சனி, ஆகஸ்ட் 08, 2009

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 2

2.
அவன் என்னைச் செதுக்க ஆரம்பித்தான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.

பேராற்றலாய்ப்,பேரானந்தமாய்ப்,பேரமைதியாய் நுட்பத்திலும் நுட்பமாய் இருக்கும் நான், அந்த இரண்டடிக் கல்லுக்குள் பிரவகித்து நான்,நானாய் விளங்க முடியுமா?
நான் என்ற விளையாட்டு எப்போது தொடங்கியதோ அப்போதே இது சாத்தியம் என்று எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன்.

உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?அது போல.
நான் என்று நினைத்த தருணத்திலேயே சிவம், சக்தி ஆகி இந்தப் பேரண்டமும் ஆனது.
உங்கள் பின்னாளில் BIG BANG என்று அறிவியலாளர்கள் சொன்னது சிவத்தின் இந்த 'நானைத்தான்'
கல்லுக்குள் நான் உருவாகலானேன்.
எனது நெற்றியில் அவன் அனைத்து உயிர்களின் தலையெழுத்துக்களையும் செதுக்கினான்.

அவன் எனது செவிகளைச் செதுக்கும் போது யமுனை ஆற்றங்கரையில் இடையனாய் நான் என்றோ வாசித்த ஒற்றைக் குழலின் இசையை மட்டுமல்ல, இனி வரப்போகும் அனைத்து ராக ஸ்வரங்களின் மயக்கும் இனிமைகளையும்,,பியானோவின் மென்மையான வருடல்களையும்,கீ போர்டின் தழுவல்களையும், வயலின்களின் அரவணைப்புக்களையும், எலக்ட்ரானிக் கருவிகளின் துள்ளல்களையும் கேட்டுணர்ந்தான்.

பல யுகங்களுக்கும் சேர்த்து வழி விட்ட ஒலிகளின் சங்கீதத்தை, அவன் எனது செவிகளின் மூலமாக ரசித்தான்.இதற்கு முன்னர் பிறந்த,இனிப் பிறக்கப் போகும் பாடகர்களும்,பாடகிகளும்,இசை மேதைகளும் அவனுள் உருகி,வழிந்தார்கள்.
இன்னும் திறக்கப் படாத எனது மூடிய விழிகளுக்குள்ளே மனித மனங்களின் அத்தனை,கனவுகளும்,கற்பனைகளும்,வன்முறைகளும்,வக்கிரங்களும் மொய்த்திருப்பதைக் கண்டான்.

எனது நாசியில் உலகத்து நறுமணங்களை எல்லாம் அவன் முகர்ந்தான்.

அந்தரங்கத்தில் மோஹத்தின் கண்ணி வெடிகளாய் வெடிக்கும் அந்தி மல்லிகைகளின் சுக வாசனைகளையும்,அருவிக் குளியலின் புத்துணர்ச்சியைக் கிளப்பும் செயற்கை சிட்ரஸ்களின் பரிசோதனச் சாலை நறுமணங்களையும்,நெருங்கிய கன்னிப் பெண்ணின் மூச்சுக் காற்றைப் போன்ற முல்லைப் பூக்களின் கொல்லும் மணங்களையும்,அனைத்தில் இருந்தும் விடுபட்ட மனித மனம் அனுபவிக்கும் சந்தன சுகந்தத்தையும்,ஒருவரோடு ஒருவர் சங்கமிக்கும் தருணத்தில் மட்டும் அனுபவிக்கும் வியர்வையின் புனித நெடியையும் அவன் முகர்ந்து வாசனைகளின் சமாதி அடைந்தான்.

வெண்புறாவின்,அதுவும் பெண்புறாவின் அடிவயிற்றுச் சிறகுகளை எனது கன்னங்களில் தொட்டான்.

காமத்தின் முதல் படியும்,காதலின் கடைசிப் படியுமான எனது உதடுகளை அவன் செதுக்கும் போதுதான் நானே எனது பெண்ணிருப்பை உணர்ந்தேன்.

