புதன், மார்ச் 11, 2009

கன்னிகா பாகம் இரண்டு (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முன் எச்சரிக்கை: நீங்கள் ஒரு முழுமையான பெண்ணைத் தரிசித்திருக்கிறீர்களா?அது ஒரு அபூர்வமான அனுபவம்.இதுவரை நீங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்கும் அத்தனை கருத்துக்களையும்,எண்ணங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு உங்களை உணர்வு பூர்வமான வேறொரு தளத்தில் ஊன்றிவிடும் அந்த அனுபவம்.அந்த அனுபவத்துக்குத் தயாராகுங்கள். இனிக் கதை...
3.
மூன்று முறை நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் போயும் கன்னிகா நீதிமன்றத்துக்கு வரவில்லை.எனவே வகுளாபரணன் அந்த விவாகரத்து வழக்கில் அரவிந்தன் தன்னுடைய நிலைப்பாட்டை அவள் இன்றியே எடுத்துரைக்கலாம் என்று அனுமதி அளித்தார். அப்போதுதான் நீதிபதி முன் அரவிந்தன் இந்த விண்ணப்பத்தை வைத்தான்.

'அய்யா, சாதாரணமா எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கற மாதிரி, சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடக்கலே.. ஒரு ஆணா எனக்கு வெளியே எவ்வளவு புதுசு புதுசா நிகழ்ச்சிகள் நடந்துச்சோ, அதே அளவு என் மனசுக்குள்ளியும் நடந்திருக்கு...I am affected in all the dimensions of a man_physical,mental and spiritual.அதையெல்லாம் உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா, நான் சாதாரணமாப் பேசற என்னொட பேச்சு மொழி பத்தாது.. அதனாலே..'
'அதனாலே?'
அவன் தான் கொண்டு வந்திருந்த ஒரு ஃபைலை நீதிபதியிடம் காட்டினான்.
'பலநாளா உக்கார்ந்து எனக்கு நடந்ததையெல்லாம் இந்தப் பேப்பர்ஸ்லே தெளிவா எழுதியிருக்கேன் அய்யா..கோர்ட்லே யாரையாவது சத்தமாப் படிக்கச் சொல்லி நீங்க கேட்டீங்கன்னாத்தான் என்னோட கேஸைப் புரிஞ்சுக்க முடியும்..'

