புதன், அக்டோபர் 28, 2009

காதல மலரும் கணங்கள் 8

அமிர்தவர்ஷினி
---------------------
8.
'கோதாவரி ஆத்தங்கரையில், சேலத்துக்குப் பக்கத்துலே இருக்கற ஊர்ப் பேரிலேயே தர்மபுரின்னு ஒரு புனித ஸ்தலம் இருக்கு.' என்று இரண்டு நாட்கள் கழித்துச் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷிணி.

கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.
'தர்மபுரியிலே கோதாவரி ஆத்தங்கரையில் இருக்கிற ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்.ஆயிரம் வருஷத்துக் கோவில்ன்னு சொல்றாங்க.அங்கே ஒரு ஐம்பது வயசிருக்கிற அம்மா, பத்து வயசிலே இருந்தே தங்கிட்டிருக்காங்க.பெரிசாக் குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு, எப்பவுமே மஞ்சப் புடவைதான் கட்டிட்டிருப்பாங்க.அவங்களைக் கோதாவரி அம்மான்னுதான் அந்த ஏரியாவிலே இருக்கிறவங்க எல்லாம் கூப்பிடறாங்க.ரொம்ப சக்தி வாய்ஞ்சவங்க.அவங்க கூட நான் ஒரு மூணு மாசம் தங்கியிருந்தேன்' என்றாள் அவள்.
என்னிடம் எதற்கு இதைச் சொல்கிறாள் என்பதைப் போல் நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அமிர்தவர்ஷிணி கோதாவரி அம்மாவின் மஞ்சள் புடவையை அதிகாலையில் இருந்து வெகுநேரம் துவைத்துக் கொண்டிருந்தாள்.
'அமிர்தவர்ஷிணி' என்றார்கள் கோதாவரி அம்மா அவளது அருகில் வந்து நின்று,அவளது பெயரை அம்மா எப்போதுமே முழுமையாகத்தான் கூப்பிடுவார்களாம்.
'இவவளவு நேரமாவா ஒரு புடவையைத் துவைச்சிட்டிருக்கே?' என்று கேட்டார்கள் அம்மா தெலுங்கில்.
'ஆமாம்மா! பாருங்க, உங்க புடவையிலே இருந்த எண்ணைக் கறை போயே போயிடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி,முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழிய.
பிரம்மாண்டமான அந்த நதியின் மறுபக்கத்தில், அதனுடைய குளுமையில் குளித்து விட்டு சூரியன் அப்போதுதான் உதித்துக் கொண்டிருக்கிறான்.

'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே?' என்றார்கள்,அம்மா.
அமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.
'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

கோதாவரி அம்மா அவ்வளவு சத்தம் போட்டுச் சிரித்ததை அதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
கண்ணில் நீர் வரச் சிரித்த அம்மா, அப்போது சொன்ன வார்த்தைகள்தான் இவை.
'உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்' என்ற அம்மா அவளது தலை மேல் கைவைத்து ஆசிர்வதித்துக் கண்களை மூடிய படியே சொன்னார்கள்.
'பெண்ணே,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும், இந்தக் கோதாவரி மாதிரியே.அந்தப் பாக்கியசாலிக்கும் சேர்த்து இந்த ஆசிர்வாதம்!' என்று சொல்லி விட்டு கோதாவரி அம்மா, நதியின் தண்ணீரைக் கைகளால் அள்ளி அவள் தலை மேல் தெளித்தார்கள்.
அமிர்தவர்ஷிணி இந்தச் சம்பவத்தைச் சொன்னதின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு திடீர்ன்னு ஒருநாள் டாக்டர்க சொல்றாங்க.இன்னொரு நாள் திடீர்ன்னு நீ வந்து, ஆஜ்மீர் பாபா,கோதாவரி அம்மா பேரை எல்லாம் சொல்லி நீ சாக மாட்டேன்னு சொல்றே.கெமோதெராபின்னு யாருக்குமே நடக்கக் கூடாத கொடுமையான சாபம் ஒரு நாள். அமிர்தவர்ஷிணின்னு யாருக்குமே கிடைக்க முடியாத வரம் இன்னொரு நாள்.யாரோ அவங்க கண்ணையும் கட்டிட்டு,என் கண்ணையும் கட்டிட்டு என் கூட ஃபுட்பால் விளையாடிட்டிருக்காங்க வர்ஷிணி.என்ன,காலே போனதுக்கப்புறம் நான் ஆடற ஃபுட்பால் மேட்ச்' என்றேன் சோர்வாக.

அவள் ஆதரவுடன் எனது கையைப் பற்றிக் கொண்டாள்.

'எதை நம்புறதுன்னே தெரியலே.எவ்வளவுதான் லைட் அடிச்சாலும் ரெண்டடிக்கு மேலே வெளிச்சம் தெரியாத நீளமான இருட்டுக் குகைக்குள்ளே நடந்துட்டிருக்கிற மாதிரி இருக்கு,எனக்கு.' என்றேன் நான்.
அவள் மெல்லச் சிரித்தாள்.
'ஏன் சிரிக்கிறே?'
'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'என்றாள் அவள்.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ சட்டென்று விழித்தாற்போலத் தெரிந்து மனமே லேசாகியது.அவளை இழுத்து எனது மார்போடு சாய்த்துக் கொண்டேன்.அவளது முகத்தை நிமிர்த்திச் சொன்னேன்.
'இப்போ இந்த ரெண்டடி வெளிச்சத்துலே நீ மாத்திரம்தான் தெரியறே,வர்ஷிணி' என்றேன் குரல் கனக்க.
எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.

'என்ன தைரியம் இருந்தா செத்துட்டிருக்கறவனை இப்படி லவ் பண்ணுவே?' என்றேன் அவளது முகத்தருகில்.
'நான் லவ் பண்றதே நீ சாகாமே இருக்குறுதுக்குத்தான்,முட்டாளே!' என்றாள் அவள் செல்லமாக.
அவளது உதடுகளில் முதன்முதலாக முத்தமிட்டேன்.
எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.
என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.
இதுவரை முத்தமிட்ட.இனிமேல் முத்தமிடப் போகும் கோடான கோடிக் கணக்கான முத்தங்களின் கடலில் எங்கள் முத்தமும் கலந்து, கரைந்தது.
மெல்ல விலகினோம்.
பிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.

அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அப்பா மதியம் வந்த போது அவரிடம் எங்களது காதலைச் சொன்னேன்.அவரிடம் நான் இதுவரை எதையுமே மறைத்ததில்லை.
சொன்ன போது எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் அப்பா.

'என்னப்பா சைலன்ட்டா இருக்கீங்க?உங்களுக்குப் பிடிக்கலியா?' என்று கேட்டேன் நான்.
அவர் என்னைக் கண்களின் ஈரத்தினூடே பார்த்தார்.

'வைட் செல் கௌன்ட் ஜாஸ்தி ஆயிட்டதினாலே அடுத்த வாரம் உனக்கு மறுபடியும் கெமோதெராபி ஆரம்பிக்கப் போறாராம் சீஃப் டாக்டர். கீழே என்னைப் பார்த்துட்டுச் சொன்னாரு.மே பி எ லிட்டில் பிட் ரிஸ்கியா இருக்கலாம்ன்னாருப்பா அவரு.'
மீண்டும் அதே இருட்டுக் குகை நீள ஆரம்பித்து விட்டது..

ஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.

அமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.

கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.

(தொடரும்)

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

காதல மலரும் கணங்கள் 7

அமிர்தவர்ஷினி
---------------------
7.
'இந்த அஞ்சு பேரு குடுத்த லவ் லெட்டர்ஸுக்கு என்ன பதில்ன்னு நீ சொல்லவே இல்லையே,வர்ஷிணி?' என்று அமிர்தவர்ஷிணியைக் கேட்டேன், எனது சுய இரக்கத்தின் அழுகையிலிருந்து மீண்டவுடன்.