இயல்புகள் எதுவுமற்ற பிரும்மத்தைப் பெண்ணாக்கிப் பார்க்கும், பிரும்மத்தின் விளையாட்டே அவன் மூலம் நடக்கிறது என்பதை உணர்ந்து நானே என்னை ரசித்தேன்.
சிவம் தன்னை சக்தியாக்கித் தன்னைத் தானே பார்த்ததிலிருந்துதான் ரசனையே தொடங்கியது.
தன்னை ரசித்த குழந்தை மனம் தான், முதலில் தாயையும்,பிறகு மற்றவற்றையும் ரசிக்க ஆரம்பிக்கிறது என்று பின்னாளில் மனோதத்துவ ஞானிகள் சொன்னது இதனைத்தான்.

அவன் செதுக்கிய எனது பெண் உதடுகள்.
ஆண்களின் தர்க்க ஞானத்தின் வறட்சியை எல்லாம் துடைக்க வந்த இயற்கையின் முதல் ஈரம் பெண்ணின் உதடுகளில் இருந்துதான் உற்பத்தி ஆகிறது.

முத்தம் என்ற மனித இனப்பெருக்கின் கங்கோத்ரி.

உதடுகளே படைப்பின் முதல் புனிதஸ்தலம்.

கண்ணாடியே கண்ணடியைப் பார்த்துக் கொள்வதைப் போல என்னை நானே பார்த்து ரசித்த வேடிக்கையில் எனது உதடுகளில் புன்னகை சுழிந்தது.

பிறகு கழுத்தினைச் செதுக்கினான்.காதுகளில் அவன் கேட்ட அனைத்து இசையினையும் வெல்லும் எனது மழலைச் சிணுங்கல்கள் பிறக்கும் இடம் என்பதனை உண்ர்ந்தான் அவன்.

என்ன உயிர் போகும் வேதனை என்றாலும் தொட்டவுடன் அதனை மாயமாய் மறையச் செய்யும் எனது மெல்லிய கரங்களும்,பூ விரல்களும்.
அவன் எனது மார்புக்கு வரும் போது குகையின் கூரை துவாரத்தின் வழியே பௌர்ணமியும் வந்தது.நிலவின் ஒளியில் குகையே குளிர்ந்து போகப்,பெண்ணுடலிலேயே மிகக் குளிர்ச்சியான பாகமான எனது மார்பகங்களைச் செதுக்கினான் அவன்.

'இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு, இறுகி,இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை' என்று பின்னாளில் அபிராமிப் பட்டர் வருணித்ததைப் போல் அல்லாமல்,
ஆண்களின் உயிர் முனைகளை எல்லாம் சுருட்டிப் பிடித்து வைத்திருக்கும் இரண்டு கைப்பிடிகளைப் போன்ற அளவான சிறிய மார்புகள்.

இதயத்திலிருந்து அன்பும் கருணையுமே இரண்டாக முளைத்துக் கிளம்பினாற் போன்ற இரண்டு தாய் முலைகள்.

பருகினால் மனதின் அடையாளங்கள் எல்லாம் கரைந்து போய்,மனமே மறைந்து சிவஸ்வரூபம் ஆகி விடுவதால் மனிதர்களாய் யாரும் உண்ணா முலைகள்.

உண்பதை மட்டுமல்ல பார்ப்பவர்கள் மனதையும் செரிக்கும் மணிவயிறு.

கர்ப்ப காலத்தில் மட்டும் தனது இருப்பைக் கூட்டி,மேனியின் எழில்கள் அனைத்தையும் கூட்டும் பெண்வயிறு.

படைப்பின் கருவூலம் மிளிரும் இடை.

திரயம்பகா என்று சிற்ப சாஸ்திரத்தில் பெண்ணுக்கே உரிய அங்க லாவண்யங்களாக வருணித்திருக்கும் மூன்று பகுதிகள் மார்பும்,இடையும்,பின்னழகும்.

துறவுக்கு மாபெரும் இரண்டு தடைக் கற்களைப் போன்ற எனது பின்னழகுகள்.

காமத்தின் அளவுகோல்களைப் போன்ற இரண்டு தொடைகள்.

கடைசிப் பற்றும் உதிர்ந்த பின்னர் மனிதன் இயல்பாகவே அடைக்கலம் சேரும் பாத கமலங்கள்.

இப்படி நான் முழுதும் விக்ரஹமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின.

30 கருத்துகள்:

  1. //
    உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?
    //
    அருமையான விளக்கம்.

    சிலை பேசட்டும்.