வகுள் சற்றே யோசித்தார்.பிறகு நீதி மன்றத் தட்டச்சு எழுத்தராக இருக்கும் முத்துசாமியை 'நீங்கள் படிக்க முடியுமா?' என்று கேட்டார்.
'சரிங்கய்யா' என்ற முத்துசாமி,வகுள் தலையாட்டி உத்திரவு கொடுத்ததும் அரவிந்தனிடம் ஃபைலை வாங்கிக் கொண்டு போய், வகுளிடம் அதை முறைப் படி காண்பித்தார்.
இது போன்ற வழக்குகளில் இல்லாதபடிக்கு, முதன் முறையாக,ஒருவன் வாய் மொழியாகச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு என்னதான் நடந்திருக்க முடியும் என்று நீதி மன்றமே ஆவலுடன் காத்திருக்க முத்துசாமி தொண்டையைச் செருமி விட்டுப் படிக்க ஆரம்பித்தார்.
கன்னிகா.
'என் வாழ்க்கையில் நான் சந்தித்த யாரையும் விட என்னைப் பிரம்மிக்கச் செய்தவள்,இந்தக் கணம் வரை எனது மனைவியாக இருக்கும் கன்னிகாதான்.அவள் மேல் எனக்கிருக்கும் மனப்பூர்வமான மரியாதையுடனும்,அபரிமிதமான காதலுடனும்,ஆழ்ந்த நேசத்துடனும் இந்த விவாகரத்துக்கான கோரிக்கை மனுவை அவளது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.'என்று தொடங்கியது அரவிந்தனின் வாக்குமூலம்.
அதனைப் படிக்க ஆரம்பித்த முத்துசாமி மட்டுமல்ல,நீதிமன்றமே அரவிந்தனைப் புதிராகப் பார்த்தது.அவன் நிச்சலனமாக நின்றிருந்தான்.
மூலாதாரம்.
'யோக சாஸ்திரத்தில் மனிதப் பிறவியை ஏழு சக்ரங்களாகப் பிரிக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்.நான் புரிந்து கொண்ட அளவில்,மனிதனின் உயிர் மையம் ஏழு நிலைகளில் நின்று செயல் புரிகிறது.மூலாதாரம் ,ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்,அனாஹதம், விசுத்தி,ஆக்ஞை,சஹஸ்ராரம் என்பவையே அவை.ஒவ்வொரு சக்ரத்துக்கும் தனித்தனியே பண்புகள்,ஆற்றல்கள் உண்டு என்பதை அந்த ஞானிகள் உணர்ந்து பகுத்துக் கூறியிருக்கின்றனர். மனிதனின் உயிர் மையம் (அவர்களது மொழியில் குண்டலினி சக்தி) எந்தச் சக்ரத்தில் நின்று செயல் புரிகிறதோ அதற்கேற்றாற் போல்தான் அவனது குண நலன்கள்,வேட்கைகள்,ஆற்றல்கள் வெளிப்படும் என்பதே அவர்கள் கண்ட முடிவு.
முதல் சக்ரமான மூலாதாரம் தான் உயிர் வாழ்வதற்கும் ,தன் இனம் அழியாமல் தழைத்திருப்பதற்குமான அடிப்படைத் தேவைகளான உணவு,காமம் என்ற முக்கியமான விஷயங்களைக் குறிக்கும்.உயிர் மையம் அங்கே நின்று செயல் புரியும் போது அந்த மனிதனின் மனம் முழுதும் அந்த அடிப்படைத் தேவைகளைச் சுற்றியே உழலும்.பின் ஒவ்வொரு சக்ரமாக உயிர் மையம் மேலேறுகையில் வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களைத் தொடுகிறான் மனிதன்.
வெறும் புத்தகங்களில் மட்டுமே படித்து விட்டு நான் நம்பியும் நம்பாமல் இருந்த இந்தத் தகவல்களை, உண்மைதான் என்று அனுபவ ரீதியாக எனக்கு உணர்த்தியவள் கன்னிகாதான்.
கன்னிகா என்னை ஆட்கொண்டு இதுவரை ஏழு மாதங்கள் ஆகின்றன.அவள் முதன் முதலாக எனது மூலாதாரத்தில்தான் பிரவேசித்தாள்.
இந்த ஏழு மாதங்களில் என்னுடைய ஏழு சக்ரங்களிலும் ஊடுருவி என்னுடைய வாழ்க்கையின் பரிமாணங்களையே முற்றிலுமாய் அவள் மாற்றியமைத்த, அந்த விந்தையான அனுபவங்களை இனி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
'என் வயது 27. ஐதராபாத்தில் இருக்கும் கிரானைட் கற்கள் தயாரித்து விற்கும் ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின், சென்னைக் கிளையில் விற்பனைப் பொறியாளனாகப் பணி புரிகிறேன். பெரிய,பெரிய நட்சத்திர ஹோட்டல்கள்,பணக்காரர்களின் ஆடம்பரப் பங்களாக்கள்,உயரிய அரசு அலுவலகங்கள், வாழும் போது மறந்துவிட்டுச் செத்த பின்பு நாம் கொண்டாடும் உயரிய மனிதர்களின் மணி மண்டபங்கள்,கோவில்கள் எல்லாவற்றுக்கும் அந்த விலை உயர்ந்த அந்தக் கிரானைட் கற்கள் ஒரு கம்பீரத்தையும்,மரியாதையையும் வழங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.