'தேங்க்ஸுன்னு சொல்லி லெட்டர்ஸை எல்லாம் அவங்ககிட்டேயே திருப்பிக் குடுத்திடு,சரவணா' என்றாள் அவள் அமைதியாக.

ஏன் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

'இந்த மாதிரிப் பொண்ணுக வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இதே பொண்ணுதான் வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இவங்க எல்லாம் முதல் ரகம்.அதனாலேதான் லெட்டர்களைத் திருப்பிக் குடுக்கச் சொல்றேன்'என்றாள் அவள்.

'அவங்களை முதல் ரகம்ன்னு எப்படிச் சொல்றே?'
'பத்துப் பதினைஞ்சு நாள்ளே நீயே தெரிஞ்சுக்குவே!' என்றாள் அவள்.

அவள் சொன்னதைப் போலவே ஐந்து பேரில் மூன்று பேர் பதினைந்தே நாட்களில் தங்கள் கல்யாணப் பத்திரிகைகளைக் கொண்டு வந்து என்னிடம் தந்தார்கள்!

'எப்படி அவங்களைப் பத்தி இவ்வளவு கரக்டாச் சொன்னே,வர்ஷிணி?' என்று அவளிடம் கேட்டேன் நான், அவளிடம் அவர்களுடைய கல்யாணப் பத்திரிகைகளைக் காட்டி.

'சில பேருக்குள்ளே கல்யாண ஆசையைத் தூண்டி விடறதோட என் வேலை முடிஞ்சுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்,சரவணா' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

ஒருநாள் அவள் என்னிடம் சொன்ன தகவல்,வாழ்க்கைப் பாடத்தை அவள் எவ்வளவு ஆழமாக,அத்துபடியாகக் கற்று வைத்திருந்தாள் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

'இப்போ எல்லாம் என்ன சாப்பிட்டாலும்,நான் முந்தி மாதிரி வாந்தி எடுக்கறதில்லே,வர்ஷிணி'என்றேன் அவளிடம் ஒரு நாள் மாலை.
அன்று அவள் மாங்காயையும்,கேரட்டையும் பச்சையாகத் துருவிப் போட்டு பச்சைப் பயறு சுண்டல் கொண்டு வந்திருந்தாள்.நல்ல பசிக்கே வரும் ருசியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் தட்டில், இன்னும் சுண்டலை வைத்த படியே அவள் சொன்னாள்.

'ஏப்ரல்லே,நான் மும்பையில் ஒரு வைர வியாபாரி வீட்டுலே அவருக்கு உதவியா இருந்தேன்,சரவணா. நேமிசந்த்ன்னு பேரு.பெரிய கோடீஸ்வரன்.அவருக்கு கல்லீரல்லே புற்று நோய். டாக்டர் நிகொலஸ்ன்னு ,கேன்சர் ட்ரீட்மென்ட்லே ரொம்ப ஃபேமஸான அமெரிக்கன் டாக்டர் ஒருத்தர், அவருதான் நேமிசந்த் அய்யாவுக்கு கன்சல்டன்ட்..மாசத்துக்கு ஒருநாள் நேமிசந்த் அய்யாவை அட்டண்ட் பண்ரதுக்காகவே வாஷிங்டன்லே இருந்து டாக்டர் நிகொலஸ் வருவாரு.அப்போ அந்த டாக்டர் சொன்னது இன்னும் எனக்கு நல்லா ஞாபகத்துலே இருக்கு.என்னாலே மறக்கவே முடியாது.

'என்ன சொன்னார் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு.அது நம்ம மேலே முழுக்கச் சாஞ்சு,நசுக்கிடாமே தாங்கிப் பிடிச்சுட்டிருக்கிறது நம்ம நம்பிக்கைகளும்,ஆசைகளும்தான்.தீராத வியாதின்னு தெரிஞ்சவுடனே நோயாளி முதல்லே இழக்கறது அவனுடைய நம்பிக்கையைத்தான்.நம்பிக்கை போனவுடனே ஆசைகளும் அத்துப் போயிடுது.நோயாளிக்கு முன்னாலே சாகறது அவனோட ஆசைகளும்,நம்பிக்கையுந்தான்.அதனாலே அதைச் சாக விடாமே பார்த்துகிட்டாலே எந்த நோய்கிட்டே இருந்தும் தப்பிச்சுக்கலாம்பாரு அந்த டாக்டர்.'

அவள் சொன்னதில் இருந்த உண்மையை எனக்குள்ளேயே உணர்ந்து பார்த்தேன்.சரி என்பதைப் போலத்தான் தோன்றியது.

'இதை நீ குழந்தைககிட்டே இருந்துதான் கத்துக்க முடியும்பாரு அந்த டாக்டர்,சரவணா.குழந்தைகளைப் பாரு.எல்லாத்தையும் நம்பும்.எல்லாத்துக்கும் ஆசைப் படும்.அதனாலே அதுகளுக்கு வர்ர வியாதிகள் கிட்டே இருந்து அதனாலே சீக்கிரம் மீண்டுட முடியுது.நோயிலேயே பெரிய நோய், இதிலிருந்து மீள முடியுமாங்கிற சந்தேகந்தான்!'என்றாள் அவள்.

'புரியுது' என்றேன்.
அவள் எனக்கு முதல் நாள் தலைமாட்டில் வைத்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியின் சூட்சுமம் புரிந்தது.சரிந்து போயிருந்த எனது நம்பிக்கையை, முதலில் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற அவளது முயற்சியே அது.

கால கட்டத்துக்கும்,சமூகச் சூழலுக்கும் தகுந்த மாதிரி, நம்பிக்கை விதைகளை மனிதர்களுக்கு மத்தியில் தூவி வரும் ஞானிகளின் உளவியல் தந்திரமும் புரிந்தது.

'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்' என்று இன்னொரு நாள் அமிர்தவர்ஷிணி சொல்லி இருக்கிறாள்.

' நான் பார்க்கிற பத்தாவது கேன்ஸர் பேஷண்ட்,சரவணா நீ. உன்னை மாதிரியே நம்பிக்கை வளர,வளர அவங்க தேறிட்டே வந்ததை நான் என் கண் கூடப் பார்த்திருக்கேன்'

'நீ எனக்குத் துணையா வந்ததுக்கு அந்தக் கடவுளுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும்'என்றேன் நான்.

'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'என்றாள் அவள் புன்னகையுடன்.

மாத விலக்கான மூன்று நாட்களுக்கு அமிர்தவர்ஷிணி என்னைப் பார்க்க வரவில்லை.அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும்,வண்ணப் படமாகத் தெரிந்து கொண்டிருந்த உலகம், திடீரெனக் கறுப்பு வெள்ளைப் படம் போலத் தெரிந்தது எனக்கு.
ஒரு பெண்,ஒரு ஆணின் மனதுக்குள் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடியும் என்பதை எனக்குள்ளேயே நான் பார்த்த போது,நானே எனக்குப் பேரதிசயமானேன்.
கோளாறான புரஜக்டரைப் போல மனம் அவளது பிம்பங்களையே திருப்பித், திருப்பிச் சலிக்காமல் போட்டுக் கொண்டிருந்தது.
புன்னகையாலேயே செய்ததைப் போன்ற அவளது உதடுகள்,நாம் கண்களை மூடினாலும் நம் மூடிய கண்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருக்கும் அவளது விழிகள்,கிடைக்காதா என்ற ஏக்கத்தையும்,கிடைத்தால் என்ன செய்வதென்று தெரியாத பரவசத்தையும் ஒருசேர வழங்கும் அவளது அழகிய உடல்...