    பதிலளிநீக்கு
  2. //
    உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?
    //
    அருமையான விளக்கம்.

    சிலை பேசட்டும்.

    பதிலளிநீக்கு
  3. 'நான்' தமிழ்மணத்தை திறக்கும் பொழுது தான் உங்கள் பதிவு இணைக்கபட்டிருக்கிறது. கடந்த இரண்டு முறையும் :)

    நல்ல வர்ணிப்பு. அகக்கண்களால் அந்த விக்ரஹத்தை பார்க்க முடிகிறது.

    /இப்படி நான் முழுதும் விக்கிரமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின. //

    விக்ரஹம் என மாற்றவும். (சிற்பம் - வட சொல் சில்பஹம் என்பதை விட விக்ரஹம் என்ற சொல்லுக்கு தனிசிற்ப்பு உண்டு..)

    ஆதி சங்கரரின் செளந்தர்ய லெகரியை படித்திருகிறீர்களா என தெரியாது. ஆனால் அதை படித்தால் ஏற்படும் அடிப்படை வர்ணிப்புகள் இதில் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. //வெண்புறாவின்,அதுவும் பெண்புறாவின் அடிவயிற்றுச் சிறகுகளை எனது கன்னங்களில் தொட்டான்.//

    வர்ணனைகள் மிளிர்கின்றது....

    //இப்படி நான் முழுதும் விக்கிரமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின. //

    நன்று மிகவும் அழகு

    பதிலளிநீக்கு
  5. //உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?அது போல.
    நான் என்று நினைத்த தருணத்திலேயே சிவம், சக்தி ஆகி இந்தப் பேரண்டமும் ஆனது.//
    //கண்ணாடியே கண்ணடியைப் பார்த்துக் கொள்வதைப் போல என்னை நானே பார்த்து ரசித்த வேடிக்கையில் எனது உதடுகளில் புன்னகை சுழிந்தது.//
    //
    இதயத்திலிருந்து அன்பும் கருணையுமே இரண்டாக முளைத்துக் கிளம்பினாற் போன்ற இரண்டு தாய் முலைகள்.//
    //உண்பதை மட்டுமல்ல பார்ப்பவர்கள் மனதையும் செரிக்கும் மணிவயிறு.//
    //
    துறவுக்கு மாபெரும் இரண்டு தடைக் கற்களைப் போன்ற எனது பின்னழகுகள்.//
    //
    கடைசிப் பற்றும் உதிர்ந்த பின்னர் மனிதன் இயல்பாகவே அடைக்கலம் சேரும் பாத கமலங்கள்.

    இப்படி நான் முழுதும் விக்கிரமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின. //




    அய்யா ஒவ்வொரு வரிகளையும் மூன்று முறை படித்தேன்.
    அதன் சுவை,அழகிற்காக எத்தனை முறை படிப்பேன் என்று எனக்கு தெரியாது.
    எதோ பேதமையாக நிரம்ப பிடித்து வாசித்த வரிகளை சுட்டியுள்ளேன்.

    மிக அருமையான வர்ணனைகள்.
    அடுத்த பாகத்தையும் மிக ஆவலாய் எதிர்நோக்கியுள்ளோம்.
    படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டோடட்டும்

    பதிலளிநீக்கு
  6. வலசு - வேலணை சொன்னது…
    //
    உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?
    //
    அருமையான விளக்கம்.

    சிலை பேசட்டும்.

    உங்கள் ரசனை மனம் பேசும் போது சிலை பேசாதா,என்ன? நன்றி வலசு.

    பதிலளிநீக்கு
  7. ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
    'நான்' தமிழ்மணத்தை திறக்கும் பொழுது தான் உங்கள் பதிவு இணைக்கபட்டிருக்கிறது. கடந்த இரண்டு முறையும் :)

    நல்ல வர்ணிப்பு. அகக்கண்களால் அந்த விக்ரஹத்தை பார்க்க முடிகிறது.

    /இப்படி நான் முழுதும் விக்கிரமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின. //

    விக்ரஹம் என மாற்றவும். (சிற்பம் - வட சொல் சில்பஹம் என்பதை விட விக்ரஹம் என்ற சொல்லுக்கு தனிசிற்ப்பு உண்டு..)