அது போன்ற கட்டிடங்கள் கட்டப் படும் இடங்களுக்கே நான் சென்று எங்கள் கிரானைட் கற்களை எப்படிப் பதிப்பது,பளபளப்பாக்குவது,பராமரிப்பது போன்ற தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்து, ஆலோசனைகள் வழங்கி விட்டு வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தி, எங்கள் நிறுவனத்துக்குச் சேர வேண்டிய பில் தொகையை வசூல் செய்து கொண்டு வருவதே என் வேலை.இந்த மூன்று வருடங்களில் இந்தியா முழுதும் தொழில் நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன்.
வசதியான சம்பளம்,இன்னும் பீரைத் தாண்டிப் போகாத மிதமான குடிப் பழக்கம்,நட்புடன் பழகிப் பின் இயல்பாக செக்ஸுக்கு இணங்கும் அழகிய இளம் பெண்களுடன் அவ்வப்போது கவித்துவமான பாலின்பம்,தேர்ந்தெடுத்த தரமான இன்னிசை,மனதைப் பாதிக்கும் புத்தகங்கள் என்ற இன்றைய நவீன இளைஞனின் அத்தனை அனுபவங்களும் எனக்குமுண்டு.
மதுரையில் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பும் நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து என் மடிக் கணிணியில் ஒரு மின்கடிதம் வந்தது.குற்றாலம், செங்கோட்டை தாண்டிக் கொல்லம் செல்லும் வழியில் கேரள மாநிலத்தில் இருக்கும் இன்னொரு வடிக்கையாளரையும் பார்த்து, ஏதாவது பணி இருந்தால் முடித்து விட்டு, அங்கு வர வேண்டிய ஏழு லடசம் ரூபாயை நான் வாங்கி வர வேண்டும் என ஜி.எம்.அதில் கூறியிருந்தார். மதுரையில் ஓட்டல் அறையைக் காலி செய்து விட்டு எனது வெள்ளை நிறக் க்வாலிஸ் காரில் அன்று காலை பத்து மணிவாக்கில் குற்றாலம் கிளம்பினேன்.
பகல் ஒரு மணிக்கெல்லாம் குற்றாலம் சென்றுவிட்ட நான் மெயின் அருவியில் குளிரக் குளிர நீராடினேன். தண்ணீரை நான் மிகவும் நேசிப்பது குற்றாலத்தில்தான்.உடம்புக்குள் மட்டுமல்லாமல் மனதுக்குள்ளும் புகுந்து உற்சாகம் பரப்பும் ஆற்றல் அந்தக் குற்றாலத் தண்ணீருக்கே இருக்கிறது என அடிக்கடி நினைப்பேன்.
உடலுடம் மனதும் குளிர செங்கோட்டை செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பினேன்.எனது காரில் எப்போதும் ஒரு நூறு சி டி.களுக்கும் மேலே நான் வைத்திருப்பேன்.யானி,என்யா,எனிக்மா,ஏ.ஆர்.ரஹ்மான்,ரிச்சர்ட் க்ளேடர்மேன்,பால் மாரி(யட்),கென்னி.ஜி,ஹார்ரிஸ் ஜெயராஜ், சாம்ஃபிர் ,விச்வநாதன்-ராமமூர்த்தி,செலின் டியான்,புத்தா பார் இப்படி ஏராளமான இசைக் கலெக்ஷன் என்னிடம் எப்போதும் இருக்கும்.
தனிமையான நெடுந்தொலைவுக் கார்ப் பயணங்களுக்கு நல்ல இசையை விட வேறு நல்ல கம்பனி கிடையாது என்பது எனது தீர்க்கமான எண்ணம்.
செங்கோட்டை தாண்டி மலைப் பாதையில் கொல்லம் செல்ல வேண்டும்.மலைப் பாதையில் சிறிது தொலைவு சென்றதும் மீண்டும் மலை மேல் சம தளம் ஆரம்பிக்கும்.
கேரளா செக் போஸ்ட் தாண்டியதும் இயற்கை படுகுஷியாக உங்களை வரவேற்கும்.சாலையின் இரண்டு பக்கங்களிலும், விண்ணை எட்டித் தொட்டு விட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு நெடிதுயர்ந்து வளர்ந்த காட்டு மரங்கள்..மலைக் காடுகளுக்கே உரிய கரும் பச்சை உங்கள் கண்களில் வந்து அப்பிக் கொள்ளும்.அவ்வப்போது சாலையை அணைத்த படியே ஓடும் சிற்றோடைகள் உங்களைக் கொஞ்சியபடியே,ஆனால் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் பாராமல் ஓடிக் கொண்டிருக்கும்..ஆரியங் காவு தாண்டி அச்சன் கோவில் செல்லும் வழியில் மழை தூற ஆரம்பித்து விட்டது.
சிலு சிலுவென்ற மழை.காரின் ஏ.சிக் குளிர்.யானியின் குழையும் பியானோ.குற்றாலக் குளியல் வேறு.