மூன்று நாட்கள் கழிவதற்கு மூன்று ஜென்மங்களாக, நான்காம் நாள் மாலை அமிர்தவர்ஷிணி வந்தாள்.கறுப்பு ஜீன்ஸ்,மேலே வெள்ளை டி.ஷர்ட்.கழுத்தில் ஏதோ ரூபி மணிமாலை.
உலர்ந்த கருங் கூந்தலை அவள் தளர்வாக விட்டிருந்தது, நமது மனதை இறுக்கி முறுக்கவே என்று தோன்றியது.

'எப்படி இருக்கே சரவணா?' என்றாள் அவள்,புன்னகையுடன்.

முள் ஏறிய காலைக் கல்லில் தேய்த்தாற் போல ஒரு இதமான வலிதான் காதல் என்றால், அது பெருமழையாய் என்னுள் கொட்டிக் கொண்டிருந்தது.

எனது கனத்த மௌனமே எனக்காக அவளுடன் பேசியது.

பல நிமிடங்கள் இந்த உலகத்தைப் பற்றிப் பேசி விட்டு, மெல்ல எங்கள் உலகத்துக்குப் போனோம்.

அப்போதுதான் நேற்று இரவு அவள் கண்ட கனவை எனக்குச் சொன்னாள் அவள்.

அவளுடைய தாய்,தந்தையைப் பறிகொடுத்த அதே ரிஷிகேஷ் கங்கையின் படித்துறையில் நானும் அவளும் நீராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அடிவானம் வரை யாருமற்றுக், கங்கை மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் பூமியில் நானும் அவளும் மட்டுமே.
வெறுமனே ஒரு வெள்ளைக் காட்டன் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்த அவளது புடவை சற்றே விலகி,அவளது மேனியின் வெண்மையைப் பறை சாற்ற, எனது கவனம் மாறியதைக் கண்ட அவள், கங்கையின் பனி நீரை என் மேல் விளையாட்டாக எறிய,வழுக்கி விழுந்தவன் போல ஏமாற்ற நினைத்தவன் உண்மையில் வழுக்கி விழுந்து கங்கையின் பிரவாகத்தில் கலந்து விட்டேன். அவள் தாய் தந்தையை அடித்துக் கொண்டு போன கங்கை என்னையும் அடித்துக் கொண்டு போவதைப் பார்த்த அமிர்தவர்ஷிணி பதறிப் போனாள்.

'சரவணா' என்று கத்திக் கொண்டு அவளும் நீரில் பாய்ந்து விட்டாள்.சில நிமிடங்களில் எனது பாதங்களைப் பற்றியவள் வெறியுடன் நீந்தி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள இருவரையுமே கங்கை அடித்துக் கொண்டு போனது.

சற்றுக் கழித்து அவள் மட்டுமே கண் விழித்துப் பார்க்க, கங்கைக் கரையின் ஒரு பச்சைப் புல்தரையில் அவள் மட்டுமே தனியாக ஒதுங்கிக் கிடக்க, என்னைத் தனது உயிரையே தேடுவதைப் போல அவள் தேடுகிறாள். பத்தடி தொலைவில் நான் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து எழுந்து ஓடி வருகிறாள்.என் மேல் அமர்ந்து எனது நெஞ்சைக் குத்துகிறாள்.சில நொடிகளில் அவளது தீவிர முயற்சியினால் நான் குடித்த கங்கை நீரெல்லாம் மூக்கு,வாய் வழியே வெளியேற நான் மெல்லக் கண் விழித்து என் மேல் அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன்.

எனக்கு உயிர் வந்ததைப் பார்த்ததும்தான் அவளுக்கு உயிரே வருகிறது.

மெல்ல எனது பார்வை அவளது கழுத்துக்குக் கீழே சென்றதும்தான், கங்கை அவளது மேலாடை முழுதையுமே கலைத்து அவளைத், துணிகளற்ற வெற்று மார்புகளுடனே என் மேல் அமர வைத்திருக்கிறது என்பதை உணர்கிறாள்,அமிர்தவர்ஷிணி.

இதற்கு மேல் மலரவே மாட்டேன் என்று வரம் வாங்கிக் கொண்டு வந்த தாமரை மொட்டுக்களைப் போன்ற அவளது இளம் மார்புகள், கங்கை நீர் சொட்டச் சொட்ட எனது உயிருக்கு உற்சாகமூட்டிக் கொண்டு நின்றன.

எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதை விடப்,பார்க்கப் படாமலிருக்கும் போது அதிகம் வாதித்தன அந்தப் பெண் மார்புகள்.

கனவைச் சொல்லி விட்டுத் தலைகுனிந்து அமர்ந்திருந்த அமிர்தவர்ஷிணியை எனது குரல்தான் நிமிர்த்தியது.

'வர்ஷிணி'

அவள் சிரமப் பட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

'நான் ஒண்ணு சொன்னா நம்புவியா?' '?'

'நேத்து ராத்திரி எனக்கும் இதே கனவு வந்துச்சு!'

நான் இதைச் சொல்லி முடித்ததும்தான் தாமதம், அழுதபடியே ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்,அமிர்தவர்ஷிணி.

(தொடரும்)

ஞாயிறு, அக்டோபர் 18, 2009

காதல மலர்ந்த கணங்கள் 6

அமிர்தவர்ஷிணி.
6.
அமிர்தவர்ஷிணி எங்கள் வீட்டுக்குள் நுழைந்தததிலிருந்து வீடே மாறி விட்டது என்று அப்பா சொன்னார்.
தூசு, தும்பு இல்லாமல் பளிச்சென்று ஆகி வீடு பூப்பெய்தியது.

'அதே அவரைக்கா,வெண்டைக்கா,கத்தரிக்காதான் ஆனா அவ கைபட்டுச் சமைச்சுதுக்கப்புறந்தான் இத்தனை நாள் ஒளிச்சு வெச்சிருந்த அதுகளோட ஒரிஜினல் ருசியை எல்லாக் காய்கறிகளுமே வெளியே காட்டுது,சரவணா'என்றார் அப்பா ஒருநாள் ரசனை பொங்க.

அவள் வந்த ஒரு வாரத்துக்குப் பிறகு அப்பா திரும்ப வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டார்.

குறிப்பாகப் பூஜை அறையை அவள் மாற்றிய விதத்தில்தான் அப்பாவின் மனதில் நிரந்தரமாக மரியாதையைப் பெற்று விட்டாள்,அமிர்தவர்ஷிணி. எங்கள் பூஜை அறையில் அவர் வேலை பார்த்த எல்லாக் கோவில் தெய்வங்களின் உருவப் படங்களை மட்டுமல்லாது எல்லா மதங்களின் புனிதச் சின்னங்களையும் அப்பா வைத்திருப்பார்.கர்த்தர்,கஃபா,புத்தர்,மகாவீரர், குரு நானக்,ஷ்ரீடி சாய்பாபா,மற்றும் இன்றைய,நேற்றைய மஹான்கள் என்று அவருக்குத் தெரிந்த,கிடைத்த அனைத்து ஆன்மீக சிகரங்களின் வெளிப்பாடுகள் அனைத்தையும் எங்கள் பூஜை அறையில் பார்க்கலாம்.

அமிர்தவர்ஷிணி வந்ததும்தான் எல்லாப் படங்களும்,சிலைகளும் தூய்மையாகி, வைகறையில் அவளுக்குப் பிடித்தமான சந்தன ஊதுவத்தி,மல்லிகைப் பூக்களின் வாசனை கமகமக்க வீடே கோவிலானது என்றார் அப்பா.

'இப்போ எல்லாம் காலங் கார்த்தாலே பூஜை ரூமுக்குள்ளே நுழைஞ்சாப் போதும், நாம இத்தனை நாளு வெறுமனே கும்பிட்ட நம்ம வீட்டு சாமிக எல்லாம் என்ன வரம் கேளுன்னு குடுக்கத் தயாரா நின்னுட்டிருக்காங்க சரவணா!' என்றார் அவர், அமிர்தவர்ஷிணியைப் பார்த்துச் சிரித்தபடியே.
அமிர்தவர்ஷிணி அதே வற்றாத புன்னகையுடன் எனக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அப்ப்பா!அப்பாவின் முகத்தில் நான் இந்தச் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன!

