்றான் அவன்.
4.
நாளை தேர்தல் முடிவுகளை அறிவிக்கிறார்கள்.எங்கள் ஊரில் இன்னும் யார் சாவதாகவும் தெரியவில்லை.
எம்.எல் ஏ வாக நிச்சயம் பக்கத்து ஊர்ப் பெரும்புள்ளியான கருப்பையாதான் வருவார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர் வந்து விட்டால் எங்கள் ஊர்ச் சுடுகாட்டுப் பிரச்சினையைப் பற்றி அவர் கவலையே பட மாட்டார் என்றும் நாங்கள் அறிவோம்.அது மட்டுமல்ல, எங்களுக்குச் சுடுகாட்டுக்கு என்று ஒதுக்கப் பட்டிருக்கும் புறம் போக்கு நிலத்தின் மீது அவருக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண் ஏனென்றால் அதற்குப் பக்கத்தில்தான் அவருடைய நிலம் இருக்கிறது.இங்கு சுடுகாடு வந்து விட்டால் அவரது நிலத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்து விடும்.இந்தப் புறம் போக்கு நிலத்தையும் தனது நிலத்துடன் சேர்த்து விட்டால் அது அவருக்கு மிகப் பெரிய லாபமாக இருக்கும்.
ஹெல்த் ஆஃபிசர் மனம் பொறுக்க முடியாமல், அவர் சொன்ன கெடு முடியும் நாளான இன்று எங்களுக்கு போன் செய்தார்.
'சாயந்திரம் நாலு மணிக்கு உங்க தொகுதிக்குப் புது எம்.எல்.ஏ வந்துடுவாரு. அப்புறம் உங்களோட சுடுகாட்டுக் கோரிக்கை என்னாகும்ன்னு தெரியுமில்லே?'
'தெரியும் சார்! என்ன பண்றதுன்னே தெரியலே.!'
'நிறையப் பெரிசுக இப்பவோ அப்ப்வோன்னு இருக்குதுன்னு சொன்னீங்களேம்பா?ஒண்ணும்---'
'இல்லே சார்!' என்றோம் பரிதாபமாக.
'சரி பார்ப்போம். இன்னும் மூணு மணி நேரம் இருக்குதில்லே.' என்றவர் அனுதாபத்துடன் விடை பெற்றார்.
கோவில் வழியாக வந்த போது பெரிசுகள் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கக் கடைசி நேர நம்பிக்கையுடன் அருகில் சென்று என்ன என்று கேட்டோம்.எங்கள் பட்டியலில் இருந்த வயதானவர்கள் கிட்டத் தட்ட எல்லோருமே இருந்தார்கள்.
'இல்லேப்பா.பொங்கல் விழா வருதில்லே..அதுலே வயசானவங்களுக்கு வெக்கிற ஓட்டப் பந்தயம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்' என்றார் ஆஸ்த்மா தாத்தா.
'ஆமா தாத்தா வயசான காலத்துலே எதுக்கு ஓட்டப் பந்தயமெல்லாம் ஓடி, உடம்பைக் கெடுத்துட்டு..'என்றேன் நான் வெறுப்புடன்.
'அட இவன் யார்ரா புரியாமே பேசிட்டு..ஓட்டப் பந்தயத்துக்குப் பதிலா சடுகுடுப் போட்டி வெச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்!'
5.
இன்னும் ஒரு மணி நேரத்தில் புது எம்.எல்.ஏ அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டு விடுவார்.சோர்வுடன் சாவடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 'குடு குடு வயசுலே,சடு குடு ஆடறேன்னு சொல்லுதுகளே பெரிசுக! இந்த லிஸ்ட் இனிமே பிரயோசனப் படும்ன்னு நினைக்கறே?' என்று எங்களுடைய மரணப் பட்டியலைக் காட்டிக் கேட்டேன்.
'இனி நம்ம ஊர்லே கிழவிக எல்லாம் ரெண்டாவது தடவையாச் சடங்காகி உக்காரப் போறாங்கன்னு நினைக்கிறேண்டா!' என்ற அப்புக் குண்டன் லிஸ்ட்டைக் கிழித்தெறிந்தான்.
அப்போது வேலு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
'எந்தப் பெரிசுக்கோ நம்ம கஷ்டம் தெரிஞ்சு மண்டையைப் போட்டுடுச்சுடா' என்றேன் நான் உற்சாகமாக.
அழுதபடியே வந்த வேலு சொன்னான்.
'டேய்..நம்ம எலிமென்டரி ஸ்கூல் கட்டிடம் இடிஞ்சு விழுந்துடுச்சுடா' என்றான் அவன் கதறிய படியே.
'என்னடா சொலறே?' எங்களுக்கு ஒரு நொடி பேச்சே வரவில்லை.'நிறையக் குழந்தைக..கட்டிட இடிபாட்டுக்குள்ளே சிக்கி..'அவன் தேம்பினான்.
6.