'GOD'S OWN COUNTRY'என்று கேரளா சுற்றுலாத் துறை தங்கள் மாநிலத்தை வருணிப்பது நூற்றுக்கு நூறு சரியே என்று ரசித்தபடியே நான் வரவேண்டிய கன்னிகா புரத்தை அடைந்தேன்.மெயின் ரோட்டிலிருந்து இடது புறம் மண் பாதையில் ஒரு கி.மீ.சென்றதும் வந்தது, எனது வாடிக்கையாளரின் முகவரியான கன்னிகா பரமேஸ்வரி ஆலயம்.
நன்கு செதுக்கிக், கெட்டி தட்டிச், சீர் செய்து பராமரிக்கப் பட்ட ஒரு செம்மண் சதுக்கத்தில் இருந்தது அந்தக் கோவில்.கோவிலைச் சுற்றி வித விதமான மலர்ச் செடிகளும் கொடிகளும் வசந்தத்தின் போதையேறிப் பூத்துத் தள்ளியிருந்தன.எல்லா இடங்களிலும் நிறங்களின் இரைச்சல்.
நான் அங்கு சென்ற போது மாலை மூன்று மணி இருக்கும்.யாரோ ஒரு தனி நபர் கோவிலைப் புதிதாகக் கட்டி முடித்திருக்கிறார் போலிருக்கிறது. எங்கள்கம்பெனியிலிருந்து அவர்தான் கிரானைட் கற்கள் வாங்கி இருந்தார்.புதிதான கையோடுகளும்,விலை உயர்ந்த தேக்கு மர வேலைப் பாடுகளும், சுத்தமான பராமரிப்பும் கோவிலக் கலைநயம் மிக்க ஒரு படைப்பாக்கி இருந்தது.அந்த மழை தூறும் மாலைப் பொழுதில் பத்துப் பதினைந்து பக்தகோடிகளே கோவிலில் இருந்தனர்.அமைதியான ஆலயச் சூழலில் அவ்வப்போது கேட்கும் கோவில் மணி ஓசை ஸென் தியானத்தை நினைவூட்டியது.
கோவில் பராமரிப்பை ஏற்றிருந்த ஒரு நம்பூதிரி காரை நிறுத்தி விட்டு நான் அருகில் சென்றதும் நமஸ்கரித்தார்.முகத்தில் அப்படி ஒரு சாந்தம்.கிரானைட் கற்கள் பதித்த உள்பிரகாரத்தைச் சுற்றிக்காட்டினார் நம்பூதிரி.
கிரானைட் கற்களின் பளபளக்கும் கட்டங் கறுப்பில், கோவில் விளக்குகளின் ஒளி,மஞ்சள் பாதரசத்தைச் சிந்தி விட்டாற் போலச் சிதறிக் கிடந்தது. சிற்பியோ,யாரோ ,கோவிலுக்குள் நுழைந்ததும் முதன் முதலில் செதுக்கி வைத்திருந்தது ஒரு விநாயகர் சிலையை.
விநாயகர் என்றால் அப்படி ஒரு அழகு.கரும் பளிங்கில்,நான் பார்த்த எல்லா விநாயகரையும் விட இவர் சூப்பர்.உண்மையான யானையே அழகு.அதனினும் அழகு, அதன் தலை மட்டும் கொலுக் முலுக்கென்று இருக்கும் ஒரு மனிதக் குழந்தையின் உடலுடன் ஒட்டி இருக்கும் கணபதியின் ரூபம்.எனக்குக் கணபதியின் கவிதையைச் சொன்னவன் காவிகட்டி மொட்டை அடித்திருந்த ஒரு அமெரிக்கச் சுற்றுலாப் பயணி.நேபாளத்தின் பார் ஒன்றில்.
யானையின் அபரிமிதமான ஆற்றல்.ஆனால் அந்த ஆற்றல் தேங்கி இருக்கும் இடமோ ஒரு குழந்தையினிடம்.இதுதான் விநாயகப் பெருமானின் வடிவம் நமக்கு வழங்கும் குறியீடு
'நீயும் கணபதியைக் கும்பிடும் போது உனக்கு யானைத் தலை இருப்பதாகக் கற்பனை செய்து கொள்.உனது சக்தி யானை பலமாகப் பெருகிச், செய்யும் காரியத்தை முடிக்க உதவும்' என்று அங்கேதான் அருளிச் செய்தான் அவன்.
எனது விநாயக நினைவுகளைப் பாதியிலேயே இடைமறித்து கோவிலுக்குள்ளே கூட்டிச் சென்றார், நம்பூதிரி.
கேரளக் கோவில்களுக்கே உரிய சின்னஞ்சிறு கர்ப்பகிரஹம்.சிறிய தேக்கு நிலைப் படியுடன் கூடிய கருவறை வாசல்.அர்ச்சகர் உட்கார்ந்தபடிதான் தீபாராதனையே காட்ட முடியும்.நான் சென்ற போது தீபாராதனை நடந்து கொண்டிருந்தது.அர்ச்சகரின் கரங்களில் இருந்த அடுக்கடுக்கான விளக்கின் ஒளியில் கன்னிகா பரமேஸ்வரி கறுப்புத் தேவதையாக மிளிர்ந்தாள்.
இரண்டடி உயரம்தான் இருக்கும் தேவியின் கரும்பளிங்குச் சிலை.ஆனால் அழகின் கடல்.மனிதப் பெண் வடிவை ரசித்த உச்ச கட்டக் கிறுகிறுப்பில் சிற்பி அந்தச் சிலையைச் செதுக்கியிருந்தான்.தேவியின் முகம் போல் யாருக்காவது உண்மைப் பெண்ணுக்கு இருக்குமானால் உலகமே அவளது அழகில் மயங்கி அவளது பாதங்களில் விழுந்து விடும்.கண்களை மூடி கும்பிட்ட போதுதான் அந்தச் சிலையின் எழிலை இன்னும் ஆழமாக என்னுள் தரிசித்தேன்.
நிறையச் சமயங்களில் கண்கள் மூடியிருக்கும் போதுதான் நமது பார்வைகள் தீட்சண்யமாகின்றன.