'நீங்க என்ன வரம் கேட்டிங்கப்பா?' என்றேன் நானும் சிரித்து.
'எதுவுமே கேக்கத் தோணாத பரிபூர்ண நிம்மதியிலே எதையுமே கேக்கத் தோணலேப்பா' என்றார் அப்பா கண்களில் மெல்லிய ஈரம் கசிய.

ஒரே மகனை சாவுக்குக் காவு கொடுக்கக் காத்திருக்கும் எனது அப்பாவுக்குக் கூட நிம்மதியைத் தர முடியும் என்றால்,அது அமிர்தவர்ஷிணியினால்தான் முடியும் என்று தோன்றியது எனக்கு.

நான் நன்றியுடன் அவளைப் பார்த்தேன்.
அப்பா, தான் கோவிலுக்குப் போவதற்கு முன்னால் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து அவளை இறக்கி விட்டு விட்டுப் பிறகு, தான் திரும்பி வீட்டுக்குப் போகும் போது அழைத்துச் செல்வது வழக்கமாகிப் போனது.

தினமும் மருத்துவமனைத் தோட்டத்தின் அந்திப் பூக்கள், அவள் வருகிறாள் என்று கிறங்கிப் போய் தங்கள் வாசனைகளால் கட்டியம் கூறும் போது, அவள் எனது அறைக்குள் புன்னகையுடன் நுழைவாள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்தின் ஆடைகளை அணிந்து வருவதுதான் அமிர்தவர்ஷிணியின் ஸ்பெஷாலிடி.
தான் சென்ற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பணி முடிந்து கிளம்பும் போது, அவர்கள் அன்புடன் அவளுக்கு எடுத்துக் கொடுத்த ஆடைகளையே அவள் எப்போதும் உடுத்தினாள். குஜராத்தி ,ராஜஸ்தானி,பஞ்சாபி, நமது பாவாடை தாவணி, மலையாளம்,மும்பையின் ஜீன்ஸ்,டி.ஷர்ட் இப்படி எந்த வித உடுப்பும் அவளுக்கு அழகாகப் பொருந்தி வந்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

'அமிர்தவர்ஷிணி ஒரு ஆபாசம் கலக்காத ஃபேஷன் பேரேட்டாக்கும்!' என்றாள் என்னைக் கவனிக்கும் நர்ஸ் உன்னி மேரி.

பார்ப்பவரது உயிரை எந்த கஷ்டமும் படாமல் எளிமையாகக் கவ்விச் செல்வதே உண்மையான அழகு என்றால்,அமிர்தவர்ஷிணியைப் பேரழகி என்று சொல்லலாம். இப்போதெல்லாம் மருத்துவமனையே அவளது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தது.

அதனை விட அவளது வாழ்க்கை அனுபவங்களை, அவள் சொல்லக் கேட்டால் கொஞ்ச நஞ்சமிருக்கும் நமது மீதி மனமும் பறிபோய்விடும்.

'அஞ்சு வயசிலிருந்தே அப்பா,அம்மா இல்லாமே மூணாவது மனுஷங்க வீட்டுலியே வளர்ந்திருக்கியே, எப்படி வர்ஷிணி உன்னாலே உண்மையாவுமே சந்தோஷமா இருந்திருக்க முடியும்? ஒருநாளாவது நீ இப்படி அனாதையா இருக்கறமேன்னு நினைச்சு மனசு கஷ்டப் பட்டதில்லையா?' என்றேன் நான் ஒரு நாள்.

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுச் சொன்னாள்.
'அன்பு கிடைக்காதவங்க அனாதைக இல்லே,சரவணா. அன்பு செலுத்த முடியாதவங்கதான் அனாதைக!' என்றாள் அவள்.

'என்னைக் கூப்பிட்டுட்டுப் போனவங்க எல்லாமே, நம்ம தேசம் இத்தனை வருஷமா சொல்லித் தந்திட்டுருக்கிற அத்தனை நல்ல குணங்களோட ஒட்டு மொத்தமான அம்சம்.ஒரு குடும்பமும் கூட என்னை அந்நியமாப் பார்க்கலே.நடத்தலே. அதனாலே எனக்கும் அன்பைத் தவிர வேறெந்த அனுபவமும் தெரியாது..'

'மூணு மாசத்துக்கு ஒரு வீடு,ஒரு ஊரு,ஒரு பாஷைன்னா எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் நீ போயிருக்க முடியாதே?'

.'நல்ல வேளை!' என்றாள் அவள் சிரித்து.

'இல்லாட்டி நான் இத்தனை குருமார்கள் கிட்டே இவ்வளவு விஷயங்களைக் கத்திருக்க முடியாது' என்றாள் அவள்.

சமையல்,தையற் கலை,வெவ்வேறு வழிபாட்டு முறைகள்,மொழிகள்,ஒப்பனை,அந்தந்த பிரதேசங்களின் எளிய நாட்டு மருத்துவம்,முதல் உதவிகள் அனைத்திலும் அவள் கை தேர்ந்திருந்தாள்.

அவள் அருகில் இருந்தால்,அனைவரையும்,காரணம் தேடாமல் நேசிக்கும் அபரிமிதமான அன்பின் சாரல் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மலைப் பிரதேசத்தின் நிலவொளியில் இருப்பதைப் போல இருக்கும்.

அவள் மருத்துவ மனைக்கு வந்து போய்க் கொண்டிருந்த பதினெட்டு நாள் கழித்து,ஒரு நாள் பொறுக்க முடியாமல் ஐந்து காதல் கடிதங்களை அவளிடம் நீட்டினேன்.
'என்ன இது ?' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'உனக்கு எழுதுன லவ் லெட்டர்ஸ்!' என்றேன் நான்.

என்னை ஒரு கணம் பார்த்து விட்டுச் சொன்னாள்.

'உன் கண்ணுலே ஒரு எழுத்துக் கூடத் தெரியலியே,சரவணா!' என்றாள் அவள் உடனே.

'உன்கிட்டே குடுக்கச் சொல்லி, என் காலிலே விழாத குறையாக் கெஞ்சி அஞ்சு பேரு இதைக் குடுத்திருக்காங்க வர்ஷிணி.' என்றேன் நான் பரிதாபமாக.

அவள் எந்தச் சலனமுமின்றி என்னைப் பார்த்தாள்.

'அஞ்சுலே, மூணு லெட்டர்களை இங்கிருக்கிற டாக்டர்களே குடுத்திருக்காங்க. ரெண்டு ,இங்கே வந்திட்டிருக்கற வி.ஐ.பி.விசிட்டர்களோட பசங்க.முதல் லெட்டர், எனக்கு ட்ரீட்மென்ட் குடுத்திட்டிருக்கிற சீஃப் டாக்டர் சித்தார்த் ரே.லண்டன் ரிடர்ன்.கேன்ஸர் ட்ரீட்மென்ட்லே இந்தியாவுலேயே நம்பர் டூ ன்னு சொல்றாங்க.எக்கச் சக்க வருமானம்.அதி மேதாவி. ரெண்டாவது லெட்டர்..'
அவள் என்னை அமைதியாக இடை மறித்தாள்.
'உன்னைப் பார்த்துட்டிருக்கிற டாக்டருக்கு உன்னை விடப் பத்துப் பதினைஞ்சு வயசு ஜாஸ்தி இருக்குமே ,சரவணா.அவரு எப்படி உங்கிட்டே போய் எனக்கு லவ் லெட்டரைக் குடுக்கச் சொல்லி..'
'அவரு மாத்திரமில்லே வர்ஷிணி.இந்த லெட்டர்களைக் குடுத்தவங்க எல்லாருமே என்னை விடப் பெரியவங்கதான்' என்றேன் நான்.

அவள் என்னை அமைதியாகப் பார்த்தாள்.

