திங்கள், அக்டோபர் 12, 2009

காதல மலர்ந்த கணங்கள் 4

அமிர்தவர்ஷிணி
4.
மூன்று மாதங்கள் ஆகின்றன,நான் இந்தப் புற்று நோய் மருத்துவமனைக்கு வந்து.

கெமோ தெராபி,ரேடியேஷன் தெராபி மற்ற சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் என்று என்னுடைய உடலுடன் மருத்துவர்கள் இடைவிடாமல் போராடினார்கள்.இதற்குக் கேன்சர் என்று பெயர் வைக்காமல் நத்தை என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.ஏனென்றால் மரணம் நத்தை வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

மனித உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் எத்தனை வலிகளும்,வேதனைகளும் இருக்க முடியுமோ அத்தனையையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.முடிகள் எல்லாம் கொட்டிப் போய்,நிறம் வெளிறிப் போய்....எனது நண்பர்களை எல்லாம் என்னை இந்தக் கோலத்தில் பார்க்க வர வேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.
ஆனால் அப்பாவை மட்டும் அப்படிச் சொல்ல முடியவில்லை.லுகேமியா செல்கள் என்னைவிட அவரைத்தான் அதிகம் உருக்கி எடுத்துக் கொண்டிருந்தது.

மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் என்று தோன்றியது.

என்னுடைய அப்பாவுக்கு ஒரு முடி கூட நரைக்கவில்லை என்று நண்பர்களிடம் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்வேன்.அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார். நான் மருத்துவ மனைக்கு வந்த ஒரே வாரத்தில் அப்பாவுக்குத் தலை முழுதும் நரைத்து விட்டது.

யாரையும் கடிந்து கூடப் பேசாத அந்த மென்மையான ஆத்மாவை, இப்படி நரகக் குழியில் தள்ளி வேடிக்கை பார்க்கும் முகம் தெரியாத எதிரியே! தயவு செய்து என்னைச் சீக்கிரம் சாக விட்டு எனது அப்பாவைக் காப்பாற்று!

கால வரையரையற்று விடுமுறை எடுத்துக் கொண்டு,அப்பா தானே சமைத்து எனக்குத் தினமும் எடுத்து வந்தார்.
'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டப் பட்டுச் சமைச்சு எடுத்துட்டு வர்ரீங்க?' என்பேன் நான்.
'உனக்குத் தேவை இல்லேன்னாலும் உனக்காகப் பண்றோங்கற காரியத்திலே எல்லாம் எனக்கு ஒரு திருப்தி இருக்குப்பா' என்றார் அவர் சாப்பாடு பரிமாறிக் கொண்டே.
அவர் நெற்றியில் இன்னுமே விபூதிக் கீற்றும்,குங்குமமும் இருந்தன.
'நீங்க இன்னும் சாமி எல்லாம் கும்பிடறீங்களாப்பா?'
'சாகும் போது உன்னோட அம்மா விபூதி,குங்குமத்தை வெச்சு உட்டுட்டுக் கடவுள் எப்பவும் உங்களைக் கைவிட மாட்டாருன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடினா.நான் ஆண்டவனை நம்பறனோ இல்லையோ உங்க அம்மாவை நம்பறேன்' என்றார் அப்பா அமைதியாக.
'பாவம்பா நீங்க' என்றேன் என்னை அறியாமல்.இப்போதெல்லாம் இருவருமே அழுவதில்லை.
துயரம் முற்றி வந்த அமைதி.
சாவுக்கு வைத்த ஆறு மாதக் கெடுவில் ஒரு வழியாக மூன்று மாதங்கள் கழிந்தது என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கும் ஒரே நிம்மதி.

இன்னும் மூன்று மாதங்கள் என்று, ஏதோ விடுமுறைக்குக் காத்திருக்கும் பள்ளிக்கூடச் சிறுவனைப் போல நான் எனது மரணத்துக்காகக் காத்திருந்தேன்.

ஒருநாள் காலை பத்து மணிவாக்கில் மருந்துகளின் அசதியில் நான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென எனக்குக் கனவு போல ஒரு விழிப்பு வந்தது.எனது உறக்கத்தைக் கலைத்தது ஒரு வாசனை.