மேலும் இரண்டு நாட்கள் எனக்குக் கோவிலில் வேலை இருப்பதாகச் சொல்லிக் குற்றலத்தில் அறை எடுத்துத் தங்கிக் கொள்வதாக நம்பூதிரியிடம் நான் சொன்ன போது அவர் விடவே இல்லை.கோவில் ட்ரஸ்டி கலகத்தாவில் இருந்து வந்தால் தங்குவதற்கான தனிப்பட்ட விருந்தினர் இல்லம் இரண்டு கி.மீ. தள்ளி இருப்பதாகக் கூறி நான் தாராளமாக அங்கேயே தங்கலாம் என்றார் அவர்.இரண்டு கி.மீ.க்கு அப்பால் மலை முகட்டில் அமைந்திருக்கும் அந்த விருந்தினர் இல்லம் உண்மையில் உங்களைப் பரவசப் படுத்தும் என்று உறுதி அளித்து 'டேய் கேசவா, இவ்விட வரூ' என்று யாரையோ கூப்பிட ஒரு முப்பது வயது ஆள் ஓடி வந்தான்.இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி.மேலே சட்டை எதுவும் அணியாமல் ஒரு துண்டை மட்டும் தோளில் போட்டிருந்தான்.என்னைப் பார்த்ததும் அவன் பணிவாகச் சிரித்தபடி கும்பிட்டான்.அவனைத் தள்ளிக் கூப்பிட்டுப் போய் ஏதேதோ கட்டளைகள் இட்டவர் என்னை அவனுடன் அனுப்பி வைத்தார்.
நம்பூதிரி அந்த விருந்தினர் இல்லத்தைப் பற்றி சொன்னது எவ்வளவு உண்மை என்பது அந்த மலைமுகட்டு வீட்டைப் பார்த்தவுடன்தான் எனக்குப் புரிந்தது.
அந்தி இருள் இன்னும் பழுக்கத் தொடங்க வில்லை.அந்த அறைகுறை வெளிச்சத்திலேயே மலைப் பாதை மனதை அள்ளிக் கொண்டு போனது.எவ்வளவு நலிவுற்ற ஜீவனும் அந்த மலைப் பாதையின் வழியே ஒரு முறை சென்றால் உயிர் வாழ்க்கை எவ்வளவு கிடைத்தற்கரிய பேறு என்பதை உணர்ந்து இயற்கை அழகின் , களிப்பில் கரைந்தே விடுவாN.
சுற்றிலும் மலைத் தொடர்கள் நடுவே அந்த வீடு எளிமையின் கவிதை. அடிஆழம் வரை பனியாய் இறங்கும் அமைதி.சத்தம் போடாத மழைக் காற்றின் கிசுகிசுப்பு..துப்புரவான சுகம்..
நான் களைப்பு நீங்கிக் குளிக்கக் கேசவன் வெந்நீர் போட்டுக் கொடுத்தான்.குளித்து முடித்து விட்டு வந்ததும் தலையைத் துவட்டி விட்டு,ஸாம்ஃபிரின் பேன் புல்லாங் குழலின் இன்னிசையை மடிக்கணிணி மூலம் மிதக்க விட்டேன்.அந்த ஐரிஷ் புல்லாங் குழல் மழை இருட்டைச் சுற்றிச் சுற்றி வந்து முத்தமிட்டுக் கொண்டே இருந்தது.
இன்னொரு சுகமான, பீர் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் குடித்ததும் கேசவன் வறுத்த முந்திரிப் பருப்புக்களை ஒரு அழகிய பீங்கான் தட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு முறுவலித்தான்.இரவு உணவு புட்டும் பயறும் பப்படமும் என்றான்.
நான் இரண்டு மடக்கு பீர் குடிக்கும் வரை காத்திருந்தவன்,அடிக் குரலில் 'சாரே' என்றான். மெல்லிய போதைக்கே கிளம்பும் நெருக்கத்துடன் 'என்ன கேசவா?'என்றேன்.
'கம்பெனி வேணுங்கிலும் இவ்விடே உண்டு?'என்று அவன் சொன்னவுடன் எனக்குப் புரியவில்லை.
'என்ன?'
'சாருக்குப் பெண் கம்பெனி வேணுங்கிலும் ஞான் அர்ரேஞ்ச் பண்ணும் 'என்றான் கேசவன்.
'இங்கியா?'என்ரேன் நான் திகைப்புடன்.
'படு சுந்தரமான குட்டி.அழைச்சுட்டு வரட்டே?'என்று அவன் கேட்டவுடன் பாதி பீர் பாட்டிலை ஒரே மூச்சில் காலி செய்தேன். புல்லாங் குழலும்,பீரும்,மீதி இருக்கும் ஒரே போதையான பெண்ணுக்கும் அனுமதி தர நான் தலையாட்டினேன்.கேசவன் வெளியே சென்றான்.ஸாம்ஃபிர், டைட்டானிக் பாட்டைப் புல்லாங் குழலில் கரைத்துக் கரைத்து ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்தார்.
பத்தே நிமிடங்களில் கேசவன் வந்து விட்டான்.கண்கள் மூடி இசையில் சொக்கிக் கிடந்தவனை அவனது கிசு கிசு குரல்தான் எழுப்பி விட்டது.'குட்டி வந்நு' என்றவன் வெளியே நிற்கும் யாரையோ பார்த்து 'உள்ளே வர்ரூ குட்டி' என்றான்.
நான் கதவையே பார்த்திருக்க உள்ளே வந்து நின்றாள் அவள்.
கன்னிகா.
ஒரு மென்மையான சுனாமி என் ஆத்மாவையே அடித்துக் கொண்டு போனது அந்த இரவில்தான்.
(அழகின் அலைகள் தொடர்ந்து வீசும்)