சற்றுக் கழித்து நான் சொன்னேன்.

'ஒருவேளை,கிட்டத்தட்ட சாவை நெருங்கிட்டதனாலே அவங்க எல்லாரையுயும் விட நான்தான்னு மூத்தவன்னு அவங்க நினைக்கிறாங்களோ என்னமோ!' என்று நான் சொல்லச் சொல்லவே என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.

அமிர்தவர்ஷிணி மெல்ல என் அருகில் வந்து கனிவுடன் என்னைத் தனது மார்புடன் அணைத்துக் கொண்டாள்..
அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தவுடன், எனது அழுகை இன்னும் பீறிட்டுக் கிளம்பியது.
'அமிர்தம்ன்னா என்ன அர்த்தம் தெரியுமா,சரவணா?' என்றாள் அவள், என் முகத்தை நிமிர்த்தி.
நான் வெறுமனே அவளைப் பார்த்தேன்,தேம்பியபடி.
'அமிர்தம்ன்னா சாகாமை.அமிர்தவர்ஷிணின்னா சாகாமையைத் தருபவள்ன்னு அர்த்தம்.நான் உன் பக்கத்திலே இருக்கும் போது உன்னைச் சாக விடுவேனா?' என்று அவள் கேட்டாளே பார்க்கலாம், உலகத்துத் தெய்வங்களை எல்லாம் அந்தப் பெண்ணின் வடிவத்தில் பார்த்தேன்.

அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.

தாயின் கருப்பை அனுபவம் எனக்குக் கிடையாது.இப்போது சத்தியமாகச் சொல்கிறேன்,காதலிக்கும் பெண்ணின் அரவணைப்பில்தான் அதனை மீண்டும் உணர முடியும்.

தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி.

(தொடரும்)

செவ்வாய், அக்டோபர் 13, 2009

காதல மலர்ந்த கணங்கள் 5


அமிர்தவர்ஷிணி

5.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.
எனக்குள் சிலீரென்றது.
'அவருக்கு எப்படி வர்ஷிணி,என்னைப் பற்றி..?' என்றேன் வியந்து.
அமிர்தவர்ஷிணி அமைதியாக என்னைப் பார்த்தாள்.
'நடந்ததையும் ,நடந்திட்டிருக்கிறதையும் மட்டும் தெரிஞ்சுக்குறதுக்குத்தான் நம்ம மனசுனாலே முடியும்.மீதி நடக்கப் போறதை,அதுவாக் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு நம்ம மேலே சுமத்திட்டே இருக்கும்.நாளைக்கு நீ என்ன பார்க்கப் போறேன்னு உன்னோட கண்ணு என்னிக்காவது உங்கிட்டே காட்டி இருக்கா?' என்று கேட்டாள் அவள்.

நான் பொம்மை போல இல்லையென்று தலையாட்டினேன்.

'கண்ணு,காது,மூக்கு,உடம்பு எல்லாமே எப்பவுமே நிகழ்காலத்துலேதான் இருக்கும்.ஆனா மனசு மட்டும் அதிகப் பிரசங்கித் தனமா எதிர்காலத்தைப் பத்தி ஏதாச்சும் தொணதொணத்துகிட்டே இருக்கும்.நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம் இல்லேன்னா ஆடிப் போய் உட்காந்திருப்போம்!' என்றாள் அவள் ஏதோ பிரசன்னம் வந்தவள் போல.

ஏதோ தெலுங்குப் பக்திப் படத்தில் பார்க்கும் அழகிய, அமானுஷ்யச் சிறுமி போலத் தோன்றினாள் அவள்.
அவளை அதிசயமாகப் பார்த்தேன்.பதினேழோ,பதினெட்டு இருக்கும் அவள் வயதுக்கு, அவள் பேசுவது அதிகமாகத் தோன்றியது எனக்கு.அதற்கு அவளே பதில் சொன்னாள்.

'இது நான் சொல்லலே.நான் பார்த்துட்டிருந்த அந்த வயசான முஸ்லீம் யோகி அடிக்கடி இதைச் சொல்லுவார்.' என்றாள் அவள்.

'அவரைத் தெரிஞ்சவங்க எல்லாம் அவரை ஆஜ்மீர் பாபான்னு கூப்பிடுவாங்க.அவருக்கு இப்போ 98 வயசிருக்கும்ன்னு, கூட இருக்கிறவங்க சொல்றாங்க.ஆனா நான் அவரை, உங்களுக்கு உண்மையா என்ன வயசு பாபான்னு கேக்கும் போதெல்லாம் எனக்கு வயசே ஆகமாட்டேங்குதே,தாயே.எப்போதான் எனக்கு வயசாகித் தொலையுமோ தெரியலேம்பாரு!' என்று சொல்லிச் சிரித்தாள் அமிர்தவர்ஷிணி.

இந்த மூன்று மாதத்தில் நான் மனம் லேசாகிச் சிரித்தது அப்போதுதான்.

'உனக்கு அவரு எப்படிப் பழக்கம்?' என்றேன் நான்.
'அஞ்சு வயசுலே என்னோட அப்பா,அம்மாவை ரிஷிகேஷ் கங்கை அடிச்சுட்டுப் போனப்போ, அழுதிட்டிருந்த என்னை ஆதரவா அணைச்சுகிட்டவர் அவருதான்!' என்றாள் அவள்.

என்னை மாதிரிப் புற்று நோயில் சாகப் போகிறவனுக்குத்தான் பகுத்தறிவை விட இந்த மாதிரி அற்புதங்கள் உணர்வுப் பூர்வமாக எவ்வளவு அவசியம் என்று தெரியும்.

அதற்குப் பிறகு ஆஜ்மீர் பாபாவைப் பற்றி அவள் சொன்னதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீரில் இருக்கும் புகழ் வாய்ந்த தர்கா, ஹஸ்ரத் க்வாஜா மொயினுதீன் சிஷ்டி என்பதாகும்.'ஏழைகளிடம் அனபைப் பொழிபவர்' என்று அழைக்கப் படும் அந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு மஹானின் பிரசித்தி பெற்ற சமாதி, முஸ்லீமகள்,இந்துக்கள் அனைவருக்குமே புனிதத் தலமாகக் கருதப் படுகிறது.அக்பர் சக்ரவர்த்தியே தனது தலை நகரிலிருந்து வாரக் கணக்காகப் பாத யாத்திரை புரிந்து வழிபட்ட அந்த மஹா ஞானியின் சீடர்களின் வழி வந்தவர் ஆஜ்மீர் பாபா என்றாள் அமிர்தவர்ஷிணி.

திடீர் திடீர் என்று பாபாவிடமிருந்து அழைப்பு வந்தால் அமிர்தவர்ஷிணி அவரது எளிய இருப்பிடத்துக்குச் சென்று விடுவாள்.

அமிர்தவர்ஷிணியை மட்டுமல்ல, பாபா எல்லாப் பெண்களையுமே தாயே என்றுதான் கூப்பிடுவார்.தினமும் ஷரிஃப் தர்கா என்றழைக்கப் படும் தர்காவுக்கு, அவளை அழைத்துச் சென்று அதனுடைய பளிங்குப் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பாபா திடீரென மூன்று நாட்களுக்கு முன்னால் 'நீ மெட்ராஸுக்குப் போ!' என்றாராம்.

'ஏன் பாபா திடீர்ன்னு மெட்ராஸ்?' என்று அமிர்தவர்ஷிணி கேட்டதற்கு 'அவன் உன்னைக் கூப்பிடறான்' என்று மட்டும் சொல்லி விட்டுத் தர்காவின் தளத்திலிருந்து பாபா எழுவதற்கும் அமிர்தவர்ஷிணிக்கு சேஷாத்திரி அங்கிளின் ஃஃபோன் வருவதற்கும் சரியாக இருந்தது என்றாள் அவள்.

ஒரு கணம் எனது வாழ்க்கை மௌனத்தால் நிரம்பியது.