    ஆதி சங்கரரின் செளந்தர்ய லெகரியை படித்திருகிறீர்களா என தெரியாது. ஆனால் அதை படித்தால் ஏற்படும் அடிப்படை வர்ணிப்புகள் இதில் உண்டு.//

    thamilsh என்னாயிற்று என்று தெரியவில்லை,ஸ்வாமிஜி.

    தங்கள் அருளும்,ஊக்கமும் மேலும் என் எழுத்துக்களைச் செழிப்பாக்கட்டும்.

    தாங்கள் சொன்னதைப் போலவே விக்ரஹத்தை மாற்றி விட்டேன்.

    ஆதி சங்கரரின் ‘லஹரி’யை முன்பு எப்போதோ அசிரத்தையாகப் படித்திருக்கிறேன்.நீங்கள் சொன்னதற்குப் பிறகு மீண்டும் படிக்கிறேன்.

    தங்கள் இடையறாத அன்புக்கு மகிழ்ச்சியும்,நன்றியும் ஸ்வாமிஜி.

    பதிலளிநீக்கு
  8. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    //வெண்புறாவின்,அதுவும் பெண்புறாவின் அடிவயிற்றுச் சிறகுகளை எனது கன்னங்களில் தொட்டான்.//

    வர்ணனைகள் மிளிர்கின்றது....

    //இப்படி நான் முழுதும் விக்கிரமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின. //

    நன்று மிகவும் அழகு//

    உங்கள் அன்புக்கு நான் எப்போதும் கடன் பட்டிருக்கிறேன்,ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  9. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
    அய்யா ஒவ்வொரு வரிகளையும் மூன்று முறை படித்தேன்.
    அதன் சுவை,அழகிற்காக எத்தனை முறை படிப்பேன் என்று எனக்கு தெரியாது.
    எதோ பேதமையாக நிரம்ப பிடித்து வாசித்த வரிகளை சுட்டியுள்ளேன்.

    மிக அருமையான வர்ணனைகள்.
    அடுத்த பாகத்தையும் மிக ஆவலாய் எதிர்நோக்கியுள்ளோம்.
    படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டோடட்டும்//

    எனை ஆளும் தேவியின் கருணை உங்கள் மேலும் பொங்கட்டும்,கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  10. tamilcinema சொன்னது…
    புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
    புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
    ’’
    நன்றி தமிழர்ஸ்!இணைக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஐயா, ஒவ்வொரு வரிகளும் வைரங்கள். அதன் அர்த்தங்கள், அருமை என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட முடியாது. எங்களை அதிகம் காக்க வைக்காமல் விரைவாக அடுத்த இடுகையிட்டமைக்கு நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  12. \\சிவம் தன்னை சக்தியாக்கித் தன்னைத் தானே பார்த்ததிலிருந்துதான் ரசனையே தொடங்கியது.\\

    எல்லாமே அதிலிருந்துதான் தொடங்கியது
    வர்ணனைகள் உணர்வு பூர்வமாக அருமையாக வந்துள்ளது

    தேர்ந்த திரைப்படம் பார்ப்பது போல்...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. கலையரசன் சொன்னது…

    ஐயா, ஒவ்வொரு வரிகளும் வைரங்கள். அதன் அர்த்தங்கள், அருமை என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட முடியாது. எங்களை அதிகம் காக்க வைக்காமல் விரைவாக அடுத்த இடுகையிட்டமைக்கு நன்றிகள்!!//

    மகிழ்ச்சி,கலை.பரம்பொருள் உங்களுக்கு எல்லா நலங்களையும் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  14. நிகழ்காலத்தில்... சொன்னது…

    \\சிவம் தன்னை சக்தியாக்கித் தன்னைத் தானே பார்த்ததிலிருந்துதான் ரசனையே தொடங்கியது.\\

    எல்லாமே அதிலிருந்துதான் தொடங்கியது
    வர்ணனைகள் உணர்வு பூர்வமாக அருமையாக வந்துள்ளது

    தேர்ந்த திரைப்படம் பார்ப்பது போல்...

    வாழ்த்துக்கள்//

    நன்றி,சிவா.எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    பதிலளிநீக்கு
  15. மங்களூர் சிவா சொன்னது…

    very nice & interesting.

    GOD BLESS YOU,MY FRIEND.