அந்த மூன்று பள்ளிக்கூடக் குழந்தைகளைப் புதைத்ததிலிருந்து எங்களுக்கென்று ஒரு தனிச் சுடுகாடு கிடைத்தது.
சுடுகாடு மட்டும் பிரச்சினை இல்லை,சாவும் ஒரு மாபெரும் பிரச்சினை என்ற பாடத்தை ஒன்றாம் வகுப்பே படித்த அந்தக் குழந்தைகள் எங்களுக்கு நடத்தி விட்டுப் போயிருந்தார்கள்.
அந்தப் பிஞ்சுகளை பத்துக் கிலோ மீட்டர் நடக்காமல் இந்த முறை சுலபமாக அடக்கம் பண்ணினோம்.ஆனால் ஊருக்குள் அழுகைச் சத்தம் அடங்கத்தான் நீண்ட நாட்கள் ஆயின.

45 கருத்துகள்:

  1. மிகுந்த ஆர்வத்துடன் படித்துக் கொண்டே வந்தேன், இறுதியில்.. :(

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சை உருக்கும் கதை சார்.. மிக அழகாக ஒரு கிராமத்தை, அதிலுள்ள இளைஞர்களை, கிராமத்து தேவதைகளை.. கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. //எங்கள் ஊரில் நிறையக் கல்யாணங்கள் ஊர்க் காரர்கள் செத்துப் போய்ச் சேர்ந்த சொர்க்கத்திலதான் நிச்சயிக்கப் படுகிறது.//

    ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  4. கதை நெடுகிலும் இயல்பான நகைச்சுவை பின்னி பெடலெடுக்கிறது..
    // என்ன,ஆத்தா ஏசுநாதரை விட ரெண்டு வயசு மூத்ததாக இருக்கும்னு நினைக்கிறேன்!' என்று அப்புக் குண்டன் //

    சூப்பர்..சார்..

    பதிலளிநீக்கு
  5. பதிவு வெளியாகித் திரும்புவதற்குள் உங்கள் மதிப்புரைகள்!உங்கள் வேகத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் ஷங்கர்,தமிழ்ப் பிரியன்..

    பதிலளிநீக்கு
  6. // தமிழ் பிரியன் கூறியது...
    மிகுந்த ஆர்வத்துடன் படித்துக் கொண்டே வந்தேன், இறுதியில்.. :(

    //


    ரிப்பீட்டு...

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்கு நன்றிகள்,அப்துல்லா சார்!

    பதிலளிநீக்கு
  8. // ஷண்முகப்ரியன் கூறியது...
    பாராட்டுக்கு நன்றிகள்,அப்துல்லா சார்!

    //

    நான் உங்கள் மகன் வயதை ஒத்தவன். சார் என்ற அடைமொழி வேண்டாம். பெயர் சொல்லி அழையுங்கள். மிகவும் மகிழ்வேன்.

    :)

    பதிலளிநீக்கு
  9. very super.. had a good laugh many times.. end is very sad..

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான விவரிப்புகள். சுவையான எழுத்து.

