வியாழன், அக்டோபர் 08, 2009

மகா என்ற மகா ரசிகர்..

மனதினையும் தொட்டுச் செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பினில் இளம் பதிவர் மகா ஒரு இடுகை இட்டுள்ளார்.
கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான்.
ஆனால் கூந்தல் மட்டுமல்ல, ஆத்மாவே அலைபாய்கிறது..
காமிராவே வயலினை வாசிக்கும் அற்புதம்..
பருகி விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்கள் ரசனைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் மகா..
http://ulmanasu.blogspot.com/2009/10/blog-post_08.html

புதன், அக்டோபர் 07, 2009

காதல் மலர்ந்த கணங்கள் 3

3.
அமிர்தவர்ஷிணி.
அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.
பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!

'பொண்ணு யாரு,சேஷாத்திரி?உங்க சொந்தக் காரப் பொண்ணா?' என்று அமிர்தவர்ஷிணியைப் பார்த்த புன்முறுவலுடனேயே அப்பா கேட்டார்.

'இல்லை.ஆனா சொந்தக்காரப் பொண்ணுகளை விட நெருங்குன சொந்தம் இவோ!' என்றார் சேஷாத்திரி,தானும் பரிவுடன் அமிர்தவர்ஷிணியைப் பார்த்தபடியே.
'இவளை உங்க கிட்டே அறிமுகப் படுத்தறதுக்காகத்தான் கோவிலுக்கு அழைச்சுண்டு வந்தேன்' என்றார் சேஷாத்திரி.
'இந்தப் பொண்ணோட சர்க்கரைப் பொங்கலை விட இவங்களுக்கு இனி வேறென்ன அறிமுகம் வேணும்?'என்றார் அப்பா தனது வழக்கமான மென்மையான சிரிப்புடன்.
'உட்காரும்மா' என்றார் அப்பா
அமிர்தவர்ஷிணியைப் பார்த்து.
அவள் மெல்லெனக் கோவில் தளத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது, பளிங்கு நீரில் மலர்ந்து விகசித்த தாமரைகளுக்குப் பாடம் எடுத்ததைப் போல இருந்தது.
முகத்தில் தம்பூர் நாதத்தைப் போல ரிம்மென்று எப்போதும் ஒரு புன்னகை அவளுக்கு.
அவளைப் பற்றி சேஷாத்திரி சொன்ன விஷயங்கள் அந்தி வேளையில்,நான் கேட்ட கோவில் பின்னணியிலேயே நீங்களும் கேட்டிருந்திருக்க வேண்டும்.அப்போதுதான் அமிர்தவர்ஷிணியின் அழகை நீங்கள் 3டி விஷனாக உணர முடியும்.

அப்பா,அம்மாவை ஐந்து வயதிலேயே ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் நீரோட்டத்தில் பறிகொடுத்தவள்,அமிர்தவர்ஷிணி. புனித நீராடச் சென்ற அவளது தாய்,தந்தையைக் கங்கை நதி அவளுக்குத் திருப்பித் தரவே இல்லை.அனாதையான அமிர்தவர்ஷிணியை அவளது அப்பாவின் நண்பர்களே பொறுப்பேற்றுக் கொண்டு இதுவரை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள்.நன்கு,விசாரித்துத் தெரிந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமாக அனுப்பப் பட்டு,அடைக்கலம் தரப்பட்டு வளர்ந்தவள் அமிர்தவர்ஷிணி.இந்தியா முழுதும் வெவ்வேறு பாரம்பரியக் குடும்பங்களில் வளர்ந்தவள்,அவள்.அவள் வளர்வதற்காகவே ஒரு செம்மையான நெட்வொர்க் உருவாகி இருந்தது, இப்போதும் யார்,யார் வீட்டுக்கு அவள் பணி தேவையோ அதை முன்கூட்டியே சொல்லி அவளை வரச் சொல்லி முன்பதிவு செய்து விடுகிறார்கள்அந்தந்த வீட்டுக்காரர்கள்.மதமோ,கலாசாரமோ தடையில்லை,அவளுக்கு.செம்மையான,உண்மையான மனம் இருந்தால் போதும் அந்த வீடுகளுக்குப் பணி புரியச் சென்று விடுவாள்,அமிர்தவர்ஷிணி.

முதியவர்கள்,மன நலம் குன்றிய இளம் பெண்கள்,குழந்தைகள்,மரணத் தறுவாயில் இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும், இறக்கைகள் இல்லாத இன்றைய நிஜ தேவதை அவள்.

உங்களைப் பூவாக மாற்றும் அவளது புன்முறுவல்,ஆத்மா வரைக்கும் ஊடுருவும் அவளது சமையல்,உடலைத் தாண்டி உள்ளே தொடும் உண்மையான பெண்மையின் ஸ்பரிசங்கள், சொல்லப் போனால் கமர்ஷியல் ஃப்ளைட்டுகளுக்காகக் காட்டப் படும் இன்டர்நேஷனல் விளம்பரங்களில் வரும் விமானப் பணிப் பெண்களின் வேத காலத்துப் பெண் வடிவம்தான் அமிர்தவர்ஷிணி.
அம்பாளுக்கு அவள் அப்பா, தனது வாழ்நாள் முழுதும் மனப் பூர்வமாகச் செய்த அபிஷேகங்களின் பலன்தான் இப்படி ஒரு மகள் என்று இப்போது நினைக்கிறேன்.

அந்த மாலை வேளையில் கோவில் தரையில் வைக்கப் பட்டிருக்கும் ஒரு வெள்ளித் தீர்த்தக் குடம் போல விளங்கினாள்,அவள்.
நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒரு சூஃபி முஸ்லீம் பெரியவருக்குப் பணிவிடைகள் புரிவதற்காக நாளை ஆஜ்மீர் செல்கிறாள் அமிர்தவர்ஷிணி,என்று சொல்லி முடித்தார் சேஷாத்திரி.

அப்பா அவளையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்.ஒரு இளம் பெண்ணை அவ்வளவு மரியாதையோடும்,கனிவோடும் அப்பா பார்த்து நான் பார்த்ததே இல்லை.
என் இருபத்து நான்கு வயதுக்கு, என் மனதைத் தாண்டிப் பூரணமாக இருக்கும் பெண்ணான அவளை ஒரு இளம் வலியாக மட்டுமே எனக்குள் உணர முடிந்தது.
விடை பெறும் போது அப்பாவை வணங்கி விட்டு என்னைப் பார்த்து வெறும் புன்னகை மட்டும் புரிந்து சென்றாள் அவள்.
பூர்வ ஜெனமங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாதிரி அழகான பெண்களின் புன்னகைகளைப் பார்க்காதவர்களாய் இருக்க வேண்டும்.அவள் என்னைப் பார்த்து முறுவலித்த போது, நான் எப்போதோ பார்த்த ஒரு தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருக்கும் அரண்மனையே என் மனக் கண்ணில் விரிந்தது.அங்கே நானே இளவரசனாய் இருந்ததைப் போன்ற உணர்வு.
சாமான்யனான என்னை சமஸ்தான இளவரசனாக்கியதற்கு நன்றி,பெண்ணே என்று உள்ளுக்குள்ளேயே உருகினேன்.
அடுத்த நாள் கல்லூரிக்குக் கட் அடித்து விட்டு ஒரு சூடான ஆங்கிலப் படம் பார்த்து விட்டு மாலை வீடு திரும்பினேன்.அந்தப் படத்தின் வெள்ளைக்காரக் கதாநாயகி என் இதயத்தைத் தனது பியானோவாக ஆக்கி இன்னும் சௌண்ட் ஆஃப் மியூசிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் நண்பர் டாக்டர் அன்பரசன் எனக்கு எடுத்திருந்த ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன.
அப்பா ரிசல்ட் பேப்பர்களின் மேல் முகம் புதைத்துப் படுத்திருந்தார்.

'அப்பா' என்று அருகில் சென்று அவர் தோளில் கை வைத்தபோது அவரது கண்களில் நீரோடியிருந்த தாரை புரிந்தது.
'உடம்புக்குச் சரியில்லையாப்பா?' என்றேன் உண்மையான கவலையுடன்.

சடாரென அவர் உரக்கக் கேவிக் கேவி அழுதார்.அவரை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டேன்.அவர் அவ்வளவு அழுது நான் இதுவரை பார்த்ததே இல்லை.
'ஏம்பா..ஏம்பா..என்னாச்சுப்பா உங்களுக்கு?' என்று திருப்பித் திருப்பிக் கேட்டேனே தவிர அவர் அழுவதே எனக்காகத்தான் என்பது அந்தக் கணம் வரைக்கும் எனக்கே தெரியவில்லை.

எனக்குத்தான் லுகேமியா என்ற தீவிர ரத்தப் புற்று நோய்.ஆறே மாதங்களில் நான் சாகப் போகிறேன் என்று மருத்துவர்கள் அறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

இனி மேல்தான் எனது காதல் மலர்ந்த கணங்களே!

(காதல் தொடரும்)