30 கருத்துகள்:

  1. இப்போ தான் முதல் முறை உங்கள் படித்துறை பக்கம் வந்தேன்.
    கதை தூள். ப்ளீஸ் உடனே மூன்றாம் பாகம் / முழு கதை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த பகுதிக்கு நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறேன்!. சீக்கிரமாக என் காத்திருத்தலை முடித்து வைக்கவும். :)

    பதிலளிநீக்கு
  3. சார்.. அழகான வர்ணணைகள், கேரளாவை கண்முன்னே விரிக்கிறது.. நீங்கள் நிறுத்தியிருக்கும் இடம் சூப்பர். அடுத்து எப்ப வரும்னு எதிர்பார்க்க வச்சிட்டீங்க.. கண் முன்னே.. படம் ஓடுகிறது..

    பதிலளிநீக்கு
  4. ஆஹா சரியான எடத்துல ஒரு பிரேக்.நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  5. //விஜி சுந்தரராஜன் சொன்னது…
    இப்போ தான் முதல் முறை உங்கள் படித்துறை பக்கம் வந்தேன்.
    கதை தூள். ப்ளீஸ் உடனே மூன்றாம் பாகம் / முழு கதை சொல்லுங்க.//

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி,விஜி.திரும்பவும் வருக.

    பதிலளிநீக்கு
  6. //நல்லதந்தி கூறியது...
    அடுத்த பகுதிக்கு நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறேன்!. சீக்கிரமாக என் காத்திருத்தலை முடித்து வைக்கவும். //

    கொஞ்சம் ரிஸ்கியான கதையாக எடுத்துக் கொண்டதால் நிறைய யோசித்துப், பல புத்தகங்கள் படித்து எழுதவேண்டியிருக்கிறது,நண்பரே.உங்கள் பாராட்டே என்னை வழி நடத்திச் செல்லும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //Cable Sankar கூறியது...
    சார்.. அழகான வர்ணணைகள், கேரளாவை கண்முன்னே விரிக்கிறது.. நீங்கள் நிறுத்தியிருக்கும் இடம் சூப்பர். அடுத்து எப்ப வரும்னு எதிர்பார்க்க வச்சிட்டீங்க..//

    நன்றி ஷங்கர்.உங்கள் எதிர் பார்ப்பைச் சமாளிக்கப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. //குடுகுடுப்பை கூறியது...
    ஆஹா சரியான எடத்துல ஒரு பிரேக்.நடக்கட்டும்//
    படித்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி குடுகுடுப்பையாரே!

    பதிலளிநீக்கு
  9. சார். கலக்கிடிங்க... சென்ற வருடம் கேரளா சென்றது நினைவுக்கு வந்தது...



    அய்யோ குடும்பத்தோடதான் சார்.. அப்படியெல்லாம் நினைக்காதிங்க...

    அடுதத பதிவு சீக்கிரமா சார்..?? அதுவும் எங்க வந்து நிறுத்திட்டிங்க.. பாருங்க.. ???

    பதிலளிநீக்கு
  10. //வண்ணத்துபூச்சியார் சொன்னது…
    சார். கலக்கிடிங்க... சென்ற வருடம் கேரளா சென்றது நினைவுக்கு வந்தது...



    அய்யோ குடும்பத்தோடதான் சார்.. அப்படியெல்லாம் நினைக்காதிங்க...

    அடுதத பதிவு சீக்கிரமா சார்..?? அதுவும் எங்க வந்து நிறுத்திட்டிங்க.. பாருங்க.. ???//
    ந்ன்றி சார்.உங்கள் பதிவை நான் மூன்று நாட்களாக ஓபன் பண்ண முடியவில்லையே சார்.'இந்தப் பதிவு இடம் பெறவில்லை' என்ற அறிவிப்புத்தான் வருகிறது.உங்கள் படங்களின் தலைப்புக்களை மட்டுமே பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமையாக போகிறது கதை. கேரளாவுக்கே சென்ற எஃபக்ட் :)

    அடுத்த பாகத்திற்க்கு வெய்ட்டிங்!