    :)

    பதிலளிநீக்கு
  11. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

    பதிலளிநீக்கு
  12. ''நான் உங்கள் மகன் வயதை ஒத்தவன். சார் என்ற அடைமொழி வேண்டாம். பெயர் சொல்லி அழையுங்கள். மிகவும் மகிழ்வேன்.''
    இப்போதுதான் தங்கள் சுய விவரங்களைப் பார்த்தேன்.இனி அப்துல்லா என்றே அழைக்கிறேன்.தங்கள் அன்புக்கு மகிழ்கிறேன் அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஸ்வாமிஜி,தங்களின் பாராட்டு எனக்குப் பெருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. 'பெயரில்லா கூறியது...
    very super.. had a good laugh many times.. end is very sad..'

    Thank you sir.I wish I should know your name.

    பதிலளிநீக்கு
  15. A Very interesting and very very Smell of the sand story..

    Manmanam maaratha kathai..

    Vazhtukkal..

    பதிலளிநீக்கு
  16. ராம்ஜி சொன்னது…
    A Very interesting and very very Smell of the sand story..

    Manmanam maaratha kathai..

    Vazhtukkal..

    THANK YOU RAMJI,FOR YOUR VISIT AND COMMENT.SO NICE OF YOU.

    பதிலளிநீக்கு
  17. உலக மொழி படங்களை விட உருக்கமும் நகைச்சுவையும், அழகோ அழகு..


    சூப்பர்

    பதிலளிநீக்கு
  18. ஒரு குழந்தை புதிதாகப் பிறந்தால் என்ன கொண்டாட்டமோ, அதை விட மீறின மகிழ்ச்சியாக எங்களுக்கென்று ஒரு சுடுகாடு என்று கேள்விப் பட்ட போது .....

    எவ்வளவு கொடுமை இதெல்லாம்..

    பதிலளிநீக்கு
  19. 'வண்ணத்துபூச்சியார் கூறியது...
    உலக மொழி படங்களை விட உருக்கமும் நகைச்சுவையும், அழகோ அழகு..


    சூப்பர்'
    நன்றிகள் ஆயிர்ம் வண்ணத்துப் பூச்சியாரே!உலகப் படங்களை ரசித்துக் கவிதையாக எழுதும் தங்களின் பாராட்டு, உண்மையில் எனக்குப் பெருமை சேர்க்கும் மகிழ்ச்சி ஆகும்.

    பதிலளிநீக்கு
  20. சார் இது நிஜமா நடந்த சம்பவமா?.கதையா?. நன்றாக இருக்கிறது உங்கள் நடை!.

    பதிலளிநீக்கு
  21. 'Renga சொன்னது…
    Really Great.... though it's bit lengthy..'

    நன்றி ரங்கா சார்.உங்கள் கருத்தினை மனதில் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. 'நல்லதந்தி கூறியது...
    சார் இது நிஜமா நடந்த சம்பவமா?.கதையா?. நன்றாக இருக்கிறது '

    சுடுகாட்டுப் பிரச்சினை நிஜம்.கதாபாத்திரங்களும்.நிகழ்வுகளும் என் கற்பனை.தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி நல்ல தந்தி அவர்களே.

    பதிலளிநீக்கு
  23. பெரிசுகளின் நக்கல் சூப்பரோ சூப்பர்.
    கிணற்று பகுதி உரையாடல் கேசம் கோதும் மெல்லிய பூங்காற்று.
    அப்பு குண்டன் கமெண்டு சரவெடி.
    சுடுகாடு கிடைத்த விதம் மனதில் பாரம்.

    பதிலளிநீக்கு
  24. 'பட்டாம்பூச்சி கூறியது...
    பெரிசுகளின் நக்கல் சூப்பரோ சூப்பர்.
    கிணற்று பகுதி உரையாடல் கேசம் கோதும் மெல்லிய பூங்காற்று.
    அப்பு குண்டன் கமெண்டு சரவெடி.
    சுடுகாடு கிடைத்த விதம் மனதில் பாரம்.'