'ஆஜ்மீர் பாபாவுடன் நான் ஃபோனில் பேச முடியுமா?' என்று பிறகு அவளிடம் கேட்டேன்.
முடியாது எனத் தலையாட்டினாள் அவள்.
'ஏன்,ஃபோனில் பாபா பேசமாட்டாரா?' என்றேன்.
'அவன் உன்னைக் கூப்பிடறான்னு என்கிட்டே பேசினதுதான் அவரு கடைசியாப் பேசினதே!'என்றாள் அவள் அமைதியாக.

நான் புரியாமல் அவளையே பார்த்தேன்.

'நான் சென்னைக்கு ரயில்லே வந்திட்டிருக்கும்போதே, பாபா அவரோட வீட்டுலே சமாதி ஆகியிருக்காரு.'என்றாள் அவள்.
முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் சாந்தமாக இதனைச் சொன்னாள்,அமிர்தவர்ஷிணி.
'அவர் இறந்ததை இவ்வளவு கேஷுவலா எடுத்துட்டுச் சொல்றே?' என்றேன் நான் வியந்து.
'அவர் இறந்தார்ன்னு நான் சொல்லலியே.சமாதி அடைஞ்சார்ன்னுதானே சொன்னேன்!' என்றாள் அவள் அதே அமைதியுடன்.

பிறகு அவள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஒரு பச்சை நிறச் சணல் பையிலிருந்து ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.நீண்ட வருடங்களாகப் பயன் படுத்தப் பட்டுக் கிட்டத்தட்ட பழுப்பு நிறத்தில் இருந்தன அந்த நோட்டின் தாள்கள்.

'இது பாபா தன் கைப்பட எழுதி, ஓதின திருக்குரான்.நான் இங்கே கிளம்பி வர்ரப்போ, இதை இனி நீ வெச்சுக்கோ தாயேன்னு எனக்குப் பரிசாக் குடுத்தாரு.அதை உன் தலை மாட்டுலே வெக்கிறேன்' என்றவள் அந்த நோட்டுப் புத்தகத்தை எனது கட்டில் தலைமாட்டில் சிரத்தையாக வைத்தாள்.
'தேங்க்ஸ்!' என்றேன் நான் என்ன சொல்வதென்று தெரியாமல்.
அவள்
என்னைப் பார்த்து வெறுமனே புன்னகைத்தாள்.பிறகு அதே சணல் பையிலிருந்து ஒரு சிறிய மூடி போட்ட கிண்ணத்தை எடுத்து மூடியைத் திறந்து என்னருகில் வந்தாள்.
'இதைக் குடி.ஒரு மடங்குதான்' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'இது என்ன?' என்றேன் நான்.
'பயப்படாதே.வெறும் துளசிச்சாறுதான்.சாமியைக் கும்பிட்டு எடுத்துட்டு வந்திருக்கேன்' என்றாள்,அவள்.
முதலில் அவளது அழகிய,அமைதியான முகத்தைப் பருகி விட்டுப், பின் அவள் கொடுத்த துளசிச் சாற்றை ஒரே மடங்கில் குடித்தேன்.

'துளசி எந்த விஷத்தையும் முறிக்கும்' என்றாள் அவள் தீர்க்கமாக.
'நீ குடுத்தா!' என்றேன் நான்.

அவள் அதற்கும் வெறுமனே முறுவலித்தாள்.அந்த நேரத்தில் அவளது புன்னகையை விடப் பெரிய ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவுமில்லை என்று எனக்குத் தோன்றியது.

ஆனால் அந்தத் துளசி சாற்றைக் குடித்த சில நொடிகளில் எனது வயிற்றைப் பிரட்டி அப்படி ஒரு குமட்டல் எடுத்தது எனக்கு.மீண்டும் வாந்தி என்றதும் எனக்குப் பயம்தான் உச்சிக்கேறியது.

'வாந்தி வர்ர மாதிரி இருக்கா?'என்றாள் அவள்.
ஆம் என்று என்னால் தலையைத்தான் அசைக்க முடிந்தது.
'எடு' என்று அவள் நிதானமாகத் தனது கைகளை நீட்டினாள்.நான் அவளைத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.
'எடு,சரவணா' என்றாள் அவள்,தீர்க்கமாக.

நான் அவளது கைகளில் ரத்தமாக வாந்தி எடுத்த போதுதான்,சிவப்பு சிவப்புடன் சேர்வது எவ்வளவு அழகாக இருக்கிறது என யோசித்தேன்.
அவள் அமைதியாக பாத்ரூமுக்குச் சென்று கைகளைக் கழுவி விட்டுச் சொன்னாள்.

'இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

எனக்குள் காதல் மலர்ந்த கணம் அதுதான்.

அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்,எல்லாக் காதலையும் போல இது நிறைவேறுமா என்று தெரியாமலேயே.

( தொடரும்....)

(ஹஸ்ரத் மொயினுதின் சிஷ்டி போன்ற சரித்திர மகா புருஷர்களைத் தவிர இந்தக் கதையில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனையே .நிகழ்வுகளும் புனைவுகளே.யாரையும் எதனையும் குறிப்பிடுவன அல்ல.)

திங்கள், அக்டோபர் 12, 2009

காதல மலர்ந்த கணங்கள் 4

அமிர்தவர்ஷிணி
4.
மூன்று மாதங்கள் ஆகின்றன,நான் இந்தப் புற்று நோய் மருத்துவமனைக்கு வந்து.

கெமோ தெராபி,ரேடியேஷன் தெராபி மற்ற சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் என்று என்னுடைய உடலுடன் மருத்துவர்கள் இடைவிடாமல் போராடினார்கள்.இதற்குக் கேன்சர் என்று பெயர் வைக்காமல் நத்தை என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.ஏனென்றால் மரணம் நத்தை வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

மனித உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் எத்தனை வலிகளும்,வேதனைகளும் இருக்க முடியுமோ அத்தனையையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.முடிகள் எல்லாம் கொட்டிப் போய்,நிறம் வெளிறிப் போய்....எனது நண்பர்களை எல்லாம் என்னை இந்தக் கோலத்தில் பார்க்க வர வேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.
ஆனால் அப்பாவை மட்டும் அப்படிச் சொல்ல முடியவில்லை.லுகேமியா செல்கள் என்னைவிட அவரைத்தான் அதிகம் உருக்கி எடுத்துக் கொண்டிருந்தது.

மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் என்று தோன்றியது.

என்னுடைய அப்பாவுக்கு ஒரு முடி கூட நரைக்கவில்லை என்று நண்பர்களிடம் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்வேன்.அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார். நான் மருத்துவ மனைக்கு வந்த ஒரே வாரத்தில் அப்பாவுக்குத் தலை முழுதும் நரைத்து விட்டது.

யாரையும் கடிந்து கூடப் பேசாத அந்த மென்மையான ஆத்மாவை, இப்படி நரகக் குழியில் தள்ளி வேடிக்கை பார்க்கும் முகம் தெரியாத எதிரியே! தயவு செய்து என்னைச் சீக்கிரம் சாக விட்டு எனது அப்பாவைக் காப்பாற்று!