    பதிலளிநீக்கு
  12. //மங்களூர் சிவா சொன்னது…
    அருமையாக போகிறது கதை. கேரளாவுக்கே சென்ற எஃபக்ட் :)

    அடுத்த பாகத்திற்க்கு வெய்ட்டிங்!//


    THANK YOU SIVA.I AM SERIOUSLY WORKING TO MEET YOUR EXPECTATIONS.

    பதிலளிநீக்கு
  13. "தடங்கலுக்கு வருந்துகிறோம்"

    விரைவில் பதிவேற்றப்படும்.

    பதிலளிநீக்கு
  14. வண்ணத்துபூச்சியார் கூறியது...
    "தடங்கலுக்கு வருந்துகிறோம்"

    விரைவில் பதிவேற்றப்படும்.//

    THANK YOU SIR.EXPECTING TO SEE YOU SOON IN YOUR BLOG.

    பதிலளிநீக்கு
  15. நல்ல திரில்லர் படம் பார்த்த அனுபவம். அழகை வர்ணிக்க நீங்கள் கையாண்டிருக்கும் வார்த்தைகள் அழகு!

    நாவலாக வெளிவந்தால் இந்தக் கதை சக்கை போடு போடும்... திரைப்படமாக வெற்றி பெறுமா என்பது சந்தேகமே...

    சரியான இடத்தில் நிறுத்தியுள்ளீர்கள். அதிக காலம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக அடுத்த பாகத்தை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. //பிரேம் கூறியது...
    நல்ல திரில்லர் படம் பார்த்த அனுபவம். அழகை வர்ணிக்க நீங்கள் கையாண்டிருக்கும் வார்த்தைகள் அழகு!

    நாவலாக வெளிவந்தால் இந்தக் கதை சக்கை போடு போடும்... திரைப்படமாக வெற்றி பெறுமா என்பது சந்தேகமே...

    சரியான இடத்தில் நிறுத்தியுள்ளீர்கள். அதிக காலம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக அடுத்த பாகத்தை தொடருங்கள//

    நன்றி பிரேம்.தங்கள் சொன்ன கருத்து சரியே.நாவலாக எழுதினால்தான் கதையின் பிற்பகுதியில் நான் சொல்ல நினைக்கும் நுட்பமான ஆன்மீகக் கருத்துக்களைச் சொல்ல முடியும்.'DAVINCY CODE 'ஐப் போல.

    பதிலளிநீக்கு
  17. நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு,கதை ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. ஜப்பானில் பரீட்சைக்கு நேரமாச்சு

    புதிய பதிவு ..

    உங்கள் வருகைக்காக காத்திருக்கிறது..

    பதிலளிநீக்கு
  19. //வண்ணத்துபூச்சியார் கூறியது...
    ஜப்பானில் பரீட்சைக்கு நேரமாச்சு

    புதிய பதிவு ..

    உங்கள் வருகைக்காக காத்திருக்கிறது..//

    கண்டிப்பாகப் பார்க்கிறேன் வண்ணத்துபூச்சியாரே.நன்றி.

    பதிலளிநீக்கு
  20. //துரியோதனன் கூறியது...
    நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு,கதை ரொம்ப நல்லா இருக்கு.//

    நன்றி.மிக நன்றி.மிக மிக நன்றி,துரியோதனன் சார்.

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் இரண்டாவது பாகத்தை வெளிட்ட அன்றே படித்துவிட்டேன் கருத்துரை தாமத்திற்கு மன்னிக்கவும்..
    என்னை பொறுத்தவரை முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு சற்று குறைந்தது போல ஒரு உணர்வு..( இது கூட தாமத்திற்கு காரணம் )
    இந்த பாகத்தில் காட்சிகளின் வர்ணனைகள் விரிவாக இருந்தாலும் (இருப்பதால்) கண்முன் விரிவடையவில்லை போன்ற உணர்வு... மூலாதாரம் பற்றிய விபரங்களும் படிப்பதற்கு நன்றக இருக்கிறது.. ஆனால் முழுமையாக புரிந்து கொள்ள (என்னால்) முடியவில்லை.... (ஒரு வேலை இந்த கதைக்கு அவைகளின் விரிவாக்கம் தேவை இல்லை என்று தோன்றியதாலோ ?)..
    இந்த மாதிரி கதைகளுக்கு உங்கள் முதல் பாகத்தில் உள்ளது போன்ற எழுத்துநடை மட்டுமே கட்சிகளை கண்முன் நிறுத்துகிறது..
    மற்றபடி கதைக்கு தேவையான ஆர்வத்தை துண்டும் வகையில் தொடரும் போட்டு இருங்கீங்க ... உங்களின் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் பார்கிறேன் .
    இந்த மாதிரி ஒரு கருத்துரை வெளிட்டதிற்கு மன்னிக்கவும்.. உங்கள் முதல் பாகத்தை போன்ற ஒரு விறுவிறுப்பை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு சற்று ஏமாற்றம் தான்... என் மனதில் தோன்றியதை சொல்லிஇருகிறேன் .. தவறு என்று தோன்றினால் இந்த கருத்துரைஐ அழித்து விடவும்.. (ஷன்முகப்ரியன் சார் அவர்களின் வாசர்கர்களும் மன்னித்து மறந்துவிடுங்கள்..)
    - கிஷோர்