    நாலே வரிகளில் கதையின் மையங்களை எல்லாம் நச்சென்று தொட்டுச் சென்ற உஙகள் விமர்சனமே அழகாக இருக்கிறது பட்டாம் பூச்சி. நன்றியும்,பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  25. //எங்கள் ஊர்க் கிண்ற்றடிதான் எங்களுக்கு ஆற்றங்கரை.கடற்கரை எல்லாமே.
    இளவட்டங்களான ஆண்களும்,பெண்களும் சந்தித்துக் கொள்ள ஊர்ப் பெரிசுகளெல்லாமே அரசல் புரசலாகத் தெரிந்தே அனுமதித்திருக்கும் ஒரு 'குடி'இல்லாத 'பப்' அது.//
    அருமையான வரிகள், எனக்கு என் ஊர் நியாபகம் வருகிறது....

    பதிலளிநீக்கு
  26. Palanivel கூறியது...
    //எங்கள் ஊர்க் கிண்ற்றடிதான் எங்களுக்கு ஆற்றங்கரை.கடற்கரை எல்லாமே.
    இளவட்டங்களான ஆண்களும்,பெண்களும் சந்தித்துக் கொள்ள ஊர்ப் பெரிசுகளெல்லாமே அரசல் புரசலாகத் தெரிந்தே அனுமதித்திருக்கும் ஒரு 'குடி'இல்லாத 'பப்' அது.//
    அருமையான வரிகள், எனக்கு என் ஊர் நியாபகம் வருகிறது....//

    ஒரு வேளை நீங்களும் நானும் ஒரே ஊர்க்காரர்களோ என்னவோ!வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பழனிவேல்.

    பதிலளிநீக்கு
  27. Super Sir...! I been trying to put a comment from yesterday, but NHM giving me headache.

    You should write more often!! TWO thumps up..!!! ;-0

    பதிலளிநீக்கு
  28. //ஹாலிவுட் பாலா சொன்னது…
    Super Sir...! I been trying to put a comment from yesterday, but NHM giving me headache.

    You should write more often!! TWO thumps up..!!! //

    Thank you Bala! I am happy to receive your valuable comment.

    பதிலளிநீக்கு
  29. அண்ணே //நல்லாருக்கணோ.. மிகவும் ஒரு கிராமத்து வாடி தழுவிய ஓர் ஆக்கம். இதை பெரிசாக இருக்கிறதென்ற கூற்றை நான் மறுக்கிறேன்.. ஒரு கேள்வி..நீங்கள் என்ன தமிழ் திரை காதாசிரியரா? ..முடிவு சோகம் தழுவியதாக உள்ளது..நன்று

    பதிலளிநீக்கு
  30. //லோயர் சொன்னது…
    அண்ணே //நல்லாருக்கணோ.. மிகவும் ஒரு கிராமத்து வாடி தழுவிய ஓர் ஆக்கம். இதை பெரிசாக இருக்கிறதென்ற கூற்றை நான் மறுக்கிறேன்.. ஒரு கேள்வி..நீங்கள் என்ன தமிழ் திரை காதாசிரியரா? ..முடிவு சோகம் தழுவியதாக உள்ளது..நன்று//
    நன்றி நண்பரே!ஆனால் சில விஷயங்கள் மட்டும் எனக்குப் புரியவில்லை.கதையின் முடிவு சோகமாக இருப்பதற்கும் தமிழ்த் திரைப்படக் கதாசிரியராக இருப்பதற்கும் என்ன தொடர்பு? விளக்கினால் விளங்கிக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  31. ஐயா..

    இன்று காலையில்தான் தங்களது தளம் விரிவடைந்தது..

    படித்தேன்.. படித்தேன்.. படித்தேன்..

    இறுதிவரையிலும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதைப் போல் கவனத்தைத் திசை திருப்பவிடாமல் அழைத்துச் சென்றது உங்களது கதை சொல்லும் லாவகம்..

    கிளைமாக்ஸ் காட்சி அற்புதம்..

    எனக்குப் போட்டியாக நீங்களும் பெரிதாக எழுதியிருக்கிறீர்கள் என்று இனி நான் தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம்..

    நன்று ஐயா..

    இது போலவே வாரத்திற்கு ஒன்று எழுதுங்கள்..

    தங்களது கதைகள் உள்ளத்தை நிஜமாகவே தொடுகின்றன..

    பதிலளிநீக்கு
  32. //தங்களது கதைகள் உள்ளத்தை நிஜமாகவே தொடுகின்றன..//

    பாராட்டை விட ஊக்க மருந்து வேறென்ன இருக்க முடியும்,சரவணன்? நன்றி!நன்றி !நன்றி!

    பதிலளிநீக்கு
  33. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  34. நன்றி ராஜலக்ஷ்மி. உங்களை விடச் சத்தியமாக நான் வயதில் மூத்திருப்பேன் என்பதால் அடைமொழிகள் சேர்த்தவில்லை.மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  35. Arumai Arumai....


    Namakku...Perumanallur pakkama ayya... Nan thoravalur (athi Kunnathur).....Living in USA and running small IT concern...

    Thambi

    பதிலளிநீக்கு
  36. //பெயரில்லா கூறியது...
    Arumai Arumai....


    Namakku...Perumanallur pakkama ayya... Nan thoravalur (athi Kunnathur).....Living in USA and running small IT concern...

    Thambi//
    அன்புத் தம்பிக்கு நன்றி.நான் உங்கள் ஊருக்குப் பக்கத்திலதான்.ஊத்துக்குளி.எனது மகனும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்தான்.இன்ஃபோசிசில் இருக்கிறான்.மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  37. பதிவு மிக இனிமை. கடைசி திருப்பம்தான் மனதை பிசைந்தது.

    பதிலளிநீக்கு
  38. //மங்களூர் சிவா சொன்னது…
    பதிவு மிக இனிமை. கடைசி திருப்பம்தான் மனதை பிசைந்தது.//

    நன்றி சிவா.எனது அடுத்த பதிவுக்கும் தங்களின் கருத்துரை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  39. நல்ல இளமை துள்ளலுடன் போய்க்கொண்டு இருந்த கதைக்கு இப்படி ஒரு முடிவா..
    எனக்கு இந்த கதை பிடிக்கவே இல்லைங்க..

    நானும் எங்க அப்பாவும் டிவி ல சினிமா பார்க்கும் போது, நாயகனும் நாயகியும் ஒன்ன சேரலேனா படம் முடுஞ்சுருசுனு எங்கப்பா நம்பவே மாட்டாரு.. அது போல தான் இந்த கதையும்..

    ஆமா ஊத்துகுளிக்கும் வெள்ளங்கோவிலுக்கும் ரொம்ப தூரமாச்சே..
    நீங்க எந்த வெள்ளங்கோவில்..?
    நான் கெட்டிசெவியூர் பக்கத்தில் பள்ளிபாளையம்..

    பதிலளிநீக்கு
  40. பட்டிக்காட்டான்.. சொன்னது…

    நல்ல இளமை துள்ளலுடன் போய்க்கொண்டு இருந்த கதைக்கு இப்படி ஒரு முடிவா..
    எனக்கு இந்த கதை பிடிக்கவே இல்லைங்க..//

    தாமதமான உங்கள் கருத்துரைக்கு அதை விடத் தாமதமான நன்றியுரைக்கு மன்னிக்கவும்,திருஞான சம்பத்.
    மரணத்தையும் துன்பத்தையும் கதையிலிருந்து வேண்டுமானால் பிடிக்கவில்லை என்று சொல்லி ஒதுங்கிப் போய் விடலாம்.ஆனால் வாழ்க்கையில் யதார்த்தங்களைச் சந்திக்கும் தெம்பைத் தருவதற்காகத்தானே தம்பி துன்பியல் இலக்கியங்களே படைக்கப் படுகின்றன.//

    நான் திருப்பூர் ஊத்துக்குளி.பூர்வ ஜென்மத்தில் வேலை பார்த்தது,எஸ்.பி.பி.காகித ஆலை இருக்கும் பள்ளிபாளையம்.

    பதிலளிநீக்கு
  41. //.......துன்பியல் இலக்கியங்களே படைக்கப் படுகின்றன.//

    உண்மைதான்.. நமக்கு நடக்காத வரை எதுவுமே வேடிக்கைதானே..

    //.. நான் திருப்பூர் ஊத்துக்குளி..//

    இப்போது சொந்த ஊருக்கு வருவதுண்டா..??

    பதிலளிநீக்கு