கால வரையரையற்று விடுமுறை எடுத்துக் கொண்டு,அப்பா தானே சமைத்து எனக்குத் தினமும் எடுத்து வந்தார்.
'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டப் பட்டுச் சமைச்சு எடுத்துட்டு வர்ரீங்க?' என்பேன் நான்.
'உனக்குத் தேவை இல்லேன்னாலும் உனக்காகப் பண்றோங்கற காரியத்திலே எல்லாம் எனக்கு ஒரு திருப்தி இருக்குப்பா' என்றார் அவர் சாப்பாடு பரிமாறிக் கொண்டே.
அவர் நெற்றியில் இன்னுமே விபூதிக் கீற்றும்,குங்குமமும் இருந்தன.
'நீங்க இன்னும் சாமி எல்லாம் கும்பிடறீங்களாப்பா?'
'சாகும் போது உன்னோட அம்மா விபூதி,குங்குமத்தை வெச்சு உட்டுட்டுக் கடவுள் எப்பவும் உங்களைக் கைவிட மாட்டாருன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடினா.நான் ஆண்டவனை நம்பறனோ இல்லையோ உங்க அம்மாவை நம்பறேன்' என்றார் அப்பா அமைதியாக.
'பாவம்பா நீங்க' என்றேன் என்னை அறியாமல்.இப்போதெல்லாம் இருவருமே அழுவதில்லை.
துயரம் முற்றி வந்த அமைதி.
சாவுக்கு வைத்த ஆறு மாதக் கெடுவில் ஒரு வழியாக மூன்று மாதங்கள் கழிந்தது என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கும் ஒரே நிம்மதி.

இன்னும் மூன்று மாதங்கள் என்று, ஏதோ விடுமுறைக்குக் காத்திருக்கும் பள்ளிக்கூடச் சிறுவனைப் போல நான் எனது மரணத்துக்காகக் காத்திருந்தேன்.

ஒருநாள் காலை பத்து மணிவாக்கில் மருந்துகளின் அசதியில் நான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென எனக்குக் கனவு போல ஒரு விழிப்பு வந்தது.எனது உறக்கத்தைக் கலைத்தது ஒரு வாசனை.

ஆம்.அதே பச்சைக் கற்பூர வாசனை.மருத்துவ மனையின் செயற்கைத் தூய்மையான டெட்டால் வாசத்தையும் மீறி கோவில் நைவேத்தியங்களில் மட்டும் வீசும் அதே வாசனை.
மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தேன்.படுக்கையின் அருகில் அப்பா,எங்கள் கோவில் மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி, சற்றுத் தள்ளிப் பின்னால் அமிர்தவர்ஷிணி மூவரும் நின்றிருந்தார்கள்.

முடிகள் இழந்து மொட்டைத் தலையுடன் இளைத்துக் களைத்துப் போயிருந்த என்னைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷாத்திரி கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
'அழ மாட்டேன்,அழமாட்டேன்னு சார் கிட்டே நூறுதடவை சத்தியம் பண்ணிக் குடுத்துட்டுதான் வந்தேன்..ஆனா முடியலேப்பா..'என்ற சேஷாத்திரி மேல் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.சிறுவயதில் குலதெய்வத்துக்கு மொட்டை போடமாட்டேன் என்று அழுத என்னைச் சிரித்தபடியே ஆறுதலாக நெஞ்சில் அணைத்துக் கொண்டவர் சேஷாத்திரி அங்கிள்.
அப்பா அமைதியாக அமிர்தவர்ஷிணியைப் பர்த்தார்.

குளிர்ந்த வைகறை நதியைப் போல அவளது பார்வை என் மேல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.எந்தச் சலனமுமில்லாத அம்மன் முகம் அவளுக்கு.

'இனி மூணு மாசத்துக்கு அமிர்தவர்ஷிணி நம்ம கூட, நமக்கு உதவியா இருக்கறேன்னு வந்திருக்கா,சரவணா.' என்றார் அப்பா.

சேஷாத்திரி அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட, அமிர்தவர்ஷிணி மெல்ல எனது அருகில் வந்து நின்றாள்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் கோவிலில் பாவாடை தாவணியில் பார்த்த அமிர்தவர்ஷிணி இப்போது வடக்கத்திய பாணி சுடிதாரில் வந்திருந்தாள்.செல்ஃப் டிசைனில் பூக்கள் போட்ட தூய வெள்ளைச் சுடிதாரில் இன்னும் யாருமே வாசிக்க ஆரம்பிக்காத பொன்னிற வயலினைப் போல இருந்தாள் அவள்..

எந்த ஆசையையும் படக்கூடிய சக்தியை அறவே இழந்து விட்ட சக்கையான என் உடலுக்குள்ளிருந்து அவளது அழகைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.ஆசைகள் அற்றுப் பார்க்கும் போது பெண்ணே வேறு மாதிரி தெரிகிறாள்.பிறந்த குழந்தை அம்மாவைப் பார்க்கும் போது எனது மனோ நிலையில்தான் இருக்கும் போலிருக்கிறது.ஃபில்டர் போட்டுக் காமிராமேன்கள் பனிமூட்டம் போலக் காட்டுவார்களே அது போல அமிர்தவர்ஷிணி இப்போது எனது கண்களுக்குத் தெரிந்தாள்.

மரணம் ஒரு பெரிய புகைப் படக் கலைஞன் என்று நினைத்துக் கொண்டேன்.

சற்று மௌனத்திற்குப் பின் நான்தான் பேசினேன்.

'ஆஜ்மீரிலிருந்து எப்போ வந்தே?'

'இன்னிக்குக் காலையிலேதான்' என்றாள் அவள்.
அவள் குரலை இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன்.கோவிலில் அவள் பேசவே இல்லை என்று இப்போதுதான் உணர்கிறேன்.
அந்தரங்கமாகப் பேசுவதுக்கென்றே அமைந்த குரல்,அமிர்தவர்ஷிணியினுடையது.நெருக்கமான சூழ்நிலயிலேயே பெண்கள் பயன்படுத்தும் குரல்.

'எப்படி அதுக்குள்ளே எனக்கு உன்னோடே அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுது?'

'ஆஜ்மீரிலிரிந்து நான் வந்ததே உன்னைப் பார்த்துக்கறதுக்காகத்தான்!' என்றாள் அவள்.

'சேஷாத்திரி அங்கிள் உன்னை அவ்வள்வு ஃபோர்ஸ் பண்ணியிருக்கார்ன்னு நினைக்கிறேன்'என்றேன் வறண்ட புன்னகையுடன்.

இல்லை என்று உறுதியாகத் தலையாட்டினாள் அவள்.

'பின்னே,யாரு என்னோட அப்பாவா?' என்று கேட்டேன் நான்.

'என்னை உங்கிட்டே வலுக்கட்டாயமா அனுப்பிச்சவரை நீ பார்த்திருக்கவே முடியாது,சரவணா!'என்றாள் அவள்,இப்போதுதான் முதன் முறையாகக் கண்களில் ஈரம் கசிய.

நான் அவள் கண்களில் நீரைப் பார்த்து வியந்து போனேன்.

'பின்னே யாரு,வர்ஷிணி?' அவளது பெயரை மிக இயல்பாகச் சுருக்கிக் கூப்பிட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அவள் என்னை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தாள்.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

எனக்குள் சிலீரென்றது.

(மீண்டும் சஸ்பென்சுடன் தொடரும் போடுவதற்கு நண்பர் அப்துல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.)

வியாழன், அக்டோபர் 08, 2009

மகா என்ற மகா ரசிகர்..

மனதினையும் தொட்டுச் செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பினில் இளம் பதிவர் மகா ஒரு இடுகை இட்டுள்ளார்.
கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான்.
ஆனால் கூந்தல் மட்டுமல்ல, ஆத்மாவே அலைபாய்கிறது..
காமிராவே வயலினை வாசிக்கும் அற்புதம்..
பருகி விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்கள் ரசனைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் மகா..
http://ulmanasu.blogspot.com/2009/10/blog-post_08.html

புதன், அக்டோபர் 07, 2009

காதல் மலர்ந்த கணங்கள் 3

3.
அமிர்தவர்ஷிணி.
அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.
பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!

'பொண்ணு யாரு,சேஷாத்திரி?உங்க சொந்தக் காரப் பொண்ணா?' என்று அமிர்தவர்ஷிணியைப் பார்த்த புன்முறுவலுடனேயே அப்பா கேட்டார்.

