வியாழன், ஜனவரி 29, 2009

புத்தர் முகத்தில் ரத்தம்..

அவர்கள் இருவரும் இறக்கும் தறுவாயில் கிடந்தார்கள் ..
இருவர் முகங்களுக்கும்
நடுவில் உடைந்து கிடந்த
புத்தர் சிலையின் முகத்தில் ரத்தம் ..
இன்னும் தூரத்தில் குண்டு வீசும் விமானங்களின் சத்தம்..
அவன் அவளை முத்தமிட முயன்ற போதெல்லாம்
அவள் அவனுடன் சண்டைதான் போட்டிருக்கிறாள்..
பக்கத்து வீட்டுக் குழந்தையாய் அவன் வீட்டு வாசலுக்கு
அவள் தவழ்ந்து வந்த போது அவன் சிறுவன் ..
அப்போதும் அவன் தாவி எடுத்து முத்தமிட முயல்கையில்
அவள் கோபித்துக் கொண்டு அழுதாள்..
பள்ளிக் கூட அறையில்,
ஜன்னல் வழியே மற்ற மாணவர்கள் பார்த்துச் சிரித்துவிட
பாதியிலேயே கோபித்துக் கொண்டு ஓடி விட்டாள்...
கல்லூரி மரத்தடியில், அவளாக வந்த அன்று
அவன் வாழ்வில் முதல் வாய் மது அருந்தி இருந்ததில் வந்த கோபம்..
திருமண நிச்சயத்தன்று
உள்ளறையில் நெருங்கிய போது
அவள் அண்ணனை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற
செய்தி கேட்டு வந்த கோபம்...
குண்டு வீச்சில் அப்பா அம்மாவைப் பறிகொடுத்து விட்டு
அவன் கதறிய போது
அணைத்துக் கொண்ட அவளுக்கு
மேலே பறந்து போன விமானத்தின் மீது கோபம்...
இப்போது போராளியாய் அடிபட்டுச் சாகக் கிடக்கும் அவனும்
அகதியாய்த் தப்பித்தோடும் போது பிடிபட்டு உருக்குலைந்த அவளும் .. இதுவரை இழந்த முத்தங்களை எல்லாம் ஈடுகட்டி
தன் கடைசி மூச்சில் அவள் புன்னகையாக மாற்றித் தர,
அவன் பார்த்து மடிவதற்குள்
குறுக்கே வந்தன இரண்டு ராணுவக் காலணிகள்..

12 கருத்துகள்:

  1. அருமையான் பதிவு


    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    பதிலளிநீக்கு
  2. //இதுவரை இழ்ந்தமுத்தங்களை எல்லாம் இதழ்களில் தேக்கித்
    தன் கடைசி மூச்சில் அவள் புன்னகையாக மாற்றித் தர,
    அவன் பார்த்து மடிவதற்குள்
    நடுவில் இரண்டு ராணுவக் காலணிகள்.. //

    மனதை பிழிகிறது சார்..

    பதிலளிநீக்கு
  3. காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்!
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. அருமை.

    கடைசி வரிகள் மனதை நெருடுகிறது..

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆழமான வரிகள்! நெஞ்சை அழுத்துகிறது :(

    பதிலளிநீக்கு
  6. அருமை..

    ஒரு முப்பது வருட வாழ்க்கையை பதினைந்து வரிகளில் சுருக்கியிருக்கிறீர்கள்..

    படித்து முடித்தவுடன் மனதை என்னமோ செய்கிறது.. ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறது..

    இதுதான் கவிஞரின் வெற்றியோ..?

    பதிலளிநீக்கு
  7. YOU TOLD THE WHOLE SL-TAMIL HISTORY IN A PARAGRAPH!

    GREETINGS! PLEASE CONTINUE YOUR GREAT SERVICES TO TAMIL WORLD!
    WRITE LITTLE MORE!

    பதிலளிநீக்கு
  8. கவிதை படிக்கவில்லை,கொலைகாரர்கள் நாசமாய் போகட்டும்

    பதிலளிநீக்கு
  9. அருமை இயக்குனர் ஸார்..!
    போரின் அவலத்தை கண்முன்னே கொண்டு வந்தீர்கள்..!

    பதிலளிநீக்கு
  10. டக்ளஸ்....... சொன்னது…

    அருமை இயக்குனர் ஸார்..!
    போரின் அவலத்தை கண்முன்னே கொண்டு வந்தீர்கள்..!

    அடேங்கப்பா!எவ்வளவு நாள் கழித்துப் பாராட்டுக்கள்,டக்ளஸ்!
    நாடகள் கழிந்தாலும் அவலம் இன்னும் தொடர்வதுதான் கொடுமையினும் கொடுமை.நன்றி,டக்ளஸ்.

    பதிலளிநீக்கு
  11. குடுகுடுப்பை சொன்னது…

    கவிதை படிக்கவில்லை,கொலைகாரர்கள் நாசமாய் போகட்டும்//

    இந்த வாரம் ஆனந்த விகடன் படித்தபோது இதேதான் எனக்கும் தோன்றியது குடுகுடுப்பை சார். .

    பதிலளிநீக்கு