    பதிலளிநீக்கு
  16. /'இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு, இறுகி,இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை' என்று பின்னாளில் அபிராமிப் பட்டர் வருணித்ததைப் போல் அல்லாமல்,
    ஆண்களின் உயிர் முனைகளை எல்லாம் சுருட்டிப் பிடித்து வைத்திருக்கும் இரண்டு கைப்பிடிகளைப் போன்ற அளவான சிறிய மார்புகள்.//
    அற்புதமான வர்ணிப்புகள் லேட்டா வந்தாலும் பின்றீங்க சார்.

    எனக்குள் ஒரு ஜூரம்போன்ற ஒன்று சிறுகதையை படித்தவுடன் ஏறுகிறது சார்.

    பதிலளிநீக்கு
  17. Cable Sankar சொன்னது…

    /'இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு, இறுகி,இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை' என்று பின்னாளில் அபிராமிப் பட்டர் வருணித்ததைப் போல் அல்லாமல்,
    ஆண்களின் உயிர் முனைகளை எல்லாம் சுருட்டிப் பிடித்து வைத்திருக்கும் இரண்டு கைப்பிடிகளைப் போன்ற அளவான சிறிய மார்புகள்.//
    அற்புதமான வர்ணிப்புகள் லேட்டா வந்தாலும் பின்றீங்க சார்.

    எனக்குள் ஒரு ஜூரம்போன்ற ஒன்று சிறுகதையை படித்தவுடன் ஏறுகிறது சார்.//

    ரசித்ததை ஜுரம் என்று வெளிப்படுத்தினீர்களே அதுதான் ஷங்கர் டச்.
    அம்பாளின் அனுகிரஹம் விரைவிலேயே உங்கள் படைப்புக்களுக்கு வாய்க்கட்டும் ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  18. முருகா...

    எனக்கு ஏன் இந்தச் சோதனை..?

    என்னுடைய குருவானவர்களும், நண்பர்களும், வழிகாட்டுபவர்களும் உன் அனுக்கிரஹத்தோடு இருக்க..

    என்னை மட்டும் ஏன் இப்படி படைத்துவிட்டாய்..?

    உனக்கு ரொம்பவே ஓர வஞ்சனைடா சாமி..!!!

    பதிலளிநீக்கு
  19. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
    முருகா...

    எனக்கு ஏன் இந்தச் சோதனை..?

    என்னுடைய குருவானவர்களும், நண்பர்களும், வழிகாட்டுபவர்களும் உன் அனுக்கிரஹத்தோடு இருக்க..

    என்னை மட்டும் ஏன் இப்படி படைத்துவிட்டாய்..?

    உனக்கு ரொம்பவே ஓர வஞ்சனைடா சாமி..!!!//

    முருகன் உங்களுக்கும் அருள் புரிய எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்,சரவணன்.நம்புங்கள்,நடக்கும்.

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வவொரு வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ...( சாருகேசி ராகம் கேட்பது மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
  21. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
    ஒவ்வவொரு வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ...( சாருகேசி ராகம் கேட்பது மாதிரி இருக்கு)//

    மகிழ்ச்சி,சுந்தர்.எனக்கு உங்கள் அளவு இசை ஞானம் கிடையாது.
    சாருகேசி ராகத்தில் ஏதாவது திரைப் பாடலைக் குறிப்பிட்டீர்களானால் புரிந்து கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  22. இப்படியெல்லாம் வர்ணிப்பது உங்களுக்கு இயல்பாக வருகிறதா , இல்லை நிறைய ஹோம் வொர்க் செய்வீர்களா?

    மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

    பதிலளிநீக்கு
  23. அருமையாக இருக்கிறது..

    நல்ல வர்ணனை. அப்படியே கண்முன் நிழலாடச்செய்து விட்டீர்கள்..

    (சாண்டில்யனின் வர்ணனை போலவே இருக்கிறது..)

    பதிலளிநீக்கு
  24. குடுகுடுப்பை சொன்னது…
    இப்படியெல்லாம் வர்ணிப்பது உங்களுக்கு இயல்பாக வருகிறதா , இல்லை நிறைய ஹோம் வொர்க் செய்வீர்களா?