    பதிலளிநீக்கு
  22. சார்,
    நான் படித்துறைக்கு புதுசு.
    இவளோ நாள் படிக்காம இருந்தச்சேனு இப்ப நினைக்கிறேன்.
    அழகான வர்ணனைகள்.
    காட்சியயை நம் கண் முன்னே அப்படியே விரிவு படுத்துகின்றது.

    அதுவும் இதுக்கு அப்புறம் வரப்போற நுட்பமான ஆன்மிக விஷயங்களை ஆர்வமோடு எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. //kishore சொன்னது…இந்த மாதிரி ஒரு கருத்துரை வெளிட்டதிற்கு மன்னிக்கவும்.. உங்கள் முதல் பாகத்தை போன்ற ஒரு விறுவிறுப்பை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு சற்று ஏமாற்றம் தான்... என் மனதில் தோன்றியதை சொல்லிஇருகிறேன் .. தவறு என்று தோன்றினால் இந்த கருத்துரைஐ அழித்து விடவும்.. (ஷன்முகப்ரியன் சார் அவர்களின் வாசர்கர்களும் மன்னித்து மறந்துவிடுங்கள்..)
    - கிஷோர்//
    //படைப்பவனுக்குப் படைப்பின் மேல் எவ்வளவு உரிமை இருக்கிறதோ அது வெளியான பின் ரசிகனுக்கும் அதே உரிமை இருக்கிறது.உங்கள் கருத்துரையை மனதில் கொண்டேன்.அடுத்த பாகங்களில் உங்கள் ரசனையை நிறைவுறச் செய்ய முயல்கிறேன்.நன்றி கிஷோர்.

    பதிலளிநீக்கு
  24. //vinoth gowtham கூறியது...
    சார்,
    நான் படித்துறைக்கு புதுசு.
    இவளோ நாள் படிக்காம இருந்தச்சேனு இப்ப நினைக்கிறேன்.
    அழகான வர்ணனைகள்.
    காட்சியயை நம் கண் முன்னே அப்படியே விரிவு படுத்துகின்றது.

    அதுவும் இதுக்கு அப்புறம் வரப்போற நுட்பமான ஆன்மிக விஷயங்களை ஆர்வமோடு எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.//

    //தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி வினோத் கௌதம்.

    பதிலளிநீக்கு
  25. கருத்து சொல்லிய பின்பு இப்படி ஒரு கருத்து வெளிஇட்டிருக்க கூடாதோ என்று நினைத்து கொண்டிருந்தேன்... நீங்கள் அதை வெளி இட்டு விளக்கம் அளித்து இருக்கிறிர்கள். நீங்கள் என் கருத்தை மதித்து பதில் அளித்ததற்கு நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  26. 2-ம் பாகம் இன்னும் வரலைன்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.. எப்ப எழுதுனீங்க..?

    சரி.. சரி.. ரொம்ப ஆர்வமாத்தான் இருக்கு.. ஆனா கொஞ்சம் பாராவுக்கு பாரா இடைவெளி விட்டீங்கன்னா படிக்கிறதுக்கு தோதா இருக்கும்..!

    பதிலளிநீக்கு
  27. நல்லாப்போகுது கதை..அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும்...

    மோகன்.

    பதிலளிநீக்கு
  28. //உங்கள் நண்பன் சொன்னது…
    நல்லாப்போகுது கதை..அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும்...

    மோகன்.//
    நன்றி மோகன்.உங்கள் வரவு நல்வரவாகுக.

    பதிலளிநீக்கு
  29. கதையில் உங்கள்(திரைக்கதை) அனுபவம் பளிச்சிடுகிறது. நான் இன்றுதான் உங்கள் ப்ளாக் படிக்கிறேன். மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  30. //Vetri சொன்னது…
    கதையில் உங்கள்(திரைக்கதை) அனுபவம் பளிச்சிடுகிறது. நான் இன்றுதான் உங்கள் ப்ளாக் படிக்கிறேன். மிகவும் அருமை.//

    பாராட்டுக்கு நன்றி வெற்றி.மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு