கட்டுரைத தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைத தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 20, 2009

உடல்,உள்ளம்,உலகம்


உடல்
--------
எனக்கு மிகவும் இதமான ஒரு சென் மாஸ்டர் திச் நாட் ஹன். இவர் வியட்நாம் நாட்டில் பிறந்த ஒரு புத்த ஞானி.இப்போது பிரான்ஸில் ப்ளம் வில்லேஜ் என்ற இடத்தில் தங்கி உள்ளார் .அவரது புத்தகங்கள் அனைத்துமே எளிமையாகவும், ஆழமாகவும், சுவையாகவும் இருக்கும். புத்த மதத் தியான முறைகளைப் பற்றி நிறைய எழுதி உள்ளார்.

அவரது பழைய நூல் ஒன்றை இப்போது புதிதாகப் பதிப்பித்துள்ளார்கள்.
(வருடத்தின் எண்களை அடிக்கத் தெரியவில்லை) பத்து வருடங்களுக்கு முன் வட அமெரிககாவில் வெர்மான்ட் நகரில் அவர் நடத்திய 'குறும் ஓய்வு'என்ற இருபத்தொரு நாள் தியான வகுப்புக்களின் உள்ளடக்கமே இந்த நூல்.

அதில் மனம் நிறைந்த மூச்சு,மனம் நிறைந்த நடை, மனம் நிறைந்த உண்ணல் என்று பல விதமான தியான முறைகளைப் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார் அந்த சென் மாஸ்டர்.

மனம் நிறைந்த உண்ணல் பற்றி அவர் சொல்வது:


உதாரணத்துக்கு ஒரு ஆரஞ்சுப் பழத்தை எப்படி மனம் நிறைய உண்ணுவது என்று பார்ப்போம்.ஆரஞ்சுப் பழத்தை முதலில் கையில் ஏந்திக் கொண்டு அதை அரை செகண்ட் பாருங்கள் .
மனம் நிறைந்த மூச்சை உள்ளே இழுத்து ,வெளியே விட்டபடியே அதை நீங்கள் பார்த்தால்தான் ஆரஞ்சுப் பழம் ஒரு நிதர்சனமான உண்மையாகிறது.
நீங்கள் முழுமையாக இல்லாவிட்டால் பழமும் அங்கே இருப்பதில்லை.
ஆரஞ்சுப் பழத்தை உண்பவர்களில் பல பேர் உண்மையில் அதை உண்ணுவதில்லை.அவர்கள் தங்கள் கவலைகளையே உண்கிறார்கள்.தங்கள் பயத்தை உண்கிறார்கள்.கோபத்தை உண்ணுகிறார்கள். இறந்த காலத்தையும் ,எதிர்காலத்தையுமே உண்கிறார்கள்.
மனமும், உடம்பும் ஒருங்கிசையும் நிகழ்காலத்தில் அவர்கள் இருப்பதிலை.

நீங்கள் இங்கே இருந்தால் வாழ்க்கையும் இங்கே இருக்கும்.

நீங்கள் உண்ணும் ஆரஞ்சுப் பழம் வாழ்க்கையின் தூதுவன்.அதை நீங்கள் கவனமாகப் பார்க்கும் போதுதான் அது தனக்குள் வைத்திருக்கும் அதிசயத்தை அறிவீர்கள்.

மரத்தில் ஒரு பூவாகப் பூத்துக்,கதிரவனின் ஒளியையும் ,மழைத் துளிகளையும் உள்வாங்கி ஒரு பச்சை காயாகத் திரண்டு, உள்ளிருக்கும் அமிலத்தையெல்லாம் இனிப்பாக மாற்றி மஞ்சளாகிப் பின் ,உங்கள் கையில் இருக்கும் ஆரஞ்சுப் பழமாக இப்போது நீங்கள் உண்ணக் காத்திருக்கிறது.

அந்த ஆரஞ்சு மரம் தனது அற்புதப் படைப்பை வார்த்தெடுக்க எவ்வளவு காலம் பொறுமையாகத் தவம் பண்ணியிருக்கிறது.அதை ஒரே ஒரு செகண்ட் நினைத்துப் பாருங்கள்.

இப்படி இந்த ஆரஞ்சு பழத்தின் அருமையை ஒரு கணம் உணர்ந்தபடியே அதன் இனிய நறுமணத்தை முகர்ந்து,ஆரஞ்சுச்சுளையை மென்று சாப்பிடும் போது உங்கள் நாக்கில் உருகும் சாறின் சுவையை ரசிப்பதுதான் உண்மையில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடும் முறையாகும்.

ஒவ்வொரு உணவையும் இப்படி உண்பதே 'மனம் நிறைந்து உண்ணும் தியானம்' ஆகும்.
அனைத்து நோய்களில் இருந்தும் உங்களை நீங்களே குணப் படுத்திக் கொள்ள வாழ்க்கை உங்களுக்கு அளித்திருக்கும் கொடை இது.
ஓம் அவலோகிச்வராய நமஹ.

உள்ளம் .
------------

ஓஷோவிடம் ஒரு கேள்வி: அன்பு (காதல்) என்றால் என்ன?