'இல்லை.ஆனா சொந்தக்காரப் பொண்ணுகளை விட நெருங்குன சொந்தம் இவோ!' என்றார் சேஷாத்திரி,தானும் பரிவுடன் அமிர்தவர்ஷிணியைப் பார்த்தபடியே.
'இவளை உங்க கிட்டே அறிமுகப் படுத்தறதுக்காகத்தான் கோவிலுக்கு அழைச்சுண்டு வந்தேன்' என்றார் சேஷாத்திரி.
'இந்தப் பொண்ணோட சர்க்கரைப் பொங்கலை விட இவங்களுக்கு இனி வேறென்ன அறிமுகம் வேணும்?'என்றார் அப்பா தனது வழக்கமான மென்மையான சிரிப்புடன்.
'உட்காரும்மா' என்றார் அப்பா
அமிர்தவர்ஷிணியைப் பார்த்து.
அவள் மெல்லெனக் கோவில் தளத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது, பளிங்கு நீரில் மலர்ந்து விகசித்த தாமரைகளுக்குப் பாடம் எடுத்ததைப் போல இருந்தது.
முகத்தில் தம்பூர் நாதத்தைப் போல ரிம்மென்று எப்போதும் ஒரு புன்னகை அவளுக்கு.
அவளைப் பற்றி சேஷாத்திரி சொன்ன விஷயங்கள் அந்தி வேளையில்,நான் கேட்ட கோவில் பின்னணியிலேயே நீங்களும் கேட்டிருந்திருக்க வேண்டும்.அப்போதுதான் அமிர்தவர்ஷிணியின் அழகை நீங்கள் 3டி விஷனாக உணர முடியும்.

அப்பா,அம்மாவை ஐந்து வயதிலேயே ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் நீரோட்டத்தில் பறிகொடுத்தவள்,அமிர்தவர்ஷிணி. புனித நீராடச் சென்ற அவளது தாய்,தந்தையைக் கங்கை நதி அவளுக்குத் திருப்பித் தரவே இல்லை.அனாதையான அமிர்தவர்ஷிணியை அவளது அப்பாவின் நண்பர்களே பொறுப்பேற்றுக் கொண்டு இதுவரை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள்.நன்கு,விசாரித்துத் தெரிந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமாக அனுப்பப் பட்டு,அடைக்கலம் தரப்பட்டு வளர்ந்தவள் அமிர்தவர்ஷிணி.இந்தியா முழுதும் வெவ்வேறு பாரம்பரியக் குடும்பங்களில் வளர்ந்தவள்,அவள்.அவள் வளர்வதற்காகவே ஒரு செம்மையான நெட்வொர்க் உருவாகி இருந்தது, இப்போதும் யார்,யார் வீட்டுக்கு அவள் பணி தேவையோ அதை முன்கூட்டியே சொல்லி அவளை வரச் சொல்லி முன்பதிவு செய்து விடுகிறார்கள்அந்தந்த வீட்டுக்காரர்கள்.மதமோ,கலாசாரமோ தடையில்லை,அவளுக்கு.செம்மையான,உண்மையான மனம் இருந்தால் போதும் அந்த வீடுகளுக்குப் பணி புரியச் சென்று விடுவாள்,அமிர்தவர்ஷிணி.

முதியவர்கள்,மன நலம் குன்றிய இளம் பெண்கள்,குழந்தைகள்,மரணத் தறுவாயில் இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும், இறக்கைகள் இல்லாத இன்றைய நிஜ தேவதை அவள்.

உங்களைப் பூவாக மாற்றும் அவளது புன்முறுவல்,ஆத்மா வரைக்கும் ஊடுருவும் அவளது சமையல்,உடலைத் தாண்டி உள்ளே தொடும் உண்மையான பெண்மையின் ஸ்பரிசங்கள், சொல்லப் போனால் கமர்ஷியல் ஃப்ளைட்டுகளுக்காகக் காட்டப் படும் இன்டர்நேஷனல் விளம்பரங்களில் வரும் விமானப் பணிப் பெண்களின் வேத காலத்துப் பெண் வடிவம்தான் அமிர்தவர்ஷிணி.
அம்பாளுக்கு அவள் அப்பா, தனது வாழ்நாள் முழுதும் மனப் பூர்வமாகச் செய்த அபிஷேகங்களின் பலன்தான் இப்படி ஒரு மகள் என்று இப்போது நினைக்கிறேன்.

அந்த மாலை வேளையில் கோவில் தரையில் வைக்கப் பட்டிருக்கும் ஒரு வெள்ளித் தீர்த்தக் குடம் போல விளங்கினாள்,அவள்.
நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒரு சூஃபி முஸ்லீம் பெரியவருக்குப் பணிவிடைகள் புரிவதற்காக நாளை ஆஜ்மீர் செல்கிறாள் அமிர்தவர்ஷிணி,என்று சொல்லி முடித்தார் சேஷாத்திரி.

அப்பா அவளையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்.ஒரு இளம் பெண்ணை அவ்வளவு மரியாதையோடும்,கனிவோடும் அப்பா பார்த்து நான் பார்த்ததே இல்லை.
என் இருபத்து நான்கு வயதுக்கு, என் மனதைத் தாண்டிப் பூரணமாக இருக்கும் பெண்ணான அவளை ஒரு இளம் வலியாக மட்டுமே எனக்குள் உணர முடிந்தது.
விடை பெறும் போது அப்பாவை வணங்கி விட்டு என்னைப் பார்த்து வெறும் புன்னகை மட்டும் புரிந்து சென்றாள் அவள்.
பூர்வ ஜெனமங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாதிரி அழகான பெண்களின் புன்னகைகளைப் பார்க்காதவர்களாய் இருக்க வேண்டும்.அவள் என்னைப் பார்த்து முறுவலித்த போது, நான் எப்போதோ பார்த்த ஒரு தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருக்கும் அரண்மனையே என் மனக் கண்ணில் விரிந்தது.அங்கே நானே இளவரசனாய் இருந்ததைப் போன்ற உணர்வு.
சாமான்யனான என்னை சமஸ்தான இளவரசனாக்கியதற்கு நன்றி,பெண்ணே என்று உள்ளுக்குள்ளேயே உருகினேன்.
அடுத்த நாள் கல்லூரிக்குக் கட் அடித்து விட்டு ஒரு சூடான ஆங்கிலப் படம் பார்த்து விட்டு மாலை வீடு திரும்பினேன்.அந்தப் படத்தின் வெள்ளைக்காரக் கதாநாயகி என் இதயத்தைத் தனது பியானோவாக ஆக்கி இன்னும் சௌண்ட் ஆஃப் மியூசிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் நண்பர் டாக்டர் அன்பரசன் எனக்கு எடுத்திருந்த ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன.
அப்பா ரிசல்ட் பேப்பர்களின் மேல் முகம் புதைத்துப் படுத்திருந்தார்.

'அப்பா' என்று அருகில் சென்று அவர் தோளில் கை வைத்தபோது அவரது கண்களில் நீரோடியிருந்த தாரை புரிந்தது.
'உடம்புக்குச் சரியில்லையாப்பா?' என்றேன் உண்மையான கவலையுடன்.

சடாரென அவர் உரக்கக் கேவிக் கேவி அழுதார்.அவரை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டேன்.அவர் அவ்வளவு அழுது நான் இதுவரை பார்த்ததே இல்லை.
'ஏம்பா..ஏம்பா..என்னாச்சுப்பா உங்களுக்கு?' என்று திருப்பித் திருப்பிக் கேட்டேனே தவிர அவர் அழுவதே எனக்காகத்தான் என்பது அந்தக் கணம் வரைக்கும் எனக்கே தெரியவில்லை.

எனக்குத்தான் லுகேமியா என்ற தீவிர ரத்தப் புற்று நோய்.ஆறே மாதங்களில் நான் சாகப் போகிறேன் என்று மருத்துவர்கள் அறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

இனி மேல்தான் எனது காதல் மலர்ந்த கணங்களே!

(காதல் தொடரும்)