வெள்ளி, ஜனவரி 23, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..3

இருபதாம் நூற்றாண்டில் சில அடிப்படையான எண்களை அறிவியலாளர்கள் தேடத் தொடங்கினார்கள்.அந்தத் தேடலில் கிடைத்தவைதான் ஒளியின் வேகம் ,மற்றும் இன்னொரு பௌதிக மாறிலி எண்.
எல்லா விதமான சக்தி ,பொருண்மையின் மாறாத எண்கள் இவை.இந்த எண்களை வைத்து இந்த முழுப் பேரண்டத்தையும் அளந்து விடலாம்.
ஆனால் அந்த எண்களும் கூட முழுமையான புரிதலுக்குப் போதவில்லை.
அறிதலும்,புரிதலும் மனிதனின் ஒரு அங்கமே தவிர அவையே முழுமையல்ல.ஒன்றை அறிந்து கொண்டவுடன்,புரிந்து கொண்டவுடன் உங்கள் தேடல் முடிவது இல்லை.
இதைத் தாண்டி இன்னும் ஏதோ இருக்கிறது என்று முடியாத தேடலே இல்லை.
அதனால்தான் அறிவியலில் ஒரு பதில் கிடைத்தவுடன்,அந்தப் பதிலில் இருந்தே இன்னொரு கேள்வி பிறந்து விடும்.
அறிவுக்கு முடிவே இல்லை,ஏனெனில் அதனால் தீர்வுகள் இல்லை.
அறிவு,நமது சிந்தனா முறைகளில் ஒரு அம்சமே தவிர அதுவே மனிதனின் முழு ஆன்மாவின் பிரதிநிதித்துவம் இல்லை.இதைப் புரிந்து கொண்டவுடன் ,
அறிவியல் அன்றி வேறு திசைகளில் மனிதர்கள் என்றோ பயணமானார்கள் .
அதில் ஒன்றையே ஆன்மிகம் என்கிறோம்.
ஆன்மீகத்துக்கும் ,அறிவியலுக்கும் ஒரே வயதே. இதில் ஒன்று நவீனத்துவம் ,பிரிதொன்று பழைமைவாதம் என்பதற்கே இடமில்லை.
மூலத்தின் விடை தேடி வெவ்வேறு திசைகளில் மனிதன் பயணமான கதையே இரண்டும் .