ஓஷோ
-----------

அன்பு வரிசைப் படும் ஒன்று.அதற்குப் பல படிகள் உண்டு.கீழ்ப் படியில் ஆரம்பித்து மேல்படி வரைக்கும் செல்லச், செல்ல அதனுடைய தன்மைகள் மாறிக் கொண்டே போகும். நாம் காட்டும் அன்புக்கும்,புத்தரும்,ஏசுவும் இன்ன பிற ஞானிகள் காட்டிய அன்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.மனதின் கீழ்ப் படியில் நின்றிருப்பவர் அன்பு என்று நினைத்திருப்பதற்கும் ,மேல் படியில் நிற்பவர் நினைத்திருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

கீழ்ப் படியில் இருப்பவர்களின் அன்பு கிட்டத் தட்ட ஒரு அதிகார அரசியலைப் போன்றது.பவர்-பாலிடிக்ஸ் !அடுத்தவரை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அன்பு.
எப்போது இன்னொருவரை ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் அது அரசியல்தான்.கணவன்-மனைவி,காதலன்-காதலி,பாய்-பிரண்ட்கேர்ள்-பிரண்ட், என்ற பெயரில் லட்சக் கணக்கான பேர் அன்பு என்றும் காதல் என்றும் சொல்லிக் கொள்வதெல்லாம் இந்தப் பவர்-பாலிடிக்சைத்தான்!

ஆதிக்கம் செலுத்துவதும்,அதில் ஆனந்தமடைவதும்.

இதனால்தான் பல பேர் நாய்,பூனை கார்,வீடு என்று மனிதர்கள் அல்லாதவற்றை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பில்லாத ஜீவன்கள்,பொருட்கள்!அதனால் அவற்றை நேசிப்பது சுலபம்.

மேல் படிக்குச் செல்லச் செல்ல அன்பின் இயல்பே மாறுகிறது.அதனுடைய சிகரத்தில் நிற்பவர்கள் தாங்கள் அன்பாகவே மாறி விடுகிறார்கள்,மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காத அன்பு.
அவர்கள் அன்பு செலுத்துவது தங்கள் மகிழ்ச்சியை அனைவருக்கும் தருவதற்காக ,அங்கே எந்தப் பேரமும் இல்லை.

அது ஒரு விதமான உயர்ந்த நிலை.அவர்கள் குறிப்பிட்ட ஒரு நபர் மீது அன்பு செலுத்துவதில்லை.அவர்களது அன்பில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.எவரையுமே நிராகரிக்காத அன்பு.

மீதி அன்பென்று சொல்லப் படுவதெல்லாம் தியானத்தினால் மட்டும் குணப் படத்தக் கூடிய ஒரு வித மன நோய்.

மீனாட்சியும்,காமாட்சியும் காபி சாப்பிட்ட படியே தங்கள் கணவர்கள் தங்கள் மீது காட்டும்அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மீனாட்சி: நீ உன்னோட கணவர் உன்னை நேசிக்கிறார் என்று எப்படிச் சொல்கிறாய்?
காமாட்சி: அவர்தான் தினமும் வீடு கூட்டிப் பெருக்குகிறார்.
மீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல.வெறும் வீட்டுப் பராமரிப்பு !
காமா : நான் எப்போது செலவுக்குப் பணம் கேட்டாலும் தருகிறாரே.
மீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல.தாராளம்!
காமா : மற்ற பெண்களை அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே .
மீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல. பார்வைக் கோளாறு!
காமா : அவர்தான் என் துணிமணிகளைக் கூடத்துவைத்துப் போடுகிறார்.
மீனா : அதற்குப் பேர் அன்பு இல்லை.உடற்பயிற்சி !
காமா : நான் வாய் நிறையப் பூண்டு சாப்பிட்டுவிட்டு, உடம்பு முழுதும் நாற்றமடிக்கும் ஒரு மூலிகை எண்ணையை அப்பிக் கொண்டு குளிக்கப் போவதற்கு முன்னால் என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறாரே.
மீனா : ஆ! இப்போது சொன்னாயே,இதுதான் அன்பு.ஒத்துக் கொள்கிறேன்.!!

உலகம்

------------


இது நான் எப்போதோ கேள்விப் பட்டது.

தமிழ் நாட்டில் முதன் முறையாக ஓமந்தூர் ராமசாமிக்கு முதலமைச்சர் பதவி தரப் படும் சூழ்நிலை வந்தபோது அவர் நேராக ரமண மகரிஷியிடம் சென்றாராம்.
ஓமந்தூரார் மகரிஷியின் அடியவராம்.

'சாமி,என்னை முதல் மந்திரியாக ஆகச் சொல்கிறார்கள் .என்ன செய்யட்டும்?'

மகரிஷி அவரை ஆழ்ந்து ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாராம்.

'எது வரைக்கும் உனக்கு அந்தப் பதவி மேல் ஆசை வரவில்லையோ, அது வரைக்கும் தாராளமாக மந்திரியாக இரு.எப்போது உனக்கு அந்தப் பதவியின் மீது ஆசை வருகிறதோ ,அப்போது அந்தப் பதவியை விட்டு விலகி வந்து விடு!'

***********