    மிகவும் ரசிக்கும்படி உள்ளது.//

    தன்னை மறந்து தன்னில் லயித்து எழுதும் போது பார்த்ததும்,படித்ததும்,நெகிழ்ந்ததும்,ரசித்ததும் தனக்குத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும்.

    உங்கள் எழுத்திலும் அந்தச் சுகத்தை நான் நிறைய அனுபவித்திருக்கிறேன்,குடுகுடுப்பை சார்.

    பதிலளிநீக்கு
  25. பட்டிக்காட்டான்.. சொன்னது…
    அருமையாக இருக்கிறது..

    நல்ல வர்ணனை. அப்படியே கண்முன் நிழலாடச்செய்து விட்டீர்கள்..

    (சாண்டில்யனின் வர்ணனை போலவே இருக்கிறது..)//

    நன்றி தம்பி.இறையருள் உனக்குள் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  26. http://solvanam.com/?p=1299
    சமீபத்தில் படிக்க நேர்ந்த சுவையான ஒன்று
    அய்யா உங்களீடம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒன்று
    //ஒரு ரயிலின் சத்தம் ஒரே நிலையில் இல்லாது மாறும் என்பதை இளையராஜாவின் “தாலாட்டு கேட்காத” என்ற பாடலை கேட்டால் உணரலாம்.

    இதில் “பாட்டுக்கு நான் அடிமை” என தொடங்கும் வரியில் தாளம் சன்னமாக இழைந்து பின்னர் fullscreen-capture-862009-95950-amவேகம் பிடிக்கும் விதம் இயற்கையிலேயே ரயிலின் சத்தம் தேய்ந்து வளர்வதை போல் இருக்கும். பல்லவியின் வரிகளுக்கிடையில் வரும் புல்லாங்குழல், ரயிலின் ஒலிப்பானை போலவே இருக்கும். இந்த பாடலின் பல்லவி மற்றும் சரணம் முடியும் போது தாளத்தில் வைக்கும் தீர்மானங்களும் (fill-ins) ரயில் ஏதோ பாலத்தின் மீது போகும்போது பிறக்கும் சமம்மல்லாத ஒலி போல் இருக்கும். இடை இசையில் ரயிலின் ஒலிப்பானை போல் கேட்கும் pan flute - ட்டுக்கும் அந்த கேள்விக்கு மறுபடியும் “டபுள் ஸ்டாப்” உத்தியால் பதில் அளிக்கும் வயலினுக்கும் இடையில் ஒரு சிறிய call and response-ஐ அமைத்திருப்பார். அதற்குப் பின் கீரவாணியில் தொடரும் அந்த ஒற்றை வயலின் மனதைப் பிழிந்து விடுவது என்னமோ உண்மை. மேலும் இப்பாடலில் ரயிலின் தாளத்திற்கு ட்ரம்ஸ்-இன் சிம்பலை விட ஸ்நாரை (Snar) அதிகமாக பயன்படுத்தி இருப்பதும் ஒரு புதிய முயற்சியே. இப்படி அனைவரையும் போல் சாதரண ரயிலின் சத்தத்தை வைத்து மட்டும் ஒரு பாடலை எண்ணாமல் அது நகரும் போது நிகழும் பல நுணுக்கமான விஷயங்களையும் பிரதான இசை வடிவத்துடன் கோர்த்து கொடுத்தது வியக்கத்தக்கது.//

    பதிலளிநீக்கு
  27. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது… //

    இசைஞானியின் இவ்வளவு நுணுக்கமான இசை மேன்மைகளை நான் இயக்கிய அந்தப் பாடலைப் பற்றி எனக்கே இப்போதுதான் தெரிய வருகிறது.
    உங்கள் தொடர்ந்த அன்புக்கும் ,ஆர்வத்துக்கும் மகிழ்ச்சி கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  28. இது உங்கள் கருத்து.
    அதை நான் மதிக்கிறேன்

    ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  29. புருனோ Bruno சொன்னது…
    இது உங்கள் கருத்து.
    அதை நான் மதிக்கிறேன்

    ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்//

    சத்தியமாக உங்கள் மேலான கருத்துக்களையும் மதிப்பவனாகத்தான் டாக்டர் நான் இருப்பேன்.
    தங்கள் வருகைக்கும்,இந்தக் கருத்துக்குமே நன்றியும்,மகிழ்ச்சியும் டாக்டர்.

    பதிலளிநீக்கு