ஆம்.அதே பச்சைக் கற்பூர வாசனை.மருத்துவ மனையின் செயற்கைத் தூய்மையான டெட்டால் வாசத்தையும் மீறி கோவில் நைவேத்தியங்களில் மட்டும் வீசும் அதே வாசனை.
மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தேன்.படுக்கையின் அருகில் அப்பா,எங்கள் கோவில் மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி, சற்றுத் தள்ளிப் பின்னால் அமிர்தவர்ஷிணி மூவரும் நின்றிருந்தார்கள்.

முடிகள் இழந்து மொட்டைத் தலையுடன் இளைத்துக் களைத்துப் போயிருந்த என்னைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷாத்திரி கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
'அழ மாட்டேன்,அழமாட்டேன்னு சார் கிட்டே நூறுதடவை சத்தியம் பண்ணிக் குடுத்துட்டுதான் வந்தேன்..ஆனா முடியலேப்பா..'என்ற சேஷாத்திரி மேல் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.சிறுவயதில் குலதெய்வத்துக்கு மொட்டை போடமாட்டேன் என்று அழுத என்னைச் சிரித்தபடியே ஆறுதலாக நெஞ்சில் அணைத்துக் கொண்டவர் சேஷாத்திரி அங்கிள்.
அப்பா அமைதியாக அமிர்தவர்ஷிணியைப் பர்த்தார்.

குளிர்ந்த வைகறை நதியைப் போல அவளது பார்வை என் மேல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.எந்தச் சலனமுமில்லாத அம்மன் முகம் அவளுக்கு.

'இனி மூணு மாசத்துக்கு அமிர்தவர்ஷிணி நம்ம கூட, நமக்கு உதவியா இருக்கறேன்னு வந்திருக்கா,சரவணா.' என்றார் அப்பா.

சேஷாத்திரி அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட, அமிர்தவர்ஷிணி மெல்ல எனது அருகில் வந்து நின்றாள்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் கோவிலில் பாவாடை தாவணியில் பார்த்த அமிர்தவர்ஷிணி இப்போது வடக்கத்திய பாணி சுடிதாரில் வந்திருந்தாள்.செல்ஃப் டிசைனில் பூக்கள் போட்ட தூய வெள்ளைச் சுடிதாரில் இன்னும் யாருமே வாசிக்க ஆரம்பிக்காத பொன்னிற வயலினைப் போல இருந்தாள் அவள்..

எந்த ஆசையையும் படக்கூடிய சக்தியை அறவே இழந்து விட்ட சக்கையான என் உடலுக்குள்ளிருந்து அவளது அழகைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.ஆசைகள் அற்றுப் பார்க்கும் போது பெண்ணே வேறு மாதிரி தெரிகிறாள்.பிறந்த குழந்தை அம்மாவைப் பார்க்கும் போது எனது மனோ நிலையில்தான் இருக்கும் போலிருக்கிறது.ஃபில்டர் போட்டுக் காமிராமேன்கள் பனிமூட்டம் போலக் காட்டுவார்களே அது போல அமிர்தவர்ஷிணி இப்போது எனது கண்களுக்குத் தெரிந்தாள்.

மரணம் ஒரு பெரிய புகைப் படக் கலைஞன் என்று நினைத்துக் கொண்டேன்.

சற்று மௌனத்திற்குப் பின் நான்தான் பேசினேன்.

'ஆஜ்மீரிலிருந்து எப்போ வந்தே?'

'இன்னிக்குக் காலையிலேதான்' என்றாள் அவள்.
அவள் குரலை இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன்.கோவிலில் அவள் பேசவே இல்லை என்று இப்போதுதான் உணர்கிறேன்.
அந்தரங்கமாகப் பேசுவதுக்கென்றே அமைந்த குரல்,அமிர்தவர்ஷிணியினுடையது.நெருக்கமான சூழ்நிலயிலேயே பெண்கள் பயன்படுத்தும் குரல்.

'எப்படி அதுக்குள்ளே எனக்கு உன்னோடே அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுது?'

'ஆஜ்மீரிலிரிந்து நான் வந்ததே உன்னைப் பார்த்துக்கறதுக்காகத்தான்!' என்றாள் அவள்.

'சேஷாத்திரி அங்கிள் உன்னை அவ்வள்வு ஃபோர்ஸ் பண்ணியிருக்கார்ன்னு நினைக்கிறேன்'என்றேன் வறண்ட புன்னகையுடன்.

இல்லை என்று உறுதியாகத் தலையாட்டினாள் அவள்.

'பின்னே,யாரு என்னோட அப்பாவா?' என்று கேட்டேன் நான்.

'என்னை உங்கிட்டே வலுக்கட்டாயமா அனுப்பிச்சவரை நீ பார்த்திருக்கவே முடியாது,சரவணா!'என்றாள் அவள்,இப்போதுதான் முதன் முறையாகக் கண்களில் ஈரம் கசிய.

நான் அவள் கண்களில் நீரைப் பார்த்து வியந்து போனேன்.

'பின்னே யாரு,வர்ஷிணி?' அவளது பெயரை மிக இயல்பாகச் சுருக்கிக் கூப்பிட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அவள் என்னை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தாள்.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

எனக்குள் சிலீரென்றது.

(மீண்டும் சஸ்பென்சுடன் தொடரும் போடுவதற்கு நண்பர் அப்துல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.)

33 கருத்துகள்:

  1. தெளிந்த நடையில் சீரான விவரணைகள்...

    முன்னர் உங்களைப் படித்திருக்கிறேனா என நினைவில்லை...

    ஆனால் இனிமேல் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. மனித உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் எத்தனை வலிகளும்,வேதனைகளும் இருக்க முடியுமோ அத்தனையையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.//

    உண்மை கண்ணாற கண்டிருக்கிறேன்.
    எங்கு வலிக்குமென்றே தெரியாத கொடிய வலி




    எந்த ஆசையையும் படக்கூடிய சக்தியை அறவே இழந்து விட்ட சக்கையான என் உடலுக்குள்ளிருந்து அவளது அழகைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.//
    உன்னதம்

    ஆசைகள் அற்றுப் பார்க்கும் போது பெண்ணே வேறு மாதிரி தெரிகிறாள்//

    மிகவும் ரசித்தது


    பிறந்த குழந்தை அம்மாவைப் பார்க்கும் போது எனது மனோ நிலையில்தான் இருக்கும் போலிருக்கிறது.//

    சூப்பர் வாசகம்

    அய்யா அப்துல்லா சாருக்கு மட்டுமா?சஸ்பென்சு,எங்க எல்லோருக்கும் தான்.

    கொடிய வேதனையில் இருப்பவன் கண்களூக்கு தேவதையை காட்டிய பாங்கு அருமை

    பதிலளிநீக்கு
  3. //ஆசைகள் அற்றுப் பார்க்கும் போது பெண்ணே வேறு மாதிரி தெரிகிறாள்.பிறந்த குழந்தை அம்மாவைப் பார்க்கும் போது எனது மனோ நிலையில்தான் ////



    //நான் மருத்துவ மனைக்கு வந்த ஒரே வாரத்தில் அப்பாவுக்குத் தலை முழுதும் நரைத்து விட்டது.//

    //நான் ஆண்டவனை நம்பறனோ இல்லையோ உங்க அம்மாவை நம்பறேன்' என்றார் அப்பா அமைதியாக.//

    குடும்பத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள் !!

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அறிவன்#11802717200764379909 சொன்னது…
    தெளிந்த நடையில் சீரான விவரணைகள்...

    முன்னர் உங்களைப் படித்திருக்கிறேனா என நினைவில்லை...

    ஆனால் இனிமேல் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

    தொடருங்கள.//

    நன்றியும்,மகிழ்ச்சியும், அறிவன்!உங்கள் முதல் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  5. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது… //

    உங்களைப் போன்ற தேர்ந்த ரசிகர்கள் பாதி எழுதி விடுவதால் மீதி எழுதுவது எனக்கு மிகவும் இனிமையாகவும்,எளிமையாகவும் இருக்கிறது,கார்த்தி.

    பதிலளிநீக்கு
  6. நிகழ்காலத்தில்... சொன்னது…//
    குடும்பத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள் !!

    வாழ்த்துக்கள்//

    இந்த அவசர வாழ்க்கையில் எழுதுவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம்,அதனைப் படித்துப் பதில் போடுவதும்.

    என்னை மேலும் ,மேலும் எழுதத் தூண்டுவதே உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் ஆக்கமும்,ஊக்கமும்தான்.
    மகிழ்ச்சி,சிவா.

    பதிலளிநீக்கு
  7. அருமையான நடை. ரசித்துப் படித்தேன்

    பதிலளிநீக்கு
  8. முரளிகண்ணன் சொன்னது…
    அருமையான நடை. ரசித்துப் படித்தேன்//

    நன்றியும்,மகிழ்ச்சியும்,முரளி.

    பதிலளிநீக்கு
  9. சார் கொஞ்சம் சோகமாக இருந்தாலும் நன்றாக செல்கிறது..
    (வழக்கமான உங்கள் ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகளை சற்றே எளிமைப்படுத்தி கொடுத்ததுப்போல் உள்ளது )..

    பதிலளிநீக்கு
  10. //அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார்.//

    சிலருக்கு நேரும் கொடிய மரணங்களைப்பார்க்கும்போது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிரது.

    பதிலளிநீக்கு
  11. //'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டப் பட்டுச் சமைச்சு எடுத்துட்டு வர்ரீங்க?' என்பேன் நான்.//

    மனதை என்னமோ பன்னியது...

    //இன்னும் யாருமே வாசிக்க ஆரம்பிக்காத பொன்னிற வயலினைப் போல இருந்தாள் அவள்..//

    நல்ல வர்ணனை

    //இப்போதெல்லாம் இருவருமே அழுவதில்லை.
    துயரம் முற்றி வந்த அமைதி.//

    ம்ம்ம் உண்மைதான்

    எல்லாமே ரசனையாக இருந்தது இந்த பகுதி. அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன் சார்.

    பதிலளிநீக்கு
  12. வினோத்கெளதம் சொன்னது…
    சார் கொஞ்சம் சோகமாக இருந்தாலும் நன்றாக செல்கிறது..
    (வழக்கமான உங்கள் ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகளை சற்றே எளிமைப்படுத்தி கொடுத்ததுப்போல் உள்ளது )..//

    அப்படியா,வினோத்.
    உணர்வுகளைச் சொல்லும் போது தானாகவே எளிமையாகி விடுகிறது.
    நன்றி வினோத்.

    பதிலளிநீக்கு
  13. Cable Sankar சொன்னது…
    மீண்டும்..//

    கரக்ட்,ஷங்கர்.
    தினமும் பார்க்கும் மனைவியை எத்தனை தடவைதான் கொஞ்சுவது?!

    பதிலளிநீக்கு
  14. சின்ன அம்மிணி சொன்னது…
    //அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார்.//

    சிலருக்கு நேரும் கொடிய மரணங்களைப்பார்க்கும்போது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிரது.//

    தகுதியே அற்றவர்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான வாழ்க்கையைப் பார்க்கும் போதும் அப்படித்தான் தோன்றுகிறது,மேடம்.

    தங்கள் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  15. ஆ.ஞானசேகரன் சொன்னது… //

    எல்லாமே ரசனையாக இருந்தது இந்த பகுதி. அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன் சார்.//

    நானும்தான் ஞானம்.
    நன்றியும்,மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  16. ஷண்முகப்ரியன் சொன்னது…
    :எம்.எம்.அப்துல்லா சொன்னது…
    :( //

    :) !

    //


    ஹா...ஹா..ஹா.. சாஆஆஆர்ர் நீங்க எனக்கு குடுத்திருக்கும் டைமிங் பதிலை மிகவும் இரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  17. எம்.எம்.அப்துல்லா சொன்னது… //
    சார் ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றது. மொத்தமாக முடித்து விடுங்களேன்.//

    என்று சென்ற பாகத்தில் நீங்கள் எழுதி இருந்தது நினைவிலேயே இருந்தது.அதனால்தான் தொடரும் அப்படிப் போட்டேன்,அப்துல்லா!

    திரைக்கதை எழுதி,எழுதித் திருப்பங்கள் இல்லாமல் கதைகளைச் சிந்திக்கவே முடிவதில்லை!

    நன்றி அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  18. முழுதும் படித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடுவதாக் இருந்தேன்...

    ஆனாலும் கலங்கடிக்கும் கதை

    காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு

    பதிலளிநீக்கு
  19. கன்னிகாவை விட்டு விட்டீர்களே சார்...
    அத்தொடரைத் தொடரும் வரை உங்கள் எந்தப் பதிவுக்கும் கருத்துரையிடுவதில்லை என்றிருந்தேன்.. 'காதல் மலர்ந்த கணங்களில்' என் உறுதியைக் கரைத்து விட்டேன்...

    சொல்லாளுமை நிறைந்த உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கும்...

    பதிலளிநீக்கு
  20. கதிர் - ஈரோடு சொன்னது…
    முழுதும் படித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடுவதாக் இருந்தேன்...

    ஆனாலும் கலங்கடிக்கும் கதை

    காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு//

    நன்றி,கதிர்.
    இந்தக் கதை என்னை வேறெந்த வேலையையும் பார்க்க விட மாட்டேன் என்று அடம் பிடித்து உட்கார்ந்திருப்பதால் இதனை நான் முடித்தே தீரவேண்டும்,கதிர்.

    பதிலளிநீக்கு
  21. மகா சொன்னது…
    simply great sir//

    Thank you Mahaa for your encouraging appreciatiopn.

    பதிலளிநீக்கு
  22. பிரேம்குமார் அசோகன் சொன்னது…
    கன்னிகாவை விட்டு விட்டீர்களே சார்...
    அத்தொடரைத் தொடரும் வரை உங்கள் எந்தப் பதிவுக்கும் கருத்துரையிடுவதில்லை என்றிருந்தேன்.. 'காதல் மலர்ந்த கணங்களில்' என் உறுதியைக் கரைத்து விட்டேன்...

    சொல்லாளுமை நிறைந்த உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கும்...//

    உங்களை நான் பின் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறேன்,பிரேம்.ஆனால் உங்கள் இடுகைகள் என்னுடைய dashboard க்கு வரவில்லை ஆதலால் நீங்கள் எழுதவில்லை என்று நினைத்திருந்தேன்.
    சரி இனி உள்ளே சென்று பார்க்கிறேன்.

    என்னைப் போல எப்போதாவது எழுதும் ஆட்களுக்குக் ‘கன்னிகா’ போன்ற நெடுந்தொடர் உதவாது என்பதினால்தான் அதனை நிறுத்தி விட்டேன் ,பிரேம்.

    படிப்பவர்கள் கதையுடனும்,பாத்திரங்களுடனும் ஒன்று படுவது கடினம்.
    இந்த மீடியத்திற்குச் சிறுகதைகளும் இரண்டு பக்கங்களுக்கு மிகாத இடுகைகளும்தான் சரி என்பது எனது எண்ணம்.

    Anyway,நீண்ட நாள் கழித்து உங்களை இங்கே சந்த்திதததிற்கு மட்டற்ற மகிழ்ச்சி,பிரேம்.

    பதிலளிநீக்கு
  23. Nice simple wordings sir. Expecting next series. Missing Kannika :(.

    Thanks,
    Arun

    பதிலளிநீக்கு
  24. Arunkumar Selvam சொன்னது…
    Nice simple wordings sir. Expecting next series. Missing Kannika :(.

    Thanks,
    Arun//

    Thank you ARUNKUMAR.

    பதிலளிநீக்கு
  25. நல்லாயிருக்கு என்று போடுவதற்க்கு எனக்கு வயசும், வாசிப்பனுபவமும் கம்மி ஐயா!! இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை!!

    சூப்பர் தலைவா!! அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...
    தாமதத்திற்க்கு வருந்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  26. கலையரசன் சொன்னது…
    நல்லாயிருக்கு என்று போடுவதற்க்கு எனக்கு வயசும், வாசிப்பனுபவமும் கம்மி ஐயா!! இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை!!

    சூப்பர் தலைவா!! அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...
    தாமதத்திற்க்கு வருந்துகிறேன்..

    நன்றியும்,மகிழ்ச்சியும் கலை.

    பதிலளிநீக்கு
  27. பிரசுரிக்க அல்ல
    //http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html//

    விருது கொடுத்திருக்கிறேன்.வாங்கிக்கோங்க.

    பதிலளிநீக்கு
  28. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. துபாய் ராஜா சொன்னது…
    தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.//


    நன்றி ராஜா.
    தங்கள் குடும்பத்தாருக்கும்,தங்களுக்கும்,நண்பர்களுக்கும் நானும் எனது தீபவளித் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. //
    மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் என்று தோன்றியது.
    //
    புற்றுநோயின் தீவிரத்தை இந்த ஒற்றை வாக்கியத்திற்குள